Thursday, August 2, 2012

கைவிடப்பட்ட உடல்கள் - ஒரு மாதிரிக்குறிப்பின் திருத்தமற்ற வடிவம்.




இதை வாசிக்கப்போகும் அனேகம்  ஆண்களுக்கான பொதுவான அனுபவங்களில் ஒன்றாக நீலப்படங்கள் இருக்கக்கூடும்.  அந்த நீலப்பட நடிகைள், நடிகர்களைப் பற்றி உரையாடல் ஒன்றுக்கான தொடக்கம் இந்த  மாதிரிக்குறிப்பு.  தனியே நடிகைகளை மட்டும் பேசிவிட்டு கடந்து போய்விட முடியாத நீலப்பட சந்தையும் சூழலுமே இப்பொழுது இருக்கிறது  எனக்குத்தெரிந்த வகையில்  எந்தவித  தேடுதலும்  இல்லாமல்  தொடங்கிய ஒருசிறு குறிப்பு இந்த பகிர்வு.



சமீபத்தில்  நீலப்பட நடிகையொருத்திக்கு ரசிகனாய் இருப்பதைக்குறித்த உரையாடல்  ஒன்றை ஆரம்பித்த தோழருக்கு நன்றி.


வயதான நீலப்பட நடிகைகளைசந்திக்க வேண்டும் என்கிற  ஆர்வம் 2009 கடைசிகளில்  எனக்கும் இருந்தது, பின்னர்  மாலனின் "கலாச்சார கண்ணாடியில் கல்லெறியும் நீலப்படங்கள்" கட்டுரையை வாசித்த பிறகு அந்த நடிகைகளின் வாழ்வு குறித்த ஆவணப்படங்களை தேடியிருக்கிறேன். யாராவது சில நடிக நடிகைகளை சந்தித்து உரையாட நினைத்திருக்கிறேன். ஒரு முன்னாள் மல்யுத்த வீரனுக்கே இவ்வளவு கதைகள் இருக்கும் பொழுது ஒரு நீலப்பட நடிகைக்கு காலம் என்ன மாதிரியான அனுபவங்களை தரக்கூடும்?! - சாதாரண தமிழகத்து நடிகைகளுக்கே நமது மனங்கள் மோசமான அனுபவங்களை கொடுத்திருக்கையில் ஒரு தொழில் முறை நீலப்பட நடிகையின் வாய்ப்புகள் அற்றுப்போகையில் என்ன மாதிரியான  சமூக,பொருளாதார,உளவியல் பிரச்சனைகளை மீதமிருக்கிற அவளது காலம் அவளுக்கு தரக்கூடும்?!

பெண்களிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத ஆண் மனங்களின்  பயம், விகாரம், குரூரம் எல்லாவற்றினதும்  திருப்திக்கான சந்தைப்படுத்தல்களாகவே  அனேகமான  நீலப்படங்கள் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் பெண் உடலின் மீதான வன்முறையே பெரும்பாலான மூன்றாந்தர நீலப்படங்களில் இருக்கிறது. ந்திய பாலியல் அடிமையே, வெள்ளை நிற விபச்சாரியே என்றெல்லாம் பேசுப்படுகிற வார்த்தைகளின் அரசியல் வேறொரு வகையானவை.

எனக்கு பிடித்தமான நீலப்பட நடிகைகள் குறித்து பேசுமளவிற்கு அவ்வளவு அதிகம் படங்களை நான் பார்த்ததில்லை தோழர் ஆனாலும் சில படங்களையும் நடிகைகளையும் எனக்கும் நினைவிலிருக்கிறது- அதில் ஒரு  நடிகையின் புதிய படங்கள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை, அவரது தற்போதைய வாழ்வு பற்றிய தகவலை கூகுளில் கூட காணவில்லை .


பகிர்வுக்கு சம்பந்நதப்பட்ட மற்றொன்று:

எனக்குத்தெரிந்த நீல நடிகைகளில் இவரை சொல்லாமல் விட முடியாது துருதுருவென்றிருக்கிற இவருடைய பூர்வீகம் பஞ்சாப்; பஞ்சாபி பெண்களிடம் இருக்கிற இயல்பும் அலட்சியமும் இவரிடமும் அதிரடியாகவே இருக்கிறது. கனேடிய இந்தியரான இவருடைய அழகில் அமெரிக்காவை கலக்கிய பின்லேடனே அசந்து போயிருந்தார் என்று செய்திகளும் இருக்கிறது. அமெரிக்க, கனேடிய ஆண்மனங்களின் தூக்கத்தையும் பெண்மனங்களின் பொறாமையும் சம்பாதித்துக்-கொண்டிருந்த இவர் "பிக்பாஸ்" நிகழ்ச்சி மூலம்  ந்தி திரையுலகுக்குள் நுழைந்திருக்கிறார். இவருடைய முதல்  இந்திப்படம் Jism-2 நாளைக்கு ( 03.08.2012) வெளியாகிறது. இவர் திரையில் காட்டுவதற்கு எதுவுமே இல்லை என்று சொல்பவர்களுக்கு  மறைக்கபட்ட அழகில்தான் அதிகம் கவர்ச்சி இருக்கிறதென்று பதில் சொல்லியிருக்கும் இவருடைய இந்தப்படத்தின் காட்சிகள்  அதனை நிரூபிக்கிறதாய் நான் நம்புகிறேன். நிர்வாணத்தை தாங்க முடியாதவைதானே ஆண்மனங்கள். துருத்தலான விகாரங்களுக்கு பழக்கப்பட்டவைதானே தமிழ் மனங்கள்.. 
இந்தப்படத்தில் கூட நடிக்கிற Randeep Hoda ஒரு நல்ல நடிகர் எந்த  காட்சியையும் இயக்குனருக்கும் காட்சிக்கும்  திருப்பதியாகச்செய்யக்கூடிய கலைஞன், அது  என்ன் காட்சியாயிருந்தாலும்  Once upon time in Mumbai  படம் அதற்கு ஒரு சாட்சி.




