Showing posts with label வாழ்த்துக்கள்.... Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள்.... Show all posts

Saturday, February 14, 2009

காதல் நாள் - 14-02-2009






காதல் நாளென்கிற என்கிற தலைப்போடு போன வருடம் எழுதிய வரிகளை இந்த வருடம் பார்க்கவே இல்லை, இன்னமும் அதனை வாசிக்கவில்லை இந்த வருடம் கட்டாயம் பதிவு போட்டே ஆகவேண்டும் என்கிற மனோநிலை இல்லாமல் போய்விட்டது...

இருந்தாலும் ஒற்றை வரியிலேனும் ஏதாவது சொல்லியே ஆக வேண்டும் என்று உறுத்திக்கொண்டே இருக்கிறது மனது. வேலை முடிகிற நேரம் வந்துவிட்டது இன்னும் ஏழு நிமிடங்களே இருக்கிறது பணி முடிய.

ஏதாவது எழுதிவிடவேண்டும் என்கிற ஆசையில்...


\\
உதடுகளில்
குவிகிற
சுழிகிற
நெளிகிற
திறக்கிற
மூடுகிற
சிரிக்கிறதென
எத்தனை செய்கிறாய் பேசத்தான்
மாட்டேன் என்கிறாய்!

\\
கொஞ்சம் தயக்கம் நிறையக்காதல் என
சொல்லாமல் போன நொடிகளைனைத்தும்
நிகழ மறுத்ததும் நிகழந்ததுமான அற்புதங்களாய்
நீ என் நாட்குறிப்புகளெங்கும்!


\\
யாருமற்ற வல்லிபுரக்கோவில் வீதிகளில்
சின்னதும் பெரியதுமாய் நிறைய பனைரங்கள்
நம் கதைகளைப்பேசிக்கொண்டு...
நாம் தான் பேசுவதுமில்லை,
யாரிடமும் சொல்வதுமில்லை,
பனைகள் அழிந்து போகலாம்
நினைவுகள்...?



உலகத்தின் அன்பானவர்கள அனைவருக்கும்
காதலர்தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்!

Saturday, January 31, 2009

ஜோன்...

அவனுக்கு யோகேஸ்வரன் என்று பெயர் அவனுக்கு யோகங்கள் இருக்கிறதாலேயே அவனுக்கு அப்படி பெயர்வைத்தார்களோ அல்லது பெயர் அதுவாயிருந்ததில் அவன் யோகக்ககாரனாய் இருக்கிறானோ எதுவாய் இருந்தாலும் அவன் யோகமுள்ளவனாய் இருக்கிறான்...

ஜோன் என்று நான் அழைக்கிற யோகேஸ்வரனுக்கு மாலினி என்கிறழைக்கப்படுகிற பிரேமமாலினி என்கிற இன்னொரு யோகம் கூடிவருகிற தருணம் நாளைக்கு (01-02-2009)நிகழவிருக்கிறது...

என்ன செய்வது ஜோன் உன்னுடைய கல்யாணத்துக்கு மின்னஞ்சலும் ஆகக்கூடியதாய் ஒரு தொலைபேசி உரையாடல் வழியான வாழ்த்தும் இன்னொருவரால் ஆயத்தம் செய்யப்பட்ட பரிசுப்பொருளையும் தர முடியும் என்னால் வேறென்ன செய்ய? ஊரின்,நண்பர்பகளின் எத்தனையோ கல்யாணங்களில் கூடிச்செய்கிற கும்மாளங்கள், நண்பர்கள் மொத்தமாய் சேர்ந்திருக்கிற சந்தோசங்களின் பொழுதுகளிலெல்லாம் தோன்றுவதே இல்லை நம்முடைய கல்யாணங்களில் சேந்திருப்போமா என்கிற எண்ணம்; இப்பொழுது பார்த்தாயா வாழ்க்கை எப்படி மாறிப்போயிருக்கிறது ...



உண்மைதான் காலம் சில விசயங்களை தீர்மானிக்கிறது.

உனக்கு வாழ்த்தெழுத வந்தவனை நினைவுகளும் நிகழ்காலமும் திசை திருப்பிக்கொண்டிருக்கிறது ஜோன்; ஊரின் கல்யாணக்கதைகளை வேறொரு பதிவில் எழுதலாம் இப்பொழுது.

எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை ஜோன், என்ன சொல்ல? நல்லா இரு மச்சான்!
மிக இனிமையானதொரு வாழக்கை உங்களுக்கு வசமாகட்டும்...
சந்தோசங்கள் சூழ்கிற காதல் நிறைந்ததொரு வாழ்க்கை இரண்டு நெஞ்சங்களின் நெருக்கத்தில் நிகழட்டும்.


ஜோன் நீ புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன் இறுக்கமான சூழலில் நிகழ்கிற உன் திருமணத்துக்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை மனம் நிறைவான வாழ்த்துக்களை தவிர.





31/01/2009
11.20pm.
k.S.A.


ஜோனுக்கு தெரியக்கூடாத குறிப்பொன்று:

கடந்த இரண்டு நாட்களாக இணையத்துக்கு வந்தாலும் என்னுடைய வலைப்பக்கமே வராமலிருந்திருக்கிறேன். உள்ளே நிரம்புகிற அதிகரித்த வலிகள் நிரம்பிய சொற்களின குமுறல்கள் அடக்க முடியாமல் இருக்கிறது, அவை என் தேசத்தின் தெருக்களில் கேட்கிற சபிக்கப்பட்டவர்களின் இறுதிக்குரல்களாய் இருக்கலாம்!

குமுறுகிற சொற்களை அமுக்கி வைத்திருக்கிறேன் அவை வெளியெ விழுந்து செத்துவிடக்கூடாதென்பதில்.

அவை இருக்கட்டும் ஜோன்...

Thursday, January 15, 2009

தேவதைகள் கொண்டாடுகிற தினம்...!




