Monday, September 29, 2008

ஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவும்...

இந்த பூமிக்கு நான் வந்த நாளை கொண்டாடுகிற இந்த நாளில் சில குறிப்புகளை சொல்லிப்போகிற மனோநிலையும் இல்லாமல் இருக்கிறது! இருந்தும் எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற நினைவின் சொற்களை குறிப்புகளாக எழுதியே பழக்கப்பட்டு விட்ட எனக்கு (அநேகம் காற்றில்தான் எழுதியிருக்கிறேன்) இன்றைக்கும் எழுதுவதற்கான மனோநிலை வாய்க்காமல் இருந்தாலும் இணையம் அரிதாகக்கிடைக்கிற இந்த நேரத்தில் கட்டாயமாய் சிலதை எழுதி விட வேண்டும் என்கிற கடமையில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், எப்பொழுதும் முன்னேற்பாடுகள் செய்வது என் இயல்பாய் இருந்ததில்லை...உனக்கான கடிதங்களையும் நான் அப்படியே எழுதி இருக்கிறேன்...!


*
என் அம்மாவின் பிறந்த நாளை
எனக்கு ஞாபகப்படுத்திய உனக்கு
என் பிறந்நாள் மறந்து போயிற்று...!

*
தவம் தடைப்பட்டுப் போனாலும்
தேவதைகள் தோற்பதில்லையே
நீ தேவதைதானே...!


*
உயிர் முழுக்க வலி
உன் பிரிவறித்த தோழி வாழ்த்தனுப்பியிருந்தாள்
இந்த பிறந்தநாளுக்கு...!


*
என்ன தரவேண்டும் உனக்கு
இந்த பிறந்தநாளுக்கு
எதை விரும்பினாலும் கேள்
உன் பரியங்களையும் நினைவுகளையும் தவிர...!


*
மூடிவைத்திருக்கிற உன் தொலைபேசியை
நெருங்க முடியாமல் இருக்கலாம் எனக்கு
உன்னை மூடி வைக்கிற முயற்சியின்..
தோல்வியை நீ தாங்க மாட்டாய் தமிழ்
அதற்காகவேனும்
உன் பிரியங்களின் சாயல்களில்
ஒரு வாழ்த்தை அனுப்பிவிடு...!


*இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!


*
எனிந்த மௌனம்
உன் நினைவுள் அழுகிற சத்தம்
உன்னை தூங்கவிடாது தமிழ்
ஒரு வாழ்த்தை அனுப்பிடு!
மற்றொரு பிறந்த நாளைக்குள் நிகழலாம்
சில அழைப்புகளும் பதில்களும்...!


*
உனக்கென்றுதானே பிறந்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு
வாழ்ந்துவிடுகிறேன்...!


பின் குறிப்பு:

1)இது என்னுடைய ஐம்பதாவது பதிவு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சில நிகழ்வுகள் நிகழாமையில் புலம்பலை கோர்வையாக்குகிற அளவுக்கு நிதானம் இல்லாமல் இருக்கிறது...அதனால் குறிப்புகளாக மட்டும்...

2)ஒரு புகைப்படம் மற்றும் ஒரு பாடலோடு பதிவாகி இருக்க வேண்டியது நேரமும் கணினியும் செய்கிற சதியில் முடியாமல் போயிற்று


3)சந்தோசத்துக்காக...

A LOT OF
BIRTHDAY WISHES
WITH LOVE & AFFECTION
ONLY & JUST FOR YOU...

on
29.09.2005

Friday, September 26, 2008

சோகங்களை கொண்டாடுதல்...

*
நீ அழைக்கவில்லையே ஒழிய- என்னை
நினைக்காமல் இல்லையே...!
உன் பிரியங்கள் நிரம்பிய
மௌனங்கள் போதுமெனக்கு...