உண்மையாகச் சொல்லப்போனால் SunnyLeone நடித்த எந்த நீலப்படத்தையும் நான் இதுவரை பார்த்ததில்லை.


Friday, July 6, 2012

சுணைக்கிது...


பேசவிரும்பாத கதைகள் பற்றிய குறிப்பு.



முகவுரை, பதிப்புரை, அந்தவுரை, இந்தவுரை என்கிற எந்த கந்தாயங்களுமில்லாமல் பிரித்ததுமே கதைக்குள் நழைந்துவிடுகிற புத்தகத்தின் வடிவமைப்பைப்போலவே நிரூபாவின் கதைகளும் சட்டென்று சொல்லவந்த மையத்துக்குள் நுழைந்து ஒரு ஊரையே நமக்கு அறிமுகம் செய்து அவா்களோடு நெருங்க வைத்துவிடுகிறது. ஊருக்குள் பேசத்தயங்குகிற கதைகளை ஊரில் பேசும் அதே மொழியில் எழுதியிருப்தே அதன் பலமும் பலவீனமும் என்று நினைக்கிறேன். ஈழத்தின் வடக்கில் இருக்கிறவா்களுக்கு புரிந்துகொள்ள முடிந்தாலும் எல்லோராலும் சட்டென உள்வாங்க முடியாத இந்த பேச்சுவழக்கில் எழுதப்பட்டிருப்து இதன் பரவலான அறிமுகத்திற்கான தடையாக இருக்கலாம்.

பன்னிரண்டு கதைகளைக்கொண்ட இந்தத்தொகுப்பு ஒரு நாவலின் முழுமையற்ற வடிவமாகவும் இருக்கிறது ஒரு ஊரில் நிகழும் அனுபவங்களை எந்த பாசாங்குகளும் அரசியல்துருத்தல்களுமில்லாமல் ஒரு பெண்மனதின் ( சிறுமியிலிருந்து பதின்மங்கள் வரைக்கும்) இயல்பான வெளிப்பாட்டோடு சொல்லியிருக்கிற இந்தத்தொகுப்பினைப்பற்றி போதுமான அளவில் பேசப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


மற்றும்படி சுணைக்கிது ஈழத்தின் சிறுகதை குறித்த கதையாடல்களில் கட்டாயம் இடம்பெறவேண்டிய ஒரு தொகுப்பு.
_____________________________________________________________________ 











"ஆனால்
ஒரு விடியலில்
கிண்டப்பட் புதைகுழிக்குள்
பாழ் கிணறொன்றில்
கண்டெடுக்கப்படும் ஒன்றைாய்
அழுகிய நாறிய அழிந்த ஒன்றாய்
என் தாய்க்கிழவியின்
ஒப்பாரி ஓலங்கிளைடையே
மேலே இழுக்கப்படுவதற்காய்
காலுகளே
என்னை விட்டுச்செல்லாதீர்கள்
கைகளே
என்னை கைவிட்டு விடாதீர்கள்"



ஒலிக்காத இளவேனில் தொகுப்பில் கற்பகம் யசோதர எழுதிய,இறுதி வார்த்தைகள் என்கிற கவிதையிலிருந்து எழுதப்பட்ட இந்த வரிகள் வசந்தங்கள், உதயங்கள் எல்லாம் வந்து ரட்சிக்கப்பட்ட பிறகும் நிகழும் தற்கொலைகள்  இனந்தெரியாதோரால் நிகழ்த்தப்படும் கொலைகள் மற்றும் இடம்மாற்றப்படும், அழிக்கப்படும் சவங்களுக்காக எழுதப்படுகிறது.

வடலியின் வெளியீடாக வெளிவந்திருக்கிற இந்தத்தொகுப்பு இலங்கைப்பெண்களது கவிதைகள் என்ற அடிப்படையில்  வந்திருக்கும் மற்றொரு முக்கியமான தொகுப்பு.அவா் ஒரு வரி எழுதினார் இவா் இப்படி எழுதினார் என்று ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு நக்கீரா் தனம் காட்டும் இணையவீரா்கள் யாரும் இந்தத்தொகுப்பை பற்றி பேசியதாய் நானறியவில்லை.  இவா்கள் பேசாமல் இருக்கிறதே இந்த தொகுப்பினது வெற்றியும் என்று நான் நினைக்கிறேன். ஒடுக்கப்பட்ட மனங்களிலிருந்து எழுதப்படுகிற வார்த்தைகள் உங்களை பேச இயலாமல் பண்ணின என்பதாக திருடப்பட்ட நிலத்திலிருந்து இதனை தொகுத்தவா்கள் எழுதி வைத்துக்கொள்ளலாம்.பேசவும் விமா்சிக்கவும் நிறைய விசயங்கள் இருக்கிறதாக முகத்திலறையும் இந்த கவிதைகள் சொல்வதாய் நான் நம்புகிறேன்.

பிரசுர வெளிக்கு புதிய பலரது கவிதைகளையும் நன்கறிந்த பலரது கவிதைகளையும் தொகுத்து வந்திருக்கிற இந்த கவிதைகள் தொகுப்பாளா்கள் சொன்னது போல அவரவா் உலகங்களை தமதான் நம்பிக்கைகளுடன் வெளிப்படுத்தியிருக்கின்றன.  அவரவா் உண்மைகளை பேசும் இந்தக்குரல்களை குறித்து பேசாதிருக்கிற மற்றவா்களை நினைந்து நான் வியந்து கொள்கிறேன். 


