Friday, February 25, 2011

திவ்ய பாரதி - ஒரு எழுதி முடிக்கப்படாத குறிப்பு.



இந்த முகம்..



இந்த கறுப்பு வெள்ளை புள்ளி போட்ட ஆடையில் இதே மாதிரியானதொரு தோற்றத்தில் பிராச்சி தேசாய் once upon a time in mumbai படத்தில் வந்திருப்பார்.





இந்த கண்கள்...





இந்த அழகின் திமிர்..

_________________________________________________________

எனக்குத்தெரிந்த அளவில் இருபத்தியொரு படங்கள், இந்திய ஆண்மனங்களின் கனவுகளில் நுழைந்தது, முன்னணி நடிகர்கள் அனேகரும் தங்கள் படங்களில் நடிக்கவேண்டுமென விரும்பிய ஒரே அழகி, குறுகிய காலத்தில் அதிக வெற்றிப்படங்கள் என வெறும் பத்தொன்பதே வயதில் செத்துப்போன திவ்யபாரதியின் மறைவு இன்றைக்கும் மர்மமானதாகவே இருக்கிறது.

வசீகரங்களின் அசாதாரணமரணம் எப்பொழுதும் புதிர் நிறைந்தாகவே இருக்கிறது ஷோபா சில்க் என்று தமிழ் மனங்களை கொள்ளையடித்திருந்த அழகிகளின் சாவு அழுத்தமானவைதாம்.
சாவு மறைந்துவிடுகிற மரணம் இவர்களுடையது காலம் எதிர்பாராமல் பிரபலமாகிவிடுகிற இந்த முகங்களின் நிலைத்தல் அசாத்தியமானது.


திவ்யபாரதியை அவர் சாவதற்கு முன் நான் திரையில் பார்த்ததே இல்லை என்றாலும் இன்றும் ஹிந்தி சினிமா ரசிகர்களின் மனதில் அவருக்கான இடம் இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்பொழுது இருக்கிற நடிகைகளை தெரிகிறதோ இல்லையோ திவ்யபாரதியை அனேகம்பேருக்கு தெரிந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையில் சிங்கள நண்பர்களுக்கு திவ்யபாரதியை நனக்கு தெரிந்திருக்கிறது. இலங்கையைப்பொறுத்த வரையில் தமிழர்களைவிட சிங்களவர்களுக்கு ஹிந்திப்படங்கள் குறித்து அதிகம் தெரிந்திருந்தது. ஹிந்திப்படங்களை அதிகம் பார்க்கிறவர்களாக சிங்களவர்களே இருந்திருக்கிறார்கள்.





தற்செயலாகத்தான் இந்தப்பாடலை பார்க்க நேர்ந்தது அதற்கு பிறகே இவரைக்குறித்து தேடிப்பார்த்தேன் வெறும் பத்தொன்பதே வயதில் இறந்து போனர்,அது ஒரு துர்மரணமாய் இருந்தது. அத்தோடு இதேபொல முன்பொரு முறை சில்க் நடித்த ஒரு பாடலின் மூலம் அவரைக்குறித்து தேடிப்பார்த்தபொழுது அதே நாளில் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்திருந்தார் என்று தெரிய துணுக்குற்றுப்போனேன். அங்கே நான் எழுதிய சின்னக்குறிப்பை இன்னொரு நண்பர் பகிர்ந்திருந்தார்.அது அந்த வருடத்தின் சில்க் குறித்த முதல் பகிர்வாய் இருந்தது.


இப்பொழுதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் திவ்யபாரதியை தேடிய பொழுது அவர் பிறந்தது feb 25 என அறிந்து கொண்டேன். அப்பொழுதுதான் பத்தொன்பதுக்கு வந்திருந்த திவ்யா சாகும் பொழுது கைவசம் ஏறக்குறைய பன்னிரண்டு படங்களை வைத்திருந்திருக்கிறார். 16வயதில் சினிமாவுக்குள் வந்து ஆக மூன்றே வருடங்களில் அதிகம் படங்களை தன் வசம் எடுத்துக்கொணட்ட திவ்யபாரதிக்கு தொழில் முறை எதிரிகள் கூட இருந்திருக்கலாம்.

மிக வெளிப்படையான இந்த அழகின் மரணம் ஒரு பின்னிரவில் நடந்திருக்கலாம். நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் இந்த குறிப்பை எழுதி முடித்திருக்கும் இந்த நேரத்திற்கு முன்பாக. மக்களை கவர்ந்துவிடுகிற மரணங்கள் ஒரு வித துர்க்கனவாகவே இருக்கின்றன. இந்தக்குறிப்பும் ஒரு துர்க்கனவின் குறிப்பே.


Divya Bharti:

பிறந்தது 25 february 1974 மும்பை.

மறைந்தது 05 April 1993 மும்பை.

Monday, February 21, 2011

சினிமா - சில உதிரிக்குறிப்புகள்.

நீங்கள் எப்போதும் புது முகங்களைத் தேடுகிறீர்கள் பெரிய ஹீரோக்கள் நீங்கள் கேட்டால் வர மாட்டார்களா என்ன ?

ஹீரோக்கள்- அவர்கள் எல்லாம் செய்து சாதித்து முடித்துவிட்டது போல இருக்கிறார்கள். இமேஜ் பார்க்கிறார்கள்.இமேஜ் என்பதை தூக்கி எறிந்துவிடக்கூடிய எந்த ஹீரோவுடனும் நான் பணியாற்றத் தயாராக இருக்கிறேன், சினிமா என்பது விளையாட்டு அல்ல என்பதை உணரும் எந்த நடிகரும் என்னோடு பணியாற்ற தகுதியானவர்தான். -


ஆனந்த விகடனின் ஏதோ ஒரு பேட்டியில் இயக்குனர் Anurag Kayshap.



இந்த பதிலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற ஹீரோ Abhay Deol நான் பார்த்த இவருடைய முதல் படம் தேவ் டி தான்.அதற்கு பிறகு சில படங்களை பார்க்க வேண்டும் என்று பார்த்திருக்கிறேன். கடைசியாக பார்த்த இவருடைய படம் DevBenegal இயக்கிய Road,Movie. இரண்டு பெயர் போல இவருடைய மற்றைய படங்களுக்கும் பெயர்கள் அப்படித்தான் இருக்கிறது. பல நாட்கள் பார்க்காமல் இருந்து கடந்த வாரம்தான் பார்த்திருந்தேன். வெகு குறைவாகவே மக்கள் பயன்படுத்துகிற ஒரு தனித்த பாதையில் நெடுந்தூர பயணம் ஒன்றில் சந்திக்கிற நாலுபேரைக் குறித்தது இந்தப்படம்.

தகப்பனின் எண்ணெய் வியாபாரத்தை விரும்பாத நடுத்தர வர்க்கத்து கனவுகளை கொண்டிருக்கிற ஒருவன் அதிலிருந்து தப்புவதற்காக கிடைக்கிற சந்தர்ப்பமாக முன்னாளில் ஒரு நகரும் திரையரங்காக இருந்த ஒரு பழைய ட்ரக் வாகனத்தை வெகு தொலைவில் இருக்கிற நகரத்திற்கு கொண்டு செல்ல சம்மதிக்கிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கிற மனிதர்களும் சம்பவங்களும், முடிவில் அவன் தன்னை கண்டுகொள்வதுமாக கதை சொல்கிறது படம். தண்ணீரைத்தேடி அலைகிற ஜனங்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறுமனே வெளியாக கிடக்கிற இந்த பூமியை பார்க்க பயமாக இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த உலகம் தண்ணீரோடு இருக்கும்? எனக்கென்னவோ இந்தப்படத்தில் என்னை பாதித்தது தண்ணீர்தான். உலகம் எவ்வளவு விசயங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனித விழுமியங்களில் எவ்வளவு தாக்கங்களை உண்டு செய்கின்றன. உண்மையில் பயணங்கள் கற்றுத்தருகின்றன.


கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்தாலும் சில நல்ல படங்களை நடித்திருந்தாலும் இன்னும் ஒரு புது நடிகரைப்போலவே ஆர்வமாய் இயங்குவது அபய்டியோலின் பலமாய் இருக்கலாம். இவரின் பெரும்பாலான படங்கள் இந்தியத்திரையுலகின் வழமையான கதாநாயகத் தனங்களோடு பொருந்துவதே இல்லை. அதுவே இவரை நல்ல நடிகராக காட்ட போதுமானதாய் இருக்கிறது . தேவ்-டி படத்தின் தேவ் பாத்திரத்தை செய்வதற்கு இமேஜ் போன்ற ஒளிவட்டங்கள் இருக்கிற நடிகர்களால் முடியாது. இவர் நடிக்கிற பாத்திரங்களை தமிழில் இருக்கிற நடிகர்கள் நடிப்பதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியாது. கதா நாயக வழிபாடும் பால் ஊத்துகிற ரசிகனும் இருந்தால் எப்படி நடக்கும்.


