Friday, December 23, 2011

முடிவு.


எழுதிக்கொண்டிருத்தல் என்பது தேவையானதாக இருக்க முடியும் என்று இப்பொழுது தோன்றுகிறது. இதனை இப்பொழுதே இங்கே எழுதி வைப்பது திருப்தியாயிருக்கிறது. என்னுடைய தற்போதைய எதையாவது செய் என்பதாக இருக்கிற மனோநிலையின் காரணங்களுள் இதுவுமொன்றென நான் நம்புகிறேன். எழுதிக்கடக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கிறது, இது ஒருவகையில் ஒரு வியாதியைப்போலும்,அதேநேரம் சுய மோகத்தைபோலவும் இருக்கிறது.

இத்தனை வருடங்கள் இங்கே இருந்தேன் என்பதற்கு என்னிடம் ஏதோ இருப்பதாக நான் நம்பிக்கொண்டிருந்த எல்லா சேமிப்புகளும் எழுதிவைத்த எல்லா சொற்களும் இனி திரும்ப பெறமுடியாத படிக்கு அழிந்து போயிற்று. கிட்டத்தட்ட ஒரு நாவலைப்போல எழுதியிருந்த என்னுடைய தினக்குறிப்புகள் எல்லாம் போயிற்று. எவ்வளவு சொற்கள், எவ்வளவு புகைப்படங்கள், எவ்வளவு தகவல்கள, எவ்வளவு ஒலி ஒளிப்பதிவுகள்,எல்லாம் அந்தந்த பொழுதுகளில் இருந்த மனோநிலை,வாழ்நிலை,சூழல் என எல்லாவற்றையும் குறித்து வைத்திருந்தேன் கிட்டத்தட்ட இத்தனை வருட வாழ்வின் ஆதாரச்செய்திகள் இந்த தொகுப்புக்குள் இருந்திருக்கிறது.எல்லாவற்றையும் இழந்து போனேன். இதிலென்ன இருக்கிறது அவனவன் வாழ்வையே இழந்துவிட்டு வந்திருக்கிறான் உனக்கென்ன பிரச்சனை என்று மனம் சொன்னாலும் யுத்தமும் திணித்தலும் நம் சனங்களிடம் வரலாற்றை, அடையாளங்களை இழக்கப்பண்ணியிருக்கிறது அதன் வலி பெரியது கொடியது அதை இங்கே பொருத்தவே முடியாது. அடுத்தவர்களுக்கு அது அனுபவிக்காமல் தெரிவதில்லை.இது என்னுடைய கவனமின்மைதான் என்றாலும் இழப்பு இழப்புத்தானே.


மிகமுக்கியமான தருணமொன்றுக்கு கூட ஊரில் இருக்க முடியாதுபோன நிலையில் இருந்தேன், இதுவெனக்கு தீராத துயரொன்றாய் எப்பொழுதும் இருக்கலாம். மொத்தமாய் மிக மோசமான நிலையிலிருந்து திரும்பவும் பயணம் பண்ண தொடங்கியிருக்கிறேன். குறைந்த பட்ச திருப்தியைக்கூட தராத இந்தப் பாலைநிலத்தின கடைசிப்பொழுதுகள் இதுவாயிருக்கலாம்.

இனி எனக்கான முடிவுகளில் உங்களுடைய வாழ்வு தலையிட முடியாது என்பது இத்தால் அறியத்தரப்படுகிறது.