Friday, May 18, 2012

துயரம்...



மற்றுமொரு வரலாற்றுத் துயரம் நிரம்பிய நாளின்
மீதமிருக்கிற பொழுதில்
அன்றே கொல்லும் உன் அரசா்களையும்
கைவிட்டுப்போன கடவுளா்களையும் 
சபிப்பதில் ஆறிவிடுவதில்லை மனம்
கைவிடப்பட்டவா்களின் புலம்பலை கேட்பதற்கு 
காலம் ஒரு நாளும் நிற்பதில்லை
குவளை மதுவை கவிழ்த்து விழுங்கியபடி
கேவலமான வார்த்தைகளால் ஆயுதங்களை காறி உமிழ்வேன்
அகாலமொன்றில் இனங்தெரியாதவா்களை அனுப்பும்
உங்கள் ரட்சிப்பின் துவக்குகளை என் குறி மீது வையுங்கள்
அடுத்த வார்த்தையை நான் எழுதாமல் விடுகிறேன்
கொடுத்த கூலிக்கு சுட வரும் உங்கள் முகத்தில் உமிழ்வதற்காக.
_____________________________ .

நுாற்றாண்டுகளின் துயரத்துக்கு...
தேவநம்பிய திஸ்ஸனை குறைசொல்லி
திரும்ப நடக்கப்போவது எதுவுமில்லை.

Friday, May 11, 2012

தொடரும்...


இந்த நாட்களின் சிக்கல்களுக்கும், இன்னும்செய்து முடிக்காமல் இருக்கிற காரியங்களை செய்யத்தொடங்கவும், எப்பொழுதும் போலிருக்கிற குற்றவுணர்வுகளின் தொல்லைகளுக்கும், இந்த தளத்தினதும் எனதும் இயங்குதலை தொடரப்பண்ணவும்; எழுதவே முடியாத ஒரு நாளின் முன்னிரவில் தும்பளை மேற்கு சனசமூக நிலைய புதிய கட்டட திறப்புவிழா மலருக்காக எழுதிய சில பக்கங்களின் தணிக்கை செய்யப்படாத பிரதி இங்கே பகிரப்படுகிறது.




சொல்லத்தெரியாத மகிழ்வின் சொற்கள்.


நீங்கள் எழுதுமிந்த சொற்களின் மீது 
உங்கள் உண்மையை நிரப்புங்கள்- காலம் 
உங்கள் சந்ததிக்கு ஒரு ஊரைப்பரிசளிக்கட்டும்.



இப்ப நான் உங்களுக்கு சொல்லப்போறது ஒரு கதை எண்டு நீங்கள் நினைக்கலாம் நானும் அப்படியே வச்சுக்கொண்டுசொல்லுறன்.


ஒரு சனசமுக நிலையம் என்பது எந்த அளவில் எங்கடை ஊரில் இருந்தது என்றால் சாப்பிட்ட பிறகு பேப்பா் படிக்கிற இடம்என்கிற அளவிலதான் நான் அறிய பயன்பட்டிருக்கு. எனக்குத் தெரிய ஒரு நுால்நிலையத்தைத்தானும் முழுமையாக பன்படுத்துகிற ஆட்கள் மிக்குறைவான சதவிகிதம்தான் எங்கடை ஊரில் இருக்கினம். இது ஏன் நான் பள்ளிக்கூடம் படிச்ச காலத்தில பள்ளிக்கூட நுால்நிலையத்துக்குள்ள போகாத நிறையப்பேரை பாத்திருக்கிறன். அப்பவெல்லாம் நுால்நிலையம் ன்பது பலருக்கும் எப்பவாவது போய் சோதினைக்கு உதவக்கூடிய ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வருவதற்கும் வகுப்புகள் இல்லாத பாடநேரத்தில் ஒளிந்து கொள்ளவுமே நிறையப்பேருக்கு பயன் பட்டிருக்கு.

எண்பதுகளில் பிறந்து மு.தளையசிங்கத்தை தெரியாதென்றால் எப்படி பேராசிரியா் சிவத்தம்பியை வாசிக்காமல் யாழ்ப்பாணத்தின் சமுக அரசியல் வரலாற்றை எப்படி அணுக முடியும்?  காமிக்ஸ் கதைகளை கல்கியை, கடந்து வராமல் இனப்பெருக்கத்தொகுதி மட்டும் படிக்கிறதில என்ன சுவாரசியம் இருந்துவிட முடியும்! புத்தகம் வாசிக்கிறது என்னவோ பெரும்பாவம் என்பதைப்போல  பழக்கட்ட கல்விச்சமுதாயத்தை நாங்கள் கொண்டிருந்தோம், பாடப்புத்தகங்களின் மீது பழக்கபடப்ட இளமைப்பருவம்தான் எம்மிடம் இருக்கிறது,கதைப்புத்தகம் படிப்பதே வயதுக்கு மீறின செயல் என்பதாகத்தான் இருந்தது எங்களுடைய ஊா். பத்து பன்னிரண்டு வயதிலேயே பொன்னியின் செல்வனை கையெலடுக்கிற அளவுக்கு வாசிப்பு இருந்தாலும் நாங்கள்  வாசிக்க முடியாத சூழலிலேயே இருந்தோம்.வாசிப்பின் சாத்தியங்களையும்  கற்பனையின் ஆற்றலையும் இப்பொழுதிலிருக்கிற தலைமுறை எந்தளவுக்கு கொண்டிருக்கிறதென்று சொல்லவே முடியவில்லை.அது உண்மையில் கவலைக்கிடமான நிலமையில்தான் இருக்கிறது.நான் இங்கே சொல்வது இப்பொழுது பதினமத்துக்குள் நுழைந்திருக்கும் தலைமுறையைத்தான் . அவா்களது பெரும்பாலான பொழுதுகளை தனித்தனி பிரத்தியேக வகுப்புகளும் தொலைக்காட்சிகளும் நிறைத்து விடுகின்றன என்பது கண்கூடு






