Monday, April 20, 2009

இழந்து போன நாட்களும் ஈழமும்...





நானென்ன கவிதை எழுத வேண்டுமா அல்லது எனக்கு இல்லாத அறிவை இருப்பதாய் ஏதாவது எழுதிக்காட்ட வேண்டுமா, தேடிப்படித்தலும் வாசித்தலும் எனக்கு இயைபான சூழலில் மட்டுமே நிகழ்கிறது. கட்டாயமாய் சில பின்னூட்டங்கள் அதுவும் எனக்கு நேரமிருந்தால் மட்டுமே பதிவுகளென்று நானெழுதுகிற புலம்பல்கள்.

போங்கடா நீங்களும் உங்கடை வியாக்கியானங்களும்... என்னிடம் புரிதல் இருக்கிறது அது உங்களை விட சற்று அதிகமாயும் இருக்கலாம். இருந்தும் எனன செய்வது புலம்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது இந்தக் கண்களையும் குழந்தைகளையும் படிம்பிடித்தவனுக்கு என்ன மனோ நிலை இருக்கிறதோ எனக்கு தெரியவில்லை..என்னை கடினப்படுத்துகிறதாய் இருக்கிறது நிஜங்கள் உங்களையும் உலகத்தையும் மிகக்கேவலமாகன வார்த்தைகளில் திட்டிக்கொள்வேன் சமயங்களில் பலமாக சிரிக்கவும் செய்கிறேன் நிச்சயம் அது உங்களுக்கு பிடிக்காத சிரிப்பாகத்தான் இருக்கும்.


ஏதோ அந்தக்கண்கள் என்னைத்தான் பார்ப்பது போலவும் அவை என்னிடம் பேச முயல்கிறதைப்போலவும் இன்னும் கொஞ்சம் போய் என்னை பல கேள்விகள் கேட்பதாயும் மிக தீர்மானமான குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்துவதாயும் உணர்கிறேன் அந்தக்கேள்விகள் என்னை தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாயும் எப்பொழுதும் என் காதுகளுக்குள் கேட்டக்கொண்டிருப்பதாயும் இருக்கிறது. எப்பொழுது இந்த புகைப்படங்களை பார்த்தேனோ அப்பொழுதிலிருந்து அடச்சே என்கிறமாதிரி இருக்கிறது பொழுதுகள்...

எழுதி அழித்து எழுதி அழித்து எழுதிக்கொண்டிருக்கிறேன் ஒரே வரிகளை... சமயங்களில் ஈழம் வேண்டாம் அவர்களை விட்டுவிடுங்கள் என்பதாய் தோன்றுகிறது எதையும் யோசிக்காமல் எதிர்படுகிறவர்களை கொலை செய்யத்தோன்றுகிறது சில நேரங்களில் திடீர் தீடீரென்று கேபமாய் வருகிறது மிகச்சத்தமாக கெட்டவார்தைகளில்(கெட்ட வார்த்தைகள் என்று இருக்கிறதா)) கத்துகிறேன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் என அது கலவையாய் இருக்கிறது எப்பொழுதும் என்னுடைய மொழி என் ஊருக்கான சாயல்களில் இருக்காது வட்டார இயல்புகளற்று கலவையானதாய் இருக்கும்.பின் அறை முழுவதும் அதிரும் படியாக கதறுவதுமாதரியாக பாடலை ஒலிக்கவிட்டு அதை மீறுகிற சத்தத்தோடு கத்துவேன் அல்லது பாடுவேன்.

what the hell is going on your country...fuckers...

உங்கள் காதுகளை பொத்திக்கொள்ளுங்கள் அல்லது நீங்களும் என்னைப்போலொரு போலி என்றால் கேட்டும் கேளாமல் விட்டுவிடலாம் உண்மை நான் திட்டுவது உங்களைத்தான் கூடவே இல்லாத கடவுளர்களையும்...


என்னுடைய நாட்டு மக்கள் மீதான வெறுப்புகளும் தேசம் பற்றிய சிந்தனைகளில் விரக்தியும் என்னை துன்புறுதுத்துவதாய் இருக்கிறது. இருந்தும் என்ன எல்லா வயிறும் பசிக்கத்தான் செய்கிறது, புணர்கிற இரவுகள் அதனையும் செய்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழர் வாழ்கிற இடங்களெங்கும் பரவியிருக்கிற எழுச்சியும், புலம் பெயர் நாடுகளில் நிகழ்கிற எழுச்சியும் தியாகங்களும் போராட்டங்களும் காலம் மிகப்பிந்தியதாய் இருந்தாலும் இந்தக் கண்கள் கொடுத்த சக்தி என்பதாய்யதான் எனக்குப்படுகிறது...

நல்லதொரு தீர்வு வந்து விடும்போல் தெரிகிறது நம்பிக்கைகள் முளைவிட்டிருக்கிறது அந்த நம்பிக்கையில் தானே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது .இயல்பு மாறிப்போன வாழ்வில் இருக்கிற கடைசி நம்பிக்கைகளில்தானே ஈழத்து மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இப்படி சொல்லிக்கொண்டாலும் உலகம் அதன் நிர்ப்பந்தங்களோடு சுழன்று கொண்டிருப்பதில் வாழ்நாட்கள் தீர்ந்து கொண்டிருக்கின்றது...

இந்த சித்திரை வருடப்பிறப்பென்பது வெறுமைகள் சூழ்ந்த நாளாகத்தான் இருந்தது மூக்கு முட்டக்குடித்துவிட்டு புலம்பவேண்டுபோலத்தான் இப்போதைய நாட்களின் மனோநிலை இருக்கிறது...


"we should do some thing for our land" என்கிற பால்ய காலத்து நண்பனொருவனின் வார்த்தைகளை சார்ந்து பல கேள்விகள் உழன்று கொண்டிருக்கிறது. என் மீதான குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது. அந்தக்கேள்வியை ஒன்லைனுக்கு வரும் பொழுதெல்லாம் சொல்லும் அவனிடம் பெரும் கோபமும் வருகிறது . இத்தனைக்கும் பேரின்ப நாயகியில் வருகிற நண்பனொருவன் என்பது இவனைக் குறிக்கிற சொல்லாகத்தான் எழுதியிருந்தேன் இவனெப்பொழுது இப்படி மாறிப்போனான்.வாழ்க்கை சில இடங்களில் எதிர்பாராத திசைகளில் திரும்பி விடுகிறது.


நான் முற்றிலும் எதிர்பார்க்காத ஒருவன் உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்கிறான் அவனை ஒரு கலைஞனாக எனக்கு தெரியும். ஆனால் ஈழம்சார்ந்த உணர்வாளனாய் அவனை நான் சமீப காலமாகத்தாக்ன அறிந்து கொண்டேன் தீடீரென அவனும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேடையிலமர்ந்திருக்கிறான் என்பதாக அறிந்த புகைப்படங்கள் என்னை என்னவோ செய்கிறது.காலம் கொடுத்த மாற்றங்கள் அல்லது நான் இழந்தவைகள் என்னை சுயநலக்காரனாய் ஆக்கிவிட்டதோ, இது என்னுடைய வாழ்க்கை நான் வாழவேண்டும் என்பதாய் எப்பொழுது சிந்திக்க தொடங்கினேன்? இப்பொழுதேன் புலம்புகிறேன்?கட்டுகளை மீறிய இயல்புகளைக் கொண்ட நான் எதையும் கடந்து விடுபவன் என்று தம்பட்டம் அடித்த போலிதானோ...?

இல்லை நானொரு போலி இல்லை! என்னிடம் புரிதல்கள் இருக்கிறது சே...!! எவ்வளவு பார்த்திருக்கிறேன் ஐந்து வயதில் பசியைக்கடந்து பத்து வயதில் பிணங்களைக்கடந்தவன் நான். வாழ்க்கையை வாழவேணடும் வாழ்வதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதாக கணந்தோறும் அனுபவிப்பவன்.உலகம் போதுமானதாய் இருக்கிறது மனிதர்கள்தான் திருப்பதிப்படுவதில்லை என்று உலக்ததை பளிக்கிற நான் எதற்கிப்பொழுது புலம்புகிறேன்.

நிப்பாட்டு என்ன சொல்ல வருகிறாய் நீ...?

முடியல்லை மச்சான் ஒரு மாதிரி உண்மையற்ற நாட்களாய் இருக்கிறது பெரும்பாலும் அப்படித்தான் என்றாலும் இப்போதைய நாட்கள் ஒரு விதமாய் தொடர்ந்து தொல்லைப்படுத்துகிறது.

இலங்கையில் எல்லோரும் புரிதல் என்கிற விசயத்தை மறந்து விட்டார்களா யாருக்குமே அந்த சிந்தனை வரவில்லையா பல்கலைக்கழகங்களும் படிக்கிற இளைய சமுதாயம் ஏனிப்படி இருக்கிறது அவர்களிடம் புரிதல்களே இல்லையா அல்லது அப்படியே சரி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நாம் நம்முடையவேலைகளை பார்த்து விடுவோம் என்கிறது போல போய்கொண்டே இருக்கிறார்களா வலி என்பதை யாரும் உணர்வதே இல்லையா...


மக்கள் படுகிற வேதனைகள் பார்க்கையில் ஏனிப்படி நிகழ்கிறது மீதமிருக்கிற வாழ்நாட்களைத்தானும் உலகம் இனம், மொழி, மதங்களை கடந்து வாழ்ந்து விட முடியாதா அதில் உள்ள சுகமும் சுதந்திரமும் ஏனிவர்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. அவர்களுடைய நிலம் அதனை கொடுத்து விடுங்கள். ஏனிப்படி அடித்துக்கொண்டு சாகிறார்கள் அவரவர் வாழ்வை கொண்டாடுவதில் எவ்வளவு சுகம் இருக்கிறது தெரியுமா? என்பது என் எண்ணப்பாடாக இருந்தாலும்...


இழந்து போன நாட்களும்,ஏற்பட்டிருக்கிற வடுக்களும்,வரலாற்றிலிருக்கிற பிழைகளும், இன்னமும் தெளிவு பெறாமல் இருக்கிற மூளைச்சலவை செய்யப்பட்ட சிங்கள சமுதாயமும், அரசியல் சுயநலவாதிகளும் என மொத்தமாகப் பார்க்கையில் ஈழம் கிடைத்தே ஆகவேண்டும் என்றுதான் முடிவாகிறது. இது வரை நிகழ்ந்த தியாகங்களும், போராட்டங்களும், இழப்புகளும் கூட ஆதிக்குடிகள் என்கிற இனத்திற்கு சுமுகமான தீர்வை பெற்றுத்தர முடியவில்லை எனில் ஈழம் என்கிற தேசம் அமைவது அவர்களுக்கான வாழ்க்கையை கொண்டாடுவதற்கு வழி செய்யக்கூடும். ஏன் சிங்களவர்களுக்கு கூட தேவையற்ற இழப்புகளையும் காழ்ப்பபுகளையும் சுமந்தலையத்தேவையில்லை இந்தப்பிரச்சனையை சொல்லியே பிழைப்பு நடத்துபவர்களை இனம் கண்டு கொள்ளவும், திரிக்கப்பட்ட மஹாவம்சத்தையும் அறிந்து கொள்ளவும் முடியும்.

கடந்த சில நாட்களில் மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிர்களை காவுகொண்டிருக்கிறது குண்டுகள். எழுச்சிகள் தீவிரமாகிக்கொண்டிக்க தீர்வு நெருங்கி விட்டதாக பயம் கொள்ளுகிற அரசு, முடிந்தவரை அழித்து விட முயல்கிற குரூரம் தானே இது. இதனை அனுமதிக்கிற நீங்கள் புரிதல்களற்ற,நாகரிகவளர்ச்சி என்று கழிவுகளை சுமக்கிற மனிதர்கள்தானே.


திசைகள் தீர்மானிக்காமல் பயணங்கள் போகிற நாட்கள் எப்பொழுது கூடுகிறதோ அப்பொழுது உங்கள் தேசம் கொண்டாட்டங்கள் நிரம்பியதாய் இருக்கும். அப்பொழுது உங்கள் புற அடையாளங்கள் உங்களிலிருந்து வெளியேறி ஆனந்தம் உங்கள் ஆத்மாக்களில் நிரம்பியிருக்கும்.

உங்கள் தேசமும் அதற்குரிய அடையாளங்களை இழக்காது அதன் முக்கியத்துவங்களோடு மிளிர்ந்து கொண்டிருக்கும்.

சமாதானம் உங்களிலிருந்து தொடங்கட்டும்.


பின்குறிப்புகள்:

\\
தீராத சொற்களும் தொடர்ந்து செல்கிற உரையாடலும் என்று புலம்பிய பெருமெண்ணிக்கையான சொற்களில் இது ஒரு பகுதி மட்டுமே.

\\
எழுதி மூன்று நாட்களாகிறது என்றாலும் பதிவாக்க விருப்பமில்லாமல் அப்படியே வைத்திருந்தேன். இதனை இப்பொழுது பதிவாக்கி முடிக்கையில் இன்னும் பல மனிதர்களை குண்டுகள் காவுகொண்டிருக்கும்...

\\
கேள்விகள்! கேள்விகள்!! கேள்விகள்...

12 comments:

ஹேமா said...

தமிழன்,முடியவில்லை.அழுதுகொண்டேயிருக்கிறேன்.யாரும் பார்க்காத அநாதையாகிப் போனோமே !

soorya said...

மிக அருமையான பதிவு..! வேறு வார்த்தைகளில சொல்வதற்கு.

ttpian said...

அடிமை சுதந்திரமாக பேசமுடியாது!

தமிழ்ப்பித்தன் said...

மிகவும் நன்றாக இருந்தது. வழமையாக சொந்த கதைகளை பேசும் நீங்கள் எம் தேசம் பற்றி பதிவு போட்டது பெருமையளிக்கிறது. இளமையில் காதல் அவசியம். ஆனால் எம் மக்கள் வாழ்க்கையையே இழந்து கொண்டிருக்கையில் சொந்தக் காதல் கதைகளை பதிவாகப் போட்டு வாசகர்களை கவர நினைப்பது ஈழப் பதிவர் என்ற வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான பதிவுகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன்.

Poornima Saravana kumar said...

படத்தை பார்க்கையிலேயே நெஞ்சு பொறுக்கவில்லை..

தமிழன்-கறுப்பி... said...

அழுதென்ன லாபம் நமக்கிடையில் புரிதல் இல்லையே இலங்கையை திருத்த முடியாது...

விருப்பமில்லாத பதிவென்றுதான் தலைப்பு வைதிருந்தேன் பின்னர் இழந்து போன நாட்களும் ஈழமும் என்று தலைப்பு வைத்திருக்றேன்..
இந்த போராட்டம் இழப்புகளைத்தானே கொடுத்திருக்கிறது...

பிளாட்டினம் said...

//இழந்து போன நாட்களும்,ஏற்பட்டிருக்கிற வடுக்களும்,வரலாற்றிலிருக்கிற பிழைகளும், இன்னமும் தெளிவு பெறாமல் இருக்கிற மூளைச்சலவை செய்யப்பட்ட சிங்கள சமுதாயமும், அரசியல் சுயநலவாதிகளும் என மொத்தமாகப் பார்க்கையில் ஈழம் கிடைத்தே ஆகவேண்டும் என்றுதான் முடிவாகிறது.//

நீங்கள் மட்டும் இல்லை, பத்து வயதில் புத்தகப் பையில் கந்தகத்தை வைத்திருந்த என் நண்பன் ஒருவனும் உங்களை மாதிரி தான் அடிக்கடி புலம்புகிறான்... என்ன தான் இருந்தாலும் முடிவெடுத்து விட்டீர்கள் தானே தீர்வு ஈழம் தான் என்று... பிறகு ஏன் தேர்வுக்கு அஞ்சுகுறீர்கள், எங்கெல்லாம் தேர்வு எழுத மண்டபம் போடமுடியுமோ, அங்கெல்லாம் போய் தேர்வை எழுதுங்கள், சித்தி கிடைக்க போதுமான அறிவு இருக்கிறதே, அது போதும் தயார்ப் படுத்தல் பற்றி யோசியாதீர்கள்...

sathiri said...

//கடந்த சில நாட்களில் மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிர்களை காவுகொண்டிருக்கிறது குண்டுகள். எழுச்சிகள் தீவிரமாகிக்கொண்டிக்க தீர்வு நெருங்கி விட்டதாக பயம் கொள்ளுகிற அரசு, முடிந்தவரை அழித்து விட முயல்கிற குரூரம் தானே இது. இதனை அனுமதிக்கிற நீங்கள் புரிதல்களற்ற,நாகரிகவளர்ச்சி என்று கழிவுகளை சுமக்கிற மனிதர்கள்தானே.//

மாறவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஏக்கமும்..

கிருஷ்ணா said...

//இயல்பு மாறிப்போன வாழ்வில் இருக்கிற கடைசி நம்பிக்கைகளில்தானே ஈழத்து மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.//

இதைவிட அதிகமாக எதையும் சொல்ல முடியாது. தமிழர்களின் ஒட்டுமொத்த பலம் மட்டுந்தான் எமக்கான பாதையைத் தீர்மானிக்கும். உணர்வுப் பகிர்வுக்கு நன்றி..

KADUVETTI said...

முடியலிங்க, இந்த மாதிரி போட்டோ வேனாங்க :(((((((((((((

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு
நன்றி நண்பர்களே!

கிரி said...

மனது பாரமாக இருக்கிறது....