Friday, December 23, 2011

முடிவு.


எழுதிக்கொண்டிருத்தல் என்பது தேவையானதாக இருக்க முடியும் என்று இப்பொழுது தோன்றுகிறது. இதனை இப்பொழுதே இங்கே எழுதி வைப்பது திருப்தியாயிருக்கிறது. என்னுடைய தற்போதைய எதையாவது செய் என்பதாக இருக்கிற மனோநிலையின் காரணங்களுள் இதுவுமொன்றென நான் நம்புகிறேன். எழுதிக்கடக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கிறது, இது ஒருவகையில் ஒரு வியாதியைப்போலும்,அதேநேரம் சுய மோகத்தைபோலவும் இருக்கிறது.

இத்தனை வருடங்கள் இங்கே இருந்தேன் என்பதற்கு என்னிடம் ஏதோ இருப்பதாக நான் நம்பிக்கொண்டிருந்த எல்லா சேமிப்புகளும் எழுதிவைத்த எல்லா சொற்களும் இனி திரும்ப பெறமுடியாத படிக்கு அழிந்து போயிற்று. கிட்டத்தட்ட ஒரு நாவலைப்போல எழுதியிருந்த என்னுடைய தினக்குறிப்புகள் எல்லாம் போயிற்று. எவ்வளவு சொற்கள், எவ்வளவு புகைப்படங்கள், எவ்வளவு தகவல்கள, எவ்வளவு ஒலி ஒளிப்பதிவுகள்,எல்லாம் அந்தந்த பொழுதுகளில் இருந்த மனோநிலை,வாழ்நிலை,சூழல் என எல்லாவற்றையும் குறித்து வைத்திருந்தேன் கிட்டத்தட்ட இத்தனை வருட வாழ்வின் ஆதாரச்செய்திகள் இந்த தொகுப்புக்குள் இருந்திருக்கிறது.எல்லாவற்றையும் இழந்து போனேன். இதிலென்ன இருக்கிறது அவனவன் வாழ்வையே இழந்துவிட்டு வந்திருக்கிறான் உனக்கென்ன பிரச்சனை என்று மனம் சொன்னாலும் யுத்தமும் திணித்தலும் நம் சனங்களிடம் வரலாற்றை, அடையாளங்களை இழக்கப்பண்ணியிருக்கிறது அதன் வலி பெரியது கொடியது அதை இங்கே பொருத்தவே முடியாது. அடுத்தவர்களுக்கு அது அனுபவிக்காமல் தெரிவதில்லை.இது என்னுடைய கவனமின்மைதான் என்றாலும் இழப்பு இழப்புத்தானே.


மிகமுக்கியமான தருணமொன்றுக்கு கூட ஊரில் இருக்க முடியாதுபோன நிலையில் இருந்தேன், இதுவெனக்கு தீராத துயரொன்றாய் எப்பொழுதும் இருக்கலாம். மொத்தமாய் மிக மோசமான நிலையிலிருந்து திரும்பவும் பயணம் பண்ண தொடங்கியிருக்கிறேன். குறைந்த பட்ச திருப்தியைக்கூட தராத இந்தப் பாலைநிலத்தின கடைசிப்பொழுதுகள் இதுவாயிருக்கலாம்.

இனி எனக்கான முடிவுகளில் உங்களுடைய வாழ்வு தலையிட முடியாது என்பது இத்தால் அறியத்தரப்படுகிறது.

Thursday, November 17, 2011

கடிதங்கள் - சரியாய் எழுதப்படாத உண்மைகள்.

உயிர் நிரப்புகிற கூடுகள்.

இடைவெளிகளோடானா சில வருடங்களுக்கு பிறகும்
இருள் வழிகிற பாலை வனத்து வானத்தில்
அடர் மேகமென படர்கிறதுன் உருவம்...
நட்சத்திரங்கள் மிதக்கிற செங்கடலின் கூரையில்
பெரு நிழலென தொடர்கிற குளிர்காற்றில்
அமிழ்ந்து போயிருக்கிறது மௌனம்
பொழுதுகள் நீள்கிற பெருவெளியில் இருக்கிற
உயிரை நிரப்புவதற்கு கடல் கடந்து வரக்கூடும்
ஆகக்குறைந்தது நீ அழாமல் இருக்கிறாய் என்றோ
ஆகக்கூடியதாய் உன் பிரிவறிவிக்கிறதாகவோ...
செய்திகள் சுமந்த கடிதக்கூடுகள்...!


முன்னெப்பொழுதோ எழுதிய இந்த வரிகளை படித்தபொழுது எழுதிய,திருத்தி மாற்றப்படக்கூடிய பகிர்வு.

___________________________________________________

எனக்கு எப்பொழுதும் கடிதங்களின் மீது அதிகமான பிடிப்பிருக்கிறது.

இப்பொழுதும் கடிதங்கள் அவை யாருடையதாய் இருந்தாலும் அவற்றை சேர்த்து வைத்திருக்கிறேன். கடிதங்கள் அழிய விடக்கூடாதவை என்பது என் நெடுநாளைய எண்ணப்பாடு. கடிதங்களின் அருமை மறந்து போய்விட்டிருக்கிற மனங்கள்தான் பெரும்பாலும் இப்பொழுது இருக்கிறது. நான் அறிய கடிதங்களுக்காக காத்திருந்தவர்கள் கூட அவற்றை கணக்கெடுக்காமல் விட்டிருக்கிற தன்மையை கண்டிருக்கிறேன்.இந்த கொடும்பாலையின் கடுந்துயரங்களில் இதுவும் ஒன்று. முன்பெல்லாம் சவுதி கடிதங்களுக்காக காவலிருந்து வாசிக்கிற அஜிநபிகளை கொண்டிருந்தது. 'பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி இருக்கிறோம்' என்று பல வருடங்களாக இருக்கிற பழையவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பெரும்பாலானவர்களிடம் அதில் ஒரு கடிதம் கூட மீதமில்லை என்பதுதான் சோகம். நான் இங்கே வந்த பொழுது கடிதம் என்பது ஊருக்கு போகிறவர்களிடம் மட்டும் கொடுத்துவிடும் ஒரு தேவையற்ற அவசரமற்ற விசயமாகவே மாறியிருந்தது. எனக்கு மாதம் நாலைந்து கடிதம் வருவதையும் நான் எப்பொழுதும் கடிதங்களுக்காக காத்திருப்பதையும் விசித்திரமாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள், பிறகு எனக்கும் கடிதங்கள் வராமல் போயிற்று என்றாலும் கடிதங்கள் மீதான நம்புதல் எனக்கு மாறவேயில்லை, கடிதங்களை நான் எழுதாமல் விட்டதுமில்லை.அவை பெரும் ஆசுவாசமாயிருக்கின்றன என்பதில் எந்த மாற்றமும் என்னிடமில்லை.

கடிதங்கள் போகவும் வரவும் அதிக காலம் எடுத்தக்கொண்டிருந்த ஆரம்ப காலங்களில் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருந்திருப்பார்கள் இந்த மக்கள்; மிக மோசமான சம்பளமும் தொலைபேசி வசதிகள் கிடையாத அமைவிடங்களும் என கடிதங்கள் மீதான பற்றுதல் அதிகமாயிருந்த காலம் அது! இரவிரவாக கடிதம் எழுதி அதை வெகு கவனமாக அனுப்பி என இருந்த மனிதர்களை கடந்து வந்திருக்கிறோம். பிறகு கடிதப்போக்குவரத்து விரைவாகிப்போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதித்தள்ளி தொடர்ச்சியான தொடர்பிலிருந்த உறவுகள் நிறையவே இருக்கிறது. கடிதங்கள் மூலம் நெருங்கியிருந்த மனங்களைப்போல இப்பொழுது மலிந்திருக்கும் இணையமும் கைத்தொலைபேசிகளும் தருவதில்லை. அவை புரிதலை, நிதானத்தை கணிசமாக குறைத்திருக்கிறதென்றே நம்பத்தோன்றுகிறது.

பிரிவின் துயரை, தனிமையின் வெறுமையை சீரற்ற நாளாந்தங்களை சுகமற்ற சூழலை நாட்களை எழுதியே கடந்த, உணர்ந்த பல உறவுகள் இருக்கிறது சொல்ல முடியாதவற்றைக்கூட கடிதங்கள் மூலமாக சொல்ல முடிந்திருக்கலாம். அறிமுகம் மட்டுமே இருக்கிற பலரது நெருக்கத்துக்கு கடிதங்கள் உதவியிருக்கிறது. சந்திக்கிற தூரத்தில் இருக்கிற ஆட்கள் கூட கடிதங்கள் மூலமே நெருங்கியிருக்கிற கதைகளெல்லாம் இருக்கிறது. நானும் இப்படியான சில கடிதங்களை எழுதியிருக்கிறேன், ஒவ்வொரு நாளும் பார்க்கக்கூடியவர்தான் என்றாலும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அது ஒருவகையில் சுவாரஸ்யமும் நெருக்கமுமானதாய் இருந்தது. இன்னமும் அப்படியான கடிதங்கள் பலரிடம் இருக்கவும் கூடலாம்.


இந்த சந்தர்ப்பத்தில ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது 'அப்பா கதைத்தது' என்று பெயரெழுதப்பட்ட கசட் ( Cassette ) ஒன்று எங்கள் வீட்டில் பல காலமாக இருந்தது.

அப்பருக்கு சரியான குரல்! அவர் கதைக்கிறது ஒரு தனி நடையோட இருக்கும், அனுபவிச்சு கதைக்கிற ஆள் அவர். கதைச்சது என்ன என்பது அவ்வளவாக நினைவில்லாவிட்டாலும் அந்த குரலில் இருந்த உற்சாகம் சந்தோசம் தனிமை சோகம் என இயல்பாக வெளிப்படையாக இருந்த அதன் உணர்வுகள்,பாவங்கள் எல்லாம் எனக்கு அந்த முகத்தை மனதுக்குள் கொண்டு வரக்கூடிய அளவுக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது. கம்பீரமான அந்தக்குரல் அறுந்து,உடைந்து சவுதியிலிருந்து அப்பர் வந்தபொழுது எனக்கு பத்து வயதுதான் இருக்கும். அதற்கு பிறகு அப்பரோடு நான் பேசியதே மிகக்குறைவு கடந்த முறை ஊருக்கு போயிருந்த பொழுது பழைய கதைகளை விடுபட்ட குரலில் சொல்லச்சொல்ல கேட்டுக் கொண்டிருந்தேன்


அது ஒரு பின்மதிய நேரம் எனக்கு குடிக்க வேண்டும் போலிருந்தது,அப்பாவிடம் கேட்டேன் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்(அப்பா முன்பெல்லாம் குடியை அனுபவிக்கத்தெரிந்த ஆள்). உண்மையில் நான் இதை இவ்வளவு தாமதமாக கேட்டிருக்க கூடாது. நான் பெரும்பாலும் அப்பரை குரல் வழியாகவே நினைவில் வைத்திருக்கிறேன் என்பது இப்பொழுது தோன்றுகிறது.நான் செய்யாததும் நிறைய இருக்கிறது.

இப்படி கசட்டுகளில் கதைத்து பதிந்து அவற்றை அனுப்பிய காலமும் இருக்கிறது இது பெரும்பாலும் மத்திய கிழக்கில் இருந்தவர்களுக்கான அனுபவமாகத்தான் இருக்க முடியும் மிக மட்டமான சம்பளத்தொகையும் தொலைபேசி கட்டணங்களின் அளவும் அதுக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம்.



என்னைப்பொறுத்த வரையில் கடிதங்களுக்கு வடிவம் அவசியமற்றது அவை துண்டு துண்டாகவோ சின்னக்குறிப்புகளாகவோ எழுத்துப்பிழைகளுடனோ கசங்கியோ கிழிந்தோ எப்படியும் இருக்கலாம். எதையும் எழுதாமல் கூட அனுப்பப்பட்ட கடிதங்களும் இருக்கிறது. "என்ன செய்யப்போறியள்" என்று மட்டும் எழுதி கையொப்பமிட்டிருந்த கறுப்பியின் கடிதம் எனக்குள் நிரப்பிய சொற்களை அதன் சுமையை என்னால் இதுவரையும் எழுதிவிட முடியாத அந்த கடிதத்தின் முழுமைய எவ்வளவு முயன்றும் எனக்கு திருப்தியான பதிலை எழுதிவிட முடியாத (உறங்க விடாத இரவுகளை கொடுத்த மோசமான போதையில் இருந்த இருபத்தொரு நாட்கள் அவை) அந்த கடிதத்தின் சாயலை இதுவரை வேறெந்த கடிதமும் அடையவில்லை. இது வரையுமான என் வாழ்வின் ஆகச்சிறந்த கடிதங்களை அவள்தான் எழுதியிருக்கிறாள்.

பகிர்தலுக்கான அத்தனை சாத்தியங்களும் கொண்டிருந்த, கொண்டிருக்கிற சாதனம் கைப்பட எழுதிய கடிதங்களாகத்தான் இருக்க முடியும் குரல் வழி சொல்ல முடியாத பலதும் கூட, எழுதிவிட தெரிந்த குணமும் அவற்றை புரிந்து கொள்கிற மனமும் முன்பிருந்தது. அவரவருக்கென்று ஒரு மொழி எல்லோரிடமும் இருந்தது. இப்பொழுது எவ்வளவுதான் பேச முடிந்தாலும் அளந்தே பேசுகிறதும் எச்சரிக்கை உணர்வுகளோடுட கதைக்கப்பழகி விட்டிருக்கிறதுமான மிகச்சுருங்கிய மனங்களே இருக்கிறதாய் இணையமெங்கும் பரவிக்கிடக்கிற அனுபவங்களில் காணக்கிடைக்கிற மனிதர்கள் சாட்சியாகிறார்கள்.


கடிதங்கள் எப்பொழுதும் அணுக்கமானவை.அவை நமக்கு தேவையான உறவுகளில் பொருந்தும் தன்மையுடையவை நண்பனாக, அம்மாவாக, காதலியாக,எதிரியாக, முகம் தெரியாத யாரோவாக, கடவுளாக, வன்மத்தை தீர்க்கிற அடிமையாக, முன்பொரு முறை கலந்திருந்த பெண்ணொருத்தியாக என அத்தனை பரிமாணங்களிலும் பொருந்தக்கூடியவை. கடிதங்கள் கட்டாயம் அனுப்பட்டே ஆகவேண்டும் என்பதுமல்ல,பதில் வந்தே ஆகவேண்டும் என்பதும் இல்லை ஆனால் எழுதப்படவேண்டியவை பாதுகாக்கப்பட வேண்டியவை.