நீங்கள் யாராவது தேவதைகள் தூங்கும் பொழுது பார்த்திருக்கறீர்களா!கைவிரல்களை கூட சரியாக விரிக்காத குழந்தை ஒன்று பசியாறித்தூங்குகிற தருணங்களை ரசித்ததுண்டா? அது வெறும் தூக்கம் என்று என்னால் சொல்ல முடிவதில்லை மனிதன் வாழ்கிற கணங்கள் அங்கே ஆரம்பிக்ககிறது என்பது என் எண்ணம்.

அப்படி தன்னை மறந்து தூங்குகிற தேவதைகளை பார்த்திருக்ககிறீர்களா, ரசித்திருக்கிறீர்களா? இல்லை எனில் உங்கள் வாழ்வின் மிக அற்புதமான தருணங்களில் சிலவற்றை இழந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் இன்னொரு விதமாய் சொல்லப்போனால் அந்த அற்புதம் உங்களை இதுவரை கடந்து போகவில்லை எனலாம் இன்னொரு விதமாய் சொல்லப்போனால் உங்களை கடந்த ஒரு தேவதையை நீங்கள் கவனிக்கவில்லை என்பது சோகம் இருக்கிற உண்மை.

அவளுடைய தூக்கம் அப்படித்தான் இருக்கும் ஒரு குழந்தையைப்போலத்தான் அவள் தூங்குவாள் என்பதை விட ஒரு குழந்தை அவளுடைய சாயல்களில் தூங்கும் எனத்தான் எனக்கு படுகிறது;இது நிஜமோ இல்லையோ நிச்சயமாய் தேவதைகள் அவளைப்போலத்தான் நித்திரை கொள்ளக்கூடும். தேவதைகள் தூங்குவதில்லையா?! யார் சொன்னது நிச்சயமாய் தேவதைகள் உறங்குகின்றன அதுவும் மிக இனிமையான கனவுகளுடன்...

அவளை சின்ன வயதிலிருந்து எனக்கு தெரிந்திருந்தது அதிகம் பேசமாட்டாள் என்றாலும் மிக அழகான புன்னனைகளை சேமித்து வைத்திருந்தாள்.எனக்கென்று தனியாய் அவளிடம் இருந்தது எல்லையில்லாத அன்பும், உயிரறிகிற உணர்வுகளும், அற்புதமான புன்னகைகளும் மட்டுமே.

தனியான சிரமங்கள் ஏதுமில்லாமல் அவள் மிக இயல்பாய் அஃதின் எனக்கே எனக்காய் மாத்திரமான அடையாளங்களோடு செலவு செய்கிற புன்னகைகள் போல இதுவரை என் கனவுகளில் வந்த, நான் கேள்வியுற்ற எந்த தேவதைகளும் சிரித்திருக்கவில்லை என்பது அவளுக்கு மட்டுமேயான தனித்துவமாய் இருந்தது; இங்கே நான் முன்னர் சொன்ன தேவதைகள் அவள் சாயலில் இருக்க கூடும் என்கிற கூற்று உறுதியாயிற்று.

அவளுக்கு பேசத்தெரிந்திருந்தது மௌனங்களையும்! அவள் வீட்டின் சமையலறையின் பின்புறத்திண்ணையில் அம்மிக்கல்லில் சாய்ந்தவாறு நெல்லி இலைகளினூடே விழுகிற நிலவொளியின் வெளிச்சத்தில் எதிரேயிருக்கிற அவளது மௌனங்களை எந்த வித குறுக்கிடல்களும் இல்லாமல் விடிவிடிய வாசித்துக்கொண்டிருந்த நாட்களை நான் முன்னம் செய்த தவங்களின் வரங்களென சில கடிதங்களில் சிலாகித்திருக்கிறேன் அவை என் நாட்குறிப்புகளிலும் எழுதப்பட்டிருக்கின்றன!

குறிப்பு:
அந்த அம்மிக்கல்லு மஞ்சள்,மருதாணி மற்றும் அவளது என மயக்கம் தருகிற வாசனையோடிருக்கும்.அந்த மருதாணி அரைத்தல் பற்றியதும் வாசனைகள் பற்றியதுமான கதைகளை சொல்லப்போனால் இந்தப்பதிவின நோக்கம் திசை திரும்பி விடக்கூடும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் கனவில் நுழைகிற அந்த மயக்கங்களின் வாசனைகளை பற்றி பேசலாம்.


இதையே அவளும் சொல்லி இருக்கிறாள் நீ கண் மூடி என் மடிசாய்ந்திருக்ககையில் தாய்மையின் நிறைவை உணர்வதாக அவள் தன் மனதையெல்லாம் சொல்கிறேன் என்று உயிரை மொத்தமாய் தன் பிரியங்களையெல்லாம் கூட்டி எழுதியவொரு கடித்தில் சொல்லியிருந்தாள்...இங்கே நான் சொல்ல வேண்டிய இன்னொரு விசயம் இருக்கிறது அவள் மடிமீது சாய்திருக்கையில் அனேகமான தருணங்களில் நான் என்னையறியாமல் உறங்கி விடுவேன்,நான் வழைமையாய் தூங்குகிற படுக்கையை தவிர்த்து என்னை மறந்து உறங்கியது அம்மாவின் மடிக்கு பிறகு அவளது அன்பில்தான்...

அவளுக்கு அன்பைத்தவிர வேறொன்றும் தெரியாமல் இருந்தது அவள் செய்த தவறல்ல தேவதைகளின் இயல்பு அதுவாகிற்று...ஆனால் என்ன தவங்கள் தடைப்பட்டுப்போனாலும் தேவதைகள் ஒரு போதும் தோற்பதில்லையே நான் இன்னமும் தவம் செய்திருக்க வேண்டும் என்பது காலம் சொல்லி இருக்கிற சாபவிமோசனம்.தவங்களின் பலன்கள் வரமாய் அல்லது விமோசனமாய் கிடைக்கலாம் அன்றில் ஒரு தேவதையோடு வாழக்கிடைப்பது தேவதைகளின் கரிசனமே அன்றி அவை தவங்களின் வலிமையன்று.

