Friday, July 6, 2012

சுணைக்கிது...


பேசவிரும்பாத கதைகள் பற்றிய குறிப்பு.



முகவுரை, பதிப்புரை, அந்தவுரை, இந்தவுரை என்கிற எந்த கந்தாயங்களுமில்லாமல் பிரித்ததுமே கதைக்குள் நழைந்துவிடுகிற புத்தகத்தின் வடிவமைப்பைப்போலவே நிரூபாவின் கதைகளும் சட்டென்று சொல்லவந்த மையத்துக்குள் நுழைந்து ஒரு ஊரையே நமக்கு அறிமுகம் செய்து அவா்களோடு நெருங்க வைத்துவிடுகிறது. ஊருக்குள் பேசத்தயங்குகிற கதைகளை ஊரில் பேசும் அதே மொழியில் எழுதியிருப்தே அதன் பலமும் பலவீனமும் என்று நினைக்கிறேன். ஈழத்தின் வடக்கில் இருக்கிறவா்களுக்கு புரிந்துகொள்ள முடிந்தாலும் எல்லோராலும் சட்டென உள்வாங்க முடியாத இந்த பேச்சுவழக்கில் எழுதப்பட்டிருப்து இதன் பரவலான அறிமுகத்திற்கான தடையாக இருக்கலாம்.

பன்னிரண்டு கதைகளைக்கொண்ட இந்தத்தொகுப்பு ஒரு நாவலின் முழுமையற்ற வடிவமாகவும் இருக்கிறது ஒரு ஊரில் நிகழும் அனுபவங்களை எந்த பாசாங்குகளும் அரசியல்துருத்தல்களுமில்லாமல் ஒரு பெண்மனதின் ( சிறுமியிலிருந்து பதின்மங்கள் வரைக்கும்) இயல்பான வெளிப்பாட்டோடு சொல்லியிருக்கிற இந்தத்தொகுப்பினைப்பற்றி போதுமான அளவில் பேசப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


மற்றும்படி சுணைக்கிது ஈழத்தின் சிறுகதை குறித்த கதையாடல்களில் கட்டாயம் இடம்பெறவேண்டிய ஒரு தொகுப்பு.
_____________________________________________________________________ 











"ஆனால்
ஒரு விடியலில்
கிண்டப்பட் புதைகுழிக்குள்
பாழ் கிணறொன்றில்
கண்டெடுக்கப்படும் ஒன்றைாய்
அழுகிய நாறிய அழிந்த ஒன்றாய்
என் தாய்க்கிழவியின்
ஒப்பாரி ஓலங்கிளைடையே
மேலே இழுக்கப்படுவதற்காய்
காலுகளே
என்னை விட்டுச்செல்லாதீர்கள்
கைகளே
என்னை கைவிட்டு விடாதீர்கள்"



ஒலிக்காத இளவேனில் தொகுப்பில் கற்பகம் யசோதர எழுதிய,இறுதி வார்த்தைகள் என்கிற கவிதையிலிருந்து எழுதப்பட்ட இந்த வரிகள் வசந்தங்கள், உதயங்கள் எல்லாம் வந்து ரட்சிக்கப்பட்ட பிறகும் நிகழும் தற்கொலைகள்  இனந்தெரியாதோரால் நிகழ்த்தப்படும் கொலைகள் மற்றும் இடம்மாற்றப்படும், அழிக்கப்படும் சவங்களுக்காக எழுதப்படுகிறது.

வடலியின் வெளியீடாக வெளிவந்திருக்கிற இந்தத்தொகுப்பு இலங்கைப்பெண்களது கவிதைகள் என்ற அடிப்படையில்  வந்திருக்கும் மற்றொரு முக்கியமான தொகுப்பு.அவா் ஒரு வரி எழுதினார் இவா் இப்படி எழுதினார் என்று ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு நக்கீரா் தனம் காட்டும் இணையவீரா்கள் யாரும் இந்தத்தொகுப்பை பற்றி பேசியதாய் நானறியவில்லை.  இவா்கள் பேசாமல் இருக்கிறதே இந்த தொகுப்பினது வெற்றியும் என்று நான் நினைக்கிறேன். ஒடுக்கப்பட்ட மனங்களிலிருந்து எழுதப்படுகிற வார்த்தைகள் உங்களை பேச இயலாமல் பண்ணின என்பதாக திருடப்பட்ட நிலத்திலிருந்து இதனை தொகுத்தவா்கள் எழுதி வைத்துக்கொள்ளலாம்.பேசவும் விமா்சிக்கவும் நிறைய விசயங்கள் இருக்கிறதாக முகத்திலறையும் இந்த கவிதைகள் சொல்வதாய் நான் நம்புகிறேன்.

பிரசுர வெளிக்கு புதிய பலரது கவிதைகளையும் நன்கறிந்த பலரது கவிதைகளையும் தொகுத்து வந்திருக்கிற இந்த கவிதைகள் தொகுப்பாளா்கள் சொன்னது போல அவரவா் உலகங்களை தமதான் நம்பிக்கைகளுடன் வெளிப்படுத்தியிருக்கின்றன.  அவரவா் உண்மைகளை பேசும் இந்தக்குரல்களை குறித்து பேசாதிருக்கிற மற்றவா்களை நினைந்து நான் வியந்து கொள்கிறேன். 


No comments: