Wednesday, October 26, 2011

தீபாவளி - தொடர்பற்ற சில குறிப்புகள்.

பெரும்பாலும் மக்கி, மறந்து கொண்டிருக்கிற மூளையிலிருந்து அவசரமான பொழுதொன்றில் தட்டச்சு செய்யப்பட்ட சீரற்ற இந்த குறிப்புகளை வாசிக்கப்போகும் உங்களுக்கு நன்றி.

______________________________________

எல்லா தீபாவளிக்கும் எழுத நினைத்த விடுபட்டுப் போனவைகள்தான் அதிகம். இந்த முறையும் அது போலவே,இருந்தும் இந்த சின்னக்குறிப்பைச்சரி எழுத ஒண்ண காலம் கனிந்திருக்கிறது.


காற்சட்டை காலங்களில் இருந்து நினைவிருக்கிற தீபாவளியை இனி நினைவின் அடுக்குகளில் இருந்து தேடி எழுதுவதற்குள் அடுத்த தீபாவளி வந்தாலும் வந்துவிடலாம் ஆக இதை எழுதிக்கிக்கொண்டிருக்கும் பொழுது என்னென்ன எழுத வருகிறதோ அதையெல்லாம் தீபாவளிக்கான குறிப்பாக எழுதிவிடலாம்.


#
சின்ன வயதிலிருந்தே நான் ஆசைப்பட்டது போல பண்டிகைகள் எனக்கு அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை என்றுதான் இப்பொழுது எனக்கு நினைவிருக்கிறது. ஆனாலும் பண்டிகைகளுக்கு முந்திய சில நாட்களில் இருந்தே வருகிற இந்த கிளர்வான நாட்களும் பரபரப்பும் அனுபவிக்க அலாதியானவை. பண்டிகைகளிலும் இந்த தயார்படுத்தலில் இருக்கிற மனங்களையும் ,ஊரையும், மக்களையும் உள்வாங்குதல் அலாதியானது அது ஒவ்வொரு வயதிற்கும் ஒவ்வொரு விசயங்களை கவனிக்கிறதாக இருக்கும் அப்படி தயாராகத் தொடங்குகிற பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று.


#
புது உடுப்பு, பலகாரம்-விதம்விதமான சாப்பாடு, சொந்தக்காரர்கள், வெடி, பெடியள், விளையாட்டு:கிரிக்கெட் மச், தொலைக்காட்சி விசேட நிகழ்ச்சிகள், புதிய படங்கள், பொம்பிளைப்பிள்ளையளை பாக்க்வெண்டே ஊர் சுத்துறது, காதல், போதை,சீன் - என்று அந்தந்த வயதுக்கு அந்தந்த விசயங்களில் பண்டிகைகள் கடந்து போய்விடும். பெரும்பாலும் பதின்மத்தின் இறுதிகளில் இருந்து இருபதகளின் தொடக்கம் வரை படம் - பெடியள் - காதல் -கொண்டாட்டம் என்று கழிகிற பண்டிகைகள் இருபதுகளின் மீதங்களில் கொஞ்சம் பரபரப்பானதுபோன்ற ஒரு மாதிரியான பகல் பொழுதுகளையம் அல்லது சலிப்பையும் போதை மிகுந்த முன்னிரவுப் பொழுதுகளையும் கொண்டு வரத்தொடங்கியது.


#
காதல் மிகுந்த தீபாவளியை நானும் கடந்து வந்திருக்கலாம் எனிலும் இப்பொழுது எழுத அப்படியொன்றும் நினைவுக்கு வரவில்லை. நினைவிலிருப்பதெல்லாம் நான் அவளை சந்திக்க் முடியாத அளவுக்கு போதையில் இருந்த சித்திரைப்பொங்கல்தான். பெரும்பாலும் கடுகடுப்பாகவே இருக்கும் பண்டிகைக்கு அடுத்த நாட்கள்.ஆனால் அந்த வருடப்பிறப்புக்கு அடுத்தநாள் அற்பதமானதாக இருந்தது. குடிக்கவேண்டாம் என்று கோபித்து,கெஞ்சி,அழுது, திட்டி என்று அன்பை வெவ்வேறு வடிவங்களில் நிகழ்த்திக்கொண்டிருந்தாள்; ஏதோவொரு கணத்தில் உடைந்து அழத்தொடங்கிய என்னை மார்புக்குள் ஏந்திக்கொண்டாள். நான் அவளை சமாளிக்க வேண்டியது மாறி அவள் என்னை சமாதானம் பண்ணிக்கொண்டிருந்தாள். மார்புக்குள் முகம் புதைப்பது இல்லாது போதலைப்போல அதுவொரு அதி உன்னதம்.

#
கமலா மாமி வீட்டை போறது எண்டுறது ஒரு கடமை மாதிரியே இருக்கும் சின்ன வயதில. உண்மைல நான் ஒரு நாளும் இவவை மாமி என்று கூப்பிட்ட நினைவே எனக்கில்லை அனாலும் மற்றையவர்களிடம் கதைக்கிற பொழுது கமலா-மாமி என்தான் கதைத்திருக்கிறேன். இவவுக்கு நாலைஞ்சு பொம்பிளைப்பிள்ளையள் இருந்தாலும் அவையள் எல்லாம் போன தலை முறை ஆக்கள் மாதிரிதான் எனக்கு தெரியும், அதோடு என்னுடைய வீடிருந்த இடமும் அவையளின்ரை வீடிருந்த இடமும் வேறை வேறை சூழல் எண்டுறதால எனக்கு அவையளோடை சரியா முகம் பார்க்கக்கூட நெருக்கம் இருந்ததில்லை முந்திய நாட்களில்(நெருக்கம் இருந்ததில்லை அல்லது அவர்கள் அந்த இடைவெளியை எப்பொழுதும் வைத்திருக்க் விரும்பினார்கள் என்றும் சொல்லலாம் )பின்னாளில் அதற்கான தெளிவும் இயல்பும் வந்ததன் பின்னர் அவர்களை காணவே முடியாத தூரத்திற்கு போயிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் எல்லோரும் கதைக்கவே முடியாத தூரத்தில் இருக்கிறார்கள். கமலா மாமிக்கு ஒரு மகன் இருந்தார் என்றுதான் எனக்கு தெரியும் அவரை கண்டதாக எனக்கு நினைவே இல்லாத நாட்களின் முன்பே அவர் கனடாவுக்குள்ளை குடியேறியிருந்தார் நான் கிட்டத்தட்ட இருபத்தைந்து பிறகு சவுதியிலிருந்து இதை தட்டச்சிக்கொண்டிருக்கிறேன்.


#
என்னுடைய பால்யம் சீனவெடிகளை கண்டிராத காலமாய்தான் இருந்தது. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் இவைகளுக்கு மூடிய கதவுகளை கொண்டிருந்தது. இதை படிக்கிற சிலருக்கு "வால்க்கட்டையில" வெடி அடிச்ச நினைவிருக்கலாம். இதை நான் மினக்கெட்டு இருந்து செய்திருக்கிறன். "படீர்" என பயங்கரமான சத்தத்தில வெடிக்கிற அளவுக்கு நெருப்புக்குச்சு மருந்து அடைஞ்சு வெடி அடிச்சிருக்கிறம். வால்கட்டை வெடிச்சு சன்னம் கூட பறந்திருக்கு. உண்மைல இந்த தொழில் நுட்பம் எல்லாம் சின்ன வயதிலேயே எங்களிடம் வந்திருக்கிற அளவுக்கு நாங்கள் இவைகளோடு பழக்கப்பட்டிருந்தோம்.


#
கிரிக்கெட் விளையாட தொடங்கியதன் பிறகு அனெகமான பண்டிகை நாட்கள் உள்ளுர் அணிகளின் பலப்பரீடசையாகத்தான் இருக்கும். சின்ன வயதில் ஒரு மச்சும் விடாமல் விளையாடி இருக்கிறேன். பிறகு எல்லா மச்சுக்கும் போயிருந்தாலும் முன்பைப்போல இருந்த ஆர்வம் இல்லாது போயிற்று. ஆரம்பகால கிரிக்கெட் எல்லோருமாக விளையாடுவதாய் இருந்தது. பிறகு அது தனித்தனியான ஆட்கள் விளையாடுவதாக மாறிற்று.




#
சண்டிவியில (அப்பல்லாம் சண்டிவி எண்டுதான் சொல்லுவம் இப்பதான் கனக்க சானல்)நிகழ்ச்சிகள் பாத்த்திருக்கிறோம். பண்டிகைகளுக்கு ஒரே இரவில் நாலு படம் பார்த்த காலம் போய், படம் பார்க்கிற பொறுமை இல்லாமல் போக பின்னர் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறோம். பிறகு விளம்பரங்கள் விசரைக்கிளப்புற தொலைக்காட்சியை பார்ப்பதே இல்லை என்றாகிற்று பண்டிகை நாட்களில் இங்கே வந்து ஒரு கட்டத்தில் தமிழ் சானல்கள் எதையும் பார்க்கவே முடியாத அளவில் இருந்திருக்கிறேன் இப்பொழுது zee aflam அந்த அரேபிய பெண்ணுக்காக.




