அம்மா...
அம்மாவைப்பற்றி யாரும் சொல்லாததை நான் ஒன்றும் புதிதாக சொல்லப்போவதில்லை...இருந்தாலும் அம்மா என்று கதைக்க ஆரம்பித்தாலே நான் ஏதோ தனிமைப்பட்டுவிட்டதாகிய ஒரு உணர்வுதான் எனக்கு தோன்றுகிறது. நாளாந்தம் பார்த்த, வருடக்கணக்கில் பழகிய நண்பர்களிடம் இருந்து சட்டென்று பிரிந்து விட்ட நாளொன்றின் இரவைப்போலாகிவிடுகிறது; அம்மாவின் நினைவுகள் மீள்கின்ற இரவுகள்...
அம்மா என்கிற ஒரு புள்ளியில் இருந்து கொண்டு தேவைப்படும் தருணங்களிலெல்லாம் ஒரு தோழியைப்போல் பங்கெடுத்துக்கொள்ளும் அந்த வெள்ளை முகத்தை இரண்டு வருடங்களாக பிரிந்திருக்கிறேன் இலங்கையின் பொருளாதார, அரசியல், சூழ்நிலைகளின் நிமித்தம்.
அம்மா என்கிற தானத்தை அதற்குரிய நேரங்களில் உணர்த்தினாலும் ஒரு நெருக்கமான நட்பைப்போல நாளாந்தம் நடக்கிற எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும அம்மாவை பெயர் சொல்லி அழைத்து பழகியிருக்கிறேன் பலம், பலவீனம், சோகம், துக்கம், சந்தோசம், நண்பர்கள், நண்பிகள், படிப்பு, விளையாட்டு , வேலை, பிடித்தது, பிடிக்காத, சினிமா, பாடல், அரசியல், காதல், கல்யாணம் என்று எல்லாம் பேசியிருக்கிறேன் அம்மாவோடு...
நான்தான் காரணமாக இருந்தாலும் எந்த ஒரு சந்தர்பபத்திலும் என்னை மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காத அன்பே என்னை ஓரளவேனும் கட்டுக்குள் வைத்திருந்ததெனலாம் (நாங்கள்ளாம் அடங்கவே மாட்டம்ல முன்ன) . நான் செய்கிற ஏடாகூடமான காரியங்களைக்கூட "என்ன வருத்துறக்கெண்டு வந்திருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டாலும் "நீ ஏன்டா உதுகளுக்க போறாய் பேசாம இரு எண்ணடால் கேட்கமாட்டான்" என்று சொன்னாலும் அடுத்த கணமே "தேத்தண்ணி வேணுமோ" (நான் ஓரு நாளைக்கு குறைந்தத பத்து தேநீர் குடிப்பேன் அதுவும் Black Tea) என்று என் மனமறிந்து கேட்கிற அந்த அன்பும் நெருக்கமும் அம்மாவிடம் நான் செல்லப்பிள்ளையாக இருந்ததுக்கு சான்று. அப்படியெல்லாம் சொல்வதே "நீ அவனுக்கு செல்லம் குடுக்கிறதுலதான் அவன் இப்பிடி ஊர் சுத்திக்கொண்டு திரியிறான்" என்று அம்மாவை குற்றம் சொல்லுகிற காரணம்தான் ....
நான் வேலை செய்தது வெளி ஊரில்தான் இருந்தாலும் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் வந்து ஊரில் நிற்கிற அத்தனை நாட்களும் வீட்டிலேயே இருப்பதில்லை அப்பபொழுதும் அதே பழைய குணம்தான் வீட்டுக்கு வரும்பொழுது எல்லோரும் பாதி தூக்கத்திலிருப்பார்கள் வந்து அம்மாவை கூப்பிடுகிற சத்தத்தில பக்கத்து வீட்டடுக்கார ஆக்களே எழும்பியிருவாங்க ... இதுல கடைசி அக்கா வேற (எனக்கு நேர் முதல் அக்கா) எழும்பி நீ திருந்த மாட்டாய் இந்த கொடுமையிலும் நீ வீட்டுக்கு வராமலே இருக்கலாம் என்று ஒரு குட்டி பிரசங்கம் நடத்தி விட்டு அதற்காகத்தான் நித்திரையை குழப்பி எழும்பி வந்தது போல மறுபடியும் போய் படுத்தக்கொள்வாள்...