*
பிரிந்துவிடக்கூடும் என்று தெரிந்தேதான்
பழகத்தொடங்கி இருந்தோம்...
பரிந்திருக்கிறோம்
இழப்புகளுக்கும் வலிகளுக்கும் தெரிவதில்லை
ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகள்...

*
காதல் இயல்பாக நிகழ்கிறது
சொல்லத்தெரிவதில்லை என் காதலுக்கும்
சொல்லிக்கொண்டு நிகழ்ந்துவிட்ட
பிரிவுக்குமான காரணங்களை எனக்கு
பிரிவுகளும்...

*
உன்னை விடவும்
உன் நினைவுகளிடம் அதிகமாயிருக்கிறது
காதல்
வலிகள் மிகும்(ந்தாலும்)
பிரிவுகள் தகும்...

பின் குறிப்பு:

பல நாட்களாய் அடைந்து கிடந்த மௌனங்களை அவிழ்க்கத்தொடங்கியிருக்கிறது இப்போதைய இரவுகள் இனி அடிக்கடி கொண்டாடலாம் சோகத்தை புலம்பலை சகிக்கிற தோழர்கள் அறைக்கு வரவேற்கப்படுகிறார்கள்...

Friday, September 19, 2008

காதல் தோல்வியில் நயன்தாரா...!!!! (ஒரு திருமண வாழ்த்து)



ஒரு காதல் கைகூடுமென காத்திருந்த நயன்தாராவுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்திருக்கிறது அந்த கல்யாணம்.இருந்தாலும் தான் விரும்பியவரும் தன்னைக்குறித்து கவிதைகள் எழுதிய அந்த காதல் மனதுக்குமாக அவருடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய காதலை தியாகம் செய்திருக்கிறது நயன்தாராவின் காதல் மனது ...

என்ன இருந்தாலும் எவ்வளவுதான் அதனை மறைக்க முயன்றாலும் காதலின் தோல்வியென்பது அவ்வளவு சேலாக மறக்கக்கூடியதா என்ன அவரது சோகங்களை பகிர்ந்து கொள்ளாமல் அவரால்...(அந்த முகத்தை பார்க்கவே முடியல அந்த பிஞ்சு முகத்துல அப்படியொரு சோகம்)

அவர் கவிதைகளில் மனதை பறிகொடுத்த நயன்தாராவை காதல் பக்குவப்படுத்தியிருந்தது போலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார்...

ஆனாலும் விசும்பல்களுக்கிடையே அவர் கடைசியில் சொன்னது...

எது எப்படியென்றாலும் பரவாயில்லை அவர் கவிதை எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பது...

என்ன (மங்களூர்)சிவாண்ணே கவிதைகள் எழுதுவிங்க தானே...;)

மறுபடியும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்....

பதிவுலகம் சார்பாகவும் அனைத்துலக தமிழ் மக்கள் சார்பாகவும் சிவராமன் மற்றும் பூங்கொடி புதுமணத்தம்பதிகளை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

நன்றி...!


டிஸ்கி 1:ஒரு வாழ்த்துப்பதிவுன்னா அது சாதாரணமாத்தான் இருக்கணுமா இப்படியும் இருக்கலாம்ல!

டிஸ்கி 2: என்னடா சோகம்னு சொல்லிட்டு சிரிச்ச முகத்துல இருக்கிற படத்தை போட்டிருக்கேன்னு பாக்கறிங்களா இதுதான் அவருக்கு பிடிச்ச போட்டோன்னு நயன்தாரா சொல்லிச்சு...

Tuesday, September 16, 2008

சில குறிப்புகள்...

