Friday, August 29, 2008

இரண்டு நாட்களும் சில குறிப்புகளும்...

*
நேற்றும் நேற்றைக்கு முந்தய புதன் கிழமையும் இணைய வசதி இல்லாமல் போயிற்று, ஏதோ நாளாந்த காரியங்களில் சிலதை செய்யாமல் இருந்துவிட்ட தவிப்பு இருந்துகொண்டே இருந்தது. நித்தம் பார்க்கிற நண்பர்களை இரண்டு நாட்களாக காணமுடியவில்லை எனில் ஒரு தாக்கம் இருக்கத்தானே செய்கிறது. ஊரை விட்டு வந்த நாட்களின் ஆரம்பத்தில் இருந்தது போல ஒரு உணர்வு இரண்டு நாட்களாக இருந்தது. இப்பொழுதும் மிக சிரமத்தின் மத்தியில் இணையத்துக்கு வந்திருக்கிறேன்...

*
கிட்டத்தட்ட இரண்டு மாத கால காத்திருப்புக்கு பிறகு கடந்த இருபத்தைந்தாம் திகதி வாங்கி வரச்சொன்ன புத்தகங்கள் சிலதில் சுயாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களும் சாண்டில்யனின் கடல்புறாவும் கைக்கு வந்து சேந்திருந்தது. கடல்புறா நான் ஏற்கனவே படித்திருந்தாலும் சாண்டில்யன் வர்ணனைகளின் தாக்கம் என் பள்ளிக்கூட காலத்து கட்டுரைகளிலும் அத்தோடு அதற்கு பிந்தய புலம்பல்களிலும் இருந்ததை நான் மறக்கவில்லை ஆனால் அந்த கட்டுரைகள் புலம்பல்கள் பெரும்பாலும் என்னோடு இல்லாமல் போய்விட்டதில் இப்பொழுது வருத்தமிருக்கிறது.கடல்புறாவுக்கு நண்பர் ஒருவர் காத்திருப்பதினால் முதலாம் பாகம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் நேரமும் சூழலும் தொடர்ச்சியான வாசிப்புக்கு தடையாக இருக்ககிறது இருந்தாலும் விரைவில் முடித்துவிடுவேன்.


*
"ஒரே கடல்" மலையாளப்படம் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் கங்காரு நாட்டின் சிங்கம் க-பிரபா மற்றும் அமீரக இலக்கியவாதி தம்பி அண்ணன் விமர்சனங்கள் பாத்ததிலிருந்து இருந்தது. தெரிந்த ஒரு சேட்டனிடம் சொல்லி தேடி வாங்கி வந்து கொடுத்திருக்கிறார் படம் நாற்பத்தெட்டு நிமிடங்கள் பார்த்திருக்கிறேன் அறை நண்பர்களின் பலமான எதிர்ப்புகளுக்கிடையில்! மலையாளம் எனக்கு அவ்வளவாக புரிவதில்லை என்பதாலும் அறையில் இருந்த சத்தங்களாலும் படத்தை எவ்வளவு கண்ணைக்குடுத்து கவனித்தும் வசனங்களை சரியாக கேட்க முடியாமல் செய்துவிட்டார்கள் தனியாக இருக்கிற நேரத்தில் பார்த்துவிட வேண்டும்; ஆனால் பார்த்தவரையில் படம் நிறையப் பேசுகிறது அலட்டலான வசனங்கள் இல்லாமலே!

Sunday, August 24, 2008

சில சொற்களும் சில படங்களும்...!

முன் குறிப்பு:

எழுதுவதற்கு...
எதுவும் தோன்றவில்லை
அவள் நினைவுகளைத்தவிர!




உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!





நீ காத்திருக்கிறாய் என்றால்
எனக்கு முன்னால்
என் உயிரை அனுப்புகிறேன்
உன் நலம் விசாரிக்க!





உன்னைச்சுமந்து வருகிற கர்வத்தில்
அழகாகிற்று இதுவும்!





அப்படி பார்க்காதே...
இப்படி சித்திர வதை செய்யாதே...
என் இதயம் பலவீனமானது!





அழகு என்பதற்கு
உன் சிரிப்பென்ற...
மறுபெயரும் உண்டு!





ஏற்கனவே சொல்லி விட்டேன்
என் இதயம் பலவீனமானது என்பதை!