அம்மாவின் சாயல்களை அவள் இயல்புகளெங்கும் சேகரித்து வைத்திருந்த அவளுக்கும் அம்மாவிற்கும் இருந்த ஆகக்கூடிய வித்தியாசமாய் இருந்தது அவள் கறுப்பாயும் அம்மா வெள்ளையாயும் இருந்ததுதான்...நான் தேவதை என்கிற சொல்லை அதிகமாய் எழுத ஆரம்பித்தது அவள் வருகைக்கு பின்பென்கிற தகவலைநான் எழுதிய சில கவிதைகளும் தொடர்ச்சியாய் இல்லாமல் நான் எழுதிய நாட்குறிப்புகளும் நிரூபிக்கின்றன்...


தேவதைகளுக்கு பிறந்த நாள் இருப்பது உங்களுக்கு புதிதாய் இருக்கலாம் ஆனால் அவள் பிறந்த திகதி ஜனவரி பதினைந்தாய் இருந்தது.அவள் பிறந்து விட்டாளே ஒழிய இனி மறையப்போவதில்லை என்பதற்கு கூகுள் ஒரு வேளை சாட்சியாகலாம் அல்லது கொஞ்சம் போதையுடனும் நிறைய நினைவுகளுடனும் இதனை எழுதிக்கொண்டிருக்கிற ஆசிரியனும் அவன் நாட்குறிப்புகளும் காரணமாகலாம்.

இன்றவளுக்கு பிறந்த நாள் என்பதில் அவள் கொண்டாடிக்கொண்டிருப்பது அவள் நாட்களில் ஒன்றென்றாலும் நான் கொண்டாடிக்கொண்டிருப்பது தேவதையைத்தானே!அத்தோடு தேதைகளிடம் வரம் மட்டுமே கேட்பது எப்போதும் முறையானதல்ல அவளுக்கென்றும் சில விதி முறைகள் இருக்கலாம்,அவை தவிர்க்கமுடியாதவைகளாய் இருக்கலாம் அல்லது தவம் செய்பவனுடைய வல்லமைகள் திடங்கள் கலைந்து போயிருக்கலாம் ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு அவள் சிறகுகளை இழக்க வேண்டியிருந்திருக்கலாம் இங்கே அவள் இழந்தது சிறகுகளைத்தானே ஒழிய நினைவுகளை அல்ல என்பது அந்த தவம் பற்றிய குறிப்பகளை எழுதிச்செல்கிற நிஜத்தை தந்திருக்கிறது! ஒருக்கால் இழந்து போன சிறகுகளை திரும்பவும் அவள் பெறக்கூடும் அதுவரையான அவன் தவம் கலைக்கப்படாமலிருக்கட்டும் என்பதற்காயும் அல்லது அவளுக்கு சிரமங்களை கொடுக்கிற சிறகுகள் மீண்டும் கிடைக்கப்பெறாமல் இருப்பதற்குமாய்...

வரம் தருகிற தேவதையொருத்தியை வாழ்த்திக்கொள்வதில் உயிர் கிண்ணங்களில் சந்தோசம் நிறைகிறது!



பின் குறிப்புகள்:

//
பதிவின் நோக்கம் ஒரு தேவதையை வாழ்த்துவது மட்டுமே பதிவிற்கான சுவாரஸ்யத்திற்காய் சில வரிகள் கோர்வையாககப்பட்டிருக்கிறது...

//
எனக்கு தெரிந்த பெண்ணொருத்திக்கு இன்று பிறந்த நாள் அவளுடைய உண்மை வயதென்ன என்பது தடைசெய்யப்பட்ட கேள்விகளுள் ஒன்று.

//
இது நிஜம் தழுவி எழுதப்பட்ட புனைவு.

Wednesday, December 24, 2008

என் முதல் தோழிக்கு பிறந்த நாள்...

அவளுக்கு வெள்ளந்தி மனது அவள் நிறத்தைப்போலவே மூன்றாவது வருடமாக அவள் பிறந்த நாளுக்கு அவளோடு இல்லாமல் இருக்கிறேன் காலையிலேயே அழைத்துப்பேசி இருந்தாலும் அவளை கட்டிக்கொண்டு உச்சி முகர்ந்து வாழ்த்துசொல்லவும் அவளிடமிருந்து ஆசீர்வாதங்களும்,பரிசும், இனிப்புகளும் பெற முடியாமலும் போனது வலிக்கத்தான் செய்கிறது, காலம் போய்கொண்டிருக்கிறது...இன்னும் எத்தனை பிறந்த நாட்கள் இப்படி பிரிந்திருக்க வேண்டுமோ என்ன செய்வது:(

வா உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்பது அவள் இப்பொழுதெல்லாம் சொல்கிற முதல் வார்த்தையாய் இருக்கிறது, வந்து என்னை கண்டு கொள் பின்னர் யோசிக்கலாம் நீ யாழ்ப்பாணத்தை விட்டு போவதையும் அங்கு ஜீவிக்க விரும்பாதையும் என்று தன் அன்பின் ஆயிரங்களில் ஒரு பங்கை எனக்கு காட்டிக்கொள்வாள்...

"நீதானே ஒரு கடிதம் போடாத ஆள்" என்று நான் ஆயிரம் முறை தொலைபேசியில் அழைத்தாலும் சொல்கிறவள், கடிதங்கள மீதான என் காதலுக்கு இவளும் ஒரு காரணம்! அவள் கிறுக்கலான கையெழுத்துக்களில் நெருக்கமான மனதினை அழகாய் தருகிறவள்..."ஒரு படம் அனுப்பு பார்க்கலாம் என்றாலு நடப்பு காட்டுகிறாய்" என்பதும் நான் புகைப்படங்கள் எடுப்பதில்லை என்கிற என் வாதங்களை மீறிய அவள் குற்றச்சாட்டு!

