Saturday, July 30, 2011

ஸ்ரீதேவி,சில பாடல்கள்...

சமீப நாட்களில் நான் கேட்ட பாடல்களில் பெரும்பாலும் ஸ்ரீதேவியின் பாடல்கள் இருப்பதாய் நினைக்கிறேன். கடந்த இரவில் கேட்டுக்கொண்டிருந்த இரண்டு பாடல்களில் இது ஒன்று. பாரதியாரை துணைக்கு வைத்துக்கொண்டு கண்ணதாசன் எழுதிய பாடல்.





//
மோகனப்புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப்போலிருந்தேன்
ஊமையைப்போலிருந்தேன்...
//

நாணம் மறைக்கிற அந்த காதலின் இன்பத்தை அனுபவிச்சு சொல்லுறதுக்கு இதைவிட வேறென்ன மொழி வேணும்.

ஸ்ரீதேவி அந்த வேடத்தில் பொருந்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.தமிழில்தான் ஸ்ரீதேவியின் திறமை ஓரளவுக்கேனும் பயன்படுத்தப்பட்டிருப்பதாய் நான் நினைக்கிறேன் கமல் அடியெடுத்து பாடிக்கொடுத்ததும் அவர் காட்டுகிற அந்த பாவம் இப்பபொழுதிருக்கிற நடிகைகளில் எத்தனைபேருக்கு வரக்கூடும்.

காட்சிப்படுத்தலில் சில சறுக்கல்கள் இருந்தாலும் ஸ்ரீதேவியைப்போலவொரு அழகியொருத்தியை அல்லது மனதுக்கு நெருக்கமான பெண்மையொன்றை பாடச்சொல்லி கேட்டுக்கொண்டிருப்பதில் சலிப்பேதும் இருக்காதென்பது இந்த தனிமையின் நாட்கள் சொல்லுகிற உண்மை.

___________________________________________________



//
பூலோகம் மறைய மறைய
தெய்விகம் தெரிய தெரிய
வைபோகம்தான்.
//

துள்ளுகிற இளமையும், நளினமும் நடனமும், அந்த முகமுமாய் ஸ்ரீதேவி என்கிற அழகி. அழகில் தழையப்பொருந்துகிற சேலையில் 'என்ன வடிவடா அது'. இந்தப்பாடலை பார்க்கிற நேரங்களில் எல்லாம் பாழும் இந்த நாட்களின் மந்தம் எரிச்சலாயிருக்கும். பாடலில் நான் வியக்கிற இன்னுமொன்று எப்படி இருக்கினறன இந்த சேலைகள் அவை பெண்ணுடலுக்கே உரியனவை போல.





_______________________________________________

//
குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு
ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்//

"ஆகாயகங்கை பூந்தேன் மலர் சூடி"பாடலில் இந்த வரிகள் இரண்டாம் முறை வரும்பொழுது இருக்கிற அழகை நெருக்கமான பெண்மைகளிடம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் சாதாரணமாய் நிகழ்கிறதாய் இருந்தாலும் காதலிகள் "சாகடிக்கிறடி" என்று கிறங்க வைக்கிற அநியாயத்துக்கு அழகாய் இருக்கிற சாயல்களில் இதுவுமொன்று.

தொடக்கத்திலேயே நம்மை பாடலுக்குள் கொண்டு போய்விடுகிறது ஜானகியின் குரல்,என்ன குரல் அது! மலேசியா வாசுதேவனினன் குரல் இந்தப்பாடலுக்கு பொருந்திவிடுகிறது இளையராஜாவுக்கு குரலை இசையாகவும் இசையை குரலாகவும் செய்யத்தெரிகிறது,சமயங்களில் மௌனத்தையும்.

_____________________________________________________


எனக்கு பிடித்தமான பாடல்கள் என்று இவற்றை எப்பொழுதும் சொல்ல முடியாவிட்டாலும் இவை அனேகம் பேருக்கு பிடிக்கிற பாடல்கள்தான். பாடல்களை @facebook பகிரலாம் என்று நான் நினைக்கும்பொழுதெல்லாம் யாரோ ஒருவர் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள், பார்க்கலாம் இனி அவ்வப்போது அந்தந்த நேரத்தில் கேட்டுக்கொண்டிருக்கிற பாடல்களை பகிராலம் என்றிருக்கிறேன்.

இங்கே சொல்ல வேண்டிய இன்னுமொன்று எல்லா பாடல்களும் எப்பொழுதும் ஒரே மனோநிலையை கொடுப்பதில்லை அதே போல் எல்லா நேரங்களிலும் பிடித்தமான பாடல்களைக்கூட கேட்க முடிவதில்லை.

ஒரு பாடல் தனியே இசையாகவோ,காட்சியாகவோ,குரலாகவோ இருப்பதேயில்லை அது யாரையாவது எதையாவது நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது.உனக்கும் எனக்கும் பிடித்தாமான பாடல் அறையில் நிரம்பிக்கொண்டிருக்கிறது, வழிகிற உன் நினைவுகளை மதுக்கோப்பைகளில் நிரப்பிக்கொண்டிருக்கிறேன். என்றென்றைக்குமானதாய் இருந்து விடுகின்றன சில பாடல்கள் எப்பொழுதும் தீராததாய் இருந்து விடுகின்றன நினைவுகள்

நீயொரு
இசையாகவும்
நினைவாகவும்
எப்பொழுதுமிருக்கிறாய்.

___________________________________________________



இந்த பதிவின் சாயலுக்கு வெளியே ஒரு சின்ன குறிப்பு:

ஸ்ரீதேவிக்கு பதின்மூன்று வயதாகும்பொழுது மூன்றுமுடிச்சு படம் வெளிவந்திருந்தது. அப்ப கமலுக்கு வயது 22 ரஜனிக்கு வயது 26 ரஜனியின் அப்பாவா நடிச்ச கல்கத்தா விஸ்வநாதனுக்கு வயது47. 13 வயதிலேயே ரஜனியை போடா கண்ணா போ என்று கடுப்பேற்றுகிற ஒரு பெரிய கதாநாயகிநாக ஸ்ரீதேவி இருந்தும் பிற்காலங்களில் ரஜனியை விழுந்து விழுந்து காதலிக்கிறவராகவே வர முடிந்திருக்கிறது ரஜனியும் வயதாக ஆக நடிப்பதையெல்லாம் விட்டு வசனம் பேசவும் வேறெதுவும் செய்யவும் பழகிக்கொண்டார்.


எனக்குத்தெரிந்து வெளிநாட்டுப்படங்களில் கலக்குகிற அனேகம் நடிகைகள் முப்பதுகளின் தொடக்கதில் இருக்கிறவர்கள்தான் ஆனால் இந்திய சினிமா குறிப்பாக தென்னிந்தியா சினிமா மிகமோசமான கதாநாயக வழிபாடுகளைக் கொண்டது என்பதில் நடிகைகளின் நிலை கவலைக்கிடமானதாகவே இருக்கிறது.

கமலும் ஸ்ரீதேவியும் கிட்டத்தட்ட 27 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள், இப்பொழுது சினிமா அப்படி இருப்பதில்லை. ஒரு நடிகை மூன்று படங்களில் சேர்ந்து நடிப்பது என்ன தொடர்ந்து மூன்று வருடம் இருப்பதே பெரிய விசயமாயிருக்கிறது. புதிய நடிகைகளின் வரவும் போட்டியும் அதிகரித்திருக்கிற அதேநேரத்தில் புதிய நடிகைகள் அல்லது பெண்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதும் அலசப்பட வேண்டிய விசயங்களில் ஒன்று.


மொத்தமாக சினிமா ஓரளவுக்கு இந்த விசயத்தில் மாறிக்கொண்டிருந்தாலும் தென்னிந்திய சினிமா பெண்களை பெரும்பாலும் கவர்ச்சிமுதலீடாகவும் சினிமாவை பாலியல் வணிகமாகவுமே இன்னமும் வைத்திருப்பதாய் நம்புகிறேன்.

நடிப்பதை விட்டு உலகப்படங்கள் பார்க்கப்பழகிக்கொண்ட உலகநாயகர் மாதிரி ஆக்களின் மூலம் த்ரிஷாவுக்கு செருப்பா நடிக்கவும் தயாயிருக்கிற மனங்கள்தானே தமிழ் மனங்கள். தமிழ்நாட்டையோ தமிழ்மனங்களையோ திருத்தவே முடியாது. இரத்தங்கொடுத்து படம் பாக்கிற பேயன்கள் இருக்கும் வரை பல்லிளிக்கிற தொலைக்காட்சிகள் இருக்கும் வரை இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.


ஒரு முக்கிய குறிப்பு அல்லது தடம்மாற்றுதல் :.

வரும் August13ம் திகதி சிவகாசியில் பிறந்து மும்பையில் வாழ்ந்து வருகிற மாலினி ஐயராகிய மயிலு என்கிற ஸ்ரீதேவிக்கு பிறந்த நாள் என்பதை அறிகிறேன். "நாடிருக்கிற கேட்டில இப்ப இதான் முக்கியம்" என்று நினைக்கிறவர்கள் என்னை திட்டவும் மற்றவர்கள் விரும்பினால் வாழ்த்தவும் தடையொன்றும் இல்லை.




"Kubsuratki khabi umar nai jathe"

Saturday, July 23, 2011

சாத்தான்.

அளவில்லாத வரைக்கும் குடிக்கலாம்..
ஆடைகள் அவிழ்வது தெரியாமல் உறங்கலாம்
கடந்து போன பெண்ணொருத்தியை
கனவுகளில் கொண்டு வரலாம்.
இந்த இரவுகளை சபிக்கலாம்
சுய உச்சங்களுக்கான காரணங்களை நியாயப்படுத்தலாம்
என்ன இருந்தாலும் என்னை காறி உமிழ்கிற தூரத்தில்
எந்த கடவுள்களும் இல்லை என்பது ஆசுவாசமாயிருக்கிறது.