இன்றைக்கும் ஒரு அன்பை கடிதத்தில் பகிர்வதில் இருக்கிற அலாதியும் உணர்வும் தருகிற அனுபவம் தனி. அதுவும் வாழ்வின் முதல் காதல் கடிதங்கள் தருகிற அனுபவம் இன்றைக்கு பலர் இழந்து போகிற ஒன்றாகியிருக்கிறது.என்னுடைய முதல் காதல் கடிதம் என்று நான் சொல்லக்கூடிய ஒன்றும் இப்பொழுது என்னிடமில்லை இந்த விசயத்தில் கறுப்பிக்கும் எனக்கும் ஒரு வழக்கிருக்கிறது.கறுப்பிக்கு கடிதம் எழுதுவது இயல்பாக வரும் ஒரு கலை வெந்தயத்தை அடுக்கி வைத்தது போல கொஞ்சம் சரிவான சின்னச்சின்ன எழுத்துக்கள் அவளுடையது.எழுதுகிற அவளை எழுதுகிற சூழலை நிகழாக கொண்டு வந்துவிடுகிற நடை அது. கடிதத்துக்குள்ளே அங்கங்கே குறுக்கிடுகிற குணம் அவளிடமிருந்துதான் எனக்கு வந்திருக்கலாம்.

வாசித்துக்கொண்டு போகையில் "கொஞ்சம் பொறுங்கோ கை வேர்க்குது" என்றெழுதியிருப்பாள் ஊன்றிவைத்திருக்கிற இடதுகையும்,பின்னிவிட்டிருக்கிற கூந்தல் சரியும் நெஞ்சும், குவிந்திருக்கிற வலது கை-விரல்களும் கொஞ்சமாய் வியர்திருக்கிற அவளும் என கிறங்கிப்போகிற அந்த அறையின் வாசனையை கடிதத்துக்குள் கொண்டு வர ஒரே வசனம் போதுமாயிருக்கும்.சில நேரங்களில் ஒரு கையை ஊன்றி சின்னப்பிள்ளைகள் போல குழுமாடு பிடிச்சுக்கொண்டு அவள் எழுதுகிற விதமே நாள் முழுக்க பார்க்ககூடிய நளினமாயிருக்கும்


"கடிதம் இப்பதான் அரைவாசி ஒரு தேத்தண்ணியை போட்டுக்கொண்டு வாங்கோ சேர்ந்திருந்து வாசிக்கலாம்" என்றெழுதியிருப்பாள்: என்னை வேண்டுமென்றே சீண்டுகிற தருணங்களில் ஒரு மாதிரியாகச் சுழிக்கிற உதடுகளும் சிரிக்கிற கன்னங்களும் எழுதமுடியாத அழகில் அசைகிற புருவங்களும் நினைவுக்கு வர... "போடி கறுப்பியென" வாய்விட்டே சொல்லிவிடுவேன்.


"அந்த நைட்டிதான் போட்டிருக்கிறன், மேசையிலை சாஞ்சிருந்து எழுதிக்கொண்டிருக்கிறன்" என்றெழுதி என்னை திணறடிக்கிற வேலையை வெகு சாதாரணமாக எழுதிவிட்டு, ம்ம்... போதும் போதும் கனக்க கற்பனை பண்ண வேண்டாமென அடுத்த வரியிலேயே என்னை திரும்ப கடிதத்துக்கு கொண்டுவரும் வேலையையும் செய்திருப்பாள்.

ஒவ்வொரு கடிதத்திலும் என்னை தனக்கு இன்னும், இன்னும் நெருக்கமாக உணாத்துகிற கடிதங்கள் அவளுடையது.நான் உரிமையுள்ளவன் என்றவள் எழுதாமல் எழுதுகிற கடிதங்கள் அவை. அவளுடைய எல்லா தேவைகளும் என்னைக்குறித்தே இருந்தன அதுவே அவள் இனியெப்பொழுதும் கடிதங்கள் எழுதாதவளாக அகிப்போகவும் காரணமாயிருந்தது.



கடந்து வந்த கடிதங்கள் காலத்தின் பதிவுகள்தான் அவை பாடல்களைப்போல புகைப்படங்களைப்போல ஒரு பெரிய நிகழை அதன் காலத்தை வாழ்வின் உயிர்ப்பான தருணங்களை அனுபவிக்கத்தவறிய கணங்களை உணரத்தவறிய விசயங்களை கொண்டு வந்து தருகிற சாட்சிகளாயிருக்கின்றன. அது யார் யாருக்கெழுதிய கடிதங்கள் என்றாலும் கடிதங்கள் காவாந்து பண்ணவேண்டியவை கைவிடப்பட்ட கடிதங்களின் துயரம் பெரியது. யாருக்கும் அவசியமற்ற கடிதம் என்ற ஒன்றை யாராலும் எழுதிவிட முடியாது யாராலும் எழுதிவிட முடியாது தேவையற்றவை என தவிர்க்கப்படுகிற கடிதங்கள் கூட தொலைக்கப்பட வேண்டியவை அல்ல. தீர்ந்து போன காலத்தின் தீராத சாட்சியங்களாய் கடிதங்கள் இருக்கின்றன.


#
என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்,
கடிதம் எழுத தேவையானதெல்லாம் ஒரு பெயர்மட்டும்தான் - கற்றது தமிழ்.


#
எழுதிய ஒரே கடிதத்திலும் உன்னை நினைக்கிற நேரங்கள் அந்தரங்கம் நிரம்பியவை என்றெழுதிய பேரின்ப நாயகியின் கலைத்துப்போட்ட எழுத்துக்களால் ஆன கடிதமொன்று இன்னமும் இருக்கிறது.இதை அவள் வேறொரு விதமாக எழுதியிருந்தாள் அது ரகசியம்.


#
எல்லாவிதத்திலும் உங்களுக்கு பிடித்தவளாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசை கண்ணா, இதை ஆசை என்பதா தேவை என்பதா anyone. உன்னை முழுவதுமாக நான் நிரம்பவேண்டும், எந்த தடைகளுமில்லாமல் சுதந்திரமாய் உன் ஆக்கினைகளை அனுபவிக்க வேண்டும் - திருகோணமலையில் இருக்கும்பொழுது கறுப்பி எழுதிய கடிதத்திலிருந்து.


#
தம்பி உனக்கு வயது காணும் நீ சின்னப்பிள்ளை இல்லை - அம்மா.


_______________________________________________________________


என்னுடைய வாசனை வருகிற உன் கடிதங்களை வாங்கி வைத்திருந்த
உன்பச்சை நிற பெட்டியை என்ன செய்தாய்
எரித்து விட்டதாக சொன்ன எல்லா கடிதங்களையம் நினைவுக்குள் வைத்திருக்கிறாயா
சாம்பலாகிய கடிதங்கள் ஒரு போதும் நினைவுகளை கரைத்து விடுவதில்லை

நமக்கிடையே உரையாடல் இல்லாதிருக்கலாம்
எனக்கும் உனக்கும் இடையில் எல்லாச் சொற்களும் தீர்ந்து போயிருக்கலாம்

இருந்தும்...

வேறுபக்கம் திரும்புகிற உனது பார்வைகளை சரிசெய்யவோ
எதிர்ப்படுகிற உன் அருகாமையை இலகுவாக்கவோ
இருவருக்குமான அந்தரத்தை தவிர்க்கவோ
இடைவெளியின் நிச்சயத்தை உறுதிப்படுத்தவோ
கடைசிக் கடிதமென்றொன்றை எழுதிவிடு.

இதுவே கடைசிக்கடிதமென்றொரு கதையை
இதுவே கடைசி சந்திப்பென்றொரு நிகழ்வை
நமக்குள் நிகழ்த்த காலத்தை அனுமதி

கடிதங்களை கைவிடுதலும் பிரியங்களை கடந்து போதலும்
செய்து பார்க்க்கூடியவை என்பதில் ஒரு மாற்றுமில்லை அவை
கைவிடுபவர்களை விட்டு நீங்குவதில்லை
என்பதிலும் ஒரு மாற்றமுமில்லை.
___________________________________________


சம்பந்தப்பட்ட குறிப்பு:

எண்பதுகளில் பிறந்தவர்கள் வரைக்குமே கடிதங்களும் கசட்டுகளும் ( Cassette ) உச்ச பாவனையில் இருந்திருக்கிறது. இப்படி நாமே மறந்து போன பழைய விசயங்கள், நான் சேமித்து வைத்திருந்த இவைகள் எல்லாம் பலதும் கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய வாழ்வியலிலிருந்தும் என்னை தூர வைத்திருக்கிற காலத்தை சபிப்பதில் என்ன நடந்துவிடப்போகிறது இந்த மிகமோசமான நடைமுறை வாழ்வென்கிற சமூக அமைப்பில்.

______________________________________________

இதனை பகிர்வதற்கான எந்த முகாந்திரமும் சமீபத்தில் நிகழவில்லை என்றாலும் பல நாட்களாக கிடப்பிலிருந்த இதனை பகிர்வதற்கு கீழே இருக்கிற குறிப்பு காரணமாயிருக்கலாம்.

*
சரிசெய்யப்படாமல் கிடந்த மீயுருவை மாற்றிப்பார்த்திருக்கிறேன் ஒழுங்கற்றவைகளின் மீதான ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை நமக்கு, இருந்தாலும் தளத்தை சரியாக திறக்க முடியாமல் இருந்த சிரமத்திற்காக இப்படி மாற்றியிருக்கிறேன்.

*
இதை மாற்றித்தரும்படி குண்டம்மாவை கேட்டிருந்தேன் தனக்கு தெரியேல்லை எண்டு சிணுங்கினாள். அது என்னுடைய கடவுச்சொல்லை பயன்படுத்துவதன் அசௌகரியத்தை தவிர்த்தல் என்பது எனக்குத்தெரிந்தாலும் அவளிடம் தனகுவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செயகிறது- அப்ப பாருங்களன்.

Wednesday, October 26, 2011

தீபாவளி - தொடர்பற்ற சில குறிப்புகள்.

பெரும்பாலும் மக்கி, மறந்து கொண்டிருக்கிற மூளையிலிருந்து அவசரமான பொழுதொன்றில் தட்டச்சு செய்யப்பட்ட சீரற்ற இந்த குறிப்புகளை வாசிக்கப்போகும் உங்களுக்கு நன்றி.

______________________________________

எல்லா தீபாவளிக்கும் எழுத நினைத்த விடுபட்டுப் போனவைகள்தான் அதிகம். இந்த முறையும் அது போலவே,இருந்தும் இந்த சின்னக்குறிப்பைச்சரி எழுத ஒண்ண காலம் கனிந்திருக்கிறது.


காற்சட்டை காலங்களில் இருந்து நினைவிருக்கிற தீபாவளியை இனி நினைவின் அடுக்குகளில் இருந்து தேடி எழுதுவதற்குள் அடுத்த தீபாவளி வந்தாலும் வந்துவிடலாம் ஆக இதை எழுதிக்கிக்கொண்டிருக்கும் பொழுது என்னென்ன எழுத வருகிறதோ அதையெல்லாம் தீபாவளிக்கான குறிப்பாக எழுதிவிடலாம்.


#
சின்ன வயதிலிருந்தே நான் ஆசைப்பட்டது போல பண்டிகைகள் எனக்கு அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை என்றுதான் இப்பொழுது எனக்கு நினைவிருக்கிறது. ஆனாலும் பண்டிகைகளுக்கு முந்திய சில நாட்களில் இருந்தே வருகிற இந்த கிளர்வான நாட்களும் பரபரப்பும் அனுபவிக்க அலாதியானவை. பண்டிகைகளிலும் இந்த தயார்படுத்தலில் இருக்கிற மனங்களையும் ,ஊரையும், மக்களையும் உள்வாங்குதல் அலாதியானது அது ஒவ்வொரு வயதிற்கும் ஒவ்வொரு விசயங்களை கவனிக்கிறதாக இருக்கும் அப்படி தயாராகத் தொடங்குகிற பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று.


#
புது உடுப்பு, பலகாரம்-விதம்விதமான சாப்பாடு, சொந்தக்காரர்கள், வெடி, பெடியள், விளையாட்டு:கிரிக்கெட் மச், தொலைக்காட்சி விசேட நிகழ்ச்சிகள், புதிய படங்கள், பொம்பிளைப்பிள்ளையளை பாக்க்வெண்டே ஊர் சுத்துறது, காதல், போதை,சீன் - என்று அந்தந்த வயதுக்கு அந்தந்த விசயங்களில் பண்டிகைகள் கடந்து போய்விடும். பெரும்பாலும் பதின்மத்தின் இறுதிகளில் இருந்து இருபதகளின் தொடக்கம் வரை படம் - பெடியள் - காதல் -கொண்டாட்டம் என்று கழிகிற பண்டிகைகள் இருபதுகளின் மீதங்களில் கொஞ்சம் பரபரப்பானதுபோன்ற ஒரு மாதிரியான பகல் பொழுதுகளையம் அல்லது சலிப்பையும் போதை மிகுந்த முன்னிரவுப் பொழுதுகளையும் கொண்டு வரத்தொடங்கியது.


#
காதல் மிகுந்த தீபாவளியை நானும் கடந்து வந்திருக்கலாம் எனிலும் இப்பொழுது எழுத அப்படியொன்றும் நினைவுக்கு வரவில்லை. நினைவிலிருப்பதெல்லாம் நான் அவளை சந்திக்க் முடியாத அளவுக்கு போதையில் இருந்த சித்திரைப்பொங்கல்தான். பெரும்பாலும் கடுகடுப்பாகவே இருக்கும் பண்டிகைக்கு அடுத்த நாட்கள்.ஆனால் அந்த வருடப்பிறப்புக்கு அடுத்தநாள் அற்பதமானதாக இருந்தது. குடிக்கவேண்டாம் என்று கோபித்து,கெஞ்சி,அழுது, திட்டி என்று அன்பை வெவ்வேறு வடிவங்களில் நிகழ்த்திக்கொண்டிருந்தாள்; ஏதோவொரு கணத்தில் உடைந்து அழத்தொடங்கிய என்னை மார்புக்குள் ஏந்திக்கொண்டாள். நான் அவளை சமாளிக்க வேண்டியது மாறி அவள் என்னை சமாதானம் பண்ணிக்கொண்டிருந்தாள். மார்புக்குள் முகம் புதைப்பது இல்லாது போதலைப்போல அதுவொரு அதி உன்னதம்.

