Wednesday, September 9, 2009

கதையாட வந்த கதை...





"வயதுபோய்கொணடிருக்கு இதுவரையும் இந்த உலகத்துக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்ற ஏக்கத்தில் ஏதாவது எனக்கு தெரிந்ததை எழுதலாமெண்டு (ஒருத்தரும் படிக்காட்டாலும் பரவாயில்லை) வந்திருக்கிறன் அன்பு நெஞ்சங்களே…உள்ள வரலாம்தானே…?"

எப்படி ஆரம்பித்திருக்கிறேன் என்று மறுபடி வாசித்துப்பார்க்கையில் சத்தமாய் சிரிக்கத்தான் தோன்றுகிறது.எழுத இருந்த கதையை தயக்கமில்லாமல் எழுத வைத்த இந்த தொடர் பதிவின் தொடக்க நண்பருக்கும்,பனையூரான் மற்றும் அருண்மொழி என்கிற சொந்தங்களின் அழைப்புக்கும் நன்றி.தாமதத்துக்கான காரணம் கடைசியில் இருக்கிறது நண்பர்களே.


அடிப்படையில் நானொரு வேற்றுக்கிரக வாசி..
(உன்னை பதிவெழுத வந்த கதைதான் சொல்லச்சொல்லி இருக்கிறோம்)
தளம்பல் நிலையிலிருக்கிற மனது,"ஒரு..விதமான" மொழி, தனித்தும் கூடியும் இருக்க விரும்புகிற குணம்,திறந்து வைத்த வாழ்க்கை,என்று எனக்கே புதிதாய் தெரிகிற ஒருவன்!அப்படி இருந்த இவனுக்குத்தான் வேற்றுக்கிரகத்தின் இளவரசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன். எப்பொழுதும் கற்பனைகளில்தான் வாழ்வு சுகமானதாய் இருக்கிறது. திட்டமிட்டு வைத்திருக்கிற எதிர்காலம் நினைத்துப்பார்க்கிற கடந்தகாலம் என சந்தோசமாயிருக்கிற மனது. நிகழ்காலத்தில் சந்தோசமாயிருப்பது என்னவோ வாசிக்கிற, காதலிக்கிற, எழுதுகிற அல்லது போதையிலிருக்கிற பொழுதுகளில்தான்.முதல் சொன்ன மூன்றுமே இந்த போதையைப்போல் இருப்பதற்கு நான் பொறுப்பல்ல.

பொதுவாகவே மொழியை அனுபவிக்கத்தொடங்கிய நாளில் இருந்து நாட்குறிப்பு,அது, இது, கவிதை என்கிறபெயரில் ஏதாவது என்று கையில கிடைக்கிற கடதாசிகளில் நரி வெருட்டினது மாதிரி இடைக்கிடை எழுதுவது எனக்கொரு வியாதியாயிருந்தது. நாட்குறிப்பை தொடர்ச்சியாய் எழுதாதற்காக என்னை இதுவரையும் எத்தனை தடைவைகள் திட்டியிருப்பேன் என்று எனக்கு நினைவில் இல்லை.அப்படி நாளொன்றுக்கு இருபத்தினாலு மணி நேரங்கள் போதமால் இருந்த வாழ்க்கை முறையில் இருந்து வெளியேறி; ஒரே விதமான நாட்களில் சலிக்க ஆரம்பித்திருந்ததும் என்னுடைய வாழ்க்கை முறைக்கு சற்றும் தொடர்பில்லாததுமான ஒரு வாழ்க்கைக்குள் அகப்பட்டுக்கொண்ட என்னை விடுவிக்க கிடைத்த விசயம் இணையம்.