இணையம் பயன்படுத்தும் வசதி இருக்கிற பதின்மத்தின் முடிவுகளில் இருக்கிறவா்களும் பேசுபுக்கு” (Facebook) போன்ற சமூக வலைத்தளங்களில் அதே பொழுது போக்குகளிலும் வீண் அரட்டைகளிலும் பெருமளவு  நேரத்தை செலவிடுகிறார்கள். அத்தோடு இணையம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக  அறிமுகமாவதில்லை உதாரணத்துக்கு  இணையம் எனக்கு  முறையற்ற  பாவனைக்குரிய தளங்களின் தேடுதலுக்கானதாகத்தான் முதலில் அறிமுகமாயிற்று, இணையம் மிக ரகசியமானதாய் அப்பொழுது இருந்தது. இன்று இணையம் மிக வேகமானதும் எல்லோருக்கானதாகவும் இருக்கிறது. முன்பு பாதுகாப்பானதாய் இருந்த இணையம் இப்பொழுது  ஒளிவு மறைவற்றதாகவும் இருக்கிறது தனிமனிதனின் அந்தரங்கம் என்பது பாதுகாக்க முடியாததாய்  யாரோ ஒருவா் எப்பொழுதும் கவனித்துக் கொண்டேயிருப்பதைப்போல ஒரு வெளியை உருவாக்கி விட்டிருக்கிறது. ஆனாலும் அதன் தாக்கத்தை யாரும் பெரிதாக உணா்வதில்லை அவரவருக்கு ஏதொவொன்று நிகழும் வரை. இணைய வாசிப்பையும் அதன் சாத்தியங்களையும் பிறிதொரு சந்தா்ப்பத்தில் பேசிக்கொள்ளலாம் இப்போதைக்கு நான் சொல்ல வந்த கதையை சொல்ல முயற்சிக்கிறேன்.

இந்த தலைமுறையின் வாசிப்பபை பற்றி சொல்லப்போனால் அது இப்போதைக்கு வெறும் பழைய கதைகளை எழுதும் ஒரு குறைகூறும் பத்தியாக இந்த கதையை மாற்றிவிடக்கூடும். குறுகிய காலத்துக்குள் எனக்கு கிடைத்த தகவல்களையும் அவதானங்களையும் வைத்து சொல்லப்போனால் எங்கடை ஊரைப்பொறுத்த வரையில் செய்திகளையும் வெற்றுப்பரபரப்புகளையும் அறிந்துகொள்ளும் ஒரு; முறையாக வளராத பழக்கமாகவே இருக்கிறது. வாசிக்க எவ்வளவோ இருந்தும் நாம் காலம் காலமாக பழக்கப்பட்ட புதினம் பாக்கிற புராயம் பேசுகிற மனோநிலையோடே வாசிப்பபை அணுகியிருக்கிறோ.ம்

என்னுடைய மட்டத்து ஆட்களிடமே வாசிப்பும் அதன் பழக்கமும் ஏதோ வித்தியாசமான குணாதிசயமாகத்தான் இருந்திருக்கிற.து இப்பொழுதாவது இணையம் பலருக்கும் பலதையும் அறிமுகப்படுத்திவிடுகிறது முன்பெல்லாம் என் பதின்மங்களில் மைல் கணக்கில் சைக்கிளில் போய் வாங்கி கொண்டு வந்து படித்திருக்கிறோம். புத்தகங்களுக்காக சண்டையும் போட்டிருக்கிறோம் சில நல்ல சினேகங்களும் கிடைத்திருக்கிறது அதுவரையும் பேசியே இராதவா்களோடும் கூட புத்தகங்களுக்காக பேசி நெருங்கியிருக்கிறோம்.அப்படியொரு உறவுகளில் பதின்மங்களின் ஆரம்பங்களில் இருந்து கொண்டு பெரிய பனுவல்களை அனாயசமாக வாசித்து முடிக்கிற திலோத்தமா  என்னை எப்பொழுதும் ஆச்சரியப்படுத்துபவளாகவே இருந்திருக்கிறாள்.


பேசவென்று ஒருவரையொருவா் சந்தித்துக்கொண்டு புத்தகங்களில் மூழ்கிப்போன பின் மதிய நேரங்கள் இதை எழுதுகிற இந்ததருணத்திலும் சிலிர்ப்பானதொரு குறுநகையை உதடுகளில் கொண்டுவருபவை.

வாசித்துக்கொண்டு போகையில் மாறும் அவள் முகபாவனைகளை கவனிப்பது துாங்கும் மடிக்குழந்தையின் அசைவுகளை கவனிக்கிற பரவசத்தை தருகிறதொரு நிகழ்வு.பின்நேரத்தின் வெப்பம் வியா்வை புள்ளிகளாய் கோடுகளாய் பின் கழுத்திலிருந்து கோலம்போட மெலிதான ஈரத்தில் தெரியுமவள் மேலாடையின் வளைவுகளின் ஈரம் என் பருவத்தின் மீது பெருநதியென பாயும்.

கன்னத்தின் மீது கரைச்சல் கொடுக்கிற முடிகளை அலட்சியமாய“ ஒதுக்கியபடி வயா்க்கதிரையில் ஒரு விதமாக சாய்திருந்துகொண்டு வாசிக்குமவளின் கண்களையும், கூடும் பின் பிரியுமவளின் உதடுகளையும், மேவித்தணியுமவள் மார்புகளையும், அடரப்பின்னி தழையும் அவள் கூந்தலையும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டிருக்குமவள் பாதங்களையும் காணக்கிடைப்பது பதின்மத்தின் அதி உன்னத நிகழ்வாயிருக்கும்.

வயதில் என்னைவிட குறைந்தவளாயிருந்தாலும் வாசிப்பில் என்னிலும் வேகமானவளாயும் ரசனையில் தெரிவுகளில், பிரச்சனைகளை அணுகும் தன்மையில் முடிவெக்கும் ஆற்றலில் அவள் என்னை கையாள்கிற நிதானத்தை கொண்டிருந்தாள். பல சமயங்களில் அவளது ஆலோசனைகள சரியான தீா்வுகளை தந்திருக்கிறது  வாசிப்பை போலவே படிப்பிலும் நாளாந்த காரியங்களிலும் கூட வேகமும் நிதானமமாக இருந்தவளின் மீது என ஆச்சரியங்கள் அதிகமாகிக்கொண்டேயிருந்தன அவள் எப்பொழுதும் அற்புதங்களை செய்பவளகாவிருந்தாள்.

கவிதைகளில் இருந்து கொக்கோகவிளக்கம் வரைக்கும் எனக்கு அறிமுகம் செய்த அவளிடம்  அவள் அழகெல்லாம் வியா்த்து நிக்க முடியாமல் நிக்க நான் குரலே வெளியில் வராமல் தவித்துக்கொண்டிருந்த ஒரு முன்பகலின் தனிமையில் என் முதல் காதலை அவளிடம் மொழிந்திருந்தேன்.

அவளைத் தழுவிக்கொள்ளவேண்டிய தேவை என்னிடமும் என் ஏந்துதலின் அவசியம் அவளிடமும் இருந்தும் ஒரு மிகப்புதியதான முத்தத்திற்கான சாத்தியங்கள் அதிகம் இருந்தும் நிதானமான ஒற்றை வரியில் அந்த நிகழ்வை தவிர்த்துப்போன அந்த நாளுக்கு பிறகு நாங்கள் புத்தகங்கைளை பரிமாறிக்கொள்ளவேயில்லை.

எப்பொழுதும் போல அவள் அப்பொழுதும் என்னை ஆச்சரியப்படுத்துபவளாகவே இருந்தாள் அவளுடைய அந்த நிதானம் என்னை இன்னும் இன்னும் அவளிடம் இழுத்துக்கொண்டேயிருந்தது.

எனக்கும் அவளுக்கும் இடையில் எவ்வளவோ நெருக்கம் இருந்தும் தொடர முடியாத அந்த மிகப்புரிதலுடைய உறவு அங்கேயே முடிந்து போயிற்று. புதுப்பிக்கப்பட்டாத சமுகமாற்றங்களோடு மிகப்பழைய சமூக மரபுகளில் இருக்கிற எங்களுடைய சமுகத்தின் மீது பழி போட வேண்டிய நிலமைக்கு அவளையும் என்னையும் கொண்டு வந்திருந்தது.

என் இயலாமையோடு காலம் எங்களை அசாதாரணமாக கடந்து போக கொஞ்சம் பெரிதான இடைவெளியின் பிறகு ஊருக்கு வந்திருந்தேன் கதைகளைப்பேசியபடியே கொஞ்சம் மிதமான போதையில் இருந்த பின்னிரவொன்றில் கிடைத்த உண்மைகளின் அடிப்படையில் அவள் இப்பொழுதெல்லாம் எதையமே வாசிப்பதில்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

இப்பொழுதும் அவள் என்னை ஆச்சரியப்படுத்துபவளாகவே இருக்கிறாள்.


இந்த இடத்திலை கதைக்கு ஒரு இடைவெளி வைப்பம் என?!


சமூக வளா்ச்சியில் சனசமுக நிலையங்களின் பங்கு என்பது மிக முக்கியமானதாய் இருக்கிறது. சமூகத்தின் பிரச்சனைகளில் முதலில் பங்கெடுக்கிற அமைப்பு இந்த சனசமுக நிலையங்கள்தான் அப்படியானதொரு சனசமூக நிலையத்திற்கு ஆதாரமான அமைவான கட்டடம் இல்லாதிருப்பது அதன் செயற்பாடுகளில் பெரும் இடா்பாடுகளை உருவாக்குவது அப்படி இல்லாது போன சனசமூக நிலையங்களின் வரலாறு நமது நாட்டில் இருக்கின்றன, வாழ்ந்த வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்ட சனங்கள் இருக்கிற நாடு நம்முடையது சனசமூக நிலையங்களின் அழிவொன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

ஆரம்பதில் தும்பளை மேற்கு சனசமுக நிலையம் என்று எனக்கு ஒரு அழைப்பு இந்த Facebook தளத்தில் கிடைத்த பொழுது இது மற்றுமொரு குழுவுக்கான அறிவிப்பை போல என்று நினைத்திந்தேன் இருந்தும் அது என்னுடைய ஊருக்குரியதும் அதன் நிர்வாகத்துக்குரியவா்கள் எனக்கு நெருக்கமான நண்பா்களாயிருந்ததிலும் யோசிக்காமல் இணைத்துக்கொண்டேன். வெகு சாதாரணமதாய் ஆரம்பித்த இந்த சமுக வலைத்தளக்குழுமம் நிதானமாக தனது அடுத்து கட்டத்தை நோக்கி வளா்ந்து கொண்டிருக்கையில் இணையத்தை முறையாக பயன்படுத்துவதில் கிடைக்கிற மற்றுமொரு பெரும் பயனை அடைந்து கொண்டிருந்தோம்.