இரவு நேரம் கழிந்து வீட்டுக்கு வந்தாலும் படுக்கைக்கு போவதற்கு முன்னால் ஒரு தேநீர் குடிப்பது வழக்கம் எவ்வளவுதான் திட்டினாலும் கடைசியாக Flask இல Tea இருக்கு குடி என்று சொல்லி நான் போட்டு குடிக்கும் வரை விழித்திருந்து சாப்பிடுகிறேனா என்று பாத்து தேத்தண்ணியும் போட்டுத்தந்து அதன் பிறகுதான் படுக்கப்போகும் அந்த அன்பு தோழியின் பாசத்தை என்னவென்று சொல்ல...
வாழ்க்கையை வாழ்வதற்கு அதன் போக்கில் அதனை ஜெயிப்பதற்கு அம்மாவை பார்த்துதான் பழகிக்கொண்டேன் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி ஆனால் தனக்கு கிடைக்க வேண்டியதை அடைந்து கொண்டு மிக சந்தோசமாக வாழ்கிற ஒரு மனம் அந்த மனுஷிக்கு எப்படி வாய்த்ததோ எனக்கு தெரியவில்லை...
பிறந்ததிலிருந்து பழகிய மிக நெருங்கிய நட்பொன்றை பிரிந்து இரண்டு வருடமாக இருக்கிறேன் பார்க்கலாம்; இலங்கை எப்பொழுது இலங்கை ஆகிறதோ அப்பொழுது சொந்தங்களோடு சந்தோசமாக வாழ்வோம்.
கடைசியாக ஒன்று எனக்கு கிடைத்த முதல் நல்ல நட்பு பரமேஸ்வரிதான் அதாங்க அம்மாவோட பெயர்... மனுஷிக்கு தெரியும் நான் இப்பிடி ஏதாவது எழுதுவன் எண்டு ஏனெண்டா நான் முதல் எழுதின காதல் கவிதையை முதல்ல வாசிச்சதே அம்மாதானே...(வேற யார் வாசிக்கப்பேறாங்க எண்டு சொல்லுறது கேட்குது) இப்பவும் அம்மாவுக்கு தெரியாத விடயம் என்று என்னிடம் எதுவுமே இல்லை...
"அம்மா என்னணை எப்படி இருக்கிறாய் உன்னை பார்க்க வேண்டும்போல இருக்கணை... ஆனால் நீதான் இப்போதைக்கு வர வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டாயே..."
( குறை நினைக்காதிங்க மக்கள் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கிறதால அம்மாவுடன் நேரம் செலவழிக்க முடியலை அதனால அன்னையர் தினத்துக்கு ஏதாவது பதிவு போடலாம்னு பாத்தா எனக்கு எதுவுமே வரமாட்டேங்குது அதனால என்னோட நினைவுகள்ள இருந்து கொஞ்சூண்டு எடுத்து உங்களுக்கு தந்திருக்கேன்...)
நான் என்ன சொல்லி
உன்னை வாழ்த்த அம்மா...
என் ஆசை தீர உன்னை அம்மா
என்றழைப்பதைத் தவிர...
தன் பிள்ளை நிலைபெற்று விட்டான்
என்கிற திருப்பதியை
உனக்கு கொடுப்பதை தவிர...

எனக்கு கிடைத்த
நெருக்கமான முதல் நட்பு நீ
உனக்காக ஒருதினம்தான்
கொண்டாடுகிறது இந்த உலகம்
என் நாட்கள் எல்லாமே
கொண்டாடுகிறது உன்னை...

நான் என் பிள்ளைகளின் மனதில்
எப்படியிருப்பேனோ தெரியாது- ஆனால்
நான் உன்னைப்போல் ஒரு
அன்னையாக இருக்கவே முயற்சிக்கிறேன்
நீ என்னை இன்னமும்
குழந்தையாகத்தானே பாவிக்கிறாய்அம்மா...

நான் உன்னை வாழ்த்துவதா
அது என்னால் முடியுமா
என் வாழ்நாள் போதாது அதற்கு
விரும்பினால் உன்னை
ஒரு வரம் கேட்கிறேன்
மறுபடியும் நான் உனக்கே
மகனாக வேண்டும்...
உலகத்தின் அம்மாக்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...