Friday, May 15, 2009

மழைக்கு எழுதிய சொற்கள்...





இங்கே எழுதிய சொற்களை இவ்விடத்திலும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அந்த வார்த்தைகளை எழுதுவதற்கு அழைத்த சென்ஷிக்கும், பேசும் கவிதைகளுக்கான ஏற்பாடுகள் செய்கிற நண்பர்களுக்கும் நன்றி.

\\
நேற்று பெய்த மழையில்
இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர்
சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்...


\\
மூன்று வருடங்களுக்கு பிறகு
நினைவு படுத்தியிருக்கிறது இந்தமழை,
நீ பிரிவறிவித்த மழை நாளின் இரவையும் கூடவே
உன்னோடு கழிந்த விடு முறை நாட்களின்
மழை நேரப் பின்மதியங்களையும்...
மழை எப்பொழுதும்
மழையாகவே இருக்கிறது!


\\
எப்பொழுதாவது ரசிக்கக்கிடைக்கிற
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது
உன் முகம்,
யாருமற்ற பகல்களில்
வருகிற மழையை
நீயும் ரசிக்கிறாயா?


\\
வாசனைகளோடு வந்து
ஜன்னல் நனைக்கிற சாரல்களுக்கு தெரிவதில்லை
நீ இப்பொழுதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும்
மழைக்கும் உனக்குமான சினேகம்
மறக்கப்பட்டு விட்டதையும்..


\\
வாசனைகளோடு வருகிற மழைக்கு தெரிவதில்லை
நீயற்ற இரவுகளின் நீளம்,
தனியே அருந்துகிற தேநீருக்கு தெரிவதில்லை
முத்தங்களுக்கு பின்னரான தேநீரைப்பற்றி,
அணைத்துக்கொள்கிற உன் தலையணகைள்
தூக்கம் கலைகிற இரவுகளில் கிசுகிசுப்பாய் பேசுவதில்லை,
நீ ஊருக்கு போன நேரத்தில் வருகிற மழைக்கு தெரியாது
போர்வையை சரிசெய்ய நீயில்லாத இரவுகள் பற்றி,

வந்து விடு அல்லது
மழையை கூட்டிப்போய்விடு!

\\
நனைந்து கொண்டே
பேசி வந்த புதன் கிழமை,
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப்போன
ஞானசம்பந்தர் நூல்நிலையம்,
நூல் நிலையத்து விகடனில்
வாசித்த மழைக்கவிதை,
தகரக்கூரையில் விழுகிற
துளிச் சப்தங்கங்கள்,
விடைபெறும்வரை பிரியாமலிருந்த
இடது கைகளின் வெப்பம்,
விடைபெறும் தருணத்தில்
நிகழ்ந்த குளிர்விட்ட முத்தம்,

இங்கே எப்பொழுதாவது வருகிற மழை
இவ்வளவும் கொண்டு வருகிறது
உன் கடிதங்களை தவிர!

Friday, May 8, 2009

தீராத சொற்களும் நினைவுகளும்...

பெருமெண்ணிக்கையில் புறப்பட்டலைகிற சொற்களும், உள்ளேயிருந்து தெறித்து அலைகிற சொற்களின் திமிறல்களுமென திணறிக்கொண்டிருக்கிறது மூளை. புதிய சொற்களின் அழுத்தம் பெரும் பாடாய் படுத்துகிறது.சொல்லிப் புலம்புவதற்கு யாருமில்லாத பொழுதுகள் மிகக் கொடுமையானதாய் இருக்கிறது...

கலவையான சொற்களும் அதன் அமுக்கங்களும் குலுக்கிவைத்த பியர் போத்தலென பொங்கி நுரைத்துக் கொண்டிருக்க எதை எழுதுவேன்? சிதிறிக்கிடக்கிற சொற்களை அப்படியே எழுதிவிடலாம் என்றால் அவற்றை எங்கே இருந்து தொடங்குவது, எப்படி நிறைவு செய்வது என்று தெரியாமல் ஆக்கிரமிக்கிற சொற்களை அவற்றின் போக்கிலேயே விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எவ்வளவு தூரம் வாழ முடியுமோ அவ்வளவு தூரம் வாழ்ந்து விடவேண்டும் என்பது என் பிரயத்தனமாக இருக்கிறது பால்யம் முதலே. நான் ஆசைப்பட எதுவும் கிடைக்காது போகிற சோகம் அனுபவித்து பழகியதில் சுகமாய் தெரிகிறது. பழக்கப்பட்ட வலிகள் திடீரென்று இல்லாமல் போனாலும் எதையோ இழந்தது போலத்தான் தேன்றுகிறது இல்லையா? அவளிடம் கூட நான் அடிக்கடி சொல்லி இருப்பேன் சிறு வயது முதலே நான் மிக விரும்பிய விசயங்கள் எதுவும் எனக்கு கிடைப்பதில்லை எனவும் நீ எனக்கு கிடைத்திருக்கிறாய் உன்னை இழந்து போக மாடடேன் என்பதாயும் இழந்தால் என்ன நிகழும் என்பது சொல்ல முடியாதென்றும். இப்பொழுது அவள் என்னோடு இருக்கிறாளா இல்லையா என்பதை பின்பொரு நாளில் பேசிக்கொள்வோம்.