Wiam Dhamani.

#
ராணுவ கனரக வாகனமொன்றோடு மோதிவிடாது தப்பித்த விபத்தோடு முடிந்து போன தீபாவளி அநியாயம். எங்கடை ஊரின் பொய்யான வழக்கங்களிலும்,மனிதர்களிலும் வறட்டுச் சரடுகளிலும் அன்றைக்கு பலமான கோபம் மற்றொரு முறையாக வந்திருந்ததென நினைக்கிறேன் குடித்திருக்க வேண்டிய இரவு அது.


#
குடிக்க பழகிய பின்னர் கொஞ்சம் சலிப்பானதாயும் பரபரப்பை போல ஒன்றையும் கொண்ட பகல் பொழுதுகளையும் போதைமிகுந்த முன்னிரவுகளையுமே பண்டிகைகள் தந்திருக்கின்றன.


#
வல்லிபுரக்கோவிலில் நராகாசுரன் பார்த்தநினைவிருக்கிறது, வடக்கு வாசலில் வைத்து 108மண்டி போடுறது ஒரு சாகச நிகழ்வைப்போல இருக்கும். சின்ன வயதில் ஆச்சரியத்தோடு அதை எண்ணிக் கொண்டிருப்பேன். கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை, தீபாவளியே ஒரு அதிகாரவார்க்கத்தின் பண்டிகை என்கிற எல்லா கதைகளையும் மீறி நாங்கள் இன்றைககும் சூரன் பார்க்கப்போக தயாராயிருக்கிறோம்; என்ன இருந்தாலும் மாயவனுக்கு ரசிகைகள் அதிகம் என்பதே அதற்கான முக்கிய காரணமாயிருக்கலாம். இன்னுமொன்று லேசான மழைக்கான முகாந்திரத்தோடு இருக்கிற வானமும் ஆலயத்தின் சூழலும், காதல் நிறைந்த பெண்களும், பழக்கப்படுத்தப்பட்ட பக்கதி மனங்களும் அந்த பெரிய வெளிவீதியில் உலாவருகிற கடவுளும் ஒரு விதமான அனுபவம்தான்.


#


எனக்கு கூடப்பிறந்தவள் ஒருத்திக்கு இன்றைக்கு பிறந்த நாள். தீபாவளிக்கு முதல்நாளோ அடுத்த நாளோ அல்லத தீபாவளியன்றோ வந்துவிடுகிற இவளுடைய முன்னைய பிறந்த நாட்களை பற்றி இப்பொழுது சொல்லிக்கொள்ளும்படி எதுவும் எனக்கு நினைவில் வரவில்லை, இது இப்படி இருக்கக்கூடாது என்பதுதான் உண்மை, ஆனாலும் என்ன செய்ய பின்பொரு அவசரமற்ற பொழுதில் அதனை எழுத முயல்கிறேன்.

பகிடியா சொல்லுறாளா உண்மைக்குமே சொல்லுறாளா எண்டு தெரியாதமாதிரி அடவைஸ் வைக்கிறது இவளுடைய ஸ்டைல் உதாரணத்துக்கு "அதை ஏன் நீ யோசிக்கிற வீட்டைப்பற்றியெல்லாம் நீ யோசிக்காதை" எண்டுவாள்; இதை விட வேறை எப்படி திட்ட ஏலும் இது அவள் திட்டுற மாதிரியே இருக்காது சாதாரணமாக கதைக்கிறமாதிரியே மருந்தைக்குடுக்கிறது. இவளுடைய கல்யாணத்துக்கு பத்து லச்சம் வேணுமெண்டு ஒரு SMS மட்டும்தான் அனுப்பி இருந்தாள் ஆனால் ஒரு கிழமை நித்திரை இல்லாமல் பண்ணின குறுந்தகவல் அது, உண்மையில் அது கடுந்தகவல்! வெளிப்படையா பாத்தால் அவள் என்னிடம் காசு வாங்கினது மாதிரிதான் இருக்கும் அனால் இன்றைக்கும் என்னுடைய காப்புறுதி தொகை கட்டிக்கொண்டிருக்கிறது இவள்தான், நான் உழைக்கிற காசு எனக்கே காணாதெண்டு சொல்லி அடிக்கடி வாங்கி கட்டுறது நான் சொந்த செலவுல வைக்கிற சூனியம்.

இன்னும் சில நாட்களில் தாயாகவிருக்கிற இவளுக்கு இது; கல்யாணமாகி வருகிற முதல் தீபாவளியும், பிறந்தநாளும் நல்லா இரு ரீச்சர்; காலம் உனக்கு நீ விரும்புகிற வாழ்வைக் கொடுக்கட்டும், உன் கடவுள்கள் எப்பொழுதும் உன்னோடு இருக்கட்டும்.



