Showing posts with label தேவதைகள்.... Show all posts
Showing posts with label தேவதைகள்.... Show all posts

Wednesday, November 18, 2009

ஊதா நிறப்பூவைச்சூடியவளும் வேற்றுகிரகத்தின் இளவரசனும்...

போலி எல்லைக்கோடுகள் போடாத தோழிகள் கிடைப்பது வரம் என்பது மிகையல்ல. கொஞ்சம் இலக்கியம் கொஞ்சம் திமிர் நிறைய தைரியம் என அமைகிற தோழிகள் நான் நம்பாத என் முன்வினைகளின் பயன் - புனைவின் சாத்தியக்கூறு.

பல முறையான என் அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் இருந்த தோழி ஒருத்தியின் பெரியதொரு ஊடலுக்கு பிறகு பேசக்கிடைத்த; எனக்கு பின்னிரவைப்போன்ற காலைப்பொழுதொன்றில்.





என்னடா பிறழ்வு கிறழ்வெண்டு விளங்காத மாதிரி எழுதியிருக்கிறாய்..

நானே விளங்காமத்தான் இருக்கிறன் அதான் உப்பிடி.. :)

நீ சும்மா கனக்க யோசிக்காத அதென்ன படம் into the wild.

அந்தமாரி படம் முடிஞ்சா பார், எனக்கு நெருக்கமான ஒரு மனிசன் கிரிஸ்!உள்ளுக்க இருந்த ஆசைகளை தூண்டி விட்டிருக்கிறான். படம் பாத்த அண்டைக்கு குடிக்கோணும் போலயே இருந்திச்சு.

நீ சொல்லுற படங்கள் எல்லாம் பாத்தா நித்திரை கொள்ளேலாது பாப்பம் try பண்ணுறன்.


உண்மைல என்னடி வாழ்க்கை இது போலித்தனமா செஞ்சு வச்சமாதிரி கொஞ்சம் கூட உண்மை இல்லாத மனிசர்களோடை சீ...

கனக்க யோசிக்கிறா போல இருக்கு ஊருக்கு போயிட்டுவா...

ச்சா அப்படியெண்டில்லை ம்ம்.. ஓமடி ஊருக்கு போனா நல்லதுதான்.. wanna get a break.

ம்ம் போட்டு வா..

போறதுக்கு காசில்லை நீ தந்தா போயிடுவன்..

என்ன செய்யுற காசையெல்லாம்?!

என்னைப்பற்றி தெரியும்தானே காசை சேமிக்கிறதெண்டுறது எனக்கு தெரியாத விசயம்...நாளைக்கெண்டெல்லாம் நான் நினைக்கிறதே கிடையாது.

என்னால முடிஞ்சதை தருவன் கவனமா போட்டு வா.

ம்ம் தேவைப்பட்டா சொல்லுறன் ஏப்ரல்ல போகலாம் எண்டிருக்கிறன்..

போகேக்க சொல்லு.

மம்ம்...நேரமென்னடி கதைக்கிறது பிரச்சனை இல்லையோ?

சாமத்துல கதைக்கிறது பிரச்சினை இல்லாம? சரி சொல்லு!

நீ ஏன் உப்பிடி எழுதுற காதல் கவிதையெல்லாம் எழுத மாட்டியளோ?


எழுதுறதோ? நான் புலம்புறதை "எழுதுற" எண்டு சொல்லி எழுதுறவங்களை கேவலப்படுத்தாத

அச்ச்சச்சோ... தாங்கேலாதாம்...அடக்கம் இருக்கத்தான் வேணும், அதுக்காக உப்பிடியோ...அவனவன் செய்யுற அலம்பல்களைவிட நீ எழுதுறது நல்லாத்தான் இருக்கு.

thanks thanks.. thanks...

சரி சரி...காதல்,கறுப்பி எண்டு ஒண்டையும் காணேல்லை காதல் கவிதை ஒண்டு சொல்லு பாப்பம்..

ஹாஹஹஹாஹாஹ :))

ஏன்டா சிரிக்கிற...

நீ காதல் கவிதை கேக்குற?

ஏன் நான் காதல் கவிதை கேக்கக்கூடாதெண்டு எழுதியிருக்கோ...

காதல்கவிதையை நினைச்சா எனக்கு இயலாச்சமன்தான் ஞாபகத்துக்கு வருது. :)

ஒரே ஆக்கள்தானே நீங்கள்...உங்களை திருத்தேலாது!


காதல் கவிதைகளெல்லாம் தாண்டி கன நாளாயிட்டுது காதல் கவிதைகளை படிச்சா சிரிப்புத்தான் வருது...அதாலதான் பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகளை அப்பிடியே விட்டுட்டன்.

சரி நீ எழுத வேண்டாம் எனக்கு சொல்லு

ம்ம் காதல்,கவிதை..கவிதையாவே வேணுமோ?

பரவால்ல எப்பிடியெண்டாலும் சொல்லு நீ அடிக்குரல்ல சொல்லுறதே ஒரு மாதிரிதான் இருக்கும்..


என்னத்தையடி சொல்லுறது

ஏதாவது சொல்லு கெதியில குட்நைட் சொல்லுறதுக்கு...நேரம் ஒண்டரை.


சரி நீ என்ன செய்து கொண்டிருக்கிற,என்ன கலர் உடுப்பு போட்டிருக்கிற?

டேய் என்னத்துக்கு கேக்குற

சொல்லடி...

"light purple color blouse and white pijama"

என்ன குடும்பி கட்டியிருக்கிறாயோ, அல்லது..?

உதைவிழும் கவிதையும் வேண்டாம் நீயும் வேண்டாம் போடா..

சொல்லெண்டுறன்... எடுத்தவுடன கவிதை சொல்லுறக்கு நானொண்டும் மெட்டுக்கெழுதுற ஆள் இல்லை.


சரி சரி ரெண்டு "hair clip" மட்டும் போட்டிருக்கிறன் சிக்குப்படாம இருக்க..

ம்ம்ம்....

ம்ம்...

என்ன சொல்ல...

ஹாஆ...கதை சொல்லு!


கதையோ...?

உன்னைக்கேட்டன் பார்!!

ஒரு..பாட்டுப்பாடு.

உனக்கென்னத்துக்கடா இந்த றிஸ்க்கெல்லாம்?


சரி பிடிச்ச பாட்டென்ன?

நீ கவிதை சொல்லெண்டா பாட்டுக்கேக்கிற?
பிடிச்ச பாட்டுத்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் அதுவும் நீ சொன்ன பாட்டுத்தான் போய்கொண்டிருக்கு இந்தா கேள்...

செம பாட்டு என...?

இதை ஏன் இப்ப போட்டன் எண்டிருக்கு

ஏ..னடி?

தாமரை என்னமாதிரி எழுதியிருக்கிறாள்,பாம்பே ஜெயஸ்ரீ என்ன குரலடா அவளுக்கு...

என்ன இருந்தாலும் பெண்மை காதல் சொல்கிற விதமே தனி! தமிழ் சினிமான்ரை சாபவிமோசனங்கள்ள தாமரையும் ஒராள்.

ம்ம்..


உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா...
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திக்கைப் பார்த்திடவா...
சிறுகச் சிறுக..உன்னில்... என்னை
தொலைத்த மொழி சொல்லவா..
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா.
ரணமும் தேன் அல்லவா..
ரணமும் தேன் அல்லவா...


ம்ம்...

என்னடா...

ம்ம்...

நான் கட் பண்ணுறன் ok...

கொஞ்சம் பொறடி..!

ம்ம்...

.....

சொல்லு...

ம்ம்....

சட்டென்று வருகிற மழையைப்போல
எந்த விதமான ஆயத்தங்களுமில்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டவனைப்போல
திணறிப்போகிறேன் நான்.


அட! முந்தின கவிதைகள் போல இருக்கு,நல்ல சிம்பிளா..பண்டிதத்தனம் இல்லாம.

அப்ப இப்ப பண்டிதர் மாதிரி எழுதறனோ..

அப்பிடியெண்டில்லை சிலபேர் வேணுமெண்டே திணிக்கிறது வித்தியாசமான சொல்லுகளை..அது ஒட்டுறதே இல்லை..அதான்.

அதான் நானிப்ப புளொக் பக்கமே போறல்லை.

அதுவும் நல்லதுக்குத்தான் ஹா..ஹா..ஹ. ;)

போடி குண்டம்மா!
சரி இன்னொண்டிருக்கு கேக்கிறியோ.. ;)

சொல்லு...


மெல்லிய ஊதா நிற மேலாடையில்
வாசல்களே இல்லை என்றாள்
திறக்க முடியாத மேலாடையின் உள்ளே மிகுந்திருந்து
எனக்கான அவளது ரகசியங்களும் பிரியங்களும்
.


உதை விழும் நாயே...!
கவிதை சொல்லெண்டா நக்கல் என உனக்கு..

சரி சரி முடிஞ்சா குட் நைட் சொல்லிட்டு படு...

ஏன் பின்ன உங்களோட உருகி வழிவம் எண்டு நினைச்சியளோ?!

நீங்கள் உருகோணும் எண்டெல்லாம் நாங்கள் கவிதை சொல்லுறேல்லை...சரியோ!!!

சரி சரி கோவிக்காதை...நான் நாளைக்கு எடுக்கிறன்..இப்ப குட்நைட்.

ஓ.கே குட்நைட்.

Tuesday, July 21, 2009

முடியாத கனவு...





மூச்சுவாங்கிய மார்புகள் அதிர
குதித்துக்கொண்டாடிய மலை முகடும்
காசியப்ப ராசனின் நீராடும் தடாகமும் என
முகில் தழுவிய மலை உச்சியில்
மஞ்சள் தேவதையாய்
உன்னை முத்தமிடத்தூண்டிய நீயும்
என்னை இயங்காது தகர்த்த சூழ்நிலையும்
நெடுநாட்களாய்
நீராடும் நீயும், மலையும், சில பறவைகளும்
என கனவில் விரட்டுவன...

அந்த இரவு முழுவதும் என்னோடே இருந்தாய்
உதடுகள் அடக்கிய வார்த்தைகள் முழுவதும்
வெப்பம் நிரம்பிய உள்ளங்ககைளிரண்டில் புரிவித்தாய்
அப்பொழுதில் உன் விரல்களும் நகங்களும் பேசின.

விடிகிறது என்கிற பொழுதுகளில் எழுப்பி
வளைவுகள் வரரை முன்னேறிய என்
கனவினை கலைத்தாய் அந்த
கனவு இன்னமும் முடியவேயில்லை...



பின்குறிப்புகள்:

\\
மலைகளில் காணாமல் போன தேவதைகள் எழுத காரணமாயிருந்தது இந்த வரிகள் மட்டுமே ஆனால் இந்த வரிகளுக்கு ஒரு சிறுகுறிப்பை எழுதலாம் என்று எழுதுகையில் அது ஒரு நீளமான கதையாகிற்று.

\\
அதில் இவள்தான் நிஜம்.

\\
நன்றி இங்கே பெயர் சொல்ல விரும்பாத குண்டம்மாவுக்கு.

Friday, June 26, 2009

மலைகளில் காணாமல்போன தேவதைகள்...



மலைகளில் நிகழ்கிற ரகசியங்களை நதிகள் கொண்டு செல்கின்றன வாழ்க்கையில் நிகழ்கிற ரகசியங்களை காலம் காவிக்கொண்டு நகர்கிறது.அருவிகள் விழுகிற ஓசைகள் மலைகளில் பகிர்கிற கதைகளின் கிசுகிசுப்புகளாகவே எனக்கு கேட்கிறது.எவ்வளவு மனிதர்கள்,எவ்வளவு கதைகள், எவ்வளவு ரகசியங்களை கொண்டிருக்கும் இந்த மலைகள். பறவைகள் பகிரங்கமாய் கூடுகிற மலைகளை ஏறுகையில் மனிதன் ஆதிகாலத்துக்கு போய்விடுகிறான். ஒரு சுதந்திர உணர்வை அடைகிறான். மலையின் உச்சியில் இருக்கும் பொழுதுகளில் உற்சாக மனோநிலை இருப்பது இந்த சுதந்திர உணர்வுகளின் வெளிப்பாடாய் இருக்கலாம்.பாரங்கள்,நிர்ப்பந்தங்கள், கவலைகள் எல்லாம் கீழே நகர வாழ்க்கையின் உயரத்துக்கு வந்து விட்டதைப்போலொரு உணர்வு மலைகளின் உச்சிகளில் கிடைக்கிறது.கைகளை அகல விரித்து தலைக்கு மேலே போகிற முகில்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டு பறக்கவாரம்பித்துவிட்டதாக பாவனை செய்து கொள்கிற ஆனந்தம் மலைகளில் நிகழ்கிறது.

___________________________________________________





பால்ய காலத்தில் அறிமுகமான தேவதைகள் மலைகளில் வசிப்பதாகத்தான் அறிந்திருக்கிறேன். முன்பொரு நாளில் வேதைகள் மலைகளில் வாழ்ந்ததார்களாம், மழை நின்ற இரவுப்பொழுதுகளில் அவர்கள் நதிகளில் மிதந்து வருவார்களாம், நதிகள் வற்றுகிற காலங்களில் காற்றில் மிதந்து வருவார்களாம்.எனக்கு நம்பிக்கை இருந்தது,நான் மலைகளில் இருக்கிற தேவதைகளை தேடத்தொடங்கியிருந்தேன்.



"இப்பொழுது தேவதைகள் இல்லையா" என்றேன்.

"இருக்கிறார்கள் ஆனால் மலைகளில் வசிப்பதில்லை"

என்று அலட்சியமாய் சொன்ன மிருணாளினி ஆளை அடிக்கிற அழகி! கொஞ்சம் மாநிறம் என்று சொல்லக்கூடிய நிறைய கறுப்பு நிறமவள்.கால்களை நீட்டி சாய்ந்தமர்ந்து,மிருதுவாய் மூடிய கண்களோடு உதடுகள் நனையாமல் மதுவருந்துகிற அவளைப்பார்க்கையில் தேவதைகள் மதுபான விடுதிகளுக்கு வருவார்கள் என்பதாகத்தான் தோன்றியது.

அறுபத்தொரு நாட்களுக்கு முன்னர் அப்படியவள் சொல்லிய இரவில் நாங்கள் ஆடைகளின்றி உறங்கியிருந்தோம். அதற்கு பிறகு அவளை பீதுருதாலகால(Pidurutalagala)மலையில் தொலைத்துவிட்டேன்.

______________________________________________________________




பெண்களைப்போலவே வளைவுகளும் அழகுகளும் ரகசியங்களும் என பொதிந்து கிடக்கிறது மலை, அந்த மலையை அதிசயங்கள் நிரம்பிய பெண்ணொருத்தியோடு ஏறுவதென்பது அற்புதமான அனுபவமாகத்தான் இருக்க முடியும்.

இப்பொழுது நான் சொல்ல வந்தது ஒரு காலத்தில் ராசதானியாக அல்லது கோட்டையாக விளங்கிய சிகிரியா(Sigiriya Rock)மலையைப்பற்றியது அல்ல அந்த மலையில் நடந்த சில கதைகள்தான். மலை என்று சொல்வதை விட அந்தப்புரம் என்பது அழகு,இந்த மலையின் உச்சி வரை மூன்று தடைவைகள் போய் வந்திருக்கிறேன்.

முதல்தடவையின் பொழுது ஒரு அரசாங்க வேலை செய்கிற குழுவினரோடு சென்றிருந்தேன் எங்கள் ஊரிலிருந்து ஆரம்பித்த இலங்கை முழுவதுக்குமான பயணம் அது. அதிலும் ஒரு தோழி கிடைத்திருந்தாள். நான் தான் அந்த "செட்டிலேயே" வயது குறைந்தவனாயிருந்தேன் அவள் என்னோடு நெருக்கமாயிருந்தது அந்த குழுவில் வந்திருந்த அவளோடு வேலை செய்கிற அனேகமானவர்களுக்கு ஆச்சரியமாயும் எரிச்சலாயும் இருந்திருக்கலாம்!அவள் அடிக்கடி என்னை தேடிக்கொண்டதும், அந்த பயணம் முழுவதும் அக்கறையோடென்னை கவனித்துக்கொண்டதும், தான் ஏதாவது வாங்கினால் எனக்கும் சேர்த்து வாங்கியதும், என்னோடு இருந்து பயணம் செய்ததும்,என் கைகளைப்பிடித்துக்கொண்டு கதைகள் பேசியதும், நிச்சயமாய் மற்றவர்களுக்கு ஆச்சரிமாய்தான் இருந்திருக்கும்.

அவளுக்கும் எனக்கும் இடையில் அப்படியொரு ஈடுபாடிருந்தது, என்னை விட அவள் என்னோடு அதிகமாய் நெருங்கியிருந்தாள்.சொல்லப்போனால் நான் அந்த சுற்றுலாவில் இணைந்து கொள்வதற்கும்,இலங்கை முழுவதும் போய் வருவதற்கும் அவள்தான் காரணமாயிருந்தாள்! வேறொரு நண்பர் மூலம் அந்த சுற்றுலாவுக்கான அழைப்பு வந்திருந்தாலும் அவளது ஆர்வத்துக்கும் அன்புக்குமாகவே பயணத்துக்கு வருவைத உறுதி செய்துகொண்டேன். அவள் மனம் முழுவதும் ஏதோ ஒரு நெருக்கம் வைத்திருந்தாள் என்னோடு.

பல முறை நிகழ்ந்திருந்தாலும் நுவரெலியாவில் தங்கியிருந்த பின்னிரவில் உறங்கப்போவதற்கு முன்பாக நிகழ்ந்த அந்த தருணம் எந்த வைகயானதென்கிற முடிவுக்கு வர முதலே விலகிக்கொண்டோம். இப்பொழுதும் அவள் ரகசியமாய் சிரிக்கிறவளாகவே இருக்கிறாள்.

யாருமற்ற நடுமத்தியான வெயிலில் சிகிரிய புல்வெளியொன்றில் என்னோடு அவள் வெளிர்பச்சை நிற துப்படாவில் இளமஞ்சள் நிறமாய் படுத்திருந்தாள்.


பிந்திய குறிப்பு : அவள் கல்யாணமானவளென்பது எனக்கு தெரிந்திருந்தது.



***

இரண்டாவது முறை அது ஒரு கலகலவென்கிற அனுபவம். கிட்டத்தட்ட ஒரே வயதுக்கார சில யாழப்பாணத்து அழகிகள், பல பெடியள் மற்றும் அலுவலக அங்கத்தவர்களென ஒரு கலந்து கட்டிய குழு என்னுடைய ஹொட்டேல் முகாமைத்துவ பள்ளியில் இருந்து புறப்பட்டோம்.பாட்டும் கூத்தும் கும்மாளமும் என களைகட்டிய பயணம்.சென்றமுறையும் பாடினேன் என்றாலும் இந்தமுறை பாடி-கொண்டாடினோம். சிகிரியாவை திருகோண மலையிலிருந்து ஹபரண போய் அங்கிருந்து சென்றடைந்தோம்.அந்த மலையேறிய நிகழ்வில் கொஞ்சம் ஒடிசலாய் இருந்த அவள் ஒரு கத்தோலிக்க தேவதையாய் இருந்தாள் ஆன்(Anne) என்பது அவளுடைய பெயர்! நெற்றியில் விழுகிற முடிகளை அடிக்கொரு தடவை எடுத்து விட்டவாறே லேசாய் மூச்சுவாங்கி கன்னங்கள் வியர்க்க அவள் ஏறிவந்த மலை இன்னமும் அழகாயிருந்தது. Anne எங்கே இருக்கிறாய் இப்பொழுது, கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை பாடலை இப்பொழுதும் நினைவில் வைத்து பாடுகிறாயா? பியிரடிக்காமலே போதையேற்றுகிற விழிகளோடிருந்த இன்னொருத்தி அணைகிற தருணங்களுக்கு அடிக்கடி நெருங்கினாலும் பிடிகொடுக்காமலே இருந்தாள். இவளுக்காகவே "நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு" என்கிற பாடல்போன்ற ஒன்றை பயணத்தின்போது ஏழு தடவைகள் பாடியிருப்பேன்.

மலையேறாமல் பள்ளி அதிபரோடு அடிவாரத்திலேயே இருந்துவிட்ட குந்தவி பயணத்தின் ஆரம்பம் முதலே என்னை அதிகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். அமைதியான புன்னகையோடு சகலதிலும் கலந்து கொண்ட அவள் மனதளவில் நெருங்கியிருந்தாள். வட்ட முகம், பளிச்சென்ற கண்கள், கவிதையான மொழி என மனதுக்குள் நிறைய இடம் பிடித்தது இவள்தான்...பயணத்தின் முடிவில் சில வரிகள் எழுதி கையொப்பமிட்டுக்கொடுத்த அந்த குறிப்பபேடு காணாமல் போன நாட்களில் நிறையவே கவலைப்பட்டேன்.

***

திருகோணமலை Club Oceanic ஹொட்டலின் நீச்சல் குளத்துக்கருகில் வட்டமாய் உயர இருக்கைகளில் அமர்ந்தவாறே பியர் அருந்திக்கொண்டிருந்தோம்.மெதுவாக பாடுவதற்கு அனுமதி கொடுத்திருந்தது விடுதி முகாமைத்துவம்.

"வாவென்று சொலல்லாமல் வருவதில்லையா-காதல்
தாவென்று சொல்லலாமல் தருவதில்லையா"

என்கிற வரிகளில் ஆரம்பித்து முழுவதுமாய் அந்த பாடலை பாடி முடிக்கையில் உற்சாக கை தட்டல்களுக்கு நடுவிலும் எதிரேயிருந்த ஆனினது கண்கள் தாழ்ந்து சிரித்ததை நான் தவறவிடவில்லை. போத்தலில் மீதமிருந்த முழுவதையும் அவளைப்பார்த்துக்கொண்டே ஒரே மூச்சில் குடித்து முடிதேன் இப்பொழுது அவள் என்னை கவனிக்கத்தவறவில்லை என்பதை கண்களிலேயே காட்டினாள். அப்பொழுது அவள் பாட ஆரம்பித்திருந்தாள்-

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை-என்
கண்களை பறித்துக்கொண்டும் ஏனின்னும் தூங்கவில்லை...

எல்லோரும் உறங்கிய அந்த இரவில் என்னோடு விழித்திருந்த Anne தங்க நிற உடலில் மஞ்சள் நிற மணலை அணிந்திருந்தாள்.





***
இதையெல்லாம் மறந்து விடுவோம்!
மூன்றாவது முறையாயும் திருகோணமலையில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில், திருகோணமலையில் இருந்த உறவுகளோடு கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருந்த குடும்பம் ஒன்றும் அவளது குடும்பமும் சேர்ந்து கொள்ள எங்கேயாவது போவதென்று- சிகிரியாவென்று முடிவாயிற்று அதுவும்.

இந்தப்பயணம் முற்றிலும் வித்தியாசமானதாய்,எனக்கு நெருக்கமாயில்லாத என்னுடைய அப்பாவழி உறவினர்கள் பழக்கம் குறைந்த சூழல் என கொஞ்சம் இறுக்கமாயிருந்து.கடக்க வேண்டிய சில சோதனைச்சாவடிகளை தாண்டிய பிறகு சூழல் கொஞ்சம் உற்சாகமாய் மாறியது. மொத்தம் பத்து பேர் மட்டும் இருந்த அந்த பயணத்தில் அவள் மட்டுமே எனக்கு நெருக்கமானவளாயிருந்தாள்.

சூழல் கொஞ்சம் இயல்புக்கு மாறிவிட கலகலப்பாய் இருந்தது, அப்பொழுது யாரவாது பாடலாமே என்கையில் அவள் என்னை நோக்கி விழிகளை உயர்த்தினாள்,எனக்கு மட்டும் புரிகிற மொழியில் பாடென்றாள். விழிகளில் பாடமுடியுமென்பதை அவள் அப்பொழுதிலிருந்து அந்த நாட்கள் முழுவதும் அடிக்கடி உணர்த்திக்கொண்டிருந்தாள்.

"கண்பேசும் வார்ததைகள் புரிவதில்லை" என்று தொடங்கிய அந்தப்பாடல் அவளது கண்கள் பேசிய மொழிகளுக்கான எந்தன் குறிப்புகளாய் இருந்தது.அவள் கன்னங்களுக்கு உள்ளேயும் வெளியே கண்களாலும் சிரித்துக்கொண்டாள்.

அங்கே கொஞ்சம் அடங்க மறுத்தவர்களாய் நாங்கள் இருந்தோம். மலையை அடையும் வரை இரு கரையும் மரங்கள் அணிவகுத்திருந்த சிவப்பு மண் பாதையில் கைகோர்த்தது போல் தோள்கள் உரச நடந்த அனுபவம் தனி. இப்பொழுதும் முதுகுக்கு பின்னால் குறைசொல்லுதலும் குறுகுறுத்த பார்வைகளும் இருந்துதானிருக்கிறது.அது கடைசியாய் என் காதுக்கும் அவள் மூலமாய் வந்து சேர்ந்தது. இதனை சொல்கையில் அவள் விழிகள் துளிர்த்து விடும்போல ஈரமாகியிருந்தன.கடினப்பட்டு தவிர்த்துக்கொண்டாள்.