#
கமலா மாமி வீட்டை போறது எண்டுறது ஒரு கடமை மாதிரியே இருக்கும் சின்ன வயதில. உண்மைல நான் ஒரு நாளும் இவவை மாமி என்று கூப்பிட்ட நினைவே எனக்கில்லை அனாலும் மற்றையவர்களிடம் கதைக்கிற பொழுது கமலா-மாமி என்தான் கதைத்திருக்கிறேன். இவவுக்கு நாலைஞ்சு பொம்பிளைப்பிள்ளையள் இருந்தாலும் அவையள் எல்லாம் போன தலை முறை ஆக்கள் மாதிரிதான் எனக்கு தெரியும், அதோடு என்னுடைய வீடிருந்த இடமும் அவையளின்ரை வீடிருந்த இடமும் வேறை வேறை சூழல் எண்டுறதால எனக்கு அவையளோடை சரியா முகம் பார்க்கக்கூட நெருக்கம் இருந்ததில்லை முந்திய நாட்களில்(நெருக்கம் இருந்ததில்லை அல்லது அவர்கள் அந்த இடைவெளியை எப்பொழுதும் வைத்திருக்க் விரும்பினார்கள் என்றும் சொல்லலாம் )பின்னாளில் அதற்கான தெளிவும் இயல்பும் வந்ததன் பின்னர் அவர்களை காணவே முடியாத தூரத்திற்கு போயிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் எல்லோரும் கதைக்கவே முடியாத தூரத்தில் இருக்கிறார்கள். கமலா மாமிக்கு ஒரு மகன் இருந்தார் என்றுதான் எனக்கு தெரியும் அவரை கண்டதாக எனக்கு நினைவே இல்லாத நாட்களின் முன்பே அவர் கனடாவுக்குள்ளை குடியேறியிருந்தார் நான் கிட்டத்தட்ட இருபத்தைந்து பிறகு சவுதியிலிருந்து இதை தட்டச்சிக்கொண்டிருக்கிறேன்.


#
என்னுடைய பால்யம் சீனவெடிகளை கண்டிராத காலமாய்தான் இருந்தது. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் இவைகளுக்கு மூடிய கதவுகளை கொண்டிருந்தது. இதை படிக்கிற சிலருக்கு "வால்க்கட்டையில" வெடி அடிச்ச நினைவிருக்கலாம். இதை நான் மினக்கெட்டு இருந்து செய்திருக்கிறன். "படீர்" என பயங்கரமான சத்தத்தில வெடிக்கிற அளவுக்கு நெருப்புக்குச்சு மருந்து அடைஞ்சு வெடி அடிச்சிருக்கிறம். வால்கட்டை வெடிச்சு சன்னம் கூட பறந்திருக்கு. உண்மைல இந்த தொழில் நுட்பம் எல்லாம் சின்ன வயதிலேயே எங்களிடம் வந்திருக்கிற அளவுக்கு நாங்கள் இவைகளோடு பழக்கப்பட்டிருந்தோம்.


#
கிரிக்கெட் விளையாட தொடங்கியதன் பிறகு அனெகமான பண்டிகை நாட்கள் உள்ளுர் அணிகளின் பலப்பரீடசையாகத்தான் இருக்கும். சின்ன வயதில் ஒரு மச்சும் விடாமல் விளையாடி இருக்கிறேன். பிறகு எல்லா மச்சுக்கும் போயிருந்தாலும் முன்பைப்போல இருந்த ஆர்வம் இல்லாது போயிற்று. ஆரம்பகால கிரிக்கெட் எல்லோருமாக விளையாடுவதாய் இருந்தது. பிறகு அது தனித்தனியான ஆட்கள் விளையாடுவதாக மாறிற்று.




#
சண்டிவியில (அப்பல்லாம் சண்டிவி எண்டுதான் சொல்லுவம் இப்பதான் கனக்க சானல்)நிகழ்ச்சிகள் பாத்த்திருக்கிறோம். பண்டிகைகளுக்கு ஒரே இரவில் நாலு படம் பார்த்த காலம் போய், படம் பார்க்கிற பொறுமை இல்லாமல் போக பின்னர் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறோம். பிறகு விளம்பரங்கள் விசரைக்கிளப்புற தொலைக்காட்சியை பார்ப்பதே இல்லை என்றாகிற்று பண்டிகை நாட்களில் இங்கே வந்து ஒரு கட்டத்தில் தமிழ் சானல்கள் எதையும் பார்க்கவே முடியாத அளவில் இருந்திருக்கிறேன் இப்பொழுது zee aflam அந்த அரேபிய பெண்ணுக்காக.




Wiam Dhamani.

#
ராணுவ கனரக வாகனமொன்றோடு மோதிவிடாது தப்பித்த விபத்தோடு முடிந்து போன தீபாவளி அநியாயம். எங்கடை ஊரின் பொய்யான வழக்கங்களிலும்,மனிதர்களிலும் வறட்டுச் சரடுகளிலும் அன்றைக்கு பலமான கோபம் மற்றொரு முறையாக வந்திருந்ததென நினைக்கிறேன் குடித்திருக்க வேண்டிய இரவு அது.


#
குடிக்க பழகிய பின்னர் கொஞ்சம் சலிப்பானதாயும் பரபரப்பை போல ஒன்றையும் கொண்ட பகல் பொழுதுகளையும் போதைமிகுந்த முன்னிரவுகளையுமே பண்டிகைகள் தந்திருக்கின்றன.


#
வல்லிபுரக்கோவிலில் நராகாசுரன் பார்த்தநினைவிருக்கிறது, வடக்கு வாசலில் வைத்து 108மண்டி போடுறது ஒரு சாகச நிகழ்வைப்போல இருக்கும். சின்ன வயதில் ஆச்சரியத்தோடு அதை எண்ணிக் கொண்டிருப்பேன். கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை, தீபாவளியே ஒரு அதிகாரவார்க்கத்தின் பண்டிகை என்கிற எல்லா கதைகளையும் மீறி நாங்கள் இன்றைககும் சூரன் பார்க்கப்போக தயாராயிருக்கிறோம்; என்ன இருந்தாலும் மாயவனுக்கு ரசிகைகள் அதிகம் என்பதே அதற்கான முக்கிய காரணமாயிருக்கலாம். இன்னுமொன்று லேசான மழைக்கான முகாந்திரத்தோடு இருக்கிற வானமும் ஆலயத்தின் சூழலும், காதல் நிறைந்த பெண்களும், பழக்கப்படுத்தப்பட்ட பக்கதி மனங்களும் அந்த பெரிய வெளிவீதியில் உலாவருகிற கடவுளும் ஒரு விதமான அனுபவம்தான்.


#


எனக்கு கூடப்பிறந்தவள் ஒருத்திக்கு இன்றைக்கு பிறந்த நாள். தீபாவளிக்கு முதல்நாளோ அடுத்த நாளோ அல்லத தீபாவளியன்றோ வந்துவிடுகிற இவளுடைய முன்னைய பிறந்த நாட்களை பற்றி இப்பொழுது சொல்லிக்கொள்ளும்படி எதுவும் எனக்கு நினைவில் வரவில்லை, இது இப்படி இருக்கக்கூடாது என்பதுதான் உண்மை, ஆனாலும் என்ன செய்ய பின்பொரு அவசரமற்ற பொழுதில் அதனை எழுத முயல்கிறேன்.

பகிடியா சொல்லுறாளா உண்மைக்குமே சொல்லுறாளா எண்டு தெரியாதமாதிரி அடவைஸ் வைக்கிறது இவளுடைய ஸ்டைல் உதாரணத்துக்கு "அதை ஏன் நீ யோசிக்கிற வீட்டைப்பற்றியெல்லாம் நீ யோசிக்காதை" எண்டுவாள்; இதை விட வேறை எப்படி திட்ட ஏலும் இது அவள் திட்டுற மாதிரியே இருக்காது சாதாரணமாக கதைக்கிறமாதிரியே மருந்தைக்குடுக்கிறது. இவளுடைய கல்யாணத்துக்கு பத்து லச்சம் வேணுமெண்டு ஒரு SMS மட்டும்தான் அனுப்பி இருந்தாள் ஆனால் ஒரு கிழமை நித்திரை இல்லாமல் பண்ணின குறுந்தகவல் அது, உண்மையில் அது கடுந்தகவல்! வெளிப்படையா பாத்தால் அவள் என்னிடம் காசு வாங்கினது மாதிரிதான் இருக்கும் அனால் இன்றைக்கும் என்னுடைய காப்புறுதி தொகை கட்டிக்கொண்டிருக்கிறது இவள்தான், நான் உழைக்கிற காசு எனக்கே காணாதெண்டு சொல்லி அடிக்கடி வாங்கி கட்டுறது நான் சொந்த செலவுல வைக்கிற சூனியம்.

இன்னும் சில நாட்களில் தாயாகவிருக்கிற இவளுக்கு இது; கல்யாணமாகி வருகிற முதல் தீபாவளியும், பிறந்தநாளும் நல்லா இரு ரீச்சர்; காலம் உனக்கு நீ விரும்புகிற வாழ்வைக் கொடுக்கட்டும், உன் கடவுள்கள் எப்பொழுதும் உன்னோடு இருக்கட்டும்.



#
இன்னுமொரு தீபாவளியும் இருக்கிறது அது பண்டிகை நாட்களின் புடைவைக்கடை அனுபவங்கள். அது ஒரு தனிப்பதிவாக எழுதலாம் என்பதில் இப்பொழுது தவிர்க்கப்படுகிறது. அல்லது அவரவர் கற்பனைக்கு விடப்படுகிறது. பண்டிகை நாட்களுக்கு முந்திய பெருந்தெருக்களும் சந்தைகளும் எப்பொழுதும் சுவாரஸ்யமானவை. "எங்க இருந்துதான் இவ்வளவு சனமும் வருதோ" என்பதைப்போல யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ள அலைமோதுகிற சனங்களை பண்டிகை நாட்களுக்கு முதல் நாள் பார்க்கலாம், இந்தக்கூட்டத்தை பார்க்கவென்றே பஸ் பிடிச்சு யாழ்ப்பாணம் போன கதையெல்லாம் இருக்கு.

புடைவைக்கடையில் வேலை செய்கிற அனுபவம் ஒரு விதமானது. வேண்டாம் என்று போய்விடுகிற வியாபாரம்தான் என்றாலும் சில நேரங்களில் தேவதைகளுக்கு ஆடை பரிமாறுகிற சந்தர்ப்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கள்ளச்சிரிப்போடு கடைக்குள் நுழைவது எங்கடை ஊர் பெண்களின் உத்தி; நினைச்ச விலைக்குத்தான் வாங்கிக்கொண்டு போவாளவை. புடைவைக்கடையில் வேலை செய்த சொற்ப நாட்களில் சில முகங்களை கடந்திருக்கிறேன் நினைவில் இருந்து மறைந்து விடுவதற்குள் அந்த முகங்களை சந்திக்கும் ஆசையும் இருக்கிறது சே..! என்ன வாழ்வு இது நான் எப்பொழுதும் எனக்குப் பொருந்தாதவைகளையே தெரிவு செய்திருக்கிறேன். எனக்கானவற்றோடு செய்கிற சமரசங்கள் மனதை லேசாக இருக்கவிடுவதில்லை அவை அவநம்பிக்கைகளை தருவது, வெறுப்பை அதிகம் பண்ணுவதாய் இருக்கிறது இந்த ஒவ்வாத நாட்கள்.

#
எழுதஎழுத எழுதமுடியாத நிலைதான் எனக்கு இப்படியான நினைவுப்பகிர்வுகளில் இருக்கிற சங்கடம். ஒரு கதை சொல்லிக்கான லாவகம் என்னிடம் இல்லாமல் இருக்கலாம் அல்லது மிகச்சிதறுண்ட துண்டுகளாகவே எனக்கு இந்த நினைவுகள் இருக்கிறது.

எல்லாம் போக கடல் கடந்துவிட்ட சில வருடங்களில் இது ஐந்தாவது தீபாவளியென நினைக்கிறேன், சித்திரைக்கு வந்தவனை தீபாவளிக்குத்தான் முதன் முதலில் அழைத்திருந்தாள் கறுப்பி! மிகநீளமான அந்த ஆறுமாதங்களையும் கடந்ததில் நான் இப்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்; அவள் வாசிக்கவே போவதில்லை என்றபோதிலும்.


எல்லாம் போக இன்று காலையில் அழைத்து-

என்ன செய்யுற உங்க; நானொருத்தி இங்க இருக்கிறன், அப்பர் இருக்கிறார் எண்டு கேட்டிருந்தாள் அம்மா. என் வாழ்தலின் மிக முக்கிய தருணங்களுள் ஒன்றாக இந்தக்கேள்வி இருக்கலாம். சில குரல்கள் எப்பொழுதும் எங்களை உயிர்ப்பிக்கிறது, அது என்ன வார்த்தைகளோடு வருவதாயிருந்தாலும்.


#

தொழில் நிமித்தம் வீட்டைப்பிரிந்திருக்கிறதே பெரிய துன்பமாயிருக்குமெனில் சொந்த வீடுகளிலுமிருந்து துரத்தப்பட்ட என் சனத்தின் பண்டிகைகள் எப்படி இருந்திருக்கும் துரத்தப்படுதலும், திணித்தலும், அடையாளங்களை சிதைத்தலும் மிக மோசமான அரசியல் வன் முறைகள். சீனவெடி, என்ன வெடி! நாங்கள் பெரும் ஆட்லெறிகளோடெல்லாம் தீபாவளி கொண்டாடியிருக்கிறோம். என்று சொல்வதற்கு எனக்கு இளையவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் எங்களுடைய நாட்டில். மக்களிடம் அரசியலை கொண்டுசெல்ல விரும்புபவர்கள் முதலில் மக்களை பேச அனுமதியுங்கள்.மக்களின்அரசியல் மக்களாலேயே பேசப்படவேண்டும்.


#
எல்லோருக்கும் தீபாவளி சீக்கிரமே வரட்டும்.


_________________________________________________

26ம் திகதி பகிர்ந்திருக்க வேண்டியது சில சிக்கல்களால் இன்றைக்கு.


Picture - Google.

Monday, October 3, 2011

ஊதாநிற பூவைச்சூடியவளின் விலகுதலின் மீது.

சாத்தியமற்ற ஒரு புள்ளியில் இருந்து
நாம் உரையாடிக்கொண்டிருநதோம் என்
எதுவுமற்றவைகளின் மீது நின்றபடி நீ
எல்லாவற்றையும் வசப்படுத்திகொண்டிருந்தாய்
அன்பை நிராகரிக்கிற என் அவநம்பிக்கைளின் மீது
உன் கரிசனங்களை நிரப்பிக்கொண்டிருந்தாய்

எப்பொழுதும் அருகிருப்பதாய்
உன் அன்பிருந்தது
கூட வருகிற துணையாக உன்குரல்
கேட்டுக் கொண்டேயிருந்தது
யாருமற்ற நாட்களில் எல்லோரும்
என்னுடனிருக்கிறதாய் நம்பிக்கொண்டிருந்தேன்

ஏனென்றறியாத கசகசப்பான பின்னிரவொன்றில்
நானறியாத உன தன்முனைப்புகளின் மீதொரு
காரணத்தை வைத்துக்கொண்டு
என்னை விலகத்தொடங்குகிறாய் நீ

விலகுதலிலும் துன்பம்
விலகுதலுக்கான காரணங்கள் இல்லாமலோ தெரியாமலோ இருப்பது.

பெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறது காலம்
பனி விழுகிற உன் நகரத்தின் தெருக்களில்
அலைகிறதெனது வாழ்வு.

