Tuesday, October 19, 2010

ஞாபகக் குறிப்புகள் அல்லது கோர்வையாகாத சொற்கள்.



எல்லாவற்றையும் எழுதிவிட முடியுமா என்ன?! இருந்தாலும் எழுதலாமென்று ஒரு முடிவுக்கு வந்தால் எதை,எப்படி எழுத என்கிற சிக்கல் ஒன்று இருக்கிறது, எழுதிச்செல்லும் விலங்கு என்று எங்கோ படித்திருக்கிறேன் எழுதி எழுதிக் கரைநது போன சிலர் போல சொற்களில் வாழும் விலங்கு நான்.

அது சரி எழுதுறது எழுதுறது எண்டுறாய் அப்ப நீ செய்யுற கூத்துகளை எல்லாம் இலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் போல...


அதில்லை மச்சான், இதுதான் இலக்கியம் என்று உனக்கு யார் சொன்னது,சொல்ல வந்த விசயத்தை சொல்ல விடு.


1700 நாட்கள்...பிறகான எழுபத்தாறு நாட்கள்.

பயணம், பரவசம், தவிப்பு,பதட்டம்,தேவைகள்,சோத்து வைக்காத பணத்தின் பெறுமதி, குற்றவுணர்வு,வெளியேற முடியாத சாபம், காமம், விரும்பி உள்ளே இருக்கிற சாத்தான், தவிர்க்கப்படுகிற புணர்வுகள்,உடல்கள். திருவிழாக்கள், திருவிழாவில் சந்தித்த தேவதை. நிராகரிக்கப்படுகிற தருணம் நிராகரித்தலின் பரிமாணம், காதல், பைத்தியக்காரத்தனங்கள். பிரச்சனைகள், போதை, கொண்டாட்டம், சில விசயங்களைச் செய்துவிடுகிற போதை.வெளிநாடு, காலங்களுக்குப்பிறகான சந்திப்புகள்,நண்பர்கள், குடும்பம், உறவுகள் போலிகள்,உறவும் பிரிவும், ஊரும் நினைவுகளும், புகைப்படங்களும் பொழுதுகளும், புதியவர்கள், பழையவர்கள், முதுமை, ஊர் எய்திய மூப்பு, தலை முறைகளுக்கிடையிலான இடைவெளிகள்.மாற்றங்கள்,நான் எழுதாத கதைகள்,இரகசியக்கதைகள்,பகிரங்க மன்னிப்புகள், துரோகம், நட்பு, விரகம்,பெண்கள், சினேகிதிகள், கல்யாணம்,சாவு, ஒன்றுகூடல், பங்கெடுத்தல்.பயணங்கள்,புத்தகங்கள்,பாடல்கள்.அவள்,நான்,கடவுள்...

எழுத தெரியெல்லை எண்டால் தெரியேல்லை எண்டு சொல்லு இப்படி நீட்டுக்கு புலம்பினால் என்ன அர்த்தம்?!

எழுத்தை திணிக்க முடியாது மச்சி,அதை கோடுபோட்டு செய்யவும் முடியாது, இப்ப நான் இதை எழுதினது எனக்கு எழுதத்தெரியும் எண்டுறதுக்காக இல்லை, நீ படிக்கோணும் எண்டுறதுக்கும் இல்லை இதுல இருக்கிறதை இலக்கியம் எண்டும் சொல்லலாம் இலக்கியம் இல்லையெண்டும் சொல்லலாம்.இலக்கியத்துக்கு யார் மச்சான் இலக்கணம் கொடுத்தது? புத்திஜீவிகள் எண்டு நினைக்கிற எல்லோரும் ஏதோ ஒரு வகையிலை தன்னை முன்னிலைப்படுத்துற ஆக்கள்தானே அப்படியான சூழல்தானே எங்கடை இலக்கியத்தில இருக்குது.இதை எழுத்தெண்டும் சொல்லலாம் எழுத்தில்லை எண்டும் சொல்லலாம் என்னை பொறுத்த வரைக்கும் இது ஒருஞாபகக்குறிப்பு எண்டு வைச்சுக்கொள்ளன். இது ஒரு இலக்கியமுமில்லை இதுக்கு இலக்கியத்தனமா பெயர் வைக்கவும் நான் விரும்பலை. ஆனால் இதை எழுதியே ஆகோணும் எண்டுறது உண்மை சும்மா இருக்கிறவனுக்கு சோலி நிறைய அது உனக்கு தெரியுமோ? எனக்கும் உனக்கும் இடையில நடந்த முடிவில்லாத சில உரையாடல்களைப்போல கதைச்சுத் தெளியுறதுக்கும் தொடர்ந்து கதைக்கிறதுக்கும் எவ்வளவு விசயம் இருக்கு எங்கடை ஊர்ல, எங்களுக்குள்ள?! அது மாதிரி தான்டா பேச ஆள் கிடைக்காத அந்த இடம் எழுத தொடங்குகிற புள்ளியாய் இருக்கலாம் அல்லது பேச நினைக்கிற சொற்களின் அமுக்கம் எழுதுவதற்கான முதல் விசையாய் இருக்கலாம்