நான் அவளோடு இருந்த நாட்களில் எல்லாம் என் எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் என் பக்கமே வாதாடுகிற அவள் அன்புக்கு தெரிவதில்லை அடுத்த கோணங்கள் 'அவன் அப்படிச்செய்கிற ஆள் இல்லை' அல்லது 'அவன் அப்படியானவன் அல்ல' என்பது அவள் வாதமாக இருக்கும் அந்த பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டு வந்த பிறகுதான் அது பற்றி என்னிடம் விவாதம் செய்வதும் என்னை கேள்வி கேட்பதும் அவளுக்குத்தான் என்னைப்பற்றி அங்குலம் அங்குலமாய் தெரிந்திருக்கிறதே பிறகென்ன :)

'இனிமேல் உனக்காக கதைக்கமாட்டேன் எக்கேடு என்றாலும் கெட்டுப்போ' என்று சொல்லிக்கொண்டாலும் அதற்கு நான் காட்டுகிற பொய்க்கோப முறுக்குகளுக்கே குழைந்து போய்விடுகிற லேசான மனதுக்காரி..எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறுகிற என்னை "தேத்தண்ணியை குடிச்சுட்டு போ" என்கிற முகம் பாராமல் சொல்கிற வார்த்தைகளிலேயே கட்டிப்போட்டு விடுகிறவள்! அவள் கையால் தேநீர் குடிக்கிற நிகழ்வும் என் சமீபத்திய கனவுகளில் அடிக்கடி நிகழ்கிறது...


வெகுவிரைவில் அவளை சந்திக்க வேண்டும் என்றிருக்கிறேன், அவள் என்னிடம் கேட்டிருப்பது தான் இந்தியா போய் பார்க்க வேண்டும் என்பது; நானும் சொல்லி இருக்கிறேன் நான் ஊருக்கு வருகையில் அழைத்துப்போகிறேன் என்று. 2009 ஏப்பரல் மாதம் அநேகமாய் அது நிகழக்கூடும்...

அவளையும் ஊரையும் பார்ப்பதற்காகவாவது ஊருக்கு போயாக வேண்டும் அதற்கான விருப்பங்களும் சூழ்நிலைகளும் இல்லாமல் போனாலும்...


சரி..! சரி..! சொல்ல வந்த விசயத்தை மறந்து அவளைப்பற்றி சிலாகிப்பதே வேலையாகி விடுகிறது எனக்கு! அவள் சார்ந்து என்ன விடயம் பேச ஆரம்பித்தாலும்.


1951-12-24 இல் பிறந்த அவளுக்கு இன்று பிந்தநாள், நான் கொண்டாடுகிற நாள், இந்த முறை அவள் பிறந்த நாளுக்கு உங்களையும் அழைத்திருக்கிறேன் சரியா?(இந்த அழைபை ஏற்றுக்கொள்வீர்கள்தானே ஏனெனில் இனி இன்னும் சில இப்படியான அழைப்புகள் வரக்கூடும்...)

மிக மெல்லிய மனதுக்காரியான நல்லவள் ஒருத்திக்கு நான் வாழ்த்து சொல்கிற தருணத்தில் நீங்களும் வாழ்த்த வேண்டாமா...



பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா...


இந்த பிறந்த நாளிலும்...
நான்தான் உன்னிடம் கேட்கிறேன்
இன்னும் நிறையப் பிறந்தநாட்களை
நீ என்னருகில்
இருந்து கொண்டாட வேண்டும்
நான் கேட்கும் வரை
நீ பிறந்தநாள் கொண்டாட வேண்டும்...

வரம் தருவது
உனக்கொன்றும் புதிதல்லவே
இந்த வரத்தையும் எனக்கு
தந்து விடு!


//
அம்மாவின் பிறந்த நாளுக்கு பதிவெழுத வேண்டும் என்பதை விட அவளுக்கான் என் வாழ்த்துக்களை என் மனதார சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே நிறைய இருந்தது என்னவெணன்று எழுதி பதிவு போடுவது என்று தெரியாமல்தான் இணையத்துக்கு வந்தேன்...(இந்த நாட்களில் இணையம் கிடைப்பதும் பெரும் கஷ்டமாய் இருக்கிறது இப்பொழுதுதான் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது)அலுவலக வேலையின் குறுக்கிடல்களுக்கு மத்தியில் சட்டென்று தோன்றிய உணர்வுகளில் இருந்து இவ்வளைவையும்தான் கோர்வையாக்க முடிந்திருக்கிறது.

//
திரும்பவும் உன் சந்தோசத்திற்கும் நிறைவிற்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் அம்மா தெய்வங்கள் நீ தொழுகிற தெய்வங்கள் எப்பொழுதும் உன் கூட இருக்கும்...

//
என் குடும்பத்தார்,நண்பர்கள், நீங்கள் எல்லோர் சார்பாகவும் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவதிலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதிலும் புதியதொரு சந்தோசம் கிடைத்திருக்கிறது.


24-12-2008
07.07pm
KSA.

Monday, September 29, 2008

ஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவும்...

இந்த பூமிக்கு நான் வந்த நாளை கொண்டாடுகிற இந்த நாளில் சில குறிப்புகளை சொல்லிப்போகிற மனோநிலையும் இல்லாமல் இருக்கிறது! இருந்தும் எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற நினைவின் சொற்களை குறிப்புகளாக எழுதியே பழக்கப்பட்டு விட்ட எனக்கு (அநேகம் காற்றில்தான் எழுதியிருக்கிறேன்) இன்றைக்கும் எழுதுவதற்கான மனோநிலை வாய்க்காமல் இருந்தாலும் இணையம் அரிதாகக்கிடைக்கிற இந்த நேரத்தில் கட்டாயமாய் சிலதை எழுதி விட வேண்டும் என்கிற கடமையில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், எப்பொழுதும் முன்னேற்பாடுகள் செய்வது என் இயல்பாய் இருந்ததில்லை...உனக்கான கடிதங்களையும் நான் அப்படியே எழுதி இருக்கிறேன்...!


*
என் அம்மாவின் பிறந்த நாளை
எனக்கு ஞாபகப்படுத்திய உனக்கு
என் பிறந்நாள் மறந்து போயிற்று...!

*
தவம் தடைப்பட்டுப் போனாலும்
தேவதைகள் தோற்பதில்லையே
நீ தேவதைதானே...!


*
உயிர் முழுக்க வலி
உன் பிரிவறித்த தோழி வாழ்த்தனுப்பியிருந்தாள்
இந்த பிறந்தநாளுக்கு...!


*
என்ன தரவேண்டும் உனக்கு
இந்த பிறந்தநாளுக்கு
எதை விரும்பினாலும் கேள்
உன் பரியங்களையும் நினைவுகளையும் தவிர...!


*
மூடிவைத்திருக்கிற உன் தொலைபேசியை
நெருங்க முடியாமல் இருக்கலாம் எனக்கு
உன்னை மூடி வைக்கிற முயற்சியின்..
தோல்வியை நீ தாங்க மாட்டாய் தமிழ்
அதற்காகவேனும்
உன் பிரியங்களின் சாயல்களில்
ஒரு வாழ்த்தை அனுப்பிவிடு...!


*இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!


*
எனிந்த மௌனம்
உன் நினைவுள் அழுகிற சத்தம்
உன்னை தூங்கவிடாது தமிழ்
ஒரு வாழ்த்தை அனுப்பிடு!
மற்றொரு பிறந்த நாளைக்குள் நிகழலாம்
சில அழைப்புகளும் பதில்களும்...!


*
உனக்கென்றுதானே பிறந்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு
வாழ்ந்துவிடுகிறேன்...!


பின் குறிப்பு:

1)இது என்னுடைய ஐம்பதாவது பதிவு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சில நிகழ்வுகள் நிகழாமையில் புலம்பலை கோர்வையாக்குகிற அளவுக்கு நிதானம் இல்லாமல் இருக்கிறது...அதனால் குறிப்புகளாக மட்டும்...

2)ஒரு புகைப்படம் மற்றும் ஒரு பாடலோடு பதிவாகி இருக்க வேண்டியது நேரமும் கணினியும் செய்கிற சதியில் முடியாமல் போயிற்று


3)சந்தோசத்துக்காக...

A LOT OF
BIRTHDAY WISHES
WITH LOVE & AFFECTION
ONLY & JUST FOR YOU...

on
29.09.2005

Friday, September 19, 2008

காதல் தோல்வியில் நயன்தாரா...!!!! (ஒரு திருமண வாழ்த்து)



ஒரு காதல் கைகூடுமென காத்திருந்த நயன்தாராவுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்திருக்கிறது அந்த கல்யாணம்.இருந்தாலும் தான் விரும்பியவரும் தன்னைக்குறித்து கவிதைகள் எழுதிய அந்த காதல் மனதுக்குமாக அவருடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய காதலை தியாகம் செய்திருக்கிறது நயன்தாராவின் காதல் மனது ...

என்ன இருந்தாலும் எவ்வளவுதான் அதனை மறைக்க முயன்றாலும் காதலின் தோல்வியென்பது அவ்வளவு சேலாக மறக்கக்கூடியதா என்ன அவரது சோகங்களை பகிர்ந்து கொள்ளாமல் அவரால்...(அந்த முகத்தை பார்க்கவே முடியல அந்த பிஞ்சு முகத்துல அப்படியொரு சோகம்)

அவர் கவிதைகளில் மனதை பறிகொடுத்த நயன்தாராவை காதல் பக்குவப்படுத்தியிருந்தது போலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார்...

ஆனாலும் விசும்பல்களுக்கிடையே அவர் கடைசியில் சொன்னது...

எது எப்படியென்றாலும் பரவாயில்லை அவர் கவிதை எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பது...

என்ன (மங்களூர்)சிவாண்ணே கவிதைகள் எழுதுவிங்க தானே...;)

மறுபடியும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்....

பதிவுலகம் சார்பாகவும் அனைத்துலக தமிழ் மக்கள் சார்பாகவும் சிவராமன் மற்றும் பூங்கொடி புதுமணத்தம்பதிகளை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

நன்றி...!


டிஸ்கி 1:ஒரு வாழ்த்துப்பதிவுன்னா அது சாதாரணமாத்தான் இருக்கணுமா இப்படியும் இருக்கலாம்ல!

டிஸ்கி 2: என்னடா சோகம்னு சொல்லிட்டு சிரிச்ச முகத்துல இருக்கிற படத்தை போட்டிருக்கேன்னு பாக்கறிங்களா இதுதான் அவருக்கு பிடிச்ச போட்டோன்னு நயன்தாரா சொல்லிச்சு...

Sunday, June 15, 2008

தந்தையர் தின வாழ்த்துக்கள்...

அப்பா...

பொதுவாக அப்பாக்களைப்பற்றி சொல்லக்கூடிய அளவுக்கு கூட நான் என்னுடைய அப்பாவைப்பபற்றி சொல்ல முடியாத நிலைதான் எனக்கிருக்கிறது என்பது என்னவோ கசப்பான உண்மையாகிவிட்டது.
ம்ம்ம்... வேறென்ன சொல்ல நான் பிறந்து ஒரு வருடத்துக்குள் வேலை நிமித்தம் வெளிநாடு போய் விட்ட அப்பா எனக்கு பத்து வயதாகி இருக்கும் பொழுது நாடு திரும்பினார் உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாரிசவாதம் ஏற்பட்டு முற்று முழுதாக என் அப்பாவைப்பற்றிய எனக்குத்தெரிந்த தோற்றத்துக்கும் நான் உருவகித்திருந்த கற்பனை வடிவுக்கும் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தோடு!


அங்கிருந்து ஆரம்பமாகியது எனக்கும் அப்பாவுக்குமான இடைவெளியின் தூரம். விபரம் தெரிந்து பேசத்தொடங்குகிற நாட்களில் விடுமுறையில் மட்டும் வந்து போன அப்பாவோடு என்னால் விடுமுறையின் கொண்டாட்டங்களை மட்டுமே காணமுடிந்திருந்தது....

இப்படி இருக்க பத்து வயதில் நானாக சில விடயங்களை பேசுவதற்கும் செயற்படுவதற்கும் சிந்தனைகள் மாறும் நேரத்தில் வந்திறங்கிய அப்பாவோடு பேசுவதே முடியாத காரியமாக இருந்தது பேச முடியாத, நடக்க முடியாத, மந்தமான நிதானமுள்ள நிலையில்தான் அப்பா வந்திறங்கினார் ஒரு பின்னிரவில்...அதற்கு பிறகு அப்பாவுக்கான தொடர் வைத்திய சிகிச்சைகளும் அப்பாவின் இயலாமையும் என்னை அவரிடத்தில் சேர்க்காமலே இருந்தது எனக்கும் அவருக்குமான தருணங்களை குறைத்துக்கொண்டே இருந்தது.

என் வயதின் நிமித்தம்,சின்னவன் என்கிற செல்லமும் அம்மாவிடம் நிறையவே இருந்தது அத்தோடு முன்பு நான் சொன்னது போல பிறந்ததிலிருந்து எனக்கு நல்ல நட்பாகவே அம்மா இருந்ததால் அவரோடு மட்டுமே என்பொழுதுகள் போயிற்று...

அந்த வயதில் நாம் அன்றாட வாழ்க்கைக்கு பாடு படுகிறோம் என்பதையோ அல்லது அப்பா செயலிழந்து வந்திருக்கிறார் என்பதையோ என்னை பாதிக்க கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ எனக்கும் அது பெரிதாக தெரியவில்லை அப்பாவோடும் நெருக்கம் இருக்கவில்லை...




அப்பொழுதில் புதிய பாடசாலை மாற்றங்கள் புதிய நண்பர்கள், புதிய போட்டியாளர்கள், புதிய மாலை நேர வகுப்புகள், புதிய வேகம் என என் நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தது,அத்தோடு நாங்கள் கொஞ்சம் பெரிய குடும்பம் என்பதாலும் சில வசதிகள் கருதியும் எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த வீட்டையும் வாடகைக்கு எடுத்து பாவித்துக்கொண்டிருந்தோம்; நான் அந்த வீட்டில்தான் இருந்தேன் சாப்பாடு, மற்றும் சில தேவைகளுக்காவும் மட்டுமே எங்கள் வீட்டுக்கு போய் வருவேன். அதுவும் நான் அப்பாவோடு அதிகம் நெருங்காமல் இருப்பதற்கு ஒரு காரணமாகலாமோ தெரியாது ஆனால் சின்ன வயதிலிருந்தே அவரோடு அதிகம் பரிச்சயம் இல்லாதததும் சிறு வயதில் அவருடைய கண்டிப்புகளும் (எனக்கல்ல அக்காக்களுக்கு எல்லோருக்கும் பயம் ஒருத்தரை கூப்பிட்டால் எல்லோரும் வந்து வரிசையாக நிப்போம் ஆனால் எனக்கென்னவோ பயம் என்பதை விட கோபம் தான் இருந்தது என நினைக்கிறேன் அதற்கு நான் ஒரே ஒரு ஆம்பிளைப்பிள்ளை என்கிற ஒரு சலுகையும் கடைக்குட்டி என்கிற செல்லமும் காரணமாயிருக்கலாம்...) இயல்பாகவே எனக்கிருந்த இலகுவான தன்மையும் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத குணமும் (ஆனால் என்னவோ தெரியவில்லை நான் சில விடயங்களில் பலவீனமானவனாகவே இருக்கிறேன் இன்னமும்) அந்த நாட்களின் கடினத்தை உணர்ந்திருந்தும் அவை எனக்குள் பதியவில்லை அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே. வாழ்ககையின் வலிகள் வயதின் தன்மையில் காணாமல் போயிற்று.அதைப்போலவே அந்த நேரத்தில் அப்பாவை பற்றிய, அவரின் நாளாந்தம் பற்றிய நினைவுகள் என்னிடம் இல்லாமலே போயிற்று எனலாம்...
அப்படி நகர்ந்து விட்ட நாட்களில் சட சட வென்று வருடங்கள் ஓடி விட்டிருந்தது, பதின்ம வயதுகளின் புது வேகத்தோடு நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது இதற்கிடையில் அப்பா வந்த ஒரு வருடத்திலேயே தொடர்சிகிச்சை மூலம் தன்னுடைய காரியங்களை தானாக நிறைவேற்றுவதற்கு தயாராகியிருந்தார் அது வரையும் அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார்.
வாழ்க்கை கொஞ்சம் கஷ்டங்களில் இருந்து தெளியத்தொடங்கி எங்கள் வீட்டின் நாட்கள் சீராக அசையத்தொடங்கி இருந்தது. இதற்கு முந்தைய நாட்களின் வலிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு தேவையில்லை என்பதனால் தவிர்த்திருக்கிறேன்,அப்படியே நகர்கின்ற நாட்களோடு என்னுடைய நாட்களும் நகர்திருந்தது அப்பாவுக்கும் எனக்குமான தருணங்கள் இல்லாமலே;
ஒரே வீட்டில் இருந்தாலும் அவருக்கும் எனக்குமான பேச்சு வார்த்தை என்பது வழிப்போக்கன் ஒருவனை நேரம் கேட்பது போலத்தான் இருந்திருக்கிறதென நினைக்கிறேன்.
இருந்தாலும் ஏதோ ஒரு புரிதல் - மரியாதை அவரிடத்தில் எனக்கிருந்தது என்பது; எனக்கும் வீட்டுக்காரருக்குமான பிரச்சனையொன்றின் பொழுதில் தெரிந்தது அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அது எனக்கு தோன்றியிரக்கிறது அதன் பிறகுதான் நான் வீட்டுக்கு பிரச்சனைக்கு உரியவனாகிப்போனேனே! வாழ்க்கை திசைகெட்டிருந்தது பதினமங்களின் இறுதியில் அப்பொழுதும் அப்பாவோடான எனக்குரிய நேரமும் நெருக்கமும் இல்லாமலே இருந்தது...நாட்கள் போய்க்கொண்டிருக்க எனக்கே என்னை வெறுத்துப்போக தொடங்கியிருந்த நாட்களில் ஒருவாறு தட்டுத்தடுமாறி ஒரு தேவதையின் சாபத்தோடு வேலை செய்ய ஆரம்பித்திருந்தேன்...

