Monday, May 23, 2011

ஒரு பாடல் அல்லது மாறுதலுக்கான குறிப்பு.




தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்.



இதை நான் பாவப்பட்ட என்றுதான் எப்பொழுதும் பாடியிருக்கிறேன். கேட்ட காலம் முதல் பிடித்தமானதாய் இருக்கிற இந்த வரிகளுக்கு காரணமெல்லாம் தெரியாது,ஒரு வேளை நீயாக இருக்கலாம். நீயோ உன் வாசல்களை திறக்கவே மாட்டேன் என்றிருக்கிறாய்.

________________________________________________________________

முட்டம் மக்கள் எதை மறந்திருந்தாலும் கடலோரக்கவிதை படத்தை மறக்க மாட்டார்கள். முட்டம் மக்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் அந்த கடலை,அலைகளை, அழகை அறிமுகம் செய்தவர்,திரையில் நிரப்பியவர் பாராதிராஜா. நான் அறிந்த வரையில் கடலோரக்கவிதைகள் படம் முழுவதும் முட்டத்தில் எடுக்காவிட்டாலும் பெரும்பங்கு காட்சிகள் முட்டத்தில் எடுத்ததாக அறிகிறேன்.கடலோர கிராம வழக்குகளை பாரதிராஜா சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை,கடல் பூக்கள் படங்களும் முட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை கொண்டிருக்கின்றன.

_______________________________________________

வைரமுத்துவும் இளைராஜாவும் சேர்ந்து தந்த மயக்கங்களில் இதுவும் ஒன்று, இதுதான் கடைசியானது எனவும் அறிகிறேன்.

இந்த மாதிரிப்பாடல்களெல்லாம் இளையராஜா என்கிறவர்தான் தந்திருக்கிறார். தமிழிசை என்று மட்டுமே சொல்லி விட முடியாத- பொங்குகிற மனதை, பொத்திங்கிடந்த உணர்வை, காதலை, தன்னிலையின் மாற்றங்களை,தவிப்பை கோர்வையாக்கிவிடுகிற இந்த இசைக்கும், குரலுக்கும் நாம் வெறுமனே இளையராஜா தமிழ் மட்டும்தான் உலகத்தரம் புதிய இசைகள் என்று நமக்கு மீறிய வார்த்தைகளை சொல்வதில் எனக்கு உடன் பாடில்லை. இசையை அந்த மக்களின் கலாச்சாரத்தை பதிவிக்கிற, காலம் கடக்கிற ஒன்றாக இதைத்தான் சொல்ல முடிகிறது.அனேகம் பேர் சொல்வது இசைக்கு மொழியில்லை என்பது; சரிதான் ஆனால் நினைவுகள் இருக்கிறது இசை எப்பொழுதும் நினைவிலேயே கட்டி எழுப்பப்படுவதாக நான் நம்புகிறேன்.

என்னுடைய நினைவுகளை இந்த பாடல்கள் தருகிறது. நினைவை நகர்த்துகிற, நிகழை மறக்கடிக்கிற, நினைவை கிளர்த்துகிற இசை இப்படியான சில பாடல்களிலேயே இருக்கிறது

________________________________________________________


##
இப்பொழுது இந்த குறிப்பை எழுதுவதற்கும் சில நினைவுகளும் நீயும் காரணமாயிருக்கலாம்.

##
இதை எழுதிய நாளுக்கும் இன்றைக்கும் இடையில் ஒரு சில நாட்களே இருக்கலாம் ஆனால் இந்தக்கேள்வியை இன்னும் பலமாக கேட்கிற நிலையில்தான் நீ இருக்கிறாய்.

##

வெகு நாட்களுக்கு பிறகான எழுதக்கிடைக்கிற இந்த மனோநிலைக்கும் உனக்கும்.