*
கடந்த என்னுடைய பதிவுக்கு பிறகு இப்பொழுததான் இணையப்பக்கமே வந்திருக்கிறேன் அப்ப்பா [ஏனிந்த கொலை வெறி நம்ம மக்களுக்கு ...:)] எத்தனை பதிவுகள் எவ்வளவு விடயங்கள் இத்தனையும் பார்த்து முடிக்கவே என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... பதிவுகள் படிக்கவேண்டும்,பின்னூட்டங்கள் எழுத வேண்டும், நான் ஏதாவது எழுத வேண்டும் ஆனால் எதை எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் இப்படி தட்டச்சிக்கொண்டிருக்கிறேன் (யோசிக்காம எழுதுடா மகனே இதுவரையும் ஏதோ யோசிச்சு எழுதினா மாதிரி அலட்டிக்கிற; நம்ம மக்கள் ரொம்ப நல்லவய்ங்க படிச்சோ, படிக்காமலோ கட்டாயமா கமன்ட் எழுதுவாய்ங்க! - என் நம்பிக்கை வீண்போகாதே மக்கள்ஸ்!!!) நான் வழமையாக பயன்படுத்துகிற கணினி செயலிழந்து இருக்கிறது,இணைய வசதி கிடைப்பது பெரும் கஷ்டமாக இருக்கிறது அதனால புரிதல்கள் நிரம்பிய நண்பர்கள் குறைகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன் பின்னூட்ம் எழுதுகிறேனோ இல்லையோ உங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உண்மை சொந்தங்களே எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க!!! [ஒரு கும்மி வீரனின் பின்னூட்டங்களை இழந்திருக்கிறது தமிழ் வலையுலகம் என்ன கொடுமை இது கூகுளாண்டவரே:( ]

*
புதுமணத்தம்பதிகள் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடி இருவருக்கும் மறுபடியும் ஒரு முறை இங்கே வாழ்த்துக்ளை சொல்லிக்கொள்கிறேன்.

நல்ல புரிதலும் முழுத்திருப்தியும் நிறைந்த அழகான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் நண்பர்களே...


*
கடந்த பன்னிரண்டாம் திகதி திலீபன் என்கிற மாவீரனின் நினைவுநாட்கள் ஆரம்பமாகியிருந்தது.தன்னினத்தின் கண்ணீரை துடைப்பதற்காக தண்ணீரும் வேண்டாம் என்று சொட்டுச்சொட்டாய் உயிரை விட்ட மாவீரன் தியாக தீபம் திலீபனின் பன்னிருநாட்கள் நினைவு ஆரம்பமாகியிருந்தது ஈழப்போராட்டம் பற்றிய என் பல்வேறுபட்ட கருத்துக்களிலும் மாறாமல் இருக்கிற ஒரே விடயம் என் மனதில் திலீபனுக்கு இருக்கிற இடம்தான் உறுதியானதொரு கொள்கை வீரனவன். பசிக்கெதிராக பேர்தொடுத்தல் என்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல என்பது சிறுவயதில் நாள் முழுக்க பசியோடு இருந்திருக்கிற எனக்கு ஓரளவேனும் தெரியும்.அப்படி இருந்த போரட்டம் இன்று...

*
கத்லின் மேகர் ( america's got talent- 2008)என்கிற சின்னப் பாடகியின் சில கண்ணொளிக்காட்சிகளை பார்க்கிற சந்தர்ப்பம் கிடைத்தது.அவள் குழந்தைத்தனமும் திறமையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது, சின்னதேவதையாய் மனதை கொள்ளை அடித்திருந்தாள். அவள் எனக்கு ஏற்படுத்திய இன்னுமொரு விடயம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் பிரிந்திருக்கிற என் மருமக்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை எனக்குள் ஏற்படுத்தி இருப்பது.குட்டிகளின் நினைவுகளை எனக்கு நிறையவே கொடுத்திருந்தாள் அவள்; ஆறு மருமக்கள் இருக்கிறார்கள் எனக்கு இரண்டு சிங்கங்க்ள,நான்கு தங்கங்கள் என வீடு முழுக்க நிறைகிற அவர்களையும் அவர்களின் குறும்பகளையும் மீட்டுப் பார்க்கச்செய்திருந்தாள் கத்லின்...