சொற்களாலேயே வாழ்கிறோம் என்பது உனக்கு ஏன் தெரியாமல் இருக்கிறது.என்னால பேசாமல் எல்லாம் இருக்க முடியாது, அது என்னுடைய இயல்பு பேசிபேசிக் கரைந்து போன சில இரவுகளை இந்த விடுமுறையிலும் ஒருத்தி தந்திருந்தாள்,உண்மையில் இரவு முழுவதும் பேசுவதற்கு ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது.பெண்களோடு பேசுவதென்பது ரம்மியமான விசயம் அதிலும் கொஞ்சம் அழகான,கொஞ்சம் சிந்திக்கிற, தன்னை புத்திசாலியெண்டு நினைக்கிற(அனேகம் பெண்கள் இப்படித்தான்)கொஞ்சம் புரிதல் இருக்கிற,இயல்பான, குறைந்த பட்ச பொய்களோடு இருக்கிற பெண்களோடு பேசுவது சுவாரஸ்யம்.சரி அதை விடு இதைப்பற்றி எழுதப்போனால் கனக்க கதைக்க வேண்டி வரும் அது உனக்கு பிடிக்கவும் மாட்டுது; ஆனால் மச்சி நெருக்கமான பெண்ணோடு இருந்து கதைக்கிறது அற்புதம் அதை விட அந்தக்கதைகளின் நடுவில் வருகிற இடைவெளிகளும் அந்தக்கணங்களில் நிகழ்கிற அசைவுகளும் முடிந்தால் சில முத்தங்களும் அனுபவித்தே ஆகவேண்டிய விசயங்கள்.சரி அதை விடு.

இன்னுமொன்று இதை எப்படி எழுதுவதென்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இதை எழுதாமல் இருக்கிறது எப்படி என்பது என்னால் முடியாத விசயம் அல்லது அது தெரியவில்லை. இந்த எழுதுதல் என்கிற விசயம் ஒரு விதத்திலை விடுதலை அது உனக்கு புரிகிறதோ இல்லையோ எனக்கு தேவைப்படுகிறது.

ஒரு கட்டத்துக்கு மேல் எழுதாமல் இருக்க முடிவதில்லை விழித்திருக்கிற இரவுகளும் தனித்திருக்கிற பொழுதுகளும் வாழ நினைக்கிற மனமொன்றின் தேடல்களும் எப்பொழுதும் புதிர் நிரம்பியவைகளாகவே இருக்கிறது. பின் மதியம் ஒன்றில் சோம்பல் முறிக்கிற பூனையிடம் இருக்கிற அமைதியை கண்டிருக்கிறாயா.பூனைகள் மிகச்சாதுவானவை போல இருந்தாலும் அவை அனைத்தும் உண்ணிகளாயும் வேட்டையாடி உண்கிற விலங்கினத்தில் இருப்பதும் உனக்கு தெரியாததா? சொற்களும் சாதாரணமாய் இருந்தாலும் இவை பூனைகளைப்போல சினுங்கவும்,காலைச்சுற்றவும், மடியில் உறங்கவும், பிறாண்டவும் கடிக்கவும் வல்லவை என்பது உனக்கு தெரியும்தானே.

சுதந்திரமானதொரு காதலியைப்போல பூனைகள் நம்மை கவர்கின்றன,சொற்கள் அவளுடைய முத்தங்களைப்போல கிறங்கடிக்கின்றன அல்லது மயக்கம் தருகின்றன.கிடைக்காமல் இருக்கிற முத்தங்களின் தாக்கம், எழுதாமல் இருக்கிற சொற்களின் அமுக்கம் இரண்டும் நெடுநாட்கள் பொறுக்க முடியாதவை.எழுதுறது ஒரு கலை மச்சி அப்படி எண்டு புழுக விரும்பேல்லை ஆனால் அதை எல்லாராலையும் செய்ய முடியுறதுமில்லை.

சரி சரி விடு அவள் என்னவாம்?