வெளியேற்ற முடியாத படிக்கு நிறைந்து கிடக்கிற சொற்களை வலுக்கட்டாயமாக யாரிடமாவது திணிக்கிற முயற்சியில் எழுத ஆரம்பித்ததுதான் என் நினவின் வெளியில் நான்(URL)என்கிற என்னுடைய உலகம் பதிவுக்கு அப்படித்தான் பெயர் வைத்திருந்தேன். சொல்லித்தீராத காதல்,அவள்கள்,அனுபவித்த உலகம், பெருங்கருவிருளெனச் சூழ்ந்தும் பொழியாது விலகுகிற மேகங்களென எழுதப்படாத சொற்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வகை திண்ம நிலைக்கென்னை அழைத்துப்போக...

இனி வேண்டாம் இந்த வில்லங்கம் என தேடிக்கொண்ட ஒரு வெளியேற்றம்தான் இணையமும் எழுதுதலும்.நானொரு எழுதுபவன் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.நானொரு சொற்கள் தின்னுகிற மிருகம் அது முதலாவது. சின்ன வயதிலிருந்தே வாசிக்கிற பழக்கம் இருந்திருந்தாலும் எவற்றை வாசிப்பென்பது இணையம் எனக்கு கொடுத்த முக்கியமான விசயங்களில் ஒன்று.

இதே போல என்னை ஆச்சரியப்படுத்துகிற அல்லது எனக்கு கிடைத்த முக்கியமான விசயம் என்னுடைய அலைவரிசையில் குவிந்து கிடக்கிற இணையத்து நண்பர்கள் அப்படி நெருக்கமான எழுத்துகளை எழுதுபவர்கள் அனேகம் ஆண்களாய் போனார்கள்.முகம் தெரியாத நட்பு மனதுக்கு நெருக்கமாகி விடுகிற இந்த சாத்தியப்பாடுகளை இணையம் கொடுத்திருக்கிறது.ஒரு சில நண்பர்களை நேரில் பார்த்தும் இருக்கிறேன்.இங்கே அடைபட்டுக்கிடந்த வாழ்வை எழுத்தின் மூலகம் திறந்து கொடுத்திருக்கிறது இணையம் . இலக்கியம் வாசிப்பென கதையாடுவதற்கு அருகாமையில் ஜமாலன், முபாரக், ரௌத்ரன் என்று நல்ல வட்டம் ஒன்று வாய்த்திருக்கிறது.

சவுதி எனக்கு கொடுத்த விசயம் வாசிப்பும் சொற்கள் தின்னுகிற எனக்கான வெளியும்தான்.

ஆனால் பல எழுத்தையும் புத்தகங்களையும் பார்க்கிற பொழுதுகளில் எரிச்சல் உண்டாகுவதற்கும் எதையோ இழந்தது போல இருப்பதற்கும் எனக்குள் இருக்கிற சொற்கள் காரணமாக இருக்கலாம் என்பது எப்பொழுதும் என்னை உறுத்திக்கொண்டிருந்த விசயம்.இந்த வாக்கியத்தை தனிப்பதிவாக எழுத முடியும்.நானும் எழுத வந்ததுக்கு இதுவும் ஒரு காரணமாகலாம்.

காதல் என்கிற சொல்லைத்தான் இணையத்தில் முதன் முதலாக தமிழில் தேடினேன் அப்பொழுது அறியக்கிடைத்ததுதான் சந்திரவதானாவின் பதிவு,அங்கிருந்து ஆரம்பித்ததுதான் வலைப்பதிவுகள் வாசிப்பு.மதிகந்தசாமியின் வலைப்பதிவுகள் பட்டியலில் இருந்து தொடங்கியது பயணம், நிறைய பதிவுகளை யாரென்றே தெரியாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.பதிவுக்கு வரமுன்பே பதிவரசியல் பதிவுகள் எல்லாம் படித்திருந்தேன்.இந்த காதல் சார்ந்ததொரு மிமுதி அறிமுகத்தை மற்றொரு பதிவில் எழுதுவேன்.