உன்னைச்சொல்லி குற்றமில்லை
உன்னை அழகாய் அனுப்பி,
என்னை சாகடிக்கிற...
பிரம்மனுடன் இருக்கிறது வழக்கு!






ஏனடி ஒளிகிறாய்...
நான் உனக்குள்தானே இருக்கிறேன்!


முக்கிய குறிப்பு:
படங்கள் பதிவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...!

Saturday, August 16, 2008

கடைசிக்கடிதம்...!




மரியாதைக்குரிய தேவதைக்கு...!

நலம்,நலம் அறிய ஆவல்;
என்கிற சம்பிரதாய விசாரிப்புகளில் விருப்பம் இல்லை என்றாலும்,எழுதப்பட வேண்டிய தூரத்தில் இருப்பதும், அதற்கான இடைவெளி நமக்குள் ஏற்பட்டிருப்தாக என் மனதும் தவித்துக்கொண்டிருப்பதால் எழுத வேண்டிய அவசியம் உருவாகிற்று!

என்ன எப்படி இருக்கிறாய் நலம்தானே? நான் நலம் விசாரித்ததும் சொன்னதும் உயிரை இன்னமும் விடாமல் வைத்துக்கொண்டிருக்கிற தேகங்களைத்தான் என்பதை இங்கே தெளிவு செய்வது நான் போலியாய் எழுதகிறேனோ என்கிற என் சந்தேகத்தை இல்லாமல் செய்திருக்கிறது. மனதளவில் பல கேள்விக்குறிகளும் விடைதெரியாத அல்லது முடிவெடுக்க முடியாத பிரச்சனைகள் இருப்பதனால் மனதை பற்றிய கேள்விகளை நான் தவிர்த்துக் கொள்கிறேன் தவிர்க்காமல் நான் கேட்டுவிட்டாலும் நீ உன் இயல்பின் வழி எனக்கு அவற்றை தெளிவு படுத்தப்போவதுமில்லை;அது அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது இதுவரையும்.

அதை நான் பாத்துக்கொள்கிறேன், எனக்கு தெரியும் என்ன செய்வதென்று, நீங்கள் யோசிக்க வேண்டாம்,நடக்கும் பொழுது பார்க்கலாம், நான் உங்களுக்குத்தான், என்கிறவைகளாலான பதில்களில் அவற்றை தவிர்த்துக்கொண்டு என் சந்தோசங்களுக்காக மட்டுமே கடிதம் எழுதியவள்...நீ!அது தேவதைகளின் இயல்பாக இருக்குமோ என்னவோ?!


நீ அற்புதங்களால் நிறைந்த தேவதை!

இந்தக்கடிதம் இதுவரையும் இல்லாத விழிப்பு வார்த்தைகளோடு வந்திருப்பதை நீ உணரக்கூடும்.அதற்கு காரணம் நீ கேட்காவிட்டாலும் நான் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதாகப்படுகிறது;இந்தக்கடிதத்தை பின்பொருநாளில் நீ படிக்கும்பொழுது ஒரு தேவதையாக மறுபடியும் உன்னை உணர்த்தக்கூடும்,ஒரு வேளை உனக்குப்பின்பு படிக்கும் யாருக்காவது ஒரு தேவதைக்கான கடிதத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தே ஆகவேண்டுமே!

எனக்கு தெரியும் நீ கடிதங்களை ஒரு போதும் தவற விடுவதில்லை என்பதும் அவற்றின் மீது நெருக்கமானதொரு பற்றுதல் உனக்கு இருப்பதும்.

கடிதங்கள் மிக நெருக்கமாய் இருக்கிறது!
கடிதங்கள் பிரியங்களை பதிகிறது!
கடிதங்கள் உணர்வுகளை எழுதுகிறது!