குஷாரிஷ் (Guzaarish)

Sanjai Leela Bansali செய்திருக்கிற இந்த படத்தை என்ன வாழ்க்கை இது, என்ன் செய்து கொண்டிருக்கிறேன் நான் என்கிற ஒரு சினம்பிடித்த மனோநிலையோடு சரியில்லாத உடம்பு நிலையில் பின்னிரவொன்றில் பார்க்கத்தொடங்கினேன். படத்தின் பாதி போகிற வரைக்கும் கூட என்னிடம் பெரிய ஒன்றுதல் எதுவும் இருக்கவில்லை.ஆனால் படம் எடுத்திருந்த விதம் என்னை தொடர்ந்தும் அதனை பார்க்க வைத்தது என்றே நினைக்கிறேன் ஒளிப்பதிவு அல்லது ஒளியை திரையில் பயன்படுத்துவது என்கிற விசயத்தில் இந்த இயக்குனரின் ரசனை நுட்பமானது அது அவருடைய மற்றைய படங்களிலேயே உணரமுடியும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை முழுமையாக பயன்படுத்தியதும் இவர் என்று கூட சொல்லலாம். பிளாக் (Black) மற்றும் சாவரியா படங்கள் அதற்கு சாட்சியாகலாம். படம் தொடங்குகிற அந்த முதல் நொடியே படத்தின் நேர்த்தியை சொல்கிறது .


குறைவான ஒளியிலேயே கண்கள் பிரகாசமாய் இருக்கிறது. அது போல திரையில் ஒளியை அளந்து வைக்கிற நுட்பம் காட்சி ஊடகத்துக்கு மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன். ஒரு மஜிக் கலைஞனின் கண்கள் ஒளி நிரம்பியவை அவனது வாழ்வு குறித்த திரையில் கமராவையும், ஒளியையும் சரியான விகிதத்தில் பயன் படுத்தியிருக்கிறதாய் நான் நம்புகிறேன். ஒரிஜினல் டிவிடியில் அல்லது திரையில் காண்கையில் அனுபவிக்க முடியும் இந்த ஒளிப்பதிவின், தொழில் நுட்பத்தின் விசாலத்தை.


உடம்பில் தலையைத்தவிர வேறெதையும் அசைக்க முடியாத மஜீஷியன் ஒருவனது வாழ்வை, வாழ்வின் மீதான காதலை சொல்கிற படத்துக்கு இயக்குனர் தெரிவு செய்திருந்தது ஹிருத்திக் ரோஷனை. ஹிந்தி தி ரையுலக நடிகர்களின் எண்ணிக்கையோ அல்லது வருகிறவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை மிஞ்சுகிற அளவுக்கு இருப்பதிலோ என்னவோ ஹிருத்திக் முந்தையை படங்களில் இருந்து ஒரு பாய்ச்சலே நடத்தியிருக்கிறார் அவருடைய உடல் மொழியிலும் பார்க்க அந்த குரலில் இருக்கிற உணர்வு போதுமானதாயிருக்கிறது. இந்தக்கதையைப் பொறுத்தவரையில் ஹிருத்திக்கின் உடல்மொழியும் குரலும் பொருந்திக்கொள்கிறது. அது அந்த பாத்திரத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. முன்னாள் மெஜிக் கலைஞன் ஒருவனது தன் கருணைக்கொலைக்கான மனு குறித்த உரையாடல், நினைவுகள், துணைச்சம்பங்களோடு பயணிக்கிற கதையில். அவரை பராமரிக்கிற அழகான தாதியாக வருகிறார் ஐஸ்வர்யா, ஹா... அவர் வெறும் அழகி மட்டுமல்ல. சொல்லியே ஆகவேண்டிய ஒன்று ஐஸ்வர்யாவை சரியாக பயன்படுத்திய இயக்குனர்களில் இவரும் ஒருவர். இந்த நேரத்தில் நீங்கள் எந்திரனை நினைத்தால் உங்கள் மீது இடிவிழுக.ஐஸ்வர்யா இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்கு நடிக்கலாம். படத்தில் ஹிருத்திக் சொல்வது போல இப்படி ஒரு Nurse இருந்தால் எப்படி?!