இணையம் கடல் கடந்து நம் மக்களை எல்லாம் அறிமும் செய்து இணைத்து வைக்க ஒரு சனசமுக நிலையத்தின் அவசியத்தை நம் ஊரின் அனைத்து தரப்பிற்கும் எடுத்துச்செல்வதில் எந்த சிரமமும் இருக்கவில்லை எந்த முன்னெடுப்பிலும் இருக்கிற சிக்கல்களைப்போல இந்த கட்டடத்துக்கான முன்னெடுப்பிலும் தடங்கல்களும் அபிப்பிராய பேதங்களும் இருக்கத்தான் செய்தன என்றாலும் கட்டடம் முழுமையாக வளா்ந்து நிற்கிறதைப்பார்க்கையில் ஒரு சிலிர்ப்பும் வெற்றியின் பரவசமும் உள்ளே பரவுவதை உணர முடிகிறது.

இந்த திட்டத்தின் முழுமையை குறித்த ஒரு கேள்வி மனப்பாங்கு எல்லோரிடமும் இருந்தாலும் இப்பொழுது ஒரு புதிய நம்பிக்கைய எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார்கள் நிர்வாகத்தினரும் நமது மக்களும். இந்த நம்பிக்கைதான் சனசமுக நிலையத்தின் அடுத்தடுத்த திட்ட முன்னெடுப்புகளுக்கான அடிநாதமாக இருக்க முடியும் இந்த குழுமமும் நிர்வாகமும் எல்லோருமாக முன்பைவிட அதிகம் மினக்கெடவும் தொடா்ந்து முன்னெடுக்கவும் வேண்டிய தேவைகள் இனிமேல்தான் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
வெறுமனே வாழ்த்துக்களை மட்டும் சொல்லிக்கொள்ளும் என்னுடைய பங்கெடுப்பின் பற்றாக்குறை என்னை வெட்கப்பட வைக்கும் இந்த தருணத்தில் என் மக்களைக்குறித்து சந்தோசப்படுகிறேன்.



பின்குறிப்பு அல்லது நீங்கள் தேடுமொரு கதை

கிட்டத்தட்ட முப்பதுகளில் இருந்துகொண்டு இப்படியொரு முழுமையற்ற இந்த பத்திகளை  கதையென்று சொல்லிக்கொண்டிருப்பது கூட எனது வாசிப்பின் போதாமைதான்.
எனக்கு சரியாக சொல்லத்தெரியாத இந்த சனசமுக நிலைய திட்டத்தின் நிறைவேறுகை குறித்த மகிழ்வை எனது மொழியில் எழுதி இருக்கிறேன் ஏற்றுக்கொள்க.

வாசித்ததை பேசுவதில் இருக்கிற  உற்சாகம் வாசிப்பைப்போலவே சுவாரஸ்யமானது வாசிப்பின் அதிஉச்சம் அதன்பகிர்வில் இருக்கிறதாக நான் நம்புகிறேன்.  கதை மாந்தா்களைக்குறித்த அவளது உரையாடல்கள் சுவாரஸ்யமானவை, அது அவளுடைய மனிதா்களைப்பற்றிய நுண்ணிய அவதானங்களை காட்டுவதாக இருக்கும்  வாசிக்கிற பழக்கத்திலும் வாசித்ததை  பேசவோ பகிரவோ முடியாத சூழல் என்பது பெரும் அசௌகரியம் அது அனுபவித்தவா்களுக்கு மட்டும் புரிகிற சொற்களின் அவஸ்தைவாசிக்கவும் வாசிக்கிறதை பகிரவும் கிடைக்கிற சூழல் எல்லோருக்கும் வாய்க்கட்டும். இனி வரும் தலைமுறைகளில் சரி திலோத்தமாக்கள் இல்லாது போகட்டும்.

Tuesday, February 14, 2012

14.02.2012 - சில சொற்கள்.

#
ஆதிப் பெண்தெய்வமென வரலாற்றின்
பெரு மௌனங்களை சுமந்தபடி இருக்கிறாய் நீ
ஒரு பிரார்த்தனைப் பாடலென
உன் முன்னே விழுந்து கிடக்கிறதெனது காதல்
.


#
தொப்பலாய் நனைத்துவிடுகிற
எதிர்பாராத நாளொன்றின் பெருமழையென
பரவசத்தையும் தவிப்பையும்
சேர்ததே தந்துவிட்டுப்போகிறது
உன் ஒவ்வொரு வருகையும்.

#

தானறியாமல் கூடவேயிருக்கிற
பிடித்தமான பாடல் வரிகளின் முணுமுணுப்பைபோல
தலையணையில் உறங்குகிற குட்டிப்பூனையின் உறக்கத்தை
கலைக்காமல் விட்டுவிடுகிற மனோநிலையைப்போல
முற்றத்து செவ்வரத்தம் பூக்களை
நின்று ரசிக்கிற தருணமொன்றாக
மோசமான நாளொன்றின் முடிவில் கிடைக்கிற
அம்மாவின் அழைப்பைப்போல
இன்னும் இன்னும்...
இங்கே எழுதி முடிக்காமல் விடுகிற
இந்த கவிதையைப்போல.

#
இன்றைக்கு எதையாவது எழுதியே ஆகவேண்டும் என்று நிலைகொள்ளாத மனோநிலையை இழுத்துப்பிடித்துக்கொண்டு எழுது-எழுது என்றால் என்னை ஒரு ஓரமாக விட்டுவிட்டு அதுபாட்டுக்கு என் அவஸ்தைகளை ரசித்துக்கொண்டிருக்கிறது.