_____________________________________________

உண்மையில் நான் உனக்கு என்ன துன்பம் செய்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை,தெரிந்தே நான் எதையும் செய்திருக்க மாட்டேன் என்றே இன்னமும் நான் நம்புகிறேன்.என்னிடமிருந்த சிக்கல்களை நான் உன்மீது பிரயோகித்திருக்கக்கூடும் அதை நீ இவ்வளவு தூரத்துக்கு நினைவில் வைத்திருக்கத்தேவையில்லை. எனக்கே நினைவில் இல்லாத அதை நீ நினைவில் வைத்துக்கொண்டு எதற்கு இவ்வளவு துன்பத்தை நமக்குள் வைத்திருக்கிறாய். உன்னைக்குறித்த என் தேவதை பிம்பம் ஒரு நாளும் உடையப் போவதில்லை; நீ எப்பொழுதும் தேவதையாகத்தான் இருக்கிறாய்.

நான் எப்பொழுதும் அன்பை 'செய்யத்தெரியாதவனாகவே' இருந்திருக்கிறேன்.ஏன் எனக்கதை புரிந்து கொள்ளவும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன்.எல்லா துன்பங்களுக்கும் நானே காரணமாயிருக்கிறேன், என் எல்லா நன்மைகளுக்கும் நீ வாசல்களாயிருக்கிறாய். நீ என்னை கண்டுகொள்ளாதிருப்பதும் விலகுவதும் என்னை துன்புறுத்துவதாய் இருக்கிறது.மனதளவில் பெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறேன்.

உன்னுடைய அன்பின் சாத்தியங்கள் என்னை மீளவும் கொண்டு வரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது உன்னால் முடியும். எனக்கும் உனக்குமான நெருக்கத்தின் இடைவெளி உண்மையெனில் என் மீதான கோபம் உனக்கு இன்னமும் மீதமிருக்கிறதெனில் நாம் பேசலாம். உன்னுடைய அழைப்புக்காக காத்திருக்கிறது எனது நாட்கள்.

____________________________________________

இந்த உரையாடலில் வருகிற இவளுக்கு இன்றைக்கு பிறந்தநாள்.நான் குடிக்கிறது இவளுக்கு பிரச்சனையாயிருப்பதனால் இன்றைக்கு முதல் குடிப்பதில்லை என்று எழுதி வைக்கிறேன்.


Happy Birthday ____________ .

Tuesday, September 27, 2011

எழுதிப்பார்த்தல் அல்லது இருப்பை உறுதிப்படுத்துதல்.

இணையத்தில் நான்றிந்த எல்லோரும் எங்கேயாவது எதையாவது எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இணையமும் எதையாவது புதிது புதிதாக அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.


Facebook_ல் கணக்கை தொடங்க எவ்வளவோ சந்தர்ப்பம் இருந்தும் சத்தம் இல்லாமல் இருந்தேன். நண்பன் ஒருவனின் அழைப்புக்கு பிறகு சரி அப்படி என்னதான் இதிலே இருக்கிறதென்று உள்ளே நுழைந்து பார்த்தால், உரில இல்லாத ஆட்களே இல்லையென்றமாதிரி எல்லோரையம் பார்க்க முடிந்தது. 2010 இன் தொடக்கத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் எல்லோருமே இருந்தார்கள் பிறகு மெல்ல மெல்ல சிலர் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதாவது ரிவிட்டரிலும் இடைக்கிடை face book வந்து போவதற்கே முடியாமல் இருக்கிறது எனக்கு. எப்படி Facebook, twitter, Google buzz, Google + என்று எல்லாவற்றிலும் கணக்கு வைதிருக்கவும் பராமரிக்கவும், இயங்கவும் முடிகிறது. எப்பொழுதும் நிரம்பிக்கிடக்கிறது Google Buzz தற்செய்லாக நுழைந்தால் படு ஆரவாரமாக இருக்கிறார்கள் தோழர்கள் அதிலும் பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த நண்பர்கள் பலரும் அங்கே இருக்கிறார்கள்.


இதைக்குறித்து இரண்டு மூன்று முறை எழுதி பிறகு எனக்கெதுக்கு,என்று பகிராமல் அப்படியே விட்டுட்டன்.இங்கே சொல்வதற்கு நிறைய இருந்தாலும் இப்பொழுது நான் சொல்ல வந்தது வேறு.


உண்மையில் எழுதாமல் இருப்பதிலும் பகிராமல் இருப்பதில்தான் சிக்கலே இருக்கலாம்.ஆக எதையாவது எழுதியே ஆகவேண்டும், எழுதுதல் என்பது நீங்கள் படித்தேயாகவேண்டும் என்பதற்கானவை அல்ல என்றாலும் எதையாவது பொதுவில் வைப்பது இருப்பை உறுதிப்படுத்துதல் என்றாகிறது. இஃது இந்த தனியே அலைகிற, அடைதல் கிடைக்காத ஆன்மாவொன்றின் மீளுதல்களாய் இருக்கலாம்.


எவ்வளவுதான் முயன்றாலும் ஒன்றிவிட முடியாத மனிதர்களே என்னை சூழ்ந்திருக்கிறார்கள், இது என்னுடைய பிழையாகவும் இருக்கலாம். சும்மா இருத்தலை வெறுக்கவும் அதை தவிர வேறெதையும் செய்யவும் முடியாத ஒரு தவிப்பையும் தருகிறது இந்த சூழல். மேலதிகமாய் எதையும் செய்ய உந்துவதில்லை உடலும், மனமும். புதிதாக சில விசயங்களை செய்து பாக்கலாம் என்றிருக்கிறேன், நாட்களை 'வழமை' என்பதாக வைத்திருப்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது?! எப்டியும் போகிற நாள்தான், ஆனால் அது நான் கடக்கிற நாளாக வேண்டும். இதுவொன்றும் அவ்வளவு சாதாரணமாக இருக்க முடியாது என்றும் தோன்றுகிறது, நாளை மற்றுமொரு நாள்தானே!


இப்போதைக்கு மெய்நிகரில் வாழப்பழகி விட்டிருக்கிற இந்த உடலும் மனமும் உண்மையை வெகு சமீபமாக பார்க்கையில் திணறிவிடக்கூடும், இந்த நாட்கள் தருகிற அசௌகரியம் பயம் தருவதாய் இருக்கிறது. ஒரே மாதிரியான நாட்களும் சலிப்பும் ஒருவிதமான கடுகடுப்பை எப்பொதும் கொண்டிருக்கிறன. மிக மந்தமான பிரக்ஞையோடிருக்கிற இந்த நாட்கள் இப்போதைக்கு கேவலமாகத்தெரிந்தாலும் பின்பொரு உன்னதமான பொழுதில் மென் முறுவலை வரவழைக்கக்கூடியவை என்று நம்புகிறேன். நம்புவோமாக.


இங்கே எழுதப்படுபவைகள் எல்லாம் எனக்காக நான் செய்பவை.எழுதுதல் என்பது எனக்காக நான் செய்வதாகத்தான் எப்பொழுதும் இருக்கும். உனக்கான திருப்தியை, சொறிதலை எதிர்பார்த்து நீ இன்னொருவனின் உலகத்துக்குள் நுழைய முடியாது வீணாக ஒரு அருமையான இலக்கியத்தை இழப்பதற்கு முயற்சிக்காமலிருப்பது உனது சந்ததிகளுக்கு நல்லது.

____________________________________________________________________


பொதுவில் சில :

#
திலீபனைப்பற்றி குறிப்பை எழுதியே ஆகவேண்டும் என்பதில் ஒரு அலுப்பாயிருக்கிறது. அவன் சின்ன வயசிலயே மனசில ஊறிப்போன ஒருத்தன். உங்களைப்போல அல்லது உங்களிலும் பார்க்க அவனை வெகு,வெகு அருகாமையில் நான் உணர்ந்திருக்கிறேன்.


#
தணிக்கைக்குழுவுக்கான எல்லைக்கோடுகளை சாதாரணமாக அகலம் பண்ணிக் கொண்டிருக்கிறது ஹிந்தி சினிமா, தமிழில் ஏன் இவ்வளவு திணறல் இந்த போலி அளவீடுகளை, பாதி மறைத்தலை இன்னும் எவ்வளவு காலத்துக்கு செய்யப்போகிறோம்.


#
The Piano Teacher - இந்தப்படத்துல நடிக்கிறப்போ அந்த நடிகைக்கு வயது அண்ணளவாக 50இருக்கலாம் : படம் குறித்து எதையாவது சொல்லியே ஆகவேண்டும் என்பதற்கு.


#

இந்தி சினிமா எவ்வளவு அழகிகளை கொண்டிருக்கிறது,சமீபத்தில் பாத்த அழகிகளுள் ஒருத்தி.




Radhika Apte @ Shor in the City as sapna.



#
The Dirty Picture - டிசம்பருக்கு வரப்போகிற படம் ட்ரெய்லரே கலங்குது வித்யாபாலனுக்கும், இந்த படம் சொல்லப்போகிற கதைக்கு சொந்தக்காரிக்கும் என் மனதளவில் இருக்கிற வித்தியாசத்தை உணர முடிகிறது.அந்த கண்ணகளும் நிறமும்.





#
ஒரு
கவிதையை எழுதி இருக்கலாம்
அதை எழுதத்தெரிந்தால்
அல்லது சொற்கள் கிடைத்தால்
அலையும் இந்த சொற்கள்
இலகுவில் வரிசைக்குள் வருவதில்லை.


______________________________________________________________

இந்த பகிர்வு சொல்லும் விசயம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் இலக்கியத்தில் இடிவிழ.

_________________________________________


மிகுதி நேரமும் சூழலும் கிடைக்கும்பொழுது.

Saturday, July 30, 2011

ஸ்ரீதேவி,சில பாடல்கள்...

சமீப நாட்களில் நான் கேட்ட பாடல்களில் பெரும்பாலும் ஸ்ரீதேவியின் பாடல்கள் இருப்பதாய் நினைக்கிறேன். கடந்த இரவில் கேட்டுக்கொண்டிருந்த இரண்டு பாடல்களில் இது ஒன்று. பாரதியாரை துணைக்கு வைத்துக்கொண்டு கண்ணதாசன் எழுதிய பாடல்.





//
மோகனப்புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப்போலிருந்தேன்
ஊமையைப்போலிருந்தேன்...
//

நாணம் மறைக்கிற அந்த காதலின் இன்பத்தை அனுபவிச்சு சொல்லுறதுக்கு இதைவிட வேறென்ன மொழி வேணும்.

ஸ்ரீதேவி அந்த வேடத்தில் பொருந்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.தமிழில்தான் ஸ்ரீதேவியின் திறமை ஓரளவுக்கேனும் பயன்படுத்தப்பட்டிருப்பதாய் நான் நினைக்கிறேன் கமல் அடியெடுத்து பாடிக்கொடுத்ததும் அவர் காட்டுகிற அந்த பாவம் இப்பபொழுதிருக்கிற நடிகைகளில் எத்தனைபேருக்கு வரக்கூடும்.

காட்சிப்படுத்தலில் சில சறுக்கல்கள் இருந்தாலும் ஸ்ரீதேவியைப்போலவொரு அழகியொருத்தியை அல்லது மனதுக்கு நெருக்கமான பெண்மையொன்றை பாடச்சொல்லி கேட்டுக்கொண்டிருப்பதில் சலிப்பேதும் இருக்காதென்பது இந்த தனிமையின் நாட்கள் சொல்லுகிற உண்மை.

___________________________________________________



//
பூலோகம் மறைய மறைய
தெய்விகம் தெரிய தெரிய
வைபோகம்தான்.
//

துள்ளுகிற இளமையும், நளினமும் நடனமும், அந்த முகமுமாய் ஸ்ரீதேவி என்கிற அழகி. அழகில் தழையப்பொருந்துகிற சேலையில் 'என்ன வடிவடா அது'. இந்தப்பாடலை பார்க்கிற நேரங்களில் எல்லாம் பாழும் இந்த நாட்களின் மந்தம் எரிச்சலாயிருக்கும். பாடலில் நான் வியக்கிற இன்னுமொன்று எப்படி இருக்கினறன இந்த சேலைகள் அவை பெண்ணுடலுக்கே உரியனவை போல.





_______________________________________________

//
குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு
ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்//

"ஆகாயகங்கை பூந்தேன் மலர் சூடி"பாடலில் இந்த வரிகள் இரண்டாம் முறை வரும்பொழுது இருக்கிற அழகை நெருக்கமான பெண்மைகளிடம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் சாதாரணமாய் நிகழ்கிறதாய் இருந்தாலும் காதலிகள் "சாகடிக்கிறடி" என்று கிறங்க வைக்கிற அநியாயத்துக்கு அழகாய் இருக்கிற சாயல்களில் இதுவுமொன்று.

தொடக்கத்திலேயே நம்மை பாடலுக்குள் கொண்டு போய்விடுகிறது ஜானகியின் குரல்,என்ன குரல் அது! மலேசியா வாசுதேவனினன் குரல் இந்தப்பாடலுக்கு பொருந்திவிடுகிறது இளையராஜாவுக்கு குரலை இசையாகவும் இசையை குரலாகவும் செய்யத்தெரிகிறது,சமயங்களில் மௌனத்தையும்.

_____________________________________________________


எனக்கு பிடித்தமான பாடல்கள் என்று இவற்றை எப்பொழுதும் சொல்ல முடியாவிட்டாலும் இவை அனேகம் பேருக்கு பிடிக்கிற பாடல்கள்தான். பாடல்களை @facebook பகிரலாம் என்று நான் நினைக்கும்பொழுதெல்லாம் யாரோ ஒருவர் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள், பார்க்கலாம் இனி அவ்வப்போது அந்தந்த நேரத்தில் கேட்டுக்கொண்டிருக்கிற பாடல்களை பகிராலம் என்றிருக்கிறேன்.

இங்கே சொல்ல வேண்டிய இன்னுமொன்று எல்லா பாடல்களும் எப்பொழுதும் ஒரே மனோநிலையை கொடுப்பதில்லை அதே போல் எல்லா நேரங்களிலும் பிடித்தமான பாடல்களைக்கூட கேட்க முடிவதில்லை.

ஒரு பாடல் தனியே இசையாகவோ,காட்சியாகவோ,குரலாகவோ இருப்பதேயில்லை அது யாரையாவது எதையாவது நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது.உனக்கும் எனக்கும் பிடித்தாமான பாடல் அறையில் நிரம்பிக்கொண்டிருக்கிறது, வழிகிற உன் நினைவுகளை மதுக்கோப்பைகளில் நிரப்பிக்கொண்டிருக்கிறேன். என்றென்றைக்குமானதாய் இருந்து விடுகின்றன சில பாடல்கள் எப்பொழுதும் தீராததாய் இருந்து விடுகின்றன நினைவுகள்

நீயொரு
இசையாகவும்
நினைவாகவும்
எப்பொழுதுமிருக்கிறாய்.

___________________________________________________



இந்த பதிவின் சாயலுக்கு வெளியே ஒரு சின்ன குறிப்பு:

ஸ்ரீதேவிக்கு பதின்மூன்று வயதாகும்பொழுது மூன்றுமுடிச்சு படம் வெளிவந்திருந்தது. அப்ப கமலுக்கு வயது 22 ரஜனிக்கு வயது 26 ரஜனியின் அப்பாவா நடிச்ச கல்கத்தா விஸ்வநாதனுக்கு வயது47. 13 வயதிலேயே ரஜனியை போடா கண்ணா போ என்று கடுப்பேற்றுகிற ஒரு பெரிய கதாநாயகிநாக ஸ்ரீதேவி இருந்தும் பிற்காலங்களில் ரஜனியை விழுந்து விழுந்து காதலிக்கிறவராகவே வர முடிந்திருக்கிறது ரஜனியும் வயதாக ஆக நடிப்பதையெல்லாம் விட்டு வசனம் பேசவும் வேறெதுவும் செய்யவும் பழகிக்கொண்டார்.


எனக்குத்தெரிந்து வெளிநாட்டுப்படங்களில் கலக்குகிற அனேகம் நடிகைகள் முப்பதுகளின் தொடக்கதில் இருக்கிறவர்கள்தான் ஆனால் இந்திய சினிமா குறிப்பாக தென்னிந்தியா சினிமா மிகமோசமான கதாநாயக வழிபாடுகளைக் கொண்டது என்பதில் நடிகைகளின் நிலை கவலைக்கிடமானதாகவே இருக்கிறது.

கமலும் ஸ்ரீதேவியும் கிட்டத்தட்ட 27 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள், இப்பொழுது சினிமா அப்படி இருப்பதில்லை. ஒரு நடிகை மூன்று படங்களில் சேர்ந்து நடிப்பது என்ன தொடர்ந்து மூன்று வருடம் இருப்பதே பெரிய விசயமாயிருக்கிறது. புதிய நடிகைகளின் வரவும் போட்டியும் அதிகரித்திருக்கிற அதேநேரத்தில் புதிய நடிகைகள் அல்லது பெண்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதும் அலசப்பட வேண்டிய விசயங்களில் ஒன்று.


மொத்தமாக சினிமா ஓரளவுக்கு இந்த விசயத்தில் மாறிக்கொண்டிருந்தாலும் தென்னிந்திய சினிமா பெண்களை பெரும்பாலும் கவர்ச்சிமுதலீடாகவும் சினிமாவை பாலியல் வணிகமாகவுமே இன்னமும் வைத்திருப்பதாய் நம்புகிறேன்.

நடிப்பதை விட்டு உலகப்படங்கள் பார்க்கப்பழகிக்கொண்ட உலகநாயகர் மாதிரி ஆக்களின் மூலம் த்ரிஷாவுக்கு செருப்பா நடிக்கவும் தயாயிருக்கிற மனங்கள்தானே தமிழ் மனங்கள். தமிழ்நாட்டையோ தமிழ்மனங்களையோ திருத்தவே முடியாது. இரத்தங்கொடுத்து படம் பாக்கிற பேயன்கள் இருக்கும் வரை பல்லிளிக்கிற தொலைக்காட்சிகள் இருக்கும் வரை இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.


ஒரு முக்கிய குறிப்பு அல்லது தடம்மாற்றுதல் :.

வரும் August13ம் திகதி சிவகாசியில் பிறந்து மும்பையில் வாழ்ந்து வருகிற மாலினி ஐயராகிய மயிலு என்கிற ஸ்ரீதேவிக்கு பிறந்த நாள் என்பதை அறிகிறேன். "நாடிருக்கிற கேட்டில இப்ப இதான் முக்கியம்" என்று நினைக்கிறவர்கள் என்னை திட்டவும் மற்றவர்கள் விரும்பினால் வாழ்த்தவும் தடையொன்றும் இல்லை.




"Kubsuratki khabi umar nai jathe"

Saturday, July 23, 2011

சாத்தான்.

அளவில்லாத வரைக்கும் குடிக்கலாம்..
ஆடைகள் அவிழ்வது தெரியாமல் உறங்கலாம்
கடந்து போன பெண்ணொருத்தியை
கனவுகளில் கொண்டு வரலாம்.
இந்த இரவுகளை சபிக்கலாம்
சுய உச்சங்களுக்கான காரணங்களை நியாயப்படுத்தலாம்
என்ன இருந்தாலும் என்னை காறி உமிழ்கிற தூரத்தில்
எந்த கடவுள்களும் இல்லை என்பது ஆசுவாசமாயிருக்கிறது.

Monday, May 23, 2011

ஒரு பாடல் அல்லது மாறுதலுக்கான குறிப்பு.




தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்.



இதை நான் பாவப்பட்ட என்றுதான் எப்பொழுதும் பாடியிருக்கிறேன். கேட்ட காலம் முதல் பிடித்தமானதாய் இருக்கிற இந்த வரிகளுக்கு காரணமெல்லாம் தெரியாது,ஒரு வேளை நீயாக இருக்கலாம். நீயோ உன் வாசல்களை திறக்கவே மாட்டேன் என்றிருக்கிறாய்.

________________________________________________________________

முட்டம் மக்கள் எதை மறந்திருந்தாலும் கடலோரக்கவிதை படத்தை மறக்க மாட்டார்கள். முட்டம் மக்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் அந்த கடலை,அலைகளை, அழகை அறிமுகம் செய்தவர்,திரையில் நிரப்பியவர் பாராதிராஜா. நான் அறிந்த வரையில் கடலோரக்கவிதைகள் படம் முழுவதும் முட்டத்தில் எடுக்காவிட்டாலும் பெரும்பங்கு காட்சிகள் முட்டத்தில் எடுத்ததாக அறிகிறேன்.கடலோர கிராம வழக்குகளை பாரதிராஜா சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை,கடல் பூக்கள் படங்களும் முட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை கொண்டிருக்கின்றன.

_______________________________________________

வைரமுத்துவும் இளைராஜாவும் சேர்ந்து தந்த மயக்கங்களில் இதுவும் ஒன்று, இதுதான் கடைசியானது எனவும் அறிகிறேன்.

இந்த மாதிரிப்பாடல்களெல்லாம் இளையராஜா என்கிறவர்தான் தந்திருக்கிறார். தமிழிசை என்று மட்டுமே சொல்லி விட முடியாத- பொங்குகிற மனதை, பொத்திங்கிடந்த உணர்வை, காதலை, தன்னிலையின் மாற்றங்களை,தவிப்பை கோர்வையாக்கிவிடுகிற இந்த இசைக்கும், குரலுக்கும் நாம் வெறுமனே இளையராஜா தமிழ் மட்டும்தான் உலகத்தரம் புதிய இசைகள் என்று நமக்கு மீறிய வார்த்தைகளை சொல்வதில் எனக்கு உடன் பாடில்லை. இசையை அந்த மக்களின் கலாச்சாரத்தை பதிவிக்கிற, காலம் கடக்கிற ஒன்றாக இதைத்தான் சொல்ல முடிகிறது.அனேகம் பேர் சொல்வது இசைக்கு மொழியில்லை என்பது; சரிதான் ஆனால் நினைவுகள் இருக்கிறது இசை எப்பொழுதும் நினைவிலேயே கட்டி எழுப்பப்படுவதாக நான் நம்புகிறேன்.

என்னுடைய நினைவுகளை இந்த பாடல்கள் தருகிறது. நினைவை நகர்த்துகிற, நிகழை மறக்கடிக்கிற, நினைவை கிளர்த்துகிற இசை இப்படியான சில பாடல்களிலேயே இருக்கிறது

________________________________________________________


##
இப்பொழுது இந்த குறிப்பை எழுதுவதற்கும் சில நினைவுகளும் நீயும் காரணமாயிருக்கலாம்.

##
இதை எழுதிய நாளுக்கும் இன்றைக்கும் இடையில் ஒரு சில நாட்களே இருக்கலாம் ஆனால் இந்தக்கேள்வியை இன்னும் பலமாக கேட்கிற நிலையில்தான் நீ இருக்கிறாய்.

##

வெகு நாட்களுக்கு பிறகான எழுதக்கிடைக்கிற இந்த மனோநிலைக்கும் உனக்கும்.

Saturday, March 26, 2011

பேசப்படாத சொற்கள்...

எப்பொழுதும் பிடித்தமான சொற்களை பேச முடிவதில்லை
எனக்கும் அவளுக்கும் இடையில் கூட நிகழ்வதில்லை
எப்போதும் அணுக்கமான சொற்களை எழுதவும் முடிவதில்லை எனக்கு
எல்லோருக்கும் அணுக்கமான சொற்களையும் கூட...

பொதுவாக எவ்வளவு பேசினாலும் தீராதவை
பல நேரங்களில் தீர்ந்த பிறகும் திருப்தி தராதவை
எப்பொழுதாவது ஒற்றைச்சொல்லில் நிரம்பிவிடுகிறது மனம்
சில நேரங்களில் சொல்ல முடியாதவையும் கூட
தேவையான நேரங்களில் தாமதமாகி விடுகிறவைகளின் விலைகள்
கொடுக்க முடியாததாகவே இருக்கிறது

எனதும் உனதும் மனங்களைப்போல அவை
ஒரு போதும் கெட்டுப்போவதில்லை

இன்னும்...இன்னும்
வெகு அரிதாகவே அவை தேவைப்படாமலிருந்தாலும்
வெளியில் சொற்கள் சொற்களாகவே இருக்கின்றன.


_____________________________________________________


பேசிவிட முடியாத எல்லாச்சொற்களையும் போலவே சரியாக எழுதப்படாத இந்த சொற்கள் குறித்த சொற்களும்.

பெரும்பாலும் மனிதர்கள் சொற்களால் நிரம்பி இருந்தாலும் எல்லோருக்கும் அவற்றையெல்லாம் பேசக்கிடைப்பதில்லை.

சொற்கள் குறித்து பேச நிறைய இருந்தாலும் இப்போதைக்கு இவ்வளவும்.

Friday, March 4, 2011

அன்பை மறுதலித்தல் அல்லது மன்றாடுதல்.

"
ஒன்றினுக்காய் உருகுவது
ஒன்றினுக்காய் இன்னொன்றினை
விட்டுக்கொடுப்பது
சதா அதே நினைப்பாய் இருப்பது
எங்கு சென்றாலும் பின் தொடர்வது
கேர் கேரிங்
வித் லவ்
பிரியங்களுடன்
முத்தங்களுடன்

இதையெல்லாம் விட ஆபாசமான சொற்கள்
வேறெதுவும் இருக்க முடியாது... "
- அய்யனார்.


நீ எனக்கு ஏதோ ஒரு நினைவில்லாத நாளில் அறிமுகமாகியிருந்தாய் ஆனால் உன் அறிமுகம் எனக்கு நினைவிருக்கிறது.'நீ யார்' என்கிற கேள்விகளோடு நம் உரையாடல் தொடங்கியிருந்தது,கூடவேஅந்த புகைப்படத்தை எனக்கு அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாய் உள்ள உரையாடல் உன்னிடமிருந்தது. நீயும் உன் தோழிகளும் எப்பொழுதும் அப்படித்தான் என்றாலும் உன்னிடம் குறைந்த பட்டசமெனினும் உண்மைகள் இருந்தன அது இந்த உண்மையற்ற உலகின் அதிகபட்சமாய் இருந்தது. அது எனக்கு பிடித்திருக்கிறது இப்பொழுதும் நீ உண்மைத்தன்மைகளோடு இருக்கிறாய் என நம்புகிறேன். முழுவதுமாய் உண்மையாய் யாராலும் இருக்க முடிவதில்லை. யாராலும் என பொதுமைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை எனக்கு முடிவதில்லை.ஆனால் முடிந்தவரை உண்மையாய் இருக்கிறேன் என நம்புகிறேன் இல்லையெனில் என்னால் குடிக்காமல் இத்தனை நாட்கள் இருக்க முடியாது. உண்மைகளை பேசுதலும், உண்மையாய் இருத்தலும் ஒருவகையில் போதையானது. உண்மை விரைவில் சலிக்கும் என்றாலும் அதன் நகர்வுகள் அதிசாத்தியமானவை.

ஒரு உண்மை முடியத்தொடங்கும்பொழுதே அது அடுத்த நகர்வை தந்து விடுகிறது.குற்றவுணர்வுகளின் வஞ்சனைகள் எதுவுமில்லாமல் விலகிவிட உண்மைகளுக்கு சாத்தியம் அதிகமாய் இருக்கிறது. உடல் தனக்கான பசியை எப்பொழுதும் தக்க வைத்திருக்கிறது. ஒரே உடல்தான் பாவம் என்று நீ நம்புகிறவைகளையும் புனிதம் என நீ நம்புகிறவைகளையும் செய்கிறது.பாவமும் புனிதமும் உடல் சார்ந்தே கட்டமைக்கப்படுகிற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழல் போலிகளின் குரூரபிம்பங்களை மறைப்பதற்கான மேடையாகவிருக்கிறது உள்ளேயிருக்கிற குப்பைகளை தெளிவாக தவிர்த்து ஒழுக்கம் பேசுகிற சூழல்தானே நம்முடையது. மூடிவைத்தாலும் பாவம் பாவம்தான்.

உனக்கு முன்பொரு முறை சொல்லியிருப்பதைப்போல உன் குரல்களை என்னிடம் அனுப்பு உண்வுகளோடு உயாடப்பழகு குரல்களால் ஒரு கட்டத்துக்கு பிறகு பொய் பேச முடிவதில்லை. தன்முனைப்புகள் அறுந்து போக அவை தம் உடல்களை பேச தொடங்கிவிடுகிறன்றன நிர்வாணமான சொற்கள் உன்மத்தமாய் இருக்கக்கூடும் அவை பொய் பேசுவதில்லை என்பதாலேயே அது சலித்துப்போக்கூடும். மற்றுமொரு தருணம் வரும் வரைக்கும் உண்மைகள் காத்திருக்கின்றன எந்த குற்றவுணர்வும் உண்மைகளுக்கு இருப்பதில்லை பிரிவுகளுக்கு பிறகும் அவைகளால் நிகழுக்கு பொருந்த நெருங்க முடியும்.


இந்த உரையாடலுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை என்று நான் நம்புகிற சில விசயங்களை இங்கே தட்டச்ச வேண்டியிருக்கிறது.முன் பின் அறியாத முகம் தெரியாத இரு உடல்களின் தொலைபேசி வழியான புணர்வுகளின் பரவல் குறித்து நீ அறிந்திருப்பாய், அந்த குரல்கள் உண்மையாய் இருக்கக்கூடும். அவை வெறுமனே பேசப்படுகிற வார்த்தைகளை அலங்காரம் செய்யப்பட்ட வெறும் சொற்களை உடல்கள் கண்டு கொண்ட பிறகு அவை தமக்கான பசியை தீர்த்துக்கொள்வதில் தீவிரமாய் இயங்க ஆரம்பிக்கின்றன. அவை மூடி வைக்கப்பட்டிருக்கற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழலின் போலித்தனங்களின் தடைகளை தமக்குத்தெரிந்த வழிகளினல் மீறுகின்றன. அவை ஆபத்தானவையாய் இருப்பினும் கூட திடீரென கிடைக்கிற உண்மையின் கிளர்வு மற்றும் உடலின் வேட்கைக்கான தற்காலிக தீர்வும் அசந்தர்ப்பங்களாக கசப்பான இந்த விசயங்களை நடத்தி விடுகின்றன.திறந்து விடப்பட்ட யாழப்பாணத்தின் இந்தப்பூனைகளா என்கிறதைப் போலானவர்களின் அந்தரங்கங்கள் குறித்து இவை பேசினாலும் உண்மை மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இந்த வெறும் விளக்கமற்ற குரல்களிலும் எனக்கு கோபமிருப்பதனால் இதை பின்பொரு விரிவான தளத்தில் உரையாடுவதற்காக விட்டுவிடலாம்.