என்னை அடையாளம் காட்டத்தொடங்குகிற சொற்களை அரங்கேறறம் செய்வதில் இருக்கிற குழப்பம் என்னை பிரதிபலிக்கிற சொற்களை வாசிப்பதில் இருப்பதில்லை சொல்லப்போனால் அவற்றை திரும்பத்திரும்ப வாசித்துக்கொள்வேன். நீங்கள் என்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்கான உறுதி நிலைகள் தகர்ந்து கொண்டிருக்கிறது உள்ளேயிருக்கிற சொற்கள் செய்கிற ஆக்கினைகளில்,இந்தப் புலம்பல் என் சொற்களுக்கான திருப்திப் படுத்தலாய் கூட இருக்கலாம்.

படபடப்பாய் இருக்கிற பொழுதுகளை பகிர்வதற்கு வெகு நிதானமாய் தண்ணியடிக்க வேண்டுமென்பதாயும் அது ஒரு புரிதல் நிரம்பிய பெண்ணோடு நிகழ வேண்டும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. நாட்கள் சொல்லவும் கேட்கவும் மறுதலிக்கவும் விவாதிக்கவும் பின் முத்தங்கள் செய்யவும் என அவளோடு பொழுதுகள் கழியவேண்டும் என்பதாய் இந்த இடத்திலிருந்து வெளியேறி விடு என கதறிக்கொண்டிருக்கிறது மனம்.

மனம் விட்டுச்சொல்லி விடுகிறேன் நிறையப்பேசவும், முழுவதும் பகிரவும் மூச்சுத்திணறக் காதல் செய்வும் கறுப்பு நிற தேவதை ஒருத்தியை தேடிக்கொண்டிருக்கிறேன்



பின் குறிப்பு அல்லது எழுதிப்பார்த்த சொற்கள்:

மூளை என்கிற ஒன்றை
செயலிழக்கச்செய்கிற வேகத்தோடு
புறப்பட்டலைந்து கொண்டிருக்கின்ற சொற்களை
கொலை செய்து விடுவதென முடிவெடுத்து
ஒவ்வொன்றாய் அழிக்கத் தொடங்கினேன்
இரத்தமும் சதையுமாய் வெட்டுண்டு
புழுக்களென நெளியத்தொடங்கிற்று
நினைவுப்பெருவெளி
நினைவுகளை அழிக்க வேண்டிய
நிர்ப்பந்தம் வந்துவிட மூளையை
வெளியே எடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அறுக்கத்தொடங்குகிற தருவாயில்
சன்மாய் ஒலிக்கிறது குரல்
"நீங்கள் நல்லா இருக்கோணும்... நான் போறன்"

அறுத்துக்கொள்வதை சட்டென்று நிறுத்தி
ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்
இருபத்தேழாவது குவளையையும்

சுவரோடு சாய்ந்து
கால் மேல் கால் போட்படி
சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டேன்

இப்பொழுது...

கறுப்பு நிறத்தாள்களில்
இரத்த நிறச்சொற்கைள
எழுதிக்கொண்டிருக்கிறேன்!


\\
எழுதிக்கொண்டே இருப்பதற்கு போதுமானதாய் தீராமல் இருக்கின்றன சொற்கள் இருந்தும் எதை எழுத என்று தெரியாமல் திணறுகிறது மனம்.சொற்களை எழுதி விடுவது தான் நல்லது என்பதாய் கற்பிதம் உருவாக்கி வைத்து விட்டபிறகு அதனை மீறுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது.

\\
எல்லாமே அழிந்து போனதாய் இயங்க மறுத்துக்கொண்டிருக்கிறது மூளை இன்னமும் எங்கே இருக்கிறாய் நீ.என்னை எழுத விடு இல்லையேல் வந்து விடு.