என்கிற அழகான விசயங்களை சொல்லிக்கொடுத்தவளே நீதானே! எனக்கு உன்னைப்போல் கடிதங்கள் எழுதத்தெரியாது போனாலும் நான் எழுதுகிற கடிதங்களில் முடிந்தவரை என்னை உனக்கு காட்டிவிட வேண்டும் என்கிற பிரயத்தனம் நிறைந்திருக்கும்;இதைக்கூட நீதான் எனக்கு சொல்லியிருக்கிறாய்! அதன் பிறகுதான் நான் கடிதங்களை தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்ததே.உண்மைதான் அனுப்புகிறோமோ இல்லையோ அவை படிக்கப்படுகிறதோ இல்லையோ(நீ நிச்சயமாய் படிப்பாய் என்பது விலக)பதில் கடிதங்கள் வருகிறதோ இல்லையோ எழுதுகிற கடிதங்கள் இறக்கி வைத்த சுமைகளைப்போலவும், தீர்ந்து விட்ட பிரச்சனைகள் போலவும், நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாளைப்போலவும், மனதுக்கு நெருக்மான அவன் அல்லது அவளோடு சேர்ந்திருந்து உணர்வுகளைப் பகிர்ந்த இரவுக்கு பிறகான காலையைப் போலவும் இருக்கிறது என்று நீ சொன்னது எவ்வளவு தூரம் நீ கடிதங்களை நேசிக்கிறாய் என்று உணர்த்திற்று.

உன்னுடைய கடிதங்களுக்கு பிறகுதான் நான் என்னால் முடிந்தவரை கடிதங்கள் எழுதியிருக்கிறேன் ஆனால் அவற்றையெல்லாம் உனக்கு அனுப்பியிருக்க மாட்டேன்.அதற்கு காரணமும் இருக்கிறது கடிதங்களைப்பற்றி கற்றுக்கொடுத்த நீயே! கேட்காமலே ஒரு கடிதத்தை குறைந்தது ஏழு பக்கங்களில் கடிதங்கள் எழுதிய நீ கடந்த மூன்று வருடங்களில் எனக்கு ஏழு கடிதங்களை வெறும் பத்தொன்பது பக்கங்களில் மட்டும் எழுதியிருந்தாய்...!?

எல்லாம் என் பலநாள் வற்புறுத்தல்களுக்கு பிறகு, அவற்றிலும் எதை எழுதுவது என என்னையே கேட்டு எழுதியிருந்தாய். ஏன் தமிழ்!? எழுதுவதற்கும் பகிர்வதற்கும் நமக்கிடையில் எதுவுமே இருக்கவில்லையா அருகிருந்து பேசுவது மாதிரியான உணர்வுகளை கடிதங்கள்தான் தருகிறது என்று சொன்ன நீயா அப்படி எழுதினாய்! என அந்த கடிதங்களை வாசிக்கும் பொழுதுகளில் எல்லாம் நினைத்ததுண்டு. கடைசியாக நான் இங்கே வருவதற்கு முன்னர் நீ எனக்கெழுதிய கடிதம் நினைவிருக்கிறதா உனக்கு, அதனை இதுவரை எத்தனை முறை படித்திருப்பேனோ தெரியாது எனக்கு கிடைத்த கடிதங்களில் அல்லது கிடைக்கப்போகும் கடிதங்கள் வரை வேறெந்தக் கடிதத்தாலும் மீள் நிரப்ப முடியாத தன்மை கொண்டு என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்திருக்கிறது அது! உன் மார்புக்குள் உறங்குவதை ஒத்த ஒரு சஞ்சலங்கள் அற்ற மனோநிலையை படித்து முடிக்கையில் தருவதாக எத்தனையாவது முறை படிக்கும் பொழுதும் இருக்கிறது அந்தக்கடிதம். ஏழு வருடங்களுக்கு முன்னர் நீ கொடுத்த முதல் கடிதம் தொலைந்து ஓரிரு நாட்களில் நான் வழமைக்குத் திரும்பியதற்கும் இந்தக்கடிதமே காரணம்.

உன்னைப்போலவே உன் கடிதங்களும் எனக்கு...!

இங்கே வந்து ஆறு மாதங்கள் வரை எந்த கடிதமோ தொலைபேசி அழைப்புக்களோ இல்லாத போதும் நமக்கான நெருக்கம் மனதளவில் இருந்தது. நீ என்னை நினைத்து என்னுடனா உடனடித்தொடர்பை தவிர்த்தாயோ தெரியாது அதன்பிறகு மொத்தம் ஏழுகடிதங்களையும் எண்ணிக்கைகள் அற்ற தொலைபேசி உரையாடல்களும் நிகழ்ந்து முடிந்திருந்திருக்கிறது இன்றய அதிகாலையோடு!