________________________________________

காதல் குறித்த உன் அத்தனை கேள்விகளும் என்னிடமும் இருக்கிறது ஆனால் குறைந்த பட்டசமேனும் உண்மையான பதில்கள் என்னிடம் இருக்கிறது அவை உன்னிடம் இல்லாமல் போகலாம்.

தனக்கான ஒரு பொருந்தலை, உடலை, மொழியை ஒரு உயிர் கண்டு கொள்கிற கணங்கள் காதல் என்பதாய் இருக்கக்கூடும். உடலை தவிர்த்து மொழி தனியேயும் மொழியை தவிர்த்து உடல் தனியேயும் இயங்குவது நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு உறவாக இருக்கலாம்.மொழி என்பது சத்தங்களால் ஆனது மட்டுமல்ல பேசாதிருத்தலும் ஒரு வகையில் பேசுதலே.

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்கான முழுமையை நீ கண்டு கொள்வதற்கு நீயும் நானும் இன்னும் பேச வேண்டியிருக்கலாம். அதை சொல்வதன் தயக்கம் உன் உண்மைத்தன்மைகளின் மீதான கேள்விளை எழுப்புகிறது. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பது ஒற்றைத்தன்மையுடையதாய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தனியே என்னைச்சார்ந்து மட்டும் இருக்க முடியாது.

அடிப்படையில் நீடித்த அன்பென்ற எதுவும் இருக்க முடியாது என்பதை நீ ஏற்றுக்கொள்கிறாய்தானே. எப்பொழுதும் காதல் நிரம்பிய வார்த்தைகளை என்னால் பேச முடியாது. எல்லா சமயங்களிலும் நம்பிக்கை தருகிற சொற்களை பேசுவது மிக மோசமான முகமூடிகளில் ஒன்றாய் இக்கலாம். வெறுமனே காத்திருப்புகளும் புனிதக்கதைகளும் கொண்டு காதல் பேச முடியாது. பசித்த உடல்கள் தோற்றுப்போய்விடுகின்றன; இதற்கு எனக்குதெரிந்து பத்து வருடங்கள் காதலித்த சயந்தனையும் சுனிதாவையும் குறித்த கதைகளை உதாரணமாக கொள்ளலாம் (எழுதப்படாத நாவல் ஒன்றில் நீளமான காதல் கதையிலிருந்து சில பகுதிகள் என்கிற கதையிலிருக்கிறது) சந்திக்க முடியாத தூரங்களில் இருக்கும் உறவில் (long distance relationship) எனக்கு பிடிப்பிருப்பதில்லை. அது வெறும் நிர்ப்பந்தங்களின் திணிப்பு, ஒரு வகையில் தன்னைத்தானே ஏமாற்றுதல். ஏற்கனவே இருந்த காதலையும் அன்பையும் கூட காத்திருப்பின் நிகழ் கலைத்துப்போட்டுவிடுகிறது என்பதே உண்மையாயக இருக்கலாம். காதல் தனித்திருக்கிற இரண்டு உடல்களின் மொழி, புரிதலின் வெளிப்பாடு. புனிதங்களும் ஒப்பனை செய்யப்பட்ட கதைகளும் அவற்றின் போதாமையை விரைவிலேயே நிரூபிக்கின்றன. அவை நம் சாதிய, மற்றும் கலாச்சார சமுதாய கட்டமைப்பின் சுதந்திரமற்ற தன்மையினால் வெளியே தெரியாமல் மூடப்படுகின்றன. அன்பு எப்பொழுதும் விறைத்த குறிகளைப்போல துருத்திக்கொண்டிருப்பதில்லை அது இயல்பாக வெளிப்படுகிற ஒன்று அதன் தருணங்களை கண்டடைதலும் நீட்டித்திருப்பதிலுமே பெரும்பாலான உறவுகள் வெற்றியடையக்கூடும் அவளை அவளாகவும் அவனை அவனாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது பொருந்துகிற உயிர்கள் ஒன்றை ஒன்று அதனதன் இயல்பு மாறாமல் ஏற்றக்கொள்தலே சிக்கலற்ற உறவு முறைக்கு சாத்தியமாயிருக்கலாம்.

காதல் எதிர்பார்ப்புகளின்பால் உருவாகிறது என்றாலும் திணித்தல் அதன் ஆயுளை குறைக்கிறது. புரிதல் என்கிற ஒன்றை குறித்து பேசாமல் எந்த உறவும் இருக்கவே முடியாது.
பரஸ்பரம் பயன் படுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற எந்த உறவும் தெரிந்தே சொல்கிற நேர்முக நிகழ்வுகளின் பொய்களைப்போலானவை, வெறும் மேடைகளுக்கானவை திரைக்குப்பின்னால் அவை ரகசிய விசாரணை அறைகளின் மூலையில் இருக்கிற இருளைப்போல அழுத்தமாய் உணரக்கூடியவை.

போதும் மாயா... சோர்வாயிருக்கிறது இப்போதிருக்கிற மனோநிலையில் அன்பை எவ்வளவு மறுதலித்தாலும் அது தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.
இதை நான் உன்னோடு பேசவேண்டும் என நினைத்திருக்கவில்லை.ஆனால் யாருடனாவது பேசினால் தீரும் என்றிருந்திருக்கிறேன் வழக்கம்போல 'வேற பிராக்கில்லை' என்றே இதையும் சகித்துக்கொள்வாயாக.




உனக்கு பிடிக்காத சொற்களை
நான் எழுதாமலிருந்திருக்கலாம்
எனக்கு பிடித்தமான சொற்களை
நீ பேசாமலிருந்திருக்கலாம்


என்னை நீ அறிவாய் என்பதில்
எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது மாயா
உனது நெருக்கம்
எனக்கு நம்பிக்கை தருவதாய் இருக்கிறது
ஒப்பனை செய்யப்பட்ட வார்த்தைகளை
இனிமலும் உன்னோடு பேசப்போவதில்லை

நேரடியான சொற்களைக்கொண்டு இந்த
கசப்பான உரையாடலை மறந்து விடுவோம்

என்னை சகிக்கிற உன் திமிரை
மதுக்கோப்பைகளில் வழிய விட்டபடி
முத்தங்களுக்கான இடைவெளிகளில் அமர்ந்தபடி
இரவு முழுவதும் பேசலாம்.

ஏதோ ஒரு கணத்திலேனும்
காதல் நிகழும் படிக்கு நானும்
நிகழாதிருக்கும் படிக்கு நீயும்
பிடித்தமான பூனைக்குட்டிகளாய் மாறிவிடலாம்.


____________________________________________


பின் குறிப்பு:

//
இந்த பகிர்வை சாத்தியப்படுத்துகிற மாயா- 'ரகசியங்கள் உலாவுகிற அறையில் உறங்குபவள் பற்றிய குறிப்புகளுக்கு' சொந்தக்காரி இவளைக்குறித்து பின்னர் பேசலாம். இதுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் என்னை சகிக்கிற அவளுடைய கோபங்களுக்கு நன்றி.

//
அய்யனாரை துணைக்களைத்தபடி நிலைதகவல்களில் உரையாடுதல் என்பது இந்த குழம்பலின் தொடக்கப்புள்ளி, நன்றி அய்யனார்.

Friday, February 25, 2011

திவ்ய பாரதி - ஒரு எழுதி முடிக்கப்படாத குறிப்பு.



இந்த முகம்..



இந்த கறுப்பு வெள்ளை புள்ளி போட்ட ஆடையில் இதே மாதிரியானதொரு தோற்றத்தில் பிராச்சி தேசாய் once upon a time in mumbai படத்தில் வந்திருப்பார்.





இந்த கண்கள்...





இந்த அழகின் திமிர்..

_________________________________________________________

எனக்குத்தெரிந்த அளவில் இருபத்தியொரு படங்கள், இந்திய ஆண்மனங்களின் கனவுகளில் நுழைந்தது, முன்னணி நடிகர்கள் அனேகரும் தங்கள் படங்களில் நடிக்கவேண்டுமென விரும்பிய ஒரே அழகி, குறுகிய காலத்தில் அதிக வெற்றிப்படங்கள் என வெறும் பத்தொன்பதே வயதில் செத்துப்போன திவ்யபாரதியின் மறைவு இன்றைக்கும் மர்மமானதாகவே இருக்கிறது.

வசீகரங்களின் அசாதாரணமரணம் எப்பொழுதும் புதிர் நிறைந்தாகவே இருக்கிறது ஷோபா சில்க் என்று தமிழ் மனங்களை கொள்ளையடித்திருந்த அழகிகளின் சாவு அழுத்தமானவைதாம்.
சாவு மறைந்துவிடுகிற மரணம் இவர்களுடையது காலம் எதிர்பாராமல் பிரபலமாகிவிடுகிற இந்த முகங்களின் நிலைத்தல் அசாத்தியமானது.


திவ்யபாரதியை அவர் சாவதற்கு முன் நான் திரையில் பார்த்ததே இல்லை என்றாலும் இன்றும் ஹிந்தி சினிமா ரசிகர்களின் மனதில் அவருக்கான இடம் இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்பொழுது இருக்கிற நடிகைகளை தெரிகிறதோ இல்லையோ திவ்யபாரதியை அனேகம்பேருக்கு தெரிந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையில் சிங்கள நண்பர்களுக்கு திவ்யபாரதியை நனக்கு தெரிந்திருக்கிறது. இலங்கையைப்பொறுத்த வரையில் தமிழர்களைவிட சிங்களவர்களுக்கு ஹிந்திப்படங்கள் குறித்து அதிகம் தெரிந்திருந்தது. ஹிந்திப்படங்களை அதிகம் பார்க்கிறவர்களாக சிங்களவர்களே இருந்திருக்கிறார்கள்.





தற்செயலாகத்தான் இந்தப்பாடலை பார்க்க நேர்ந்தது அதற்கு பிறகே இவரைக்குறித்து தேடிப்பார்த்தேன் வெறும் பத்தொன்பதே வயதில் இறந்து போனர்,அது ஒரு துர்மரணமாய் இருந்தது. அத்தோடு இதேபொல முன்பொரு முறை சில்க் நடித்த ஒரு பாடலின் மூலம் அவரைக்குறித்து தேடிப்பார்த்தபொழுது அதே நாளில் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்திருந்தார் என்று தெரிய துணுக்குற்றுப்போனேன். அங்கே நான் எழுதிய சின்னக்குறிப்பை இன்னொரு நண்பர் பகிர்ந்திருந்தார்.அது அந்த வருடத்தின் சில்க் குறித்த முதல் பகிர்வாய் இருந்தது.


இப்பொழுதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் திவ்யபாரதியை தேடிய பொழுது அவர் பிறந்தது feb 25 என அறிந்து கொண்டேன். அப்பொழுதுதான் பத்தொன்பதுக்கு வந்திருந்த திவ்யா சாகும் பொழுது கைவசம் ஏறக்குறைய பன்னிரண்டு படங்களை வைத்திருந்திருக்கிறார். 16வயதில் சினிமாவுக்குள் வந்து ஆக மூன்றே வருடங்களில் அதிகம் படங்களை தன் வசம் எடுத்துக்கொணட்ட திவ்யபாரதிக்கு தொழில் முறை எதிரிகள் கூட இருந்திருக்கலாம்.

மிக வெளிப்படையான இந்த அழகின் மரணம் ஒரு பின்னிரவில் நடந்திருக்கலாம். நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் இந்த குறிப்பை எழுதி முடித்திருக்கும் இந்த நேரத்திற்கு முன்பாக. மக்களை கவர்ந்துவிடுகிற மரணங்கள் ஒரு வித துர்க்கனவாகவே இருக்கின்றன. இந்தக்குறிப்பும் ஒரு துர்க்கனவின் குறிப்பே.


Divya Bharti:

பிறந்தது 25 february 1974 மும்பை.

மறைந்தது 05 April 1993 மும்பை.

Monday, February 21, 2011

சினிமா - சில உதிரிக்குறிப்புகள்.

நீங்கள் எப்போதும் புது முகங்களைத் தேடுகிறீர்கள் பெரிய ஹீரோக்கள் நீங்கள் கேட்டால் வர மாட்டார்களா என்ன ?

ஹீரோக்கள்- அவர்கள் எல்லாம் செய்து சாதித்து முடித்துவிட்டது போல இருக்கிறார்கள். இமேஜ் பார்க்கிறார்கள்.இமேஜ் என்பதை தூக்கி எறிந்துவிடக்கூடிய எந்த ஹீரோவுடனும் நான் பணியாற்றத் தயாராக இருக்கிறேன், சினிமா என்பது விளையாட்டு அல்ல என்பதை உணரும் எந்த நடிகரும் என்னோடு பணியாற்ற தகுதியானவர்தான். -


ஆனந்த விகடனின் ஏதோ ஒரு பேட்டியில் இயக்குனர் Anurag Kayshap.



இந்த பதிலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற ஹீரோ Abhay Deol நான் பார்த்த இவருடைய முதல் படம் தேவ் டி தான்.அதற்கு பிறகு சில படங்களை பார்க்க வேண்டும் என்று பார்த்திருக்கிறேன். கடைசியாக பார்த்த இவருடைய படம் DevBenegal இயக்கிய Road,Movie. இரண்டு பெயர் போல இவருடைய மற்றைய படங்களுக்கும் பெயர்கள் அப்படித்தான் இருக்கிறது. பல நாட்கள் பார்க்காமல் இருந்து கடந்த வாரம்தான் பார்த்திருந்தேன். வெகு குறைவாகவே மக்கள் பயன்படுத்துகிற ஒரு தனித்த பாதையில் நெடுந்தூர பயணம் ஒன்றில் சந்திக்கிற நாலுபேரைக் குறித்தது இந்தப்படம்.

தகப்பனின் எண்ணெய் வியாபாரத்தை விரும்பாத நடுத்தர வர்க்கத்து கனவுகளை கொண்டிருக்கிற ஒருவன் அதிலிருந்து தப்புவதற்காக கிடைக்கிற சந்தர்ப்பமாக முன்னாளில் ஒரு நகரும் திரையரங்காக இருந்த ஒரு பழைய ட்ரக் வாகனத்தை வெகு தொலைவில் இருக்கிற நகரத்திற்கு கொண்டு செல்ல சம்மதிக்கிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கிற மனிதர்களும் சம்பவங்களும், முடிவில் அவன் தன்னை கண்டுகொள்வதுமாக கதை சொல்கிறது படம். தண்ணீரைத்தேடி அலைகிற ஜனங்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறுமனே வெளியாக கிடக்கிற இந்த பூமியை பார்க்க பயமாக இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த உலகம் தண்ணீரோடு இருக்கும்? எனக்கென்னவோ இந்தப்படத்தில் என்னை பாதித்தது தண்ணீர்தான். உலகம் எவ்வளவு விசயங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனித விழுமியங்களில் எவ்வளவு தாக்கங்களை உண்டு செய்கின்றன. உண்மையில் பயணங்கள் கற்றுத்தருகின்றன.


கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்தாலும் சில நல்ல படங்களை நடித்திருந்தாலும் இன்னும் ஒரு புது நடிகரைப்போலவே ஆர்வமாய் இயங்குவது அபய்டியோலின் பலமாய் இருக்கலாம். இவரின் பெரும்பாலான படங்கள் இந்தியத்திரையுலகின் வழமையான கதாநாயகத் தனங்களோடு பொருந்துவதே இல்லை. அதுவே இவரை நல்ல நடிகராக காட்ட போதுமானதாய் இருக்கிறது . தேவ்-டி படத்தின் தேவ் பாத்திரத்தை செய்வதற்கு இமேஜ் போன்ற ஒளிவட்டங்கள் இருக்கிற நடிகர்களால் முடியாது. இவர் நடிக்கிற பாத்திரங்களை தமிழில் இருக்கிற நடிகர்கள் நடிப்பதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியாது. கதா நாயக வழிபாடும் பால் ஊத்துகிற ரசிகனும் இருந்தால் எப்படி நடக்கும்.


குஷாரிஷ் (Guzaarish)

Sanjai Leela Bansali செய்திருக்கிற இந்த படத்தை என்ன வாழ்க்கை இது, என்ன் செய்து கொண்டிருக்கிறேன் நான் என்கிற ஒரு சினம்பிடித்த மனோநிலையோடு சரியில்லாத உடம்பு நிலையில் பின்னிரவொன்றில் பார்க்கத்தொடங்கினேன். படத்தின் பாதி போகிற வரைக்கும் கூட என்னிடம் பெரிய ஒன்றுதல் எதுவும் இருக்கவில்லை.ஆனால் படம் எடுத்திருந்த விதம் என்னை தொடர்ந்தும் அதனை பார்க்க வைத்தது என்றே நினைக்கிறேன் ஒளிப்பதிவு அல்லது ஒளியை திரையில் பயன்படுத்துவது என்கிற விசயத்தில் இந்த இயக்குனரின் ரசனை நுட்பமானது அது அவருடைய மற்றைய படங்களிலேயே உணரமுடியும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை முழுமையாக பயன்படுத்தியதும் இவர் என்று கூட சொல்லலாம். பிளாக் (Black) மற்றும் சாவரியா படங்கள் அதற்கு சாட்சியாகலாம். படம் தொடங்குகிற அந்த முதல் நொடியே படத்தின் நேர்த்தியை சொல்கிறது .


குறைவான ஒளியிலேயே கண்கள் பிரகாசமாய் இருக்கிறது. அது போல திரையில் ஒளியை அளந்து வைக்கிற நுட்பம் காட்சி ஊடகத்துக்கு மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன். ஒரு மஜிக் கலைஞனின் கண்கள் ஒளி நிரம்பியவை அவனது வாழ்வு குறித்த திரையில் கமராவையும், ஒளியையும் சரியான விகிதத்தில் பயன் படுத்தியிருக்கிறதாய் நான் நம்புகிறேன். ஒரிஜினல் டிவிடியில் அல்லது திரையில் காண்கையில் அனுபவிக்க முடியும் இந்த ஒளிப்பதிவின், தொழில் நுட்பத்தின் விசாலத்தை.


உடம்பில் தலையைத்தவிர வேறெதையும் அசைக்க முடியாத மஜீஷியன் ஒருவனது வாழ்வை, வாழ்வின் மீதான காதலை சொல்கிற படத்துக்கு இயக்குனர் தெரிவு செய்திருந்தது ஹிருத்திக் ரோஷனை. ஹிந்தி தி ரையுலக நடிகர்களின் எண்ணிக்கையோ அல்லது வருகிறவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை மிஞ்சுகிற அளவுக்கு இருப்பதிலோ என்னவோ ஹிருத்திக் முந்தையை படங்களில் இருந்து ஒரு பாய்ச்சலே நடத்தியிருக்கிறார் அவருடைய உடல் மொழியிலும் பார்க்க அந்த குரலில் இருக்கிற உணர்வு போதுமானதாயிருக்கிறது. இந்தக்கதையைப் பொறுத்தவரையில் ஹிருத்திக்கின் உடல்மொழியும் குரலும் பொருந்திக்கொள்கிறது. அது அந்த பாத்திரத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. முன்னாள் மெஜிக் கலைஞன் ஒருவனது தன் கருணைக்கொலைக்கான மனு குறித்த உரையாடல், நினைவுகள், துணைச்சம்பங்களோடு பயணிக்கிற கதையில். அவரை பராமரிக்கிற அழகான தாதியாக வருகிறார் ஐஸ்வர்யா, ஹா... அவர் வெறும் அழகி மட்டுமல்ல. சொல்லியே ஆகவேண்டிய ஒன்று ஐஸ்வர்யாவை சரியாக பயன்படுத்திய இயக்குனர்களில் இவரும் ஒருவர். இந்த நேரத்தில் நீங்கள் எந்திரனை நினைத்தால் உங்கள் மீது இடிவிழுக.ஐஸ்வர்யா இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்கு நடிக்கலாம். படத்தில் ஹிருத்திக் சொல்வது போல இப்படி ஒரு Nurse இருந்தால் எப்படி?!



வாழ்வை இருப்பை குறித்த கேள்விகள் இருக்கிற மனங்களை கவரக்கூடிய படம். நிற்கவிடாமல் துரத்துகிற பணம் பின்னால் ஓடுகிற வாழ்வில் சில இடைத் தங்கல்களைத்தானும் கண்டிராத மனங்களுக்கு சலிப்பாயிருக்கலாம் இந்தப்படம். the Sea inside படம் குறித்த பகிர்வுகள் வாசித்திருந்ததன் மூலம் இந்தப்படம் பார்க்கையில் எனக்கு அந்தப்படத்தின் ஞாபகம் வந்து போயிற்று. படம் பார்த்து முடித்த பொழுதில் Facebookல் எழுதிய சின்ன் குறிப்பு பின் வருமாறு.
//Guzaarish - a hindi film by Sanjai Leela Bhansali : எனக்கிருந்த மனோநிலையோ என்னவோ படத்தின் கடைசி நிமிடங்களில் கரைந்து போனேன்.நெடு நாட்கள் இல்லாத கண்ணீர் ஏதோ காரணங்களுக்காக மனதார செலவாகியிருந்தது. வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பர்களே மன்னிப்பதற்கு தயங்கவே வேண்டாம், சிரிப்பதற்கு கிடைக்கிற எந்த சந்தர்ப்பத்தையும் இழந்துவிடாதீர்கள்.

Sau gram z...indagi yeh
Sambhaal ke kharchi hai - from the movie//


Life is very short my friends... but it's long enough if you live with all your heart. so , go on break the rules, forgive quickly, love truly and never regret anything that made you smile.


Dhobi Ghat:

அமீர்கான் தயாரிப்பில் அவருடைய மனைவி இயக்கி வெளிவந்திருந்த இந்த படத்தை போன வியாழனன்று பார்த்திருந்தேன்.இப்பல்லாம் ஹிந்திப்படம் பாக்கிறதுக்கு ஆங்கிலம் அநியாயத்திற்கு தேவைப்படுகிறது. படம் கிளைத்தன்மைகளோடு பயணித்தாலும் தொகுப்பில் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிற திரைக்கதையாக உணர்கிறேன். சின்னசின்னதாய் ரசிக்க விசயங்கள் இருக்கிறது. பின்னணியில் வருகிற அந்த பாடல்களின் இசை எனக்கு பிடித்திருந்தது. அவள் தனியாகவும் அவன் அந்தப்படத்தையும் வரைகிற பொழுதுகளில் இருவருக்கும் இடையில் இருக்கிற உணர்வு ஒரே நேரத்தில் அதனை திரையில் காட்சிப்படுத்திய இயக்குனரின் தனித்தன்மை.அமீர்கான்,மோனிக்காவின் உடல் மொழி.அமீர் அந்த சாவை கண்டுகொண்டபின் அந்த இரவில் முடிகிற காட்சி, வண்ணம் கலையாத கைகளோடும் அந்த செயினோடும் கடற்கரையில் அமர்ந்திருப்பதாய் தொடர்வதும், இந்தக்காட்சியில் யாஸ்மின் கடலைக்குறித்து முன்னர் பேசிய வசனங்கள் நினைவுக்கு வருவதும் அவற்றின் கவித்துவமாய் இருக்ககலாம். அந்த கமாராவில் கதை சொல்லுகிற பெண்ணும் அந்த குரலும் படம் முடிந்த பிறகும் கேட்டபடியும் அலைந்தபடியும் இருப்பது.படத்தின் வசனங்களும் அளவாய் போதுமாய் இருந்தன. படம் நல்லாயிருந்தது என்பதை இப்படி சொல்லத்தெரியாமல் சொல்லுறதும் ஒரு இருக்கப்படாத குணம்தான்.
அமைதியான மனோநிலையை தரக்கூடிய அமைதியான படம்.

__________________________________________________

பல நாட்களாகியும் எழுத முடியாமல் போன இந்த குறிப்பை எழுத தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகிறது. அடுத்த நகர்வுக்கு முன்னதாக இது ஒரு உதிரிக்குறிப்பாய் இருக்கட்டும். ஒழுங்கே இல்லாத சப்பென்ற இந்த குறிப்பை கிடப்பில் போடுகிற ஒவ்வாமையை தவிர்ப்பதற்காக இங்கே பகிரப்படுகிறது.

ஒரு குறிப்பை எழுதவே நேரம் கிடைக்கவில்லை buzz, twitter, blog, Facebook என எப்படித்தான் நேரம் ஒதுக்க முடிகிறதோ உங்களுக்கெல்லாம்?

Friday, January 21, 2011

நிகழ் குறிப்பு.

காலப்பெரு நதியில்...
நம் இருத்தலுக்கான புள்ளி நகர்ந்துகொண்டேயிருக்கிறது
கை மீறுகிற எல்லாம்
நாம் எழுதாமல்விட்ட புரட்சியாய் இருக்கலாம்
உனக்குப்புரியாத மொழிகளில் எழுதுவதில்
எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை...

உன் பாதுகாப்பான பெரு நகரங்களுக்கு
என்னை அழைத்துப்போ அவை
எங்காவது பனி விழுகிற நிலப்பரப்புகளில் இருக்கட்டும்.

உண்மையைச் சொல்லப்போனால்...


எல்லா தத்துவங்களையும்
பேசவும் வாசிக்கவும் தெரிகிறது
ஒருபிடி உதவியை...
விடிய விடிய யோசிக்கவேண்டியிருக்கிறது.

__________________________________________________

குறிப்பு: கடல் கடந்த இலக்கியம் என்பதும் இந்த சொற்கூட்டத்துக்கு வைக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று.

Saturday, January 15, 2011

எழுதப்படாத நாட்குறிப்புகளின் தவிர்க்க முடியாத குறிப்பு...

15.01. 2011.

எவ்வளவு முயன்றும் என்னனால் முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன்.

கடந்த மூன்று வருடங்களில் பேசுவதுதான் இல்லையென்றாலும் ஒரு குறுந்தகவலை அனுப்புகிற அளவுக்கான மனோநிலை இருந்தது என்னிடம்.அது உன்னிடமும். எந்த தயக்கங்களும் இல்லாமல் உனக்கான வாழ்த்தை சில வார்த்தைகளில்தானும் உன்னிடம் சேர்ப்பிக்கிற மனோநிலை இருந்திருக்கிறது.இந்த முறை புதிய தயக்கத்தை நீ எனக்கு கொடுத்திருக்கிறாய். எவ்வளவோ காதல் கதைகளை கண்ட கோயில் குருமணல் வீதியல் நிகழ்ந்த அந்தப்பொழுதுகள் நடந்திருக்க வேண்டாமோ என்றிருக்கிறது எனக்கு.

எவ்வளவு தயக்கம் இருந்தும் என்ன கடைசி நிமிடங்களில் அதனை செய்ய வைத்திருக்கிறது இன்னமும் மீதமிருக்கிற உன் பிரியங்களின் வாசனை. இப்பொழுது உன்னிடம் இருக்கிறது உனக்காக நான் அனுப்பிய ஆகக்குறைந்த சொற்களிலான குறுந்தகவலொன்று.

இதோ இப்பொழுதும் நாள் முடியப்போகிற இந்த கடைசி நிமிடங்களில் எழுத முடியாத சொள்களை ஒரு மாதிரியாக தவிக்க வைக்கிற அமுக்கத்தை இங்கே எழுத முயன்று கொண்டிருப்பதும் நீ கொடுத்தவைதான். உன்னோடிருந்த நாட்களின் உயிர்திருத்தலின் மீதம்தான். அதன் சாயல்களில் இனி ஒரு பொழுதும் நான் இல்லாமல் போகலாம். இனி உன்னை சந்திக்காமலிருப்பதற்கம் அதுவே காரணமாயிருக்கலாம்.இதை இரண்டு வரிகளில் சொல்கிற கொடுமையை என்னாலேயெ பொறுக்க முடியவில்லை.எத்தனை அற்புதமான பொழுதுகள் அவை அதி உச்ச நெகிழ்தலும் பரவசமும் எந்த உணர்வாயிருந்தாலும் அதன் உச்ச விளைதலை கொண்டிருந்த அந்த நாட்களை இரண்டு வரிகளில் எழுதவைக்கிற இந்த நாட்கள் எவ்வளவு சோபையானவையாக இருக்க்கூடும். போஓஓஓஓஓ... என் நினைவுகளிலிருந்தும் போய்விடு.

எப்பொழுதும் இந்த SMS களிலும் மின்னஞ்சல்களிலும் அனுப்புகிற துண்டுச்சொற்களில் விருப்பமில்லாதவன் நான். நேரே பேசுவதைப்போல ஒரு நாளும் இருப்பதில்லை. இந்த வெட்டி ஒட்டுகிறது போலான குறுந்தகவல்கள் என்பது என் எண்ணமாயிருந்திருக்கிறது. அது உனக்கும் தெரிந்திருக்கலாம். அதனாலேயே இந்த கடல்கடந்த நாட்களில் ஒரு நாளைக்கு இருபதிலும் குறையாத சின்னச்சின்ன கடிதங்கள் போல எழுதி அனுப்பிய குறுந்தகவல்கள் எம்மிடமிருந்தன. மணிக்கணக்கில் தொலைபேசிய நாட்கள் இருந்தன. ஏழு பக்கங்களுக்கு குறையாத கடிதங்கள் நம்மிடமிருந்தன.எல்லாமிருந்தும் என்ன இன்று எழுத முடிந்தது வெறும் நாலே சொற்கள்தானே.