அதன் பிறகு விடுமுறைக்கு ஊருக்கு போகும் நாட்களில் அப்பாவோடு கொஞ்சம் நெருக்மானதாகத்தான் நினைக்கிறேன். அந்த நாட்களில் நான் அப்பாவோடு பேச ஆரம்பித்திருந்தேன் அல்லது அப்பா என்னோடு கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தார்... அப்பாவைப்பற்றி அம்மா மற்றும சிலர் சொல்லி பல விடயங்கள் தெரிந்திருந்தாலும் அப்பாவைப்பற்றியம் அவருடைய கடந்தகாலம் பற்றியும் அவரிடமே நிறையப்பேச வேண்டும் என்ற நினைத்திருந்தேன், அனால் இன்றுவரை அது நிகழவில்லை, அதற்கான சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை...


அப்பாவோடு உட்கார்ந்து பேசமுடியும் என்கிற பக்குவம் எனக்கு வந்திருக்கையில் அப்பாவை விட்டு நிறைய தூரத்திற்கு வந்து விட்டேன்...அறுபத்தொரு வருடங்கள் வாழ்ந்து விட்ட அவருக்கு என்னுடைய இந்த இருபத்தாறு வருடங்களில் எத்தனை முறை பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பேன் என நினைக்கையில் வெட்கப்படுகிறேன் இதுவரையும் மொத்தமாக எத்தனை வார்த்தைகள் பேசியிருப்பேன் என்பதை எண்ணி விட முடியும் என நினைக்கையில் குற்றவுணர்ச்சி தண்டனை இல்லாமல் தண்டிக்கிறது...இப்பொழுதும் அவரோடு பேச முடியாத சூழ்நிலைதான் என்கிருக்கிறது மறுபடியும் அப்பா தன்னுடைய காரியங்களை கவனிக்க முடியாதவராகி சில மாதங்களாகிறது...திருத்தமாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாத நிலமையில் இருக்கிறார் என்பதும் நான் செய்த தவறுகளுக்கான எனக்குரிய தண்டனை என்றே நினைக்கிறேன்.ஏதோ ஒரு ஏக்கம் எனக்கு நிரந்தரமாகவே இருக்கப்போவதைப்போல தவிப்பொன்று இருந்து கொண்டே இருக்கிறது என்னிடம்.


அப்பா...!
இனியொரு ஜென்மம் என்பதில்
எனக்கில்லை நம்பிக்கை
உங்களுக்கிருந்தால்...
நீங்கள் எனக்கு மகனாக
பிறந்து விடுங்கள் இல்லையேல்;
நான் இன்னும் கொஞ்சம்
வாழவேண்டும் உங்களோடு...


அவருக்கு முதல் தந்தையர் தின வாழ்த்துச்சொல்லுகிற இந்த நாளில் உலகத்தின் அப்பாக்கள் எல்லோருக்கும் என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்...

Sunday, May 11, 2008

அன்னையர் தின வாழ்த்துக்கள்...

அம்மா...

அம்மாவைப்பற்றி யாரும் சொல்லாததை நான் ஒன்றும் புதிதாக சொல்லப்போவதில்லை...இருந்தாலும் அம்மா என்று கதைக்க ஆரம்பித்தாலே நான் ஏதோ தனிமைப்பட்டுவிட்டதாகிய ஒரு உணர்வுதான் எனக்கு தோன்றுகிறது. நாளாந்தம் பார்த்த, வருடக்கணக்கில் பழகிய நண்பர்களிடம் இருந்து சட்டென்று பிரிந்து விட்ட நாளொன்றின் இரவைப்போலாகிவிடுகிறது; அம்மாவின் நினைவுகள் மீள்கின்ற இரவுகள்...

அம்மா என்கிற ஒரு புள்ளியில் இருந்து கொண்டு தேவைப்படும் தருணங்களிலெல்லாம் ஒரு தோழியைப்போல் பங்கெடுத்துக்கொள்ளும் அந்த வெள்ளை முகத்தை இரண்டு வருடங்களாக பிரிந்திருக்கிறேன் இலங்கையின் பொருளாதார, அரசியல், சூழ்நிலைகளின் நிமித்தம்.

அம்மா என்கிற தானத்தை அதற்குரிய நேரங்களில் உணர்த்தினாலும் ஒரு நெருக்கமான நட்பைப்போல நாளாந்தம் நடக்கிற எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும அம்மாவை பெயர் சொல்லி அழைத்து பழகியிருக்கிறேன் பலம், பலவீனம், சோகம், துக்கம், சந்தோசம், நண்பர்கள், நண்பிகள், படிப்பு, விளையாட்டு , வேலை, பிடித்தது, பிடிக்காத, சினிமா, பாடல், அரசியல், காதல், கல்யாணம் என்று எல்லாம் பேசியிருக்கிறேன் அம்மாவோடு...

நான்தான் காரணமாக இருந்தாலும் எந்த ஒரு சந்தர்பபத்திலும் என்னை மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காத அன்பே என்னை ஓரளவேனும் கட்டுக்குள் வைத்திருந்ததெனலாம் (நாங்கள்ளாம் அடங்கவே மாட்டம்ல முன்ன) . நான் செய்கிற ஏடாகூடமான காரியங்களைக்கூட "என்ன வருத்துறக்கெண்டு வந்திருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டாலும் "நீ ஏன்டா உதுகளுக்க போறாய் பேசாம இரு எண்ணடால் கேட்கமாட்டான்" என்று சொன்னாலும் அடுத்த கணமே "தேத்தண்ணி வேணுமோ" (நான் ஓரு நாளைக்கு குறைந்தத பத்து தேநீர் குடிப்பேன் அதுவும் Black Tea) என்று என் மனமறிந்து கேட்கிற அந்த அன்பும் நெருக்கமும் அம்மாவிடம் நான் செல்லப்பிள்ளையாக இருந்ததுக்கு சான்று. அப்படியெல்லாம் சொல்வதே "நீ அவனுக்கு செல்லம் குடுக்கிறதுலதான் அவன் இப்பிடி ஊர் சுத்திக்கொண்டு திரியிறான்" என்று அம்மாவை குற்றம் சொல்லுகிற காரணம்தான் ....

நான் வேலை செய்தது வெளி ஊரில்தான் இருந்தாலும் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் வந்து ஊரில் நிற்கிற அத்தனை நாட்களும் வீட்டிலேயே இருப்பதில்லை அப்பபொழுதும் அதே பழைய குணம்தான் வீட்டுக்கு வரும்பொழுது எல்லோரும் பாதி தூக்கத்திலிருப்பார்கள் வந்து அம்மாவை கூப்பிடுகிற சத்தத்தில பக்கத்து வீட்டடுக்கார ஆக்களே எழும்பியிருவாங்க ... இதுல கடைசி அக்கா வேற (எனக்கு நேர் முதல் அக்கா) எழும்பி நீ திருந்த மாட்டாய் இந்த கொடுமையிலும் நீ வீட்டுக்கு வராமலே இருக்கலாம் என்று ஒரு குட்டி பிரசங்கம் நடத்தி விட்டு அதற்காகத்தான் நித்திரையை குழப்பி எழும்பி வந்தது போல மறுபடியும் போய் படுத்தக்கொள்வாள்...

இரவு நேரம் கழிந்து வீட்டுக்கு வந்தாலும் படுக்கைக்கு போவதற்கு முன்னால் ஒரு தேநீர் குடிப்பது வழக்கம் எவ்வளவுதான் திட்டினாலும் கடைசியாக Flask இல Tea இருக்கு குடி என்று சொல்லி நான் போட்டு குடிக்கும் வரை விழித்திருந்து சாப்பிடுகிறேனா என்று பாத்து தேத்தண்ணியும் போட்டுத்தந்து அதன் பிறகுதான் படுக்கப்போகும் அந்த அன்பு தோழியின் பாசத்தை என்னவென்று சொல்ல...

வாழ்க்கையை வாழ்வதற்கு அதன் போக்கில் அதனை ஜெயிப்பதற்கு அம்மாவை பார்த்துதான் பழகிக்கொண்டேன் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி ஆனால் தனக்கு கிடைக்க வேண்டியதை அடைந்து கொண்டு மிக சந்தோசமாக வாழ்கிற ஒரு மனம் அந்த மனுஷிக்கு எப்படி வாய்த்ததோ எனக்கு தெரியவில்லை...

பிறந்ததிலிருந்து பழகிய மிக நெருங்கிய நட்பொன்றை பிரிந்து இரண்டு வருடமாக இருக்கிறேன் பார்க்கலாம்; இலங்கை எப்பொழுது இலங்கை ஆகிறதோ அப்பொழுது சொந்தங்களோடு சந்தோசமாக வாழ்வோம்.

கடைசியாக ஒன்று எனக்கு கிடைத்த முதல் நல்ல நட்பு பரமேஸ்வரிதான் அதாங்க அம்மாவோட பெயர்... மனுஷிக்கு தெரியும் நான் இப்பிடி ஏதாவது எழுதுவன் எண்டு ஏனெண்டா நான் முதல் எழுதின காதல் கவிதையை முதல்ல வாசிச்சதே அம்மாதானே...(வேற யார் வாசிக்கப்பேறாங்க எண்டு சொல்லுறது கேட்குது) இப்பவும் அம்மாவுக்கு தெரியாத விடயம் என்று என்னிடம் எதுவுமே இல்லை...

"அம்மா என்னணை எப்படி இருக்கிறாய் உன்னை பார்க்க வேண்டும்போல இருக்கணை... ஆனால் நீதான் இப்போதைக்கு வர வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டாயே..."

( குறை நினைக்காதிங்க மக்கள் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கிறதால அம்மாவுடன் நேரம் செலவழிக்க முடியலை அதனால அன்னையர் தினத்துக்கு ஏதாவது பதிவு போடலாம்னு பாத்தா எனக்கு எதுவுமே வரமாட்டேங்குது அதனால என்னோட நினைவுகள்ள இருந்து கொஞ்சூண்டு எடுத்து உங்களுக்கு தந்திருக்கேன்...)



நான் என்ன சொல்லி
உன்னை வாழ்த்த அம்மா...
என் ஆசை தீர உன்னை அம்மா
என்றழைப்பதைத் தவிர...
தன் பிள்ளை நிலைபெற்று விட்டான்
என்கிற திருப்பதியை
உனக்கு கொடுப்பதை தவிர...



எனக்கு கிடைத்த
நெருக்கமான முதல் நட்பு நீ
உனக்காக ஒருதினம்தான்
கொண்டாடுகிறது இந்த உலகம்
என் நாட்கள் எல்லாமே
கொண்டாடுகிறது உன்னை...



நான் என் பிள்ளைகளின் மனதில்
எப்படியிருப்பேனோ தெரியாது- ஆனால்
நான் உன்னைப்போல் ஒரு
அன்னையாக இருக்கவே முயற்சிக்கிறேன்
நீ என்னை இன்னமும்
குழந்தையாகத்தானே பாவிக்கிறாய்அம்மா...




நான் உன்னை வாழ்த்துவதா
அது என்னால் முடியுமா
என் வாழ்நாள் போதாது அதற்கு
விரும்பினால் உன்னை
ஒரு வரம் கேட்கிறேன்
மறுபடியும் நான் உனக்கே
மகனாக வேண்டும்...
உலகத்தின் அம்மாக்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...

Saturday, March 8, 2008

மகளிர்தின வாழ்த்துக்கள்...

*
பூமிக்கு
தேவதை என்கிற
அழகான வார்த்தையை தந்தது
பெண்மை...

*
பூமி
இன்னமும் பூக்கள்
தருவதற்கு காரணம்
பெண்மை...

*
ஒரு புள்ளியில்
பிரபஞ்சமாய்
பிரபஞ்சம்
ஒரு புள்ளியாய்
பெண்மை...


பெண்மையைப்பற்றி நான் என்ன சொல்வது, பெண்மையை பேசுகிற அளவுக்கு நான் இன்னமும் அதனை முழுதாய் உணரவில்லை என்பதோடு அது மிகப்பரந்த அர்த்தமும் சக்தியும் கொண்டது என்பதால் வாழ்த்துக்கள் மட்டுமே என்னால் தர முடியும்

உலகத்தில் உள்ள அனைத்து பெண்மைக்கும் என்னுடைய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்...