மலையில் மூன்றில் ஒரு பங்கை எல்லோருமாக ஏறினோம் அதற்கு பிறகு முடியவில்லை என மற்றவர்கள் பின்தங்கிவிட நானும் அவளும் வேகமாய் முன்னேறினோம். குண்டும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் அளவாய் தெரிந்த அவள் நெருக்கமான அழகுகளில் இருந்தாள். தழைவாக கறுப்பு நிற நூல்வளையம் போட்டிருந்த அவள் கூந்தல் காற்றில் அலைந்து கன்னங்களில் கோடுகள் போட்டிருந்தது கொஞ்சம் மிகையான உரோமங்களோடிருந்த அவளது பின்களுத்தில் துளிர்த்திருந்த வியர்வைத்துளிகள் வெயில் பட்டு மின்னியது.சிரித்து சிரித்து மூச்சுவாங்கி மலையேறிய அவளோடு நான் மிதந்து கொண்டிருந்தேன்.

ஓவியங்கள் இருக்கிற சுவர்ப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம் நிதானமாய் ஒவ்வொரு ஓவியமாய் கவனித்தாள். ஓவியங்களை தொடக்கூடாது என்கிற உத்தரவை காவலுக்கு நின்றவர் அடிக்கடி சொல்லிக்கிக்கொண்டிருந்ததில் ஓவியங்களுக்கு பதில் நான் அவளது கைகளை அழுத்தமாய் வருடிப்பற்றினேன்.

பாதி ஏறி முடித்து சிங்கத்தின் கால்கள் போல அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தோம் அங்கே கொஞ்சம் இளைப்பாறினாள்.மலையின் மறுபக்கத்திற்கு போய் காடாக இருந்த இடத்தைப்பார்த்தோம் அந்த ஓடை மாதிரியான சுவரோரம் இருந்த இளம் சிங்கள காதல் ஜோடியை கவனித்தவள் என்னை நோக்கி கண்களில் எதையோ சொன்னாள்,அவள் என்ன சொன்னாள் அல்லது நினைத்தாள் என்பது உங்களுக்கு தேவையில்லாதது.

முகட்டுக்கு செல்கிற ஏணிப்படிகளில் ஏறி முடிக்கும் வரை கவனம் என்கிற வார்ததைகளைத்தவிர வேறெதும் சொல்லாமல் வந்தவள் ஏறி முடிந்ததும் அங்கும் இங்கும் என ஓடி கொண்டாடினாள். ஏற்கனவே இரண்டு முறை பார்த்திருந்ததில் அவளுடைய சந்தோசங்களை கவனித்துக்கொண்டிருந்தேன் நான்...

காதல்,காதல்,காதல் என்று...
எனக்குள் இருக்கிற காதலை நான் என்னால் முடிந்தவரை சத்தமாக அந்த மலை முகட்டின் வெளியில் மொழிந்தேன்,அவள் என்னோடு கைகோர்த்துக்கொண்டாள்.காசியப்ப மன்னனின் நீர்தடாகத்தில் கை நனைத்துக்கொண்டோம்,அந்தக்கணங்களில் அந்தப்புரத்து தடாகத்தில் எங்கள் உயிர்கள் நனைந்திருந்தது.

அந்த மலையின் உச்சியில் புகைக்க வேண்டும் போலிருந்தது அதற்கு அவள் காரணமாயிருக்கலாம் அல்லது இனியந்த மலைக்கு வருகிற சந்தர்ப்பம் எனக்கு இருக்குமோ என்பது காரணமாயிருக்கலாம்.நான் புகைப்பேன் என்பது மற்றவார்களுக்கு தெரியாததாய் அல்லது பிடிக்காததாய் இருந்தது. நான் ஒரு சிகரெட்டை இழுத்து முடிக்கும் வரை அருகிலேயே நின்றாள். மற்றவர்கள் ஏறி வரவும் எல்லோருமாய் புகைப்படங்கள எடுத்துக்கொண்டோம். இறங்கும் பொழுதும் கடைசியாகவே இறங்கினோம்.இறங்குவதற்கு முன்பொரு சிகரெட் வேண்டுமென கேட்டதில் பறித்து வைத்திருந்த பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை அனுமதித்தாள் இழுத்து முடிக்கும்வரை எதிரே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

இறங்கி முடிக்கையில் இன்னும் நெருங்கியிருந்தோம்.

மதிய உணவை சிகிரிய உணவகத்தில் எடுத்தோம்.அழகிய பெண்ணொருத்தி பரிமாறிய மதிய உணவும் பொழுதும் ரசனைக்குரியதாயிருந்தது.அவள் பேனையைக்கொழுவியிருந்த இடத்தை காட்டி இப்பொழுதெனக்கொரு பேனையாயிருப்பது பிடித்திருக்கிறதென்று அருகிலிருந்தவளிடம் கிசுகிசுத்தேன் யாருக்கும் தெரியமால் நறுக்கென்று கிள்ளினாள்.

அந்த இரவு முழுவதும் என்னோடு விழித்திருந்த அவள் பனி விழுகிற மல்லிகைப்பந்தலின் அடியில் நிலவொளியினை அணிந்திருந்தாள்.




மலைப்பயணங்கள் போவது சுவாரஸ்யமானது அதுவும் தோழிகளோடு போவது அழகிய சுவாரஸ்யம்.
___________________________________


இந்தக்தைகளை கேட்டுக்கொண்டிருந்தவள்,

"நீ சின்னப்பெடியன் எண்டெல்லோ நினைச்சன்" என்றாள்.
இப்பொழுதும் என்னை அப்படித்தான் நினைப்பதாக அவளது உதடுகள் காட்டிக்கொடுத்தன.

நான் சின்னப்பெடியனாய் இருப்பது என்னுடைய பலம், எல்லாத்தேவதைகளோடும் பழக முடிகிறது இந்த தோற்றத்தில்தான்.

"நீ..கூட என்னை அப்படி நம்பித்தானே வந்தாய்" என்கிற அவளது உண்மையை வெளிப்படுத்தினேன்.

இப்பவும் அப்படித்தான் நினைக்கிறேன் அனால் உனக்கு முத்தங்களைப்பற்றி தெரிந்திருக்கிறதென்பதை முதல்நாள் இரவே அறிந்துகொண்டேன்.

"கலங்கடிக்கிறாய்" என்றாள் கிறக்கமாக.

"இப்பொழுது என்னை ஒரு முத்தத்துக்கு அனுமதி"

"அவசரப்படுகிறாய் டியர்" என்றவள் கொங்கைகள் அதிர சிரித்தாள்.