Happy Birthday Thamil.

ஒப்புக்கொள்கிறேன் உன்னிடம் நான் தோற்றுப்போயிருக்கிறேன் மற்றொரு முறையாகவும். எப்பொழுதும் போல இந்த முறையும் அது எனக்கு பிடித்தமானதாகவே இருக்கிறது. உன்னிடம் தோற்பதில் ஒரேயொரு சிக்கல் இருக்கிறது அதை நிரப்புவதற்கு அடுத்த முறை உன்னிடம் தோற்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுதெல்லாம் அது நீளமான இடைவெளிகளை கொண்டிருக்கிறது.


யாரையும் நம்புவதில்லை
எதற்கும் அழுவதில்லை
குற்றவுணர்வுகளை போதை சமநிலையில் வைக்கிறது
துணைக்கு புத்தகங்களும்
விதிகளை மீறுவதற்கு நவினமனங்களும் சாதகமாயிருக்கிறது
இருந்தும் எவ்வளவு செய்தும்
நினைவுகள் என்றொன்று இன்னமும் இருக்கிறது அது
உன்னை எப்பொழுதும் அழைத்து வருகிறது
எப்போதும் இருக்கிற இந்த வெயிலைப்போல
எப்பொழுதாவது வருகிற இந்த மழையும் கூட...

தவிர்க்க முடியாத உன்னை ஒப்புக்கொள்ளாத மனம்
இருக்கட்டுமென சொல்லிக்கொண்டிருக்கிறது
இன்னும் வாழ்வதற்கு நாட்களிருக்கிறது,உன் நினைவுகளும்!

_______________________________________________________________________

நிறைய பின் குறிப்புகளும் இன்னும் நீளமான வசனங்களும் இருக்கிற இந்த புனைவின் மிகுதியை எழுதவிடாத இந்த பொழுதுகளுக்கு நன்றி. இதை வாசிக்கிற நேரம் மனதார ஒரு தேவதையை வாழ்த்தும்படி நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.

எங்க சொல்லுங்கோ பாப்பம்.

Happy Birthday To You..
Happy Birthday To You....
Happy Birthday Dear Karuppy...!

Monday, January 3, 2011

பழைய நாட்களை அசை போடுதல்

பழைய நாட்களை அசை போடுதல் - ஒரு தாமதமான குறிப்பு.

வருடக்கடைசி என்பது வருடத்தொடக்கங்களை விட கொஞ்சம் சிக்கலானதாக இருக்கலாம். எனக்கென்னவோ இந்த வருடம் அப்படித்தான் இருக்கிறதாக உணர்கிறேன். கடக்க முடியாத பல விசயங்கள் இருக்கிறது அவை வரப்போகிற புதிய நாட்களையும் தொடர்ந்து பீடிக்காதிருக்கும்படியாக இதை வாசிக்கிற இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.(வருடக்கடைசிகள் சிக்கலானவையாக இருப்பதற்கு மீதமிருக்கிற இந்த பிரச்சனைகள் குறித்த மனோநிலை காரணமாக இருக்கலாம்.) உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்.


இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த பெரும்பொழுதுகள் ஊரிலிருந்த அந்த விடுமுறை நாட்கள்தான். எவ்வளவு விசயங்களை இந்த நாலு வருடங்கள் கடந்து போயிருக்கிறது ஹீஹ்... காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் போய்க்கொண்டே இருப்பது இயற்கையின் குரூரமானதும் வாழ்வின் பெரும் கொடையானதுமான உண்மையாக இருக்கலாம். காலம் காவுகிற நதி நம் வாழ்வு.அது நிக்காமல் இருத்தல் அதன் இயல்பாயிருக்கிறது. ஆழம் அறிதலும் தெளிதலும் நாம் அன்றாடமறியாத, அறிய விரும்பாதவைகளாக இருக்கலாம். மேலோட்டமான சலசலப்புகளையும் வளைவுகளையும் கண்டிருப்பதே பெரும்பாடென மாய்ந்து போவது நமக்கு போதுமென்றிருக்கிறது. வாழ்வின் சுகம், அதன் தேடல் அடியில் இருக்கிறதென்பதை கவனிக்காமலே கழிந்து விடுகிறது நம் காலம்.




குறிப்பிடத்தக்கதொரு நீண்ட பிரிவுக்கு பிறகு பிறந்து, வளர்ந்து, கெட்டு, அழிந்து, காதலித்து, கரையேறி, கைவிடப்பட்ட ஊரைப் பார்க்கப்போயிருந்த அந்த நாட்கள் தந்த அனுபவம் சுவாரஸ்யம். இந்த இடைவெளியில் என்னிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்கனோடு ஊரைப்பார்க்கையில் எனக்கு பெரிதாகத் தோன்றாவிட்டாலும் பெரும்பாலான விசயங்களில் நான் தள்ளி நின்று பார்க்கவே சாத்தியமாய் இருந்தது. அதையே நானும் விரும்பினேன்.

இந்த நேரத்தில் இங்கே சொல்ல வேண்டிய இன்னுமொன்று. முகம் அறிந்திராத ஒரு நண்பருக்கு அவருக்கு தெரிந்த ஒருவருக்கான உதவி ஒன்று செய்யலாம் என்று சொல்லியிருந்தேன் ஆனால் அதை செய்யத்தகுந்த நிலமை என்னிடம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை அதை அவரிடம் சொல்லாமல் இருந்ததும் அவரை சந்திக்காமல் விட்டதும் உறுத்தலாகவே இருக்கிறது.

சொந்த ஊரில நடப்பதாய் இருந்தாலும் பிறந்து வளர்ந்த ஊரில் படலை திறப்பதாய் இருந்தாலும் எப்பொழுதும் போல என்னோடு கூட இருக்காத பணம் கட்டாயமான விசயம். பணம் என்கிற ஒரே விசயத்தில் அனேகம் உண்மையானவர்களாய் இருக்கிறார்கள்.வாழ்வு பணத்தை துரத்துவதிலிருந்து பணம் வாழ்வைத்துரத்துவதாய் இருக்கிறது ஊர். நேரம் யாருக்கும் கிடைப்பதில்லை, தனியே நடக்கிற மனிதனை ஊருக்குப்பிடிப்பதில்லை.அன்றாட வாழ்வின் யதார்த்தம் கண்ணுக்குத்தெரிந்தும் வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் ஆதிமனோபாவம் இருக்கவே செய்கிறது.


கறுப்பியின் சாயல்களில் ஒரு தேவதையை கண்டு கொண்டது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து எதிர்பார்த்திருந்த விசயம். அளவிட முடியாத அழகும் எழுதிவிட முடியாத இயல்புகளும் அவளிடம் இருந்தன எல்லையற்ற அன்பும் பெருங்கருணையும் மேலதிகமாய் பேசத்தெரிந்த அழகிய கண்களும் இருந்தன. மிகச்சொற்பமான நாட்கள்தான் என்றாலும் அவளது நெருக்கம் இனியெப்பொழுதும் அறிய முடியாத என் உயிர்திருப்பாய் இருக்கலாம். கருணையும் எழுதி வைத்த விதிகளும் தேவதைகளின் சாபம்தானோ? அவளது கருணையின் முழு வடிவத்தையும் யாராலும் உணர்ந்துவிட முடியாத படிக்கே இந்த உலகம் அவளை விதித்திருக்கிறது. உன்னை இனி ஒரு போதும் சந்திக்காமல் இருக்க நான் விரும்பாவிட்டாலும் சந்திக்காமலே இருப்போமாக.


இயைணயமும் கைக்கு கிடைத்த புத்தகங்களும் என இந்த வருடம் வாசிப்பின் தேவை கூடியிருந்தது.கை நிறையப்புத்தகங்களையும் மனம் நிறைய அன்பையும் தருகிற புதிய உறவொன்று கிடைத்தது. ஒரு பயணப்பை முழுவதும் கொள்ளுகிற அளவுக்கு புத்தகங்களை தந்தனுப்பிய அன்புக்கு நான் எதையுமே தரவில்லை.போதாததற்கு குறைவேறு சொல்லியிருந்தேன்.பயணத்தின் கடைசி நேரம் வரைக்கும் கூட இருந்த அந்த கருணைக்கும் புத்தகங்களுக்கும் தேய்ந்து போன இந்த நன்றியை நான் எத்தனை முறை எழுதுவேன். சட்டென நெருக்கமான இந்த உறவோடு பகிர்ந்த பொழுதுகள் இரண்டாயிரத்துப்பத்தின் ரசனைக்குரிய குறிப்புகளைக்கொண்ட நாட்கள். எப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிற இவளுக்கு சிரிக்கத்தெரிந்த கண்கள் இருக்கிறது கூடவே கன்னங்களும். இவளைக்குறித்து பின்பொரு முறை பேசலாம். (உன்னை கேட்காமல் நடக்காது)

மனதுக்கு நெருக்கமான ஒரு பயணி அகிலன் கனவுகளும் அதன் தொலைவும் என்கிற பெயர் எனக்கு நெருக்கமானதாய் இருந்தது அது கொண்டிருக்கிற மொழியும் அதனைக்கொண்டிருக்கிற அகிலனும். பல முறைகள் பேசியிருந்தாலும் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்றிருந்த அகிலனை சந்தித்த அந்த பகல் நேர மழைப்பொழுது மறக்க முடியாதது. வெள்ளவத்தையில் அன்றைக்கு நடந்தது போலவொரு உரையாடலை இதுவரைக்கும் அந்தக்கடை கேட்டிருக்குமோ தெரியாது. அது கலவையான சந்தர்ப்பம். தலைவா இந்தியாவுல சந்திக்கலாம்.



புதிய நாட்களின் ஆரம்பத்தில் என்ன எழுதி இருந்தேன் என்று நினைவில்லை. ஆனால் அதை இவ்வளவு சீக்கிரம் பழைய நாட்களின் வரிசையில் சேர்க்கவேண்டி வரும் என்று நினைக்கவில்லை. huhh...நாட்கள் இத்தனை வேகமாகக்கடக்கிறது ஆயுள் எத்தனை விரைவாக குறைகிறது. பார்க்கப்போனால் இந்த வருடமும் எதையுமே எழுதிக் கிழிக்கவில்லை. இது ஒரு வகையில் நல்லதும் கூட. எல்லா வருடங்களையும் போலவே இந்த வருடமும் தொடர்ச்சியாய் டயரி எழுத வேண்டும் என்கிற தீர்மானம் தொடக்கத்திலேயே உடைந்து போயிற்று. இப்பொழுதும் அந்த நினைப்பு இருக்கிறது டயரி என்ன, சேமிக்க வேண்டும் என்று நினைக்கிற சில ஞாபகங்களை கூட மறந்து விடுகிறேன். ஞாபக சக்தி என்பது குறைந்து கொண்டே வருகிறது அல்லது நினைவிலிருப்பவை எல்லாம் அழிந்து கொண்டு வருவதைப்போல நம்ப ஆரம்பித்திருக்கிறேன். இது ஒரு சுகமும் பெரும் இழப்புமான ஒரு விடயமாகத்தான் இருக்கமுடியும்.

எந்த வரைமுறைகளும் இல்லாமல் எழுத நினைக்கிறதை எழுதிவிடுவது என்னுடைய ஆரோக்கியத்துக்கு மிக உதவுவதாய் இருக்கக்கூடும்(இங்கே குப்பை என்கிற சொல்லாடல் குறித்து நினைவுக்கு வருகிறது)அதற்காகவே எப்பொழுதும் டயரி எழுத வேண்டும் என்பதாய் நினைத்துக்கொள்வேன். ஆனால் அதுவும் செய்ய முடிவதில்லை. கணக்கற்ற சொற்களை எழுதக்கிடைத்தும் எழுதாமல் இருப்பதற்கு கீழ் வருவனவற்றை காரணங்களாகச் சொல்லலாம். நீங்கள் சாருவையோ ஜெயமோகனையோ இந்த நேரத்தில் நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

1) காதலிப்பதற்கு யாருமில்லாதது.
2) சோம்பல்
3) சூழ்நிலை
4) உருவாக்கி வைத்திருக்கிற என்னைக்குறித்த பிம்பம்.
5) அது உண்மையிலேயே எனக்கு இயைபற்ற ஒரு காரியமாக இருக்கலாம்.
6) நான் எழுத நினைப்பதை எல்லாம் எழுதி விடுகிறார்கள்.
7) சரியாக வாசிக்கத்தெரியாமல் எழுதி என்ன ஆகப்போகிறது?
8) நான் எழுதாமல் இருப்பதால் நட்டம் எனக்குத்தான்.
9) இலக்கியமும் இணையமும் விசரைக்கிளப்புவதாய் இருக்கிறது.
10) கூடவே இன்னும் சில காரணங்கள் இருக்கலாம்.


இந்த அலம்பலை வாசித்து போரடிக்கத் தொடங்கியிருந்தால். the most awaited item song of the year





2010ல் முடிந்தவரை புரிதலோடு இருப்பதற்கு முயற்சித்திருக்கிறேன். எந்த சூழலுக்கும் பொருந்தவும் கோபத்தை தணிக்கவும் இது அவசியமாய் இருக்கிறது. இருந்தும் தவிர்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வந்துவிடுகிற இந்த கோபத்தையும் விட மனமில்லை. இது வரைக்கும் கொண்டாட்டத்துக்கான மனோநிலைகள் இல்லாவிட்டாலும் நிறைய குடிப்பதற்கான மனோநிலை இருக்கிறது. எல்லாம் மறந்த ஒரு இலேசான மனோநிலையோடு இந்த 2011ஐ தொடங்க முடிந்தால் அவ்வளவும் போதுமானது.காலம் வாழ்வினைக் காவிச்செல்லட்டும்.


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2011


Happy New Year - 2011.



பிந்திய காரணக்குறிப்புகள்:

//
2010 இன் கடைசி இரண்டு நாட்களையும் இணையம் இல்லாமல் கடத்தி இருக்கிறேன் எவ்வளவு பெரிய செயல்! எல்லா பற்றுகளில் இருந்தும் விடுபடுதலுக்கு முதலில் இணையத்தை விட்டுவிட வேண்டும்.

//
எழுதி முடித்து சரியான நேரத்துக்கு பகிரமுடியாமல் போனாலும் இந்தக்குறிப்பை மாற்ற மனம் வரவில்லை.


//
குடிக்க தெரிந்துகொண்டதன் பிறகு போதை இல்லாமல் பிறந்த புது வருடம் இது என்பதில் எனக்கு மாற்றமோ பெருமகிழ்ச்சியோ எதுவும் தெரியவில்லை.