#
இன்னுமொரு தீபாவளியும் இருக்கிறது அது பண்டிகை நாட்களின் புடைவைக்கடை அனுபவங்கள். அது ஒரு தனிப்பதிவாக எழுதலாம் என்பதில் இப்பொழுது தவிர்க்கப்படுகிறது. அல்லது அவரவர் கற்பனைக்கு விடப்படுகிறது. பண்டிகை நாட்களுக்கு முந்திய பெருந்தெருக்களும் சந்தைகளும் எப்பொழுதும் சுவாரஸ்யமானவை. "எங்க இருந்துதான் இவ்வளவு சனமும் வருதோ" என்பதைப்போல யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ள அலைமோதுகிற சனங்களை பண்டிகை நாட்களுக்கு முதல் நாள் பார்க்கலாம், இந்தக்கூட்டத்தை பார்க்கவென்றே பஸ் பிடிச்சு யாழ்ப்பாணம் போன கதையெல்லாம் இருக்கு.

புடைவைக்கடையில் வேலை செய்கிற அனுபவம் ஒரு விதமானது. வேண்டாம் என்று போய்விடுகிற வியாபாரம்தான் என்றாலும் சில நேரங்களில் தேவதைகளுக்கு ஆடை பரிமாறுகிற சந்தர்ப்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கள்ளச்சிரிப்போடு கடைக்குள் நுழைவது எங்கடை ஊர் பெண்களின் உத்தி; நினைச்ச விலைக்குத்தான் வாங்கிக்கொண்டு போவாளவை. புடைவைக்கடையில் வேலை செய்த சொற்ப நாட்களில் சில முகங்களை கடந்திருக்கிறேன் நினைவில் இருந்து மறைந்து விடுவதற்குள் அந்த முகங்களை சந்திக்கும் ஆசையும் இருக்கிறது சே..! என்ன வாழ்வு இது நான் எப்பொழுதும் எனக்குப் பொருந்தாதவைகளையே தெரிவு செய்திருக்கிறேன். எனக்கானவற்றோடு செய்கிற சமரசங்கள் மனதை லேசாக இருக்கவிடுவதில்லை அவை அவநம்பிக்கைகளை தருவது, வெறுப்பை அதிகம் பண்ணுவதாய் இருக்கிறது இந்த ஒவ்வாத நாட்கள்.

#
எழுதஎழுத எழுதமுடியாத நிலைதான் எனக்கு இப்படியான நினைவுப்பகிர்வுகளில் இருக்கிற சங்கடம். ஒரு கதை சொல்லிக்கான லாவகம் என்னிடம் இல்லாமல் இருக்கலாம் அல்லது மிகச்சிதறுண்ட துண்டுகளாகவே எனக்கு இந்த நினைவுகள் இருக்கிறது.

எல்லாம் போக கடல் கடந்துவிட்ட சில வருடங்களில் இது ஐந்தாவது தீபாவளியென நினைக்கிறேன், சித்திரைக்கு வந்தவனை தீபாவளிக்குத்தான் முதன் முதலில் அழைத்திருந்தாள் கறுப்பி! மிகநீளமான அந்த ஆறுமாதங்களையும் கடந்ததில் நான் இப்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்; அவள் வாசிக்கவே போவதில்லை என்றபோதிலும்.


எல்லாம் போக இன்று காலையில் அழைத்து-

என்ன செய்யுற உங்க; நானொருத்தி இங்க இருக்கிறன், அப்பர் இருக்கிறார் எண்டு கேட்டிருந்தாள் அம்மா. என் வாழ்தலின் மிக முக்கிய தருணங்களுள் ஒன்றாக இந்தக்கேள்வி இருக்கலாம். சில குரல்கள் எப்பொழுதும் எங்களை உயிர்ப்பிக்கிறது, அது என்ன வார்த்தைகளோடு வருவதாயிருந்தாலும்.


#

தொழில் நிமித்தம் வீட்டைப்பிரிந்திருக்கிறதே பெரிய துன்பமாயிருக்குமெனில் சொந்த வீடுகளிலுமிருந்து துரத்தப்பட்ட என் சனத்தின் பண்டிகைகள் எப்படி இருந்திருக்கும் துரத்தப்படுதலும், திணித்தலும், அடையாளங்களை சிதைத்தலும் மிக மோசமான அரசியல் வன் முறைகள். சீனவெடி, என்ன வெடி! நாங்கள் பெரும் ஆட்லெறிகளோடெல்லாம் தீபாவளி கொண்டாடியிருக்கிறோம். என்று சொல்வதற்கு எனக்கு இளையவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் எங்களுடைய நாட்டில். மக்களிடம் அரசியலை கொண்டுசெல்ல விரும்புபவர்கள் முதலில் மக்களை பேச அனுமதியுங்கள்.மக்களின்அரசியல் மக்களாலேயே பேசப்படவேண்டும்.