ஆர்?

அவள்தான்டா - உதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்

அதானேடா உனக்கு ஏற்கனவே சொன்னான்தானே 'கணங்கள் நீடித்தல் என்பது வரம்' எண்டொரு வசனம் எழுதினான் எண்டு அதுதான்.எல்லா நேசங்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திலதான் இயங்கிக்கொண்டிருக்கு.ஆனால் இது அப்படியில்லை இதை நாங்கள் செய்ய விரும்பல்லை நிகழ விரும்பினோம் பிரிந்தோம்.

அப்ப இனி இது நிகழும் எண்டு சொல்லுறியோ?

நிகழலாம் நிகழாமல் போகலாம்.அது சில வருடங்களாக கூட இருக்கலாம்,சில நிமிடங்களாக இருக்கலாம்,ஏன் ஒரு முத்தத்துக்கான அவகாசமாக கூட இருக்கலாம் நிகழும் போது அனுபவிக்கத்தான் இருக்கு; அது அந்த நேர மனோநிலையைப்பொறுத்தது. இப்பொழுதிலிருக்கிற மனோநிலைக்கு இது இனி நிகழக்கூடாதென்பது என்னுடைய விருப்பம்.

"நீ கதைக்கிறதெல்லாம் தெளிவா கதைக்கிறாய் ஆனா செய்யுறதுகள்தான் அப்பிடி தெரியேல்லை"

உண்மை மச்சி அதுதான் சொன்னனே போதை சில விசயங்களை செய்து விடுகிறது, பைத்தியக்காரத்தனங்கள் அப்பிடியெண்டு இன்னுமொண்டு மச்சி; ஒரு அலட்சியமும் இந்த செய்து வைத்த விதிகளில் வாழப்பிடிக்காத என்னுடைய மனோநிலையும் கூட இதுக்கான காரணங்களா இருக்கலாம்..

உது எனக்கும் இருக்கிற பிரச்னைதான் உழைக்கிறம் சாப்பிடுறம் படுக்கிறம்- மற்றாக்கள் என்ன நினைப்பினமோ எண்டு வாழ்றது எனக்கும் பிடிக்கிறேல்லை.

"உண்மைதான் மச்சி ஊருக்கு வாழுற ஆக்கள்தான் எங்கடை ஆக்களிட்டை அதுவும் யாழ்ப்பாணத்துக்கை இருக்கிற பெரிய வியாதி. ஆர் இங்க அவனுடைய வாழ்க்கையை வாழுறான் சொல்லு?"

"உதை விடு மச்சி தேவையில்லாத விசயங்களை இப்ப கதைச்சு என்ன செய்ய gold leaf எடு அடிச்சிட்டு கிளம்புவம்"

ம்ம்...நானும் நீயும்தான் இதைக்கதைக்கிறம் எவ்வளவு கதைச்சும் என்ன என்னால இந்த குற்றவுணர்களில் இருந்து விடு பட முடியேல்லை! ஆனால் ஒண்டு மச்சி உன்னோடை நிறைய கதைக்க கூடியமாதிரி இருக்கெண்டுறது மட்டும் உண்மை.இந்த vacationல கிடைச்ச சில சுவாரஸ்யமான பொழுதுகளுக்கு நீயும் ஒரு காரணம்.

"கதைக்கலாம் மச்சான் ஆனா அதை ஏற்றுக்கொள்ளுற அளவுக்கு எங்கடை ஊர்ல ஆக்கள் இல்லை"

"அது சரி..அடி வாங்காமா தப்பினா பெரிய விசயம், சரி மச்சி சந்திக்கலாம்.."


குறிப்பு:இந்த விடுறையின் மொத்தப்பொழுதுகளையும் கலந்து பார்த்தா இப்படித்தான் இருக்குமோ என்னவோ பேச நிறைய இருந்தாலும் அவற்றையெல்லாம் பேச முடிவதில்லை அது போல எழுத நிறைய இருந்தாலும் இழுத்துப்பிடித்து எதையும் எழுத முடிவதில்லை.பெரும்பாலும் கொஞ்சம் போதையிலும் பின்னிரவிலும் நடந்த உரையாடல்களின் சாயல்களில் எழுதப்பட்டிருக்கிற இந்த பகிர்வின் முழு உருவம் வெகு நீளமானதாய் இருக்கலாம்.சொற்கள் கோர்வையாகிற நேரங்களில் அவற்றை பகிர முயல்கிறேன்.

படம் : ஊர்ல எடுத்தது. (ஒரு விளம்பரம்)