வாழ்வை இருப்பை குறித்த கேள்விகள் இருக்கிற மனங்களை கவரக்கூடிய படம். நிற்கவிடாமல் துரத்துகிற பணம் பின்னால் ஓடுகிற வாழ்வில் சில இடைத் தங்கல்களைத்தானும் கண்டிராத மனங்களுக்கு சலிப்பாயிருக்கலாம் இந்தப்படம். the Sea inside படம் குறித்த பகிர்வுகள் வாசித்திருந்ததன் மூலம் இந்தப்படம் பார்க்கையில் எனக்கு அந்தப்படத்தின் ஞாபகம் வந்து போயிற்று. படம் பார்த்து முடித்த பொழுதில் Facebookல் எழுதிய சின்ன் குறிப்பு பின் வருமாறு.
//Guzaarish - a hindi film by Sanjai Leela Bhansali : எனக்கிருந்த மனோநிலையோ என்னவோ படத்தின் கடைசி நிமிடங்களில் கரைந்து போனேன்.நெடு நாட்கள் இல்லாத கண்ணீர் ஏதோ காரணங்களுக்காக மனதார செலவாகியிருந்தது. வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பர்களே மன்னிப்பதற்கு தயங்கவே வேண்டாம், சிரிப்பதற்கு கிடைக்கிற எந்த சந்தர்ப்பத்தையும் இழந்துவிடாதீர்கள்.

Sau gram z...indagi yeh
Sambhaal ke kharchi hai - from the movie//


Life is very short my friends... but it's long enough if you live with all your heart. so , go on break the rules, forgive quickly, love truly and never regret anything that made you smile.


Dhobi Ghat:

அமீர்கான் தயாரிப்பில் அவருடைய மனைவி இயக்கி வெளிவந்திருந்த இந்த படத்தை போன வியாழனன்று பார்த்திருந்தேன்.இப்பல்லாம் ஹிந்திப்படம் பாக்கிறதுக்கு ஆங்கிலம் அநியாயத்திற்கு தேவைப்படுகிறது. படம் கிளைத்தன்மைகளோடு பயணித்தாலும் தொகுப்பில் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிற திரைக்கதையாக உணர்கிறேன். சின்னசின்னதாய் ரசிக்க விசயங்கள் இருக்கிறது. பின்னணியில் வருகிற அந்த பாடல்களின் இசை எனக்கு பிடித்திருந்தது. அவள் தனியாகவும் அவன் அந்தப்படத்தையும் வரைகிற பொழுதுகளில் இருவருக்கும் இடையில் இருக்கிற உணர்வு ஒரே நேரத்தில் அதனை திரையில் காட்சிப்படுத்திய இயக்குனரின் தனித்தன்மை.அமீர்கான்,மோனிக்காவின் உடல் மொழி.அமீர் அந்த சாவை கண்டுகொண்டபின் அந்த இரவில் முடிகிற காட்சி, வண்ணம் கலையாத கைகளோடும் அந்த செயினோடும் கடற்கரையில் அமர்ந்திருப்பதாய் தொடர்வதும், இந்தக்காட்சியில் யாஸ்மின் கடலைக்குறித்து முன்னர் பேசிய வசனங்கள் நினைவுக்கு வருவதும் அவற்றின் கவித்துவமாய் இருக்ககலாம். அந்த கமாராவில் கதை சொல்லுகிற பெண்ணும் அந்த குரலும் படம் முடிந்த பிறகும் கேட்டபடியும் அலைந்தபடியும் இருப்பது.படத்தின் வசனங்களும் அளவாய் போதுமாய் இருந்தன. படம் நல்லாயிருந்தது என்பதை இப்படி சொல்லத்தெரியாமல் சொல்லுறதும் ஒரு இருக்கப்படாத குணம்தான்.
அமைதியான மனோநிலையை தரக்கூடிய அமைதியான படம்.

__________________________________________________

பல நாட்களாகியும் எழுத முடியாமல் போன இந்த குறிப்பை எழுத தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகிறது. அடுத்த நகர்வுக்கு முன்னதாக இது ஒரு உதிரிக்குறிப்பாய் இருக்கட்டும். ஒழுங்கே இல்லாத சப்பென்ற இந்த குறிப்பை கிடப்பில் போடுகிற ஒவ்வாமையை தவிர்ப்பதற்காக இங்கே பகிரப்படுகிறது.

ஒரு குறிப்பை எழுதவே நேரம் கிடைக்கவில்லை buzz, twitter, blog, Facebook என எப்படித்தான் நேரம் ஒதுக்க முடிகிறதோ உங்களுக்கெல்லாம்?