காதல்.


_________________________________

எல்லா துன்பங்களிலிருந்தும் என்னை மீட்டெடுக்கும் உந்தன் கருணைக்கு.

Thursday, January 5, 2012

2011- போன காலம்.

இரண்டாயிரத்து பதினொன்று விரைவாக முடிந்து விட்டதென இப்பொழுது தோன்றுகிறது. காலம் அதன் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது. பெரிய மாற்றங்களை எதிர்பார்த்திருந்த கடந்த வருடம் சில விசயங்களை நடத்தியிருக்கிறது. இருந்தும் காலத்தின் போக்கில் அவை பெரிதாக தெரியவில்லை! என்னைப்பொறுத்தவரையில் முக்கியமானதொரு மாற்றமுள்ள ஒரு முடிவை கடந்த வருடத்தின் இறுதியில் எடுத்திருக்கிறேன். அந்த முடிவை தொடர்ந்தும் செயல்படுத்துதல் எவ்வளவுக்கு சாத்தியம் என்பதை காலத்திடம் கொடுத்துவிடலாம், இப்போதைக்கு இலகுவாயிருக்க முடிந்தால் அது பெரும்கொடை.


புது மருமகள்.



போன நத்தாருக்கு கிடைத்த பரிசு இது இந்த வருடத்துக்கான முதல் சந்தோசங்களை இவள் கொண்டு வந்திருக்கிறாள்.எனக்கு நல்ல நட்பாக இவள் வரக்கூடும்.


நான் வாசிக்கிறது கடும் ஸ்லோ என்று எனக்குத்தெரிந்தாலும் சமயங்களில் எனக்கே அரியண்டம்பிடிக்கிற அளவுக்கு இருக்கிறது வாசிப்பு. ஒரு புத்தகத்தை ஒரு மாதம் வாசிச்சால் எப்படி விளங்கும். இரவுக்கு முன்பு வருவது மாலை இப்பொழுதுதான் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆதவனை வாசிக்கிற பொழுதுகளில் பாலச்சந்தர் படங்கள் நினைவுக்கு வராமல் விடுவதில்லை. ஆதவன் எழுதிப்பார்த்த மனிதர்களிலும் சிக்கலான மனிதர்கள்தான் இன்றைக்கிருக்கிற உலகமயமாகிய இந்திய மேல்நடுத்தர வர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.





06.12.1944 - 17.11.2011

போன வருசம் எனக்கு கொடுத்திருந்த தீராத சாபம் இது. கிட்டத்தட்ட 67 வருசம் இருந்த அப்பரோடு கடைசி நேரங்களில் இருக்க முடியாத ஒற்றை மகனாக நானிருந்தேன்.

அப்பாவைக்குறித்து என்னால் எழுத முடியாதவைகளை எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் ஒரு மாதத்திற்குள் எழுதிவிடு என்றெல்லாம் என் மனதுக்கு சொல்ல முடியவில்லை. ஏறக்குறைய அறுபத்தேழு வருசம் இருந்த அப்பாவை ஏதோ எழுதிக்கொடு என்று எழுதுவதற்கு இது வெறும் குறிப்பில்லையே,நான் எழுதிப்பார்க்க வேண்டிய ஒரு உண்மையாய் இது இருக்கிறது, உண்மைகளை அவ்வளவு சாதாரணமாக எழுதிவிடவும்முடிவதில்லை.

இதை இங்கே எழுதவே கூடாதென்றிருந்தேன் ஆனால் 2011 இல் என்ன நடந்தது என்று மீட்டுப்பார்க்கையில் என்னை அழுத்துகிற ஒரே விசயம் இதுவாகத்தான் இருக்கிறது. இந்தப்பாரத்தை இனி எப்பொழுதும் தவிர்க்கவும் முடியாது.


இன்னுமொரு சம்பவம்.

நினைத்ததை விட வேகமாக போயிருந்த இரண்டாயிரத்து பதினொன்றின் முற்பகுதியில் ஒரு சின்னப்றவை குறுக்கிட்டிருந்தது. அதற்கான இளைப்பாறுதலின் கிளை என்னிடமிருப்பதாகவும் என்னுடைய கிளைகள் எப்பொழுதும் இலகுவாக இருப்பதாகவும் அந்தப்பறவை சொல்லிப்போயிற்று. கூடவே நான் இளைப்பாறுதலுக்கான கிளைதானே ஒழிய தங்குதலுக்கான கூடாக முடியாதென்கிற துயரக்குறிப்பை எனக்கு விட்டுப்போன அந்தப்பறவை சொந்த வானத்திலிருந்தும் பிரிந்து வேறொரு வானத்தில் அந்நிய நிலத்தின் பறவையாக வாழ்ந்து கொண்டிருந்தது.

பறவைகளின் மீது இயல்பாகவே எனக்கிருந்த நெகிழ்வு இந்தப்பறவையை துரத்தவோ இருக்கச்சொல்லவோ இடம்தரவில்லை. பறவைகள் வருவதும் போவதும் கானகத்து மரங்களுக்கு வழமைதானே; இடையில் வந்து போகிற பறவைகளுக்கு நாம் என்ன சொல்ல முடியும். அத்தோடு எனது காத்திருப்பெல்லாம் வேரை அசைக்கும் புயலுக்கான வருகைதானே.



நான் பார்த்த தமிழ் படங்களில் எனக்கு சொல்லிக்கொள்ளக்கூடியவை என்றால் ஹிந்திப்படங்களை பிறகு சொல்கிறேன்.

ஆடுகளம்
மௌனகுரு
எங்கேயும் எப்போதும்
மைதானம்
அவன் இவன்
வர்ணம்.





இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவிருக்கு. 2011 இல் தமிழ்படங்கள் பார்த்தது குறைவுதான். மற்றும்படி ஜெப்பானிய படங்களின் மீதான பிடிப்பை அதிகரித்திருக்கிறது Departures. என்னவொரு திரைமொழி அவர்களுடையது. வேலையே செய்யாமல் சுளையாக சம்பளத்தை எதிர்பார்க்கிற சவுதிகள் ஜெப்பானியர்களை இயந்திரங்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். ஜெப்பானியர்களைப்போல நமக்கு எல்லாக்கணங்களையும் வாழ்ந்துவிடத்தெரிவதில்லை என்று தோன்றுவதுண்டு, எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்கிற பக்குவம் அவர்களிடம் இருக்கிறது. உணர்வுகளை மட்டுமல்ல சாவைக்கூட பக்குவமாக எதிர்கொள்ள அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.





தமிழ் வலையுலகைப்பொறுத்த வரையில் facebook க்குக்கான வருடம் என்று சொல்லலாம் google buzz ஸில் இருந்ததிலும் நிறையப்பகிர்வுகள் ஃபேஸ்புக்கில் இருந்ததென நினைக்கிறேன், பஸ் குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் முடிந்துவிடுவதாகத்தான் இருந்தது. பஸ்ஸைக்காட்டிலும் ரிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணிசமான இயக்கத்தை கொண்டிருந்தன.

எல்லாப்பரப்பிலும் பரபரப்பாய் இயங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பது தமிழ் இணையச்சூழலுக்கு கிடைத்திருக்கிற அடுத்தகட்டம்தான் என்றாலும் இவை எவ்வளவு தூரத்துக்கு சாதகமான சாத்தியங்களை கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குறிதான். பொழுது போக்காக இணையத்தில் இயங்குகிறவர்களிலும் தங்களுக்கென்று அடையாளங்களை வைத்திருக்கிறவர்களே அவரவர் தன்முனைப்புகளை தக்கவைப்பதில் மினக்கெடுவதுதான் சோகம். அவரவருக்கான புத்திசாலித்தனங்களை நிரூபிப்பதில் மூர்க்கமாக இயங்குகிறார்கள், தங்களை புத்திசீவிகளாக நம்பிக்கொண்டிருப்பவர்கள். இணையத்தில் இந்த வருடம் பெரிதும் அடிபட்டது ஷோபாசக்தியும் மாமல்லனும்தான். எம்.டி.எம் போன்றவர்களின் தொடாச்சியான இணைய இயங்குதல் இணைய வாசகர்களுக்கான புதிய வாய்ப்புகள். இந்த வருடம் இணையத்தில் அதிகம் சர்ச்சைக்குள்ளாகிய பெயர் ஷோபாசக்தி என்றும் சொல்லாம் ஷோபாவிடம் இருக்கிற மொழி லாவகம் புனைவுக்கான அசாதாரண சாத்தியங்களை கொண்டவை ஆனால் ஷோபா தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற பிம்பமும் சறுக்கல்களாக அங்கங்கே விட்டுவிடுகிற அறிக்கைகளும் அவருக்கு நிறைய எதிரிகளை கொண்டு வந்துவிடுகிறது.



இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது பார்த்த படம் My Friend Pinto. அவருடைய அம்மாவின் முகச்சாயல்களில் இருக்கிற Prateik மற்றும் பலர் நடித்திருக்கிற இந்தப்படம் இன்னும் திருத்தமாக வந்திருக்கக்கூடியது. எல்லோருக்கும் சந்தோசங்களை கொண்டு வரக்கூடிய ஒருவனாக இருப்பது எவ்வளவு சிரமம்.மனிதர்களை நம்புவது தனித்துவமான அசாதாரணமான இயல்பாகிவிட்டிருக்கிற உலகம்தான் யதார்த்தத்தில் இருக்கிறது.அப்படி ஒருவனை காண்பது எல்லோருக்கும் அதிசயம்தான் நடைமுறைகள் என்கிற மாயைக்குள் சுழல்கிற மனிதர்களுக்கு.


என்னிடம் சில சிக்கல்கள் இருக்கலாம். நிலைகொள்ளாதிருத்தல் பெரிய அசௌகரியங்களை தருவதாய் இருக்கிறது. நானொரு ஒரு பயணம் போகலாம் என்பது மட்டும்தான் என்னிடமிருக்கிற அடுத்த கட்டம். பயணத்துக்கு காத்திருக்கும் இந்த நாட்களை பிடித்திருக்கிறது. இலங்கையில் இதுவரை அறியாத தெருக்களில் நடக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறேன்.முகமறியாத மனிதனொருவனின் நடைபாதை தூக்கங்களுக்கு சாத்தியமான இலங்கை இருக்குமென்பது கொஞ்சம் கூடுதலான நம்பிக்கைதான் இருந்தாலும் இந்தப்பயணத்தை தவிர்க்கவே முடியாது.புதிய சாலைகளின் சுவாரஸ்யம் வாழ்வின் உன்னதமான தருணங்களாய் இருக்கக்கூடும்.


இதை எழுதத்தொடங்கி மூன்று நாட்களாயிற்று எழுதி முடிக்கவே இயலவில்லை. தொந்தரவு செய்கிற வேலையும் ஒன்றாத மனமும் என இந்த சுயபுலம்பல்களை எழுதி முடிக்க இயலவில்லை இதை இன்னும் விரிவாக எழுதி அதை ஏன் இணையத்தில் வைக்கவேண்டும் என்பதில் நான் இப்படியே பகிர்ந்து விடுகிறேன்.