இரவுப்பணியில் இருந்த ஒரு நாள் வழக்கம்போல வாசித்துக்கொண்டிருந்த பதிவுகளில் ஒன்று நளாயினி தாமரைச்செல்வனுடையது. "சரி யாழ்ப்பாணத்து ஆள்தானே கதைச்சுப்பாக்கலாம்" என்கிற ஒரு உந்துதலில் அழைத்து அறிமுகப்படுத்திக்கொண்டேன்.சிலமாதங்களில் என் சம்பளம் முழுவதையுமே பேசித்தீர்த்திருந்த என் தொலைபேசிச்சிக்கலை அவரிடம் சொன்னேன். அவரே அழைத்து சரி சொல்லுங்கோ என்ற அறிமுகத்தினூடு பகிர்ந்து கொண்டவை நிறைய,பதிவர்கள் என்கிற வரிசையில் எனக்கு முதல் அறிமுகமானது இவதான்.

நல்ல தோழியான அவரிடமிருந்து இப்படித்தான் பதிவது என்கிற தொழில் நுட்பத்தை தெரிந்து கொண்டேன். உங்களுக்கு பாமினியில் எழுதத்தெரியுமா என்று கேட்டவர்; அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த சுரதாவின் பொங்கு தமிழ் எழுதியை அறிமுகப்படுத்தினார். மங்கலாக நினைவிலிருந்த பாமினி விசைப்பலகையை நினைவிலெடுத்துக்கொண்டு ஆரம்பித்த அற்றிலிருந்து இன்று வரையும் அதே சுரதாவின் பொங்கு தமிழ் எழுதியேதான் நான் பயன் படுத்திக்கொண்டிருப்பது.

சுரதாவின் பாமனியிலிருந்து யுனிகோட் முறையில் எனக்கிருக்கிற பிரச்சனை நேரச்சிக்கலும் இந்த கமாவை தட்டச்சினால் 'இ'னாவாக வருவதும்தான் மற்றும்படி பெரிதாக வேறெந்த சிக்கலும் தெரியவில்லை ஒரு வேளை இது பழக்கப்படதால் இருக்கலாம் ஆனால் NHM-எழுதி வசதியாயிருக்கிறது என்றுதான் பலரது கருத்தும் இருக்கிறது ஒரே ஒரு முறை பயன் படுத்தி பார்த்திருக்கிறேன் மடிக்கணினி ஒன்றில்.சுரதா பிரச்சனையில்லாமல் இருக்கிறது.

பெரும்பாலும் அலுவலக கணினியிலேயே இணையம் பயன் படுத்துகிறேன் என்பதும் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எதையும் தரவிறக்கி சேமிக்க முடியாது என்கிற காரணத்தினாலும் இப்பொழுதும் வேறெந்த வழிக்கும் போகவில்லை.அது தவிர இந்த கணினி தொடர்பான தொழில் நுட்பம் எனக்கு அப்பாற்பட்ட விசயமாகவே எப்பொழுதுமிருக்கிறது அல்லது சலிப்பூட்டுவதாய் இருக்கிறது. கணினி என்கிற விசயத்தின் மீதிருந்த ஆச்சரியமும் விருப்பமும் அது கிடைக்காமல் போன நாளிலிருந்து அல்லது எனக்கு பிடித்தமான துறை ஒன்றிற்குள் நுழைந்ததிலிருந்து இல்லாமல் போயிற்று.



அருண் மொழி வர்மன்:
என்னைப்போலவே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எண்டு குதியன் குத்திக்கொண்டு திரிஞ்ச அதே செட்தான். தீவிர எழுதுத்துகளில் முன்னேறிக்கொண்டிருக்கிற ஒருவர்.கனேடிய இலக்கியச்சூழலில் இருந்து புறப்பட்டிருக்கிற இன்னொரு இலக்கியப்புயல் இது பல கரைகளை கடக்கும் என்பது மட்டும் தெளிவாயிருக்கிறது. உண்மையில் கனடாவிலிருக்கிற இந்த இலக்கியவட்டத்துக்காகவே குறைந்தளவு காலமேனும் கனடாவில் வாழவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதோடு பதிவுலகம் சாராத சில பேருக்கு தகடும் குடுக்க இருக்கு.