#
எல்லோருக்கும் தீபாவளி சீக்கிரமே வரட்டும்.


_________________________________________________

26ம் திகதி பகிர்ந்திருக்க வேண்டியது சில சிக்கல்களால் இன்றைக்கு.


Picture - Google.

Monday, October 3, 2011

ஊதாநிற பூவைச்சூடியவளின் விலகுதலின் மீது.

சாத்தியமற்ற ஒரு புள்ளியில் இருந்து
நாம் உரையாடிக்கொண்டிருநதோம் என்
எதுவுமற்றவைகளின் மீது நின்றபடி நீ
எல்லாவற்றையும் வசப்படுத்திகொண்டிருந்தாய்
அன்பை நிராகரிக்கிற என் அவநம்பிக்கைளின் மீது
உன் கரிசனங்களை நிரப்பிக்கொண்டிருந்தாய்

எப்பொழுதும் அருகிருப்பதாய்
உன் அன்பிருந்தது
கூட வருகிற துணையாக உன்குரல்
கேட்டுக் கொண்டேயிருந்தது
யாருமற்ற நாட்களில் எல்லோரும்
என்னுடனிருக்கிறதாய் நம்பிக்கொண்டிருந்தேன்

ஏனென்றறியாத கசகசப்பான பின்னிரவொன்றில்
நானறியாத உன தன்முனைப்புகளின் மீதொரு
காரணத்தை வைத்துக்கொண்டு
என்னை விலகத்தொடங்குகிறாய் நீ

விலகுதலிலும் துன்பம்
விலகுதலுக்கான காரணங்கள் இல்லாமலோ தெரியாமலோ இருப்பது.

பெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறது காலம்
பனி விழுகிற உன் நகரத்தின் தெருக்களில்
அலைகிறதெனது வாழ்வு.

_____________________________________________

உண்மையில் நான் உனக்கு என்ன துன்பம் செய்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை,தெரிந்தே நான் எதையும் செய்திருக்க மாட்டேன் என்றே இன்னமும் நான் நம்புகிறேன்.என்னிடமிருந்த சிக்கல்களை நான் உன்மீது பிரயோகித்திருக்கக்கூடும் அதை நீ இவ்வளவு தூரத்துக்கு நினைவில் வைத்திருக்கத்தேவையில்லை. எனக்கே நினைவில் இல்லாத அதை நீ நினைவில் வைத்துக்கொண்டு எதற்கு இவ்வளவு துன்பத்தை நமக்குள் வைத்திருக்கிறாய். உன்னைக்குறித்த என் தேவதை பிம்பம் ஒரு நாளும் உடையப் போவதில்லை; நீ எப்பொழுதும் தேவதையாகத்தான் இருக்கிறாய்.

நான் எப்பொழுதும் அன்பை 'செய்யத்தெரியாதவனாகவே' இருந்திருக்கிறேன்.ஏன் எனக்கதை புரிந்து கொள்ளவும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன்.எல்லா துன்பங்களுக்கும் நானே காரணமாயிருக்கிறேன், என் எல்லா நன்மைகளுக்கும் நீ வாசல்களாயிருக்கிறாய். நீ என்னை கண்டுகொள்ளாதிருப்பதும் விலகுவதும் என்னை துன்புறுத்துவதாய் இருக்கிறது.மனதளவில் பெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறேன்.

உன்னுடைய அன்பின் சாத்தியங்கள் என்னை மீளவும் கொண்டு வரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது உன்னால் முடியும். எனக்கும் உனக்குமான நெருக்கத்தின் இடைவெளி உண்மையெனில் என் மீதான கோபம் உனக்கு இன்னமும் மீதமிருக்கிறதெனில் நாம் பேசலாம். உன்னுடைய அழைப்புக்காக காத்திருக்கிறது எனது நாட்கள்.

____________________________________________

இந்த உரையாடலில் வருகிற இவளுக்கு இன்றைக்கு பிறந்தநாள்.நான் குடிக்கிறது இவளுக்கு பிரச்சனையாயிருப்பதனால் இன்றைக்கு முதல் குடிப்பதில்லை என்று எழுதி வைக்கிறேன்.


Happy Birthday ____________ .