Monday, February 2, 2009

இதுவரை எழுதாத கடிதம்!




அன்பானவர்களே...

நேரம் பின்னிரவு என்றாலும் தனித்திருக்கிற பொழுதும்,தேசம் பற்றிய கேள்விகளும்,வாழ்வின் மீதம் பற்றிய சிந்தனைகளும் அடக்க முடியாத இரைச்சலை மனதிற்குள் தந்திருக்கிறது.

கடந்த பதிவிலெழுதிய குறிப்பைபோல இருக்கலாம் அது!

சந்தோசங்களை சேமிக்கவும் சுகங்களை மட்டுமே அசைபோடுகிறதுமான மனது எப்பொழுதும் வாய்த்திருக்க வேண்டும் வாழ்க்கை வெறுமையாகிவிடாதிருக்க இது மிக அவசியமாயிற்று.சோகங்களை கொண்டாடப்பழகியது ஒரு விதத்தில் நல்லதாயிற்று.

பெரும் பாரங்களை சுமக்கிற இனத்தின் சந்ததிகளில் பிறந்துவிட்ட உண்மை மிகக்கசப்பானதாய் இருந்தாலும் மனிதமேயற்ற நாட்டில் பிறந்ததற்காய் எதிரே வருகிற என் நாட்டு மனிதர்களை பார்க்கவே பிடிக்கவில்லை! அவர்களை கொன்றுவிடவேண்டும் என்கிறதாய் வேதனையும் விரக்கதியும் தருகிற வெறியையும் அவமானத்தையும் போதையினால் சரி செய்திருக்கிறேன்.


அன்பானவர்களே வாழ்க்கை உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது! இந்தக்கடிதத்தை நான் எழுதுகிற கணங்களில் நீங்கள் உங்கள் வீட்டில் உங்கள் படுக்கையில் குண்டுகள் பற்றிய பயமோ மரணம் பற்றிய சிந்தனைகளோ இன்றி உறங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது அவரவர் நேரத்துக்கும் வசதிக்குமாய் அவரவர் வேலைகளில் இருக்கக்கூடும் அது ஒன்றே போதுமானதாய் இருக்கிறது வாழக்ககை ஆசீர் வதிக்கப்பட்டதாய் கருதுவதற்கு.அடுத்த கணங்களை எதிர்கொள்ள முடியாத வாழ்வு எவ்வளவு கொடூரமானதாய் இருக்கும் என்பதை எழுத்தில் சொல்லமுடியாது,அனுபவித்தால் எழுத முடியாது.அனுபவித்தால் மட்டுமே தெரிகிற வலிகள் யுத்தம் தீர்மானிக்கிற வாழ்நாட்களைக்கொண்டு வாழ்பவர்களிடம் இருக்கிறது.


உணர்வுகளை சுமந்தவார்கள் என்றிருந்தோர் இழப்புகளையும் வலிகளையும் சுமக்கிறவர்களானார்கள், துயரங்கைள சுமக்கிற சந்ததிகளில் பிறந்த குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்களது துயரங்களை தவிர்கத்தெரியாத கடவுளர்கள் அதிகாரத்தின் கைகளில் அவர்களது உயிர்களை காவு கொடுத்திருந்தனர்! மரணம் எண்ணிக்கைகளால் குறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது வாழ்க்ககை இன்னமும் மீதமிருப்பதாய் உயிரை சுமந்து தெருக்களில் அலைகின்றன பொதிகளை சுமந்த உடல்கள்.


என்னுடைய தேசம் இடம் பெயர்ந்தவர்களால் நிரப்பப்படுகிறது.இழப்புகளை சுமப்பவர்களால் ஆக்கப்படுகிறது.நகரங்களை கட்டி எழுப்புதலும் பின் விட்டுப்பிரிதலும் அவர்களுக்கு சாபமென விதிக்கப்பட்டிருக்கிறது.அவரவருடைய ஜீவிதம் அவரவர் கைகளில் என்பது பொய்யென்றாகி அதிகாரத்தின் கைளில் இருக்கிறது சபிக்கப்பட்வர்களின் வாழ்வு என்பதாகிற்று!எதற்காக சபிக்கப்பட்டோம்? என்ன குற்றங்கள் செய்தோம்?எந்த நிபந்தனைகளில் தண்டிக்கப்படுகிறோம்? என்பவை உயிரை மட்டும் மீதம் வைத்திருக்கிற என் இனத்தின் கேள்விகளாய் இருக்கிறது!


உரிமைகளுக்கான போராட்டம் பயங்கரவாதமாகிப்போக,சமாதானத்துக்கான யுத்தம் என்பது அடிமைகளை உருவாக்குவதற்கான யுத்தமாகி இருக்க,அறங்களின் போராட்டம் உயிரைத்தக்கவைப்பதற்கான ஓட்டமாகிப்போன சோகம் உலகம் கண்டு கொள்ள விரும்பாத உண்மையாகிற்று!நினைவுகளால் நிரம்பிய தெருக்களெங்கும் பிணங்களின் சுவடுகள்,நிழல் தருகிற மரங்களின் வேர்களில் குருதியின் ஈரங்கள், என் தேசத்தின் தெருக்களெங்கும் இயலாமையின் கதறல்கள் அதிகாரம் செய்கிற வன்முறைகள் ஆற்றாமைகளின் துயரங்கள்!


இதுவரையும் எழுதாத வலிகளை எழுதுவதில் கை கொடுக்கவில்லை சொற்கள், பால்யத்திலிருந்து பதின்மங்கள் வரையிலும் யுத்தம் கொடுத்திருந்த கசப்பான அனுபவங்களையும் ரணங்களையும் விட வெகு அதிகமான நெருக்கிடல்களை மனது அனுபவித்துக்கொண்டிருக்கிற இந்த நாட்கள் வாழ்வு மீதான வெறுப்புகளோடு என் மீதான சுயமதிப்பீடுகளில் என்னை மிகக் கடைசியான கோழைகளில் ஒருவனாக மாற்றியிருக்கிறது.
தப்பியோடிய கோழையெனவும் சுயநலங்களின் அதிக பட்ச சாத்தியக்கூறுகளின் இருப்பிடம் எனவும் அடையாளம் காட்டி இருக்கிறது பின்பொரு நாளில் நான் அப்படி அழைக்கப்படலாம். எதுவும் செய்யாதிருக்கிற பொழுதுகளில் நினைவுகள் விழுங்குகிற என்னை சகித்துக்கொள்ள முடியவில்லை எனக்கு. போலிகளற்ற பொழுதுகளில்; முகம் பார்க்கிற கண்ணாடியும் உண்மைகளை அடையாளம் காட்டக்கூடும் என்பது மிகவுண்மை!


நினைவுகளை சேமிக்கத்தொடங்குகிற குழந்தையின் நினைவின் வெளிகளெங்கும் மரணத்தின் சுவடுகள், சிவப்பு நிறங்களில் எழுதப்படுகிற சோகப்படிமங்கள், குருதியின் தெறிப்புகளாய் வரையப்படுகிற அவர்களது பால்யங்களின் பக்கங்கள்,ரணங்களின் குறிப்புகள் பின்பொரு நாளில் அதிகாரங்களை நோக்கி உண்மைகளைப்பேசக்கூடும்.அதுவரையும் பொதிகளை சுமப்பவர்களின் கால் தடங்களில் பயணிக்கட்டும் மிகச்சொற்பமாய் இருக்கிற அடிமைகள் அல்லாத சந்ததிகள்.

தப்பியோடிய கோழையொருவனின் புலம்பல்கள் என நீங்கள் இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம் இருப்பினும் மிகத்தொன்மையானதொரு இனத்திற்கு அதன் வரலாற்றை எழுதுகிற உரிமைகள் மறுக்கப்பட்ட உலகத்தில் வாழ்கிற நீங்கள்; அதிகாரங்கள் எப்பொழுதும் சரியான தீர்ப்புகளையே எழுதுகிறது என்கிற தவறான முடிவுக்கு மிகக்கேவலமான சாட்சிகள் என்பதை தப்பித்தோடாத அடிமைகளில் ஒருவன் எழுதக்கூடும் என்பதை நிவில் கொள்க.அப்பொழுது அதிகாரங்களை கைமாற்றுகிற வலுவை அவன் சந்ததிகள் கொண்டிருக்கலாம்!

இப்பொழுது...

மிக்சுதந்திரமான உன்னத இசைகளின் திருவிழாக்களால் நிரம்பியிருந்த என் தேசத்து தெருக்கள் மரணத்தின் பயம் நிரம்பிய உயிர் பதைக்கிற ஓலங்களோடு பதறித்தொலைகிற மனிதர்களால் நெரிசலாய் இருக்கிறது...

ஆகவே அன்பானவர்களே;

வலிகள் உங்கள் வீடுகளை தட்டும்வரை வெடிக்காமலிருக்கிற உங்கள் கதறல்களை இப்பொழுதே அதிகாரங்களை நோக்கி சப்தியுங்கள்.நம் சந்தோசங்களையும் உழைப்புகளையும் பகிர்ந்து கொண்ட உலகம் எம் துயரங்களை கண்டுகொள்ளாதிருக்கிறது.அப்பொழுது உலகம் அனுபவித்துக்கொண்டது இப்பொழுது உலகம் அமைதியாய் இருக்கிறது. நீங்கள் பேசாமல் இருப்பது முறையல்ல! நீங்கள் அதிகாரங்களின் பால் அண்டிப்பிழைப்பவர்களாக அப்படியே இருக்கலாம் நானும் தப்பியோடிய கோழையென அடையாளங்கள் இல்லாதவனாய் வாழ்ந்துவிடக்கூடும.

ஆனால்...
வலிகளை சுமக்கிற சந்ததிகள் ஒரு காலம் அதிகாரங்களை நோக்கி உண்மைகளைப்பேசும்!


பின்குறிப்பு:

\\
கடந்த இருபத்தொன்பதாம் திகதி பணியிலிருக்ககையில் தலைக்குள் சுழன்ற பல ஆயிரம் சொற்களினதும் தேசம் பற்றியெழுதிய சில கவிதைகளினதும் மிக்குறுகிய வடிவமாய் இந்தப்பதிவு இருக்கலாம்.

\\
சொற்களை எழுதிப்பழகிவிடுதல் என்பது தனித்திருக்கிறவர்களுக்கானதும் சொற்களை கொண்டிருப்பவர்களிற்கானதும் விடுதலை தருகிற நிகழ்வு.

\\
கதறி அழவும் கொலை செய்யவும் யாரும் இல்லாத வெறியில் உங்களிடம்...


29/01/1009
1.44 am
K.S.A.

9 comments:

தமிழ் said...

சொல்ல வார்த்தை இல்லை

புதியவன் said...

கடிதம் படித்து மனம் ரணமாகிறது தமிழன்...

Poornima Saravana kumar said...

என்ன சொல்லரதுனே புரியலை

Rajan said...

attractive words

ஹேமா said...

தேவதைகளைப் பற்றி மட்டுமே எழுதிய கறுப்பியின் கைகள் தேசத்தைப் பற்றி குமுறிய வரிகள் கடிதமாய்.நெஞ்சு வலிக்க இரத்தமே மையாய் எழுதிய பதிவு...
கண்ணீரோடு கனக்கிறது தமிழன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இது மாதிரி ஒரு நெஞ்சை கனக்கச் செய்யும் பதிவுக்கு பின்னூட்டமிட நினைத்தாலும் மனசு அலைபாய்கிறது.

உங்கள் உள்ளக் குமுறல் என்னையும் பற்றிக்கொள்ள

மனசு கனக்க பின்னூட்டமிட்டு போகிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ப்ச் :( :(

ஜியா said...

:((

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...