பனையூரான்

ஒரே ஊர், வட்டமா இருந்து சோடா குடிச்ச அளவுக்கு நெருக்கம் இருக்கு. இவ்வளவும் போதும் எனக்கு அவருக்குமான தொடர்பைப்பற்றி சொல்ல. ஆள் ஒரு மண்டைக்காய் . பரந்த பார்வையோடு எழுத ஆரம்பித்திருக்கிற இவருடைய எழுத்துக்கள் இன்னும் தீவிரமாகலாம்.குறுக்கால ஆராய்கிறபழக்கம் இருக்கிற இவர் எழுதுகிற விசயங்கள் இன்னும் பல பரிமாணங்களை பெறக்கூடும்.



இனி நான் சண்டைக்கு வராத ஆட்களாய் பார்த்து மாட்டி விட வேண்டும்...

ரௌத்ரன் - தீவிரமான தேடல்களோடு இருக்கிற இவர் இப்பொழுது இதே ஊரில் பொழுது போகமால் இருக்கிறார்.

நளாயினி நல்ல தோழி இந்த உலகத்துக்குள் வருவதற்கு பாதை கொடுத்தவர்.இலகுவான மொழியில் எழுதிச்செல்கிற, பல நாட்களாக எழுதாமல் மறைந்திருக்கிற இவரை இந்த முறை எப்படியும் எழுத வைத்து விட வேண்டும்.


முரண்வெளி - இவருடைய வாசிப்பும் பதிவுகளும் அடர்த்தியானதொன்று அடிக்கடி பெயர் மாறி இடம்மாறி எழுதிக்கொண்டிருந்த இவர் இப்பொழுது facebook கில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்.



1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள் தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழில்நுட்பங்கள் சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்...


சொல்லாமல் விட்ட விசயங்கள் இருக்கிற, எண்ணிக்கை வரிசையில் நூறைத்தொட்டிருக்கிற இந்தப்பதிவு.

எனக்கான கூட்டை சுமந்திருக்கிற தும்பளைக்கு...

Monday, September 7, 2009

பயம்...!




சமநிலை இல்லாத உடம்பு
பெரும்பாரமெனவிருக்க விடிந்த பிறகே
உறங்கப்பழகியிருக்கிற இந்த நாட்களை
கெட்டுப்போன கண்களோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு

குறையாமல் இருக்கிற குளிருக்குத் தெரிவதில்லை
இன்னும் நான் இப்படியே இருக்க வேண்டிய
நாட்களின் எண்ணிக்கை மீதமிருப்பது,

என்னோடு ஒத்துழைக்க மறுக்கிற நாட்கள்
என்னை அவளுக்கு அறிமுகப்படுத்த
வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறது,

யாரையும் குறைசொல்ல முடியாதபடிக்கு இருக்கிறது
என்னை பரிசோதிக்கிற நிகழ்வில்
குற்றவுணர்வின் நியாயம்,

எல்லோரும் உறங்கிய பின்னிரவுகளில்
அந்தரங்கம் திறந்து கிடக்க
பயமுறுத்திக்கொண்டிருக்கிறது சுயம்!



picture: flickr

குறிப்புகள்:

\\
எதையோ எழுதத்தொடங்கிய சொற்கள் இப்படி முடிந்திருக்கிறது. எண்பத்தொரு வெள்ளைநிறத்தாள்களை கறுப்பு மற்றும் நீல நிறச் சொற்கள் கொண்டு நிரப்பியிருந்த அந்தக்கதையிலிருந்து சில சொற்களை மட்டும் எடுத்து கோர்திருக்கிறேன்.

\\
எழுதியவனும் இல்லாத முடிவும் இல்லாத இந்தக்கதைக்கு நான் வைத்திருக்கிற தலைப்பு- ஆயிரத்து இரு நூற்று இருபத்தேழு நாட்கள் திறக்கப்படாத ஜன்னல்.

\\
இந்தக்கதைக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.எனக்கு தெரிந்த வகையில் குளிர் என்பதொரு குறியீடாக இருக்கலாம்.