இரண்டாவது குவளையில் ஐஸ் கட்டிகளை போட்டுக்கொண்டு அணிந்திருந்த குளிர்ச்சட்டையை களற்றி கதிரையில் போட்டாள் அது ஒரு தேவதை தன் சிறகுகளை களைவதை ஒத்திருந்தது.மெழுகுதிரி வெளிச்சத்தில் சிவப்பு நிற மதுரச குவளைகளின் பின்னணியில் தெரிந்த அவளது வெளிர் நீல நிற ஆடைகள் மறைத்த மார்புகளின் தொடக்கம், இருக்கிற போதையை என்னவோ செய்தது.

"இப்ப தர்றியா இல்லையா" என்றேன் மறுபடியும்,

"என்னடா சத்தம்போடுறாய்"

'இப்ப இல்லையெண்டால் இண்டைக்கிரவு உன்னை கொன்டிருவன்"

"நீ செய்யுறதும் செய்யாமலிருக்கிறதும் கொல்லுறது மாதிரித்தான்டா இருக்கு,கடும் ஆளடா நீ.."

என்றாள் ஐஸ்கட்டிகளும் மார்புகளும் தழும்ப!

நான் நிதானமாய் சிரித்துக்கொண்டே பாதி சிகரெட்டை அவளிடம் கொடுத்தேன்...

சிகரெட்டை வாங்குவதற்கு முன்னே குனிந்தவள்
"உனக்கொன்று தெரியுமா..நான் எந்தவொரு ஆம்பிளைட்டையும் சிகரெட் வாயங்கியது கிடையாது நீதான் முதல் ஆள்"என்று உதடுகளைக்குவித்து சிரித்தாள்,சிரிக்கும்பொழுதில் அதிர்கிற அவளை கவனிக்காமல் இருக்க முடிவதில்லை.

நானும் யாருக்கும் சிகரெட்டை கொடுத்தில்லை உனக்குத்தான் கொடுத்திருக்கிறேன் என்றேன்.

"இந்தப்பொய்யை என்னட்டை சொல்லலாதை கள்ளா, நீ ஆரெண்டு எனக்கு தெரியும்"

சரி நான் யாரென்பது அவளுக்கு தெரியும் உங்களுக்கு தெரியுமா...

சில இரவுகளை என்னோடு கொண்டாடிய அவளுக்கே என்னை முழுவதும் தெரியாதெனும்பொழுது உங்களுக்கெப்படி தெரியும்?

அவளுக்கு என்னைப்பற்றி தெரியாது.

அவளைப்பற்றி எனக்கு தெரியும்.

பெயர்:பிரிஜ்ஜெட் கிருபாநந்தினி (Bridget Kirubananthini)

இடம்:திருகோணமலை..

வயது:என்னை விட ஏழுவயது அதிகம்

தொழில்: அழகான தொழில்.

கொஞ்சம் திரண்ட தேகம், திணறடிக்கிற அழகு, குறைந்த பட்ச போலித்தனம்,எதுவும் செய்கிற தைரியம், இயல்பாய் நிகழ்த்துகிற காமம் எனக்கே கற்றுக்கொடுப்பாள் என்பதாக முயங்குவாள்.கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றால் போடா சின்னப்பெடியா என்று சிரிப்பாள்.

நினைவில் நிக்கிற அழகி
கனவில் வருகிற கண்கள்
கருஞ்சந்தன தேகநிறம்
மனோவசியம் செய்கிற வாசனை
என எனது மொழியில் தேவதையாயிருந்தாள்.

இவ்வளவும் போதுமானதாயிருக்கிறது இவளைப்பற்றி!

இப்பொழுது இரண்டாவது போத்தலின் முடிவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிற இவளும் நானும் இருப்பது St.Andrews Hotel- Nuwara Eliya,Sri Lanka.இந்த விடுதி எனக்கு மிக பிடித்தமானதாய் இருந்தது, மிருணாளினி என்கிற முதல் தேவதையையும் இங்கே வந்துதான் அவளது மலைக்கு அனுப்பி வைத்திருந்தேன்.இது பிரிட்டிஷ் காலத்து பங்களாக்களில் ஒன்று, ஜெட்விங்(Jetwing)நிறுவனம் இதனை விடுதியாக்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. ஆவி பறக்க தருகிற கறுப்புத்தேநீரும்(Black Tea), உலகத்து வைன் வகையெல்லாம் கிடைக்கிற வசதியும் இந்த விடுதியில் என்னைக்கவர்ந்தவை.

Bridget போதையில் என்னை கிறங்கடிக்கத்தொடங்கினாள்...போதும் என்பதாய் தோன்றியது-தேவதைகள் அதிகம் குடிக்கக்கூடாது.

லேசான ஆட்டத்தோடு அழகுகள் வழிய நின்றவளை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டேன்.
மெதுமெதுவென்கிற தேகம் தளைய " ஹே சின்னப்பெடியா என்னைக்கொண்டு போடா" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.

நான் பீதுருதாலகாலவில் ஏறத்தொடங்கினேன்.

"ஏய் என்னைக்கொண்டு போடா" சிணுங்கினாள்...

வெளிச்சமே விழாத மரங்களில் மறைவிலிருந்த பாறையில் அவளை அமரவைத்தேன்

அப்படியே படுத்தவள் "ஒன்றா ரெண்டா ஆசைகள்..." என ராகமாய் முணுமுணுத்தாள். இந்தப்பாடல் தனக்கு பிடிக்கும் என்பதாய் பதினொரு நாட்களில் எழுபத்தொன்பது முறை சொல்லியிருந்தாள்.

பாறையில் அவளொரு தேவதையாய் கிடந்தாள்!

எனக்கு மழை விட்ட இரவில் நதியில் மிதக்கிற தேவதைகள் நினவுக்கு வந்து போயினர்.

நான் நுழைந்து வெளியேறுகிற கலையில் அவள் மீது பரவ ஆரம்பித்தேன்...

விடிகையில் Bridget காணாமல் போயிருந்தாள்.

அவள் விட்டுப்போன அவளது மார்புகளுக்கு நடுவில் ஆடிய நீல நிறக்கண்கள் இப்பொழுது என் கழுத்திலிருக்கிறது.நான் பீதுருதாலகாலவிலிருந்து இறங்கத்தொடங்கினேன்.




உரையாடல் அமைப்பின் சிறுகதைப்போட்டிக்காக இணைக்கப்டுள்ளது.

Sunday, January 11, 2009

சைக்கிள் நினைவுகளும் தேவதைகளும்!




பள்ளிக்கூட வாழ்ககை என்பது வாழ்வின் அனுபவங்களில் பசுமைகள் நிரம்பிய காலம் கல்லுரி வாழ்க்கை வேறு சுகம் என்றால் பள்ளிக்கூட வாழ்க்கை தனி அற்புதம்!

பெயர் தெரியாத வெள்ளைநிறப்பறவைகள் கூட்டமாய் பறந்து செல்கிறதை பார்த்திருக்கிறீர்களா அவை பச்சைவெளிகளில் தரையிறங்கி வெகு நிதானமாய் நடைபோடுகிற அழகை ரசித்திருக்கிறீர்களா எங்களூர் பள்ளிக்கூட சீருடைகள் வெள்ளை சட்டைகள்தான் பள்ளிக்கு பள்ளி டை மட்டும் மாறுபடும்.வெள்ளை நித்துப்பறவைகளாய் சில கோடி அழகுளின் சாயல்களில் நிறம் நிறமாய் பெண்கள்!(இப்பொழுதெல்லாம் கூட்டமாய் பறக்கிற பறவைகளை காணமுடிவதில்லை.இருக்கிற இடம் அப்படியோ என்னவோ)நான் கலவன் பாடசாலையில் படிக்காதது நான் செய்த துர்ரதிஷ்டம்!அடுக்கடுக்காய் அவள்கள் சைக்கிளிலும் நடந்தும் வருவது - இப்பொழுது நினைக்கையில் ஊவ்ஹ்ஹ்ஹ்...
(இந்த நேரத்தில் சமீராவைப்பார்த்த சூர்யாவை கற்பனை பண்ணிக்கொள்ளவும்) அதுபோல சில மோனரிஸங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நெஞசில் மெதுவாக தட்டிக்கொள்ளுதலும் தலையை இடது பக்கமாய் திருப்பி இல்லாத காற்றை வெளிவிடுகிறதுமாகிய நிகழ்வு எனக்குள்ளும் நிகழந்திருக்கிறது! அப்படியொரு நிகழ்வு சமீப காலங்களில் நிகழவில்லை என்பது ஏக்கத்துக்குரிய உபரிக்குறிப்பு.


மனது விட்டுச்சொல்லப்போனால் என் பள்ளிக்கூடத் தெருக்களில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடக்கலாம்...அடச்சே! என்ன வாழ்க்கையிது இப்பொழுது! ஏன் கடந்து போகின்றன நாட்கள் பால்யங்கள் தொலையக்கூடாது தொலைந்தால் ஊரை விட்டுப்போகக்கூடாது!



நான் படித்த பள்ளிக்கூடத்துக்கு சகோதர பாடசாலையாக ஒரு பள்ளிக்கூடம் இருந்தது... வடமராட்சியின் பெயர் பெற்ற மகளிர் கல்லுரிகளில் ஒன்று! வடமராட்சி முழுவதிலும் இருந்து படித்த பெண்களை பார்க முடியும். ஒரே எல்லைக்குள் இருந்தாலும் நடுவில் வீதியும் சில கட்டிடங்களும் மட்டுமே பிரித்து வைத்திருந்தது ஆனால் போக்கு வரத்து ஒரே பாதைகளில்தான் நடக்கும் வாழ்வின் மிக அழகிய தெருக்களில் அவை முதலிடத்தில் இருக்கின்றன...





காலையில் ஏழரையிலிருந்து எட்டுமணிவரையும் மத்தியானம் இரண்டு மணியிலிருந்து இரண்டரை வரையும் அந்த தெருக்களின் முக்கியமான வளைவுகள் சில எங்களுடைய சிந்தனைத்தளங்களாய் அமைந்திருக்கும்.

காலையில் அழுத்தி அயர்ன் பண்ணிய வெள்ளைச்சட்டைகளும் இறுக்கிப்பின்னிய இரட்டைஜடைகளுமாய் வரிசை வரிசையாய் பெண்கள்!கோசலா மெத்தைக்கடை சந்தியை கடக்கையில் மணி ஏழு நாற்பத்தொன்றாய் இருக்கும், பிருந்தாவும் சிந்துவும் ஓடக்கரையையும் கொலிஜ் றோட்டையும் இணைக்கிற சந்திக்கு வருகையில் மணி ஏழு முப்பத்தொன்றாய் இருக்கும், நெல்லியடி பிரியாவும் சுகந்தியும் பள்ளிக்கூட வளைவை நெருங்குகையில் மணி ஏழு நாற்பத்தொன்பதாய் இருக்கும் இப்படி அவளவளுக்கென்று தனித்தனியான நேரத்தை வைத்திருந்து நாள் தவறாமல் குறித்த நேரத்துக்கு வருவதில் பெண்களை மிஞ்ச முடியாது.


எனக்கொரு பழக்கம் இப்பொழுதும் இருக்கிறது பெண்களின் முகத்தை கவனமாய் பார்க்கிறேனோ இல்லையோ அவர்கள் பாதங்களை பார்த்து விடுவேன் எனக்கென்னமோ தெரியவில்லை முகம் பார்த்தாலும் திரும்ப அவள் பாதங்களை பார்ப்பது பழக்கமாகியிருந்தது அதுபோல எல்லா கால்களுமே வெள்ளை காலுறைகளில் செதுக்கிவைத்தாற்போல இருந்தாலும்(இந்த சீருடை என்பது எவ்வளவு அழகான விசயம் அதுவும் வெள்ளை நித்தில் சீருடை என்பது ரசனைகளின் உயரிய விசயங்களில் ஒன்று வெள்ளை நிற சீருடைகளுக்கு வேறென்ன காரணங்கள் இருப்பினும் எனக்கென்னவோ இப்படித்தான் தோன்றியது)
அந்த வகையில் பழக்க தோசங்களின் விதிப்படி கால்களை வைத்தே கால்களுக்கு சொந்தக்காரி யாரென்பதை சொல்லிவிடக்கூடிய திறமையை வளர்திருந்தேன்:)


பள்ளிக்கூட நாட்களில் காலைகளில் பெண்களளை கவனிப்பது அல்லது பார்ப்பது ஒரு விதமான உற்சாகம் தருகிகற நிகழ்வு! வழக்கமாய் பார்க்கிற சில முகங்களை பார்க்க முடுடியாமல் போனால் அன்றய பாடங்கள் எதுவும் கவனத்துக்கு வருவதில்லை....
அதுவே அந்த இரண்டிலிருந்து இரண்டரை வரையிலான வெயில் நேரத்து பகல்களின் பசி நேரத்தில் அவள்களை கவனித்தால் அது ஒரு சுவாரஸ்யமான அழகியல் பெண்களை புரிந்து கொள்வதற்கு நான் முயன்ற முதல் படிகள் இந்த நாட்களில் இருந்து ஆரம்பித்திருக்கலாம் என்பது என் எண்ணம்...

காலையில் சொல்லப்படுகிற கதைகளுக்கும் கேட்கப்படுகிற கேள்விகளுக்கும் மதியங்களில் பதில் கிடைக்கலாம் இங்கே பதில் என்பது திட்டுக்களாகவும் அட்வைஸ்களாகவும் வெகு அரிதாய் பதில்களகவும் இருக்கலாம்.அப்படி பதில் சொல்கிறவள்களில் ஒருத்தியாக குந்தவை இருந்தது என்னுடைய ஆச்சரியம் அவள் திமிர் பிடித்தவளென்பதும் மண்டல் கள்ளி என்பதும் பெடியளின் ஒருமித்த வாக்கு மூலமாய் இருந்தது.எனக்கென்னவோ அவள் அமைதியானவளாக இருந்தாள் என்றுதான் உள் மனது சொல்லிக்கொண்டிருந்தது.அவள் மிக ஆர்ப்பாட்டமானவள் என்பதும் அடுத்தவர்களை புரிந்து கொள்வதில் அதிக அக்கறை கொண்டவள் என்பதும் அவளொடு நிகழ்ந்த மிகச்சொற்பமான உரையாடல்களில் இருந்து நான் தெரிந்து கொண்டது...



குந்தவையோடு சமீபமாய் சைக்கிளோடுவது புரிதல் நிறைந்த நண்பனொருவனோடு கால் நனைக்கிற அலைகளின் கரையில் நடந்து கொண்டே மனது விட்டுப்பேசுகிற நிகழ்வைப்போன்றது...


பத்தாமாண்டு படித்த துர்க்காவோடு பேசிக்கொண்டு வருவது ரசனைக்குரிய விசயம் அவ்வளவு அழகாய் நாங்கள் இரண்டு பேரும் மட்டுமேயான தெருக்களில் நடப்பதைப்போல அபிநயங்களோடு பேசுவாள்...


ராதா மிக அழகாய் இருக்கிற அவள்...
வெகு சாதரணமாய் சைக்கிளை கையாள்கிறவள்! மிகப்பழகிய குதிரை ஒன்றின் சொந்தக்காரியைப்போல லாவகமான அலட்சியங்களோடு சைக்கிளோடுபவள்.இவளோடு பேசிக்கொண்டு வருகையில் எச்சரிக்கை கட்டாயம் அவசியமாய் இருக்கும் அதற்கு சாலை வளைவுகளை விட அவளுடைய வளைவுகள் காரணமாயிருந்திருக்கலாம்...


இன்னொருத்தி மாதுளா...
சற்றே குண்டாயிருந்தாலும் கவர்ச்சியான தோற்றம் என்பதோடு கிறங்கடிக்கும் விழிகளை விசேடமாக கொண்டிருந்தாள்.அந்த விழிகளுக்காகவே அவளோடு மிகக்கஸ்டப்பட்டு சினேகம் ஏற்படுத்திக்கொண்டேன். இப்பொழுதும் தூக்கம் கலைக்கிற கனவுகளில் அந்த விழிகளுக்கும் பங்கிருக்கிறது. உற்சாகமாய் இருப்பவள் இவளோடு சண்டை எல்லாம் போட்டிருக்கிறேன் சைக்கிளோடுகையில். சைக்கிள் சீற்றை கொஞ்சம் உயர்த்தி வைத்துக்கொண்டு அதிர்வுகளோடு சைக்கிளோடுகிற இவள் அதனால் தடுமாறுகிற பெடியளைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை,அடிக்கடி எழுந்து அமர்வதில் அதிர்வுகளை ஏற்படுத்திப்போகிறவள். யாருமற்ற காலைப்பொழுதொன்றில் மிக வேகமாய் விளையாட்டு பயிற்சிக்கு போய்க்கொண்டிருந்தவளை வழிமறித்து நிப்பாட்டினேன் சைக்கிளின் இரண்டு பக்கமும் கால்களை வைத்து நின்றவளை கொஞ்சமும் எதிர்பார்க்கமால் சட்டென்று இழுத்தணத்தேன்...உதடுகள் விடுபடுகிற தருணத்தில் அவள் காதுகளுக்கருகில் மிக மெதுவாய் சொன்னேன் இனிமேல் இப்படி சைக்கிளோடாதே!


பள்ளிக்கூடத்தின் இறுதி நாட்களில் நான் கூடவே சைக்கிளோடி வந்த இன்னொரு பெண்ணையும் மறக்க முடியாது! மதிவதனா என்பது அவளுடைய பெயர். அவளை அவள் என்று எழுதுவது கொஞ்சம்அதிகம்தானென்றாலும் அவள் அதனைத்தான் விரும்பினாள் என்னை விட நாலு வயதென்றாலும் அவளுக்கு கூட இருக்கலாம் ஆனால் அவளோடு நான் கருத்துக்களின் அடிப்படையில் மிக நெருக்கமாய் இருந்தேன்!எங்கள் ஊரின் பள்ளியொன்றில் கணிதம் படிப்பிக்கிறவளாக இருந்தாள்.

கொஞ்சம் சிரமப்பட்டு சைக்கிளோடுவது போலத்தான் 'சாறி'கட்டியிருப்பாள் ஆனால் வெகு நளினமாய் விளம்பரங்களில் வருகிற பெண்களை போல இருக்கும் அவள் சைக்கிளை கையாள்கிற விதம். ஆளை அடிக்கிற வாசனையோடு வருகிற இவளோடு நிகழ்ந்த கதைகளை இங்கே சொல்லப்போனால் எனக்கு பின்னூட்டங்களில் வசவுகள் வரக்கூடும்!



பின் குறிப்புகள் அல்லது பதிவுக்கான காரணங்கள்:

//
சைக்கிள்களையும் பெண்களையும் மறக்க முடியாத ஒரு ஊர் எங்களுடையது யாழ்ப்பாணம் சைக்கிள்களின் நகரம் என்று அங்கு வந்து போன வெளியிடத்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

//
எழுத்திற்குள் கொண்டு வரத்தெரியாத பல நினைவுகள் இருப்பினும் வசப்படுகிற பொழுதுகளில் எழுதி விட வேண்டும.மிக முக்கியமான நினைவுகள் இன்னமும் எழுதப்படவில்லை...


//
பள்ளிக்கூட சட்டையிலிருந்த
உன்னைப்போலிருந்தாள்
நெடு நாட்களுக்கு பிறகு
நேற்றய கனவில் வந்த
ஆதிக்கனவுகளின் தேவதை...!


//

தொடரும்...