*
சாண்டில்யனின் கடல்புறா பாகம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன் நண்பர் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழைமை அதனை கொடுத்தனுப்புவதாக சொல்லி இருந்தேன் முடியாமல் போனதால் கொடுக்கவில்லை. வருகிற வியாழக்கிழமை கொடுத்தனுப்பலாம் என்றும் கொடுத்தனுப்பிய பின்னர் அழைத்துப்பேசலாம் என்றும் இருந்தேன் இன்று அவரே அழைத்துப்பேசினார், எப்படியாவது கொடுத்தனுப்பிவிட வேண்டும்.( அது வேறுயாருமல்ல அவரை இன்னும் நேரில் சந்திக்கவில்லை)


*
அந்த சினேகா உண்மையில் அழகுதான் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்க..." படம் மறுபடி பார்ததேன் சினேகாஅழகாய் தெரிந்த படங்களில் இதுவும் ஒன்று ஆனால் படம் எனக்கு பிடித்துப்போனதற்கும் மறுமுறை பார்த்ததற்கும் இது காரணமல்ல! பல நினைவுகளை கிறளறியிருக்கிறது படம்...(அவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...)


*
கடதந்த நாட்கள் எதுவும் வாசிக்ககிடைக்காமலும் எழுதக்கிடைக்காமலும் மனம் முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது பல விடயங்கள். எதையும் செய்யமுடியாமல் ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல பிரச்சினைகள் சூழ்ந்து கொண்டு இருக்கிறது என்னை! அவற்றையெல்லாம் வெளித்தள்ளிவிட கிடைக்கிற ஒரே விசயம் வாசிப்பதுதான் அதற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்னுடைய நாட்கள்...கொஞ்சம் கடுமையாத்தான் இருக்கிறது அவை! பார்க்கலாம் நிகழ்வுகள் மாறத்தானே வேண்டும்.

*
பலதையும் மீட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறது மனது...


குறிப்புகளின் குறிப்புகள்:

1)
இணைய வசதி கிடைக்காமல் இருக்கிறது, எப்பொழுதாவதுதான் வர முடிகிறது இணையத்திற்கு,அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரஅளவு மட்டும் என் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கான பதில்களைக்கூட சரிவர தரமுடிவதில்லை என்கிற வருத்தம் எனக்கு பல நாட்களாக இருக்கிறது உங்கள் அன்புக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பர்களே...

2)
இந்த மாதம் முடிவதற்கிடையில் இணையவசதி கிடைக்கலாம் என்ற நினைக்கிறேன்- கிடைக்வேண்டும்! முக்கிய பதிவொன்று எழுதியே ஆக வேண்டும் இந்த மாதம் முடிவதற்கிடையில்...

3)
வாசிக்காமல் இருப்பது மிக கடினமான காரியமாக இருக்கிறது...

Monday, September 8, 2008

நானும்,நினைவுகளும்...!

சரி செய்யாமல் இருக்கிற படுக்கை
காய்ந்து போன மீதங்களோடு
தேநீர் கோப்பைகள்
கலைந்து கிடக்கிற அறையில்
நின்று போன சுவர்க்கடிகாரம்,
கழுவாமல் இருக்கிற ஆடைகளின் குவியல்
குழம்பிக்கிடக்கிற மேசையில் புத்தகங்கள்
நிரம்பிக்கிடக்கிற சாம்பல் தட்டில்
அணைந்து கிடக்கிற சிகரெட்டுகள்
தூசு படிந்திருக்கிற கம்பியுட்டரைச்சுற்றி
சிதறிக்கிடக்கிற 'சிடி'கள்...

பலதும்...
உன் வருகைகளற்ற
நாட்களைப்பற்றி பேசுகின்றன

அறை சரி செய்யப்படலாம்
நிகழ்வுகள் மாறக்கூடும்...
நானும்,நினைவுகளும்?!