அதுவே கடைசி அழைப்பென்கிற உன்சார்ந்த முடிவொன்றை கூறி பிரிவின் வலிகளில் உருகிக்கொண்டிருந்த என்னை ஒரே நொடியில் ஆவியாக்கினாய்...'சாம்பல் கரையும் வார்த்தைகள் கரைவதில்லை'என்கிற ஒரு கவிஞனின் வரிகள் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. காற்றாகி விட்ட வாசனையை உணரலாம் கண்டு கொள்ள முடிவதில்லை அஃதாகி வலிகளை உணரலாம் அவற்றிற்கு உருவம் இருப்பதில்லலையே,இதனை வாசிக்கும் பொழுது என் வலிகளை நீ உணர்கிறாயா தமிழ்?!

எப்பொழுதும் நீ என்ன செய்தாலும் அவை பிரியத்தின் புரிதல்களாக மட்டுமே இருக்கும் என்கிற இதுவரையான உன் காதல் எனக்கு கொடுத்த திருப்தியோடு;உனக்கு அனுப்புவதற்காக எழுதுகிற என்னுடைய கடைசிக்கடிதமாக இது இருக்கலாம், மேலும் காலம் வழிசெய்கையில் உன் முகவரிகள் எனக்கு தெரிந்திருக்கிற பட்சத்தில் மற்றுமொரு கடிதத்தை நான் உனக்கு அனுப்புவதற்காக எழுதக்கூடும் மற்றபடி உனக்கான என் கடிதங்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும்.

பின்பொரு நாளில் நீயோ அல்லது நம்மைத் தெரிந்த யாராவதோ அவற்றைப் படிக்கவும் கூடும்!

நான் அடிக்கடி சொல்வது போல உன்னை நான் காதலிப்பதற்கு, என் நேசங்களை உனக்கு முழுவதுமாய் சொல்ல என் வாழ்நாட்கள் போதாமல் போகலாம் என்பதனை மறு முறையும் இந்த இடத்தில் சொல்வது பொருத்தமில்லை என்றாலும்; தேவதையின் மீதான பிரியமும் எதிர்பார்ப்பும் வளர்ந்து கொண்டே இருக்குமே ஒழிய அது அவள் யாசிப்பவனோடு கூடவே இருப்பதில்லை அல்லது வரம் தருவதில்லை என்பதற்காக இல்லாமல் போய்விடுவதில்லையே...!

உனக்கான என் கடிதங்களின் இறுதியில் எனக்கு திருப்தியான உறவு முறையினை இதுவரையும் எழுதியதில்லை என்பது என் நீண்ட நாள் வருத்தம் அத்தோடு அந்த கடிதங்களில் என் கையொப்பமும் இருந்ததில்லை என்பதை நீ கவனித்தும் இருக்கலாம்

அதே குழப்பம் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது...

என்ன எழுதுவது என்று தெரியாமல்தான் எழுத ஆரம்பித்தேன்,என்ன எழுதியிருக்கிறேன் என்றும் தெரியவில்லை, இதற்கு மேலும் நிறைய எழுதலாம் போல இருக்கிறது ஆனால் எழுத முடியவில்லை! உன் மீதான என் பிரியங்களை என்னால் முடிந்தவரையும் வெளிப்படுத்தியிருக்கிறேன் - உன்னை அருகிருந்து கவனிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் என்னை முடிந்தவரை தவிக்கவிடுகிற மிகுந்த வலிகளோடு.


இப்பொழுதும் அதே தவிப்பின் மிக உயர் மீடிறண்களின் அதிர்வுகளோடு...


நான்-

தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்!

Friday, August 8, 2008

நானும் சில சொற்களும்...!

காலையில் கொஞ்ச நேரம் இணையத்துக்கு வந்திருந்தாலும் இப்பொழுது தமிழ் மணத்தை படித்துக்கொண்டிருந்த பொழுதுதான் தெரிந்தது இன்றைய திகதியின் தன்மை; திகதி,மாதம் வருடம் மூன்றுமே எட்டுகளால் ஆகியிருப்பது!இந்த கணினி வேறு அடிக்கடி வலைப்பூக்களை திறக்கமுடியாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. என்ன எழுதுவது என்று யோசிக்கையிலேயே எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற எப்பொழுது புழுக்கம் தவிர்க்கலாம் என்கிற என் மனோ நிலையை ஒத்த சொற்கள் ஏக்கம் தணிக்கிற அவாவில் எகிறி குதிக்க தொடங்கியிருக்கிறது அவற்றின் வேகத்துக்கு என்னால் தட்டச்ச முடியவில்......

*
அம்மா அல்லது என் முதல் தோழி.

*
அவள் அல்லது காதல்.

*
கறுப்புத்தேநீர் அல்லது என்னை சரிபார்க்கிற தருணங்கள்.


*
புத்தகங்கள் அல்லது சொற்களால் ஆன நண்பர்கள்.


*
சொர்க்கம் அல்லது அவளும் நானும் பிறந்து வளர்ந்த ஊர்.


*
முத்தம் அல்லது அடிக்கடி எய்துகிற மோட்சம்.


*
இரவு அல்லது என்னை எழுதுகிற பொழுதுகள்.


*
மழை அல்லது நனைய விரும்புகிற பொழுதுகள்.



அட அதற்குள் எட்டு சொற்களை எழுதிவிட்டேனா வெறும் சொற்களை எழுதுவதாகத்தான் இருந்தது அவை வாக்கியங்களாகியிருக்கிறதோ என்னவோ?! ஆதலால் தமிழுக்கு இன்னமும் என்மேல் ஏதோ ஒரு பிடிப்பு இருக்கிறது!

அகப்பட்ட சொற்களை எழுதி விட்டேன் ஆனால் அவைசார்ந்த எனக்குள் இருக்கிற பிம்பங்களின் புறக்கோடுகளை மட்டுமே எழுத முடிந்திருக்கிறது மாதிரியான ஒரு திருப்தியின்மை நெருடிக்கொண்டிருக்கிறது.நான் எழுதுகிற சொற்கள் சார்ந்து இது எனக்கு எப்பொழுதும் இருப்பதுதான் என்றாலும் இன்று அதிமாயிருப்பது போல உணரச்செய்கிறது அகப்படாத சொற்களின் உழற்சி.


இனி...!

ஒரு முக்கிய குறிப்பு:

இவை எனக்கு பிடித்த விடயங்களை சுட்டுகிற சொற்களாகவும் இருக்கலாம்!

நான் எழுதிய சொற்களை மறு முறை படிக்காமல் உங்களிடம் விட்டிருக்கிறேன்!

இன்று எதையாவது எழுதி விட வேண்டும் என்கிற காரணத்துக்காக மட்டும்.

Wednesday, August 6, 2008

சிதறிக் கிடந்த சொற்களை சேர்த்ததில்...!

கடந்த பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது என் சார்ந்த கூற்று...

*
சொல்லாவிட்டாலும்
சொல்ல முடியாவிட்டாலும்
சோகம் சுகமானதுதான்
அவை உன்னைச்சாந்தல்லவா
இருக்கிறது...!

*
நிரந்தரமாக உன்னையும்
தற்காலிகமாக உன் நினைவுகளையும்
பிரிநதுவிடத்தான் முடிகிறது
மறந்து விட இல்லை...!

*
கனவுகளை விட்டுச்சென்ற
உனக்கு என்
தூக்கத்தை எடுத்துச்சென்றது
நினைவு வரவேயில்லை...!


*
உன்னோடு பழகுகையில்
உலகத்துக்கு புதியவனாக்கினாய்
பின்பொரு நாளில் உனக்கும்...!


*
கொடுத்து வைத்தது என் காதல்
அது உன்னிடம் வந்திருக்கிறது
கொடுத்து வைக்கவில்லை நான்...!


*
நீயும் காதலிக்கையில்
எப்பொழுதாவதுதான்
உன்னோடு இருந்திருக்கிறேன்
இப்பொழுது
உன்னோடு மட்டுமே இருக்கிறேன்...!


*
உன் நினைவுகளை
விட்டுச்சென்றதிலும்
என் உயிரை
எடுத்துப்போயிருக்கலாம்...!


*
சில நாட்களாக
எதையும் எழுத முடியவில்லை
உன் பெயரைத்தவிர...!


*
உண்மைதான்
பிரிவுக்கு பின்னர்தான்
நிறையக் காதலிக்க முடிகிறது
உன்னை...!

Sunday, August 3, 2008

இரவுகளை எழுதுபவன்...!





எதையுமே எழுதத்தோன்றவில்லை எனக்கு!

ஏதோ ஒரு கலவையான மனோநிலையில் சுவாரஸ்யமற்ற விரக்கதியுற்ற பொழுதுகளாய் இருக்கிறது இப்போதைய நாட்கள். நிறைந்து விட்ட குப்பைக் கிடங்காய் இருக்கிறது மனம்! பூனைகள் தட்டி விழுத்திய குப்பைவாளியாய் பின்னