Thursday, May 27, 2010

விலகிச்செல்லும் நாட்கள்...

ஆயத்தம் செய்திருக்கிற பிரயாணம் இன்னமும் புறப்பட முடியாமலேயே இருக்கிறது.என்னை எப்பொழுதும் பழிவாங்குகிற இந்த காலம் எனக்கு விருப்பமான அல்லது நான் நிகழ வேண்டும் என்று விரும்புகிற எதையும் அதன் வேகம் குறைவதற்கு முன்னர் நிகழத்தருவதில்லை.இது கடவுள்கள் மீதான கேள்விக்கான முதல் படியாய் இருக்கலாம்.


எனக்குதெரிந்த ஒருவரின் எட்டுவயது மகளுக்கு Brain Tumor சிகிச்சைக்காக பாகிஸ்தான் போயிருக்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும்,அல்லாஹ் விரும்பியே ஆகவேண்டும் அவள் இன்னும் நிறைய நாட்கள் வாழ்வதற்கு.


எந்த மதங்களிலும் எனக்கு நம்பிக்கையில்லை, வாழ்க்கை என்கிற பயணத்தை தவிர. இயற்கையைப்போல வேறெதுவும் இல்லை நீங்கள் கொண்டாடுவதற்கு. இயல்பாயிருத்தல் அல்லது அதிகபட்ச புரிதலோடு இயங்குதல் மகிப்பெரிய பிரார்த்தனையாய் இருக்க முடியும். என்பவை இப்போதைய நாட்களின் பேசு பொருட்களாய் இருக்கிறது என் பக்கதிலிருந்து. உண்மையைச் சொல்லுங்கள் உலகம் போதுமானதாய் இருக்கிறதா, இல்லையா! நமக்கு தேவையானதெல்லாம் கொஞ்சம் புரிதல் மட்டும்தான்.

#
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் - அதுவரையும்
ஒரு சிறிய விளம்பர இடைவேளை.

_______________________________________________________________________

தமிழ்-படங்களை இப்போதைக்கு பார்ப்பதில்லை என்பது என் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிற ஒரு விடயம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வருகிற இந்த நாட்களில் இப்படியான முடிவுகள் மிகுந்த பாதுகாப்பைத் தருவனவாயிருக்கிறது.கடும் இலக்கியங்களையும், படிமச் சினிமாக்களையும் தவிர்த்துக்கொண்டு எழுந்தமானமாக சில படங்கள் பாத்திருக்கிறேன் அவை பின்வருமாறு.

Hindi:

Rang De basanti
Rock on!
Mangal Pandey
Wake Up sid!
Luck By Chance
Oye Lucky! Lucky Oye!
London Dreams
Golmaal
Golmaal Returns
Karthik Calling Karthik
Striker.
Dil Bole Hadippa!
Honeymoon Travels Pvt Ltd.
Kabhi Alvida Na Kehna.
Paathshala.
Chance Pe Dance.
Singh Is King.


Telugu:
Oye!
Happy Days
Konjam Ishtam Konjam Kashtam.

இன்னும் படங்கள் இருக்கலாம் நினைவில் இருப்பவை இவ்வளவுதான்.
______________________________________________________________________




கொங்கனா சென் ( Konkan Sen Sharma)சமீபத்தில் அடிக்கடி நினைவுக்கு வருகிற தேவதைகளில் ஒருத்தி. அந்தநிறமும், லேசான மயக்கம் தருகிற தோற்றமும், பொறுமையான நடிப்பும் ரசனைக்குரியவையாய் இருக்கிறது. பிடித்துப்போவதற்கென தனியான காரணங்கள் இவையென சொல்லத் தெரியாவிட்டாலும் இந்த மாதிரி சாயல்களில் உள்ள பெண்களை எளிதில் தவிர்க்க முடிவதில்லை.


Farhan Aktar: ஹிந்தி சினிமாவில் பிடித்தமானவர்களுள் ஒருவராக சேர்ந்திருக்கிறார். இயக்குனர் தயாரிப்பாளர் என்பதிலும் நடிகராக இவரை அதிகம் பிடித்திருந்தாலும், இன்னும் செய்யலாம் என்று தோன்றுகிறது எனக்கு.


__________________________________________________________________________

எழுதுதல் என்பது என்ன? இதற்கு உந்துதலாய் இருப்பது என்ன? நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் என எப்படி வகைப்பட்டுப்போகிறார்கள்! என்றைக்கும் பிடித்தமான எழுத்தாக எது இருக்கக்கூடும்? இன்னொருவர் எழுதுவதன் மூலம் அடையாளம் பெறுகையில் அதை ஏன் நமக்கு பிடிக்கிறது அல்லது பிடிக்காமல் போகிறது. நாட்குறிப்புகளை புத்தகமாக போட முடியாதா, நாட்குறிப்புகளை பொதுவில் வைப்பது எத்துணை சாத்தியம். நாட்குறிப்பு எழுதுகிற எல்லோரும் அதனை அதற்காக எழுதுகிறார்கள், எழுதப்பட்ட நாட்குறிப்புகளை வாழும் காலத்திலேயே தம் துணைகளிடம் பகிர்ந்து கொண்டவர்கள் எத்தனை பேர் இருக்கக்கூடும். நாட்குறிப்பின் சொந்தக்காரன் மறைந்த பிறகு அந்த நாட்குறிப்புகள் என்னவாகின்றன.

உண்மை விருப்பத்துக்குரியதாயும் விருப்பமின்மைக்குரியதாகவும் எப்படி இருக்கிறது. அது விரைவில் சலித்துப்போவது ஏன். எப்பொழுதும் எதிர்பார்க்கிற உண்மைத்தன்மை எப்பொழுதும் பிடிக்காமல் போவதன் முரண் எது.

_______________________________________________________________

#
நாடுகடந்த தமிழீழ அரசு என்பது என்ன அதன் சாத்தியக்கூறுகள் எவ்வளவு தூரம் நிகழக்கூடியவை. யாருக்காக இந்த தீர்வுகள். வடக்கு நோக்கி பயணிக்கிற ஒவ்வொரு சிங்கள மனதும் எதை சிந்திக்கிறது, எத்தனை சதவிகிதம் மனங்கள் சமாதானம் என்பதன் அடிப்படையை உணர்ந்திருக்கிறது.

#
"2009 அஞ்சாம் மாதம் பத்தொம்பதாம் திகதி இல்லாத பெரும்பாலான தமிழர்கள் இல்லாத கடவுளை சபித்த நாள் என் கவலை எல்லாம் எதையுமறியாத அந்தக்குழந்தைகளையும் என் சனங்களையும் அவர்களுக்கு எதையும்செய்ய முடியாத என்னையும் பொருட்டே. சீக்கிரமே அவர்களுக்கான வாழ்வு திரும்பட்டும்."


#
கடந்த வாரம் பல நாட்களுக்கு பிறகு மற்றொரு முறையாக அகிலனின் காயத்திரி நீ போய்விட்ட பிறகு கதையை பிரதி செய்து வாசித்தேன் இப்பொழுதும் என் தலையணைக்கு இடதுபக்கத்தில்தான் இருக்கிறது எனக்கு மிக நெருக்கமான உணர்வைத்தருகிற எழுத்தை செய்பவர்களில் அகிலன் முதலிடங்களில் இருக்கிற ஒருவர் அகிலனின் மரணத்தின் வாசனையை புத்தகமாக கையில் வைத்து வாசித்துவிட்டுத்தான் பகிர வேண்டும் என்றிருந்தேன் மேலே சொன்னது போல காலம் இதனையும் செய்யவிடவில்லை. இன்னும் சொல்ல இருக்கிறது அகிலன்.

_______________________________________________________________



வாச்மேன் வடிவேலு படத்தில் வந்த "கன்னத்தில் கன்னம் வைத்து" பாட்டை பலர் மறந்திருக்கக்கூடும் இதையே தமிழில் இன்னொரு பாடலாகவும் கேட்கலாம் அதையே தெலுங்கிலும் பயன்படுத்தியிருப்பார்கள் பின்னர் ஹிந்தியிலும் கூட,ஹிந்தியில் மாதுரி நெருப்பு வைத்திருப்பார்.இந்த பாடல் பிடிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு மாற்றத்துக்கும் சில நினைவுகளுக்குமாக நாலு பாடலும் ஒரே இசைதான் இதில் தெலுங்கு வடிவம் சிரஞ்சீவி ஸ்ரீதேவி நடித்த படம் அந்தப்பாடலைத்தான் ரஜனி சிவாஜியில் பயன்படுத்தியிருப்பார்.


கன்னத்தில் கன்னம் வைத்து
சம்மதம் தந்துட்டேன் நம்பு
abba ne deeyani debba
dhak dhak karne laga


தமிழில் பாடலின் வடிவத்தை காணக்கிடைக்கவில்லை, தேடியதில் கிடைத்தது இதுதான்.




மாதுரி ம்ம்...
dil se dil mil gaya, mujhase kaisi ye haya -
tu hai meri dilaruba, kya lagti hai, va re va






இந்தப்பாடல்கள் குறித்த விரிவான பதிவை கானாபிரபா எழுதுவார்.


#
facebook, Twitter, gtalk என்று எதையெல்லாம் தடைசெய்ய முடியுமோ அதையெல்லாம் தடைசெய்திருக்கிறது கம்பனி அதுதான் இருக்கப்படாமல் இந்த அலம்பலை இங்கே எழுதியிருக்கிறேன். இதுவும் ஒருவித ஆசுவாசத்தையே தருகிறது, எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதிலிருந்தான விடுதலையும் கூட! பல விசயங்களை படிக்க வேண்டும் என்றிருக்கிற நெருக்கடியையும் தவிர்க்கலாம்.எதிர்பாராமல் படிக்கவேண்டி வந்துவிடுகிற பல விசயங்களையும் அவற்றுக்கு எதையாவது பதில் சொல்லவோ அல்லது அதனை தவிர்க்கவோ வேண்டிய அந்தரமான நிலையையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது. நான் இல்லாததில் சந்தோசமாய் இருக்கிற முகப்புத்தக தோழிகளுக்கு அன்பு முத்தங்களும் வாழ்த்துக்களும்.உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் குண்டம்மா.


#
எனக்கான மீடிறண்களில் இருக்கிற உன்னை இன்னும் எத்தனை நாட்கள் தேடுவது?! கொஞ்சம்பொறு நீலி... நான் வனம்புகுகிறேன். இதை இன்னும் எழுதலாம் போலிருக்கிறது. ஆனால் இப்பொழுது வேண்டாம்.

#
எதையாவது சொல்லு சொல்லு என்றபடியே இருக்கிற இந்த நாட்களை எனக்கு பிடிக்கவில்லை தனியே ஒரு பயணம் போகவேண்டும் அல்லது அவளோடு ஒரு மலைப்பயணம் போகவேண்டும் என்கிறதான மனோநிலையில் இருக்கிறது இப்போதைய நாட்கள். குற்றவுணர்வை சுமந்தலைகிற இந்த நிர்ப்பந்த வாழ்வு எனக்கு வெறுப்பைத்தருகிறது.
வெறுமனே விலகிச்செல்கிற இந்த நாட்களை நினைவிடுக்குகளில் சேமிக்கவேனும் நீ விரைவில் வந்து சேர்.

Thursday, May 13, 2010

உண்மைகளை எழுதிப்பார்த்தல்...

எல்லாவற்றையும் எழுதிப்பாத்துவிட வேண்டும் என்றிருக்கிறது என்னுடைய உண்மையான குணம், எழுத முடியாமல் தடுத்து வைத்திருக்கிறது நிர்ப்பந்தங்களோடு வருகிற காலம். உண்மைகளை எழுதிப்பார்ப்பதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது அது எனக்கும் உங்களுக்கும் இடையில் விருப்பமில்லாத மாற்றங்களை ஏற்படுத்துவதாய் இருக்கக்கூடும் என்கிற உண்மை இருப்பினும்.


ஓடிக்கொண்டிருப்பவர்களே,

என் பலவீனங்களோடு எனக்கென்று ஒரு இயல்பு இருக்கிறது
அதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்
அல்லது புரிந்து கொள்ள நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்

என்னிடமான உங்கள் எதிர்பார்ப்புகள்
எப்பொழுதும் தோற்றுப்போவனவாகவே இருக்கக்கூடும்
உங்களோடு ஓடிவர என்னால் இயலவில்லைஎன்பதை
நான் ஒரு போதும் மறுப்பதில்லை

இல்லையெனில்
என்னிடமிருந்து தாரளமாக விலகிக்கொள்ளுங்கள்
இந்த ஒரு காரணம் போதும் உங்களுக்கு
என் புத்தியின் சுவாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவதற்கு,


ஒரேயொரு விசயம்
என்னிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்கிற
குறைந்த பட்ச புரிதலையேனும் கொண்டு வாருங்கள்
உங்களின் அதிக பட்ச உண்மையாக அவை இருக்கலாம்

____________________________________________________________

மற்றொரு கோணம்,

என் இயலாமையை மறைக்கும் வழிகள்
இல்லாமல் போகும் தருணங்களில் எல்லாம்
உங்களை போலிகள் என்றுவிடுகிற தப்பித்தல்கள்
என்னிடம் இருக்கிறது
புரிதல்களற்ற வாழ்வுமுறையென
எப்பொழுதும் சொல்லிக்கொண்டாலும்
குற்றம் சுமத்துவதற்கு
காரணங்கள் கிடைத்தாலும்
உறங்கி எழுகிற நேரங்களில்
கலைந்து விடுகிறது வேசம்
முகம்பார்க்கும் கண்ணாடியில்
எத்தனை முறைதான் உமிழ்வது அல்லது
அதை எப்படித்தான் தவிர்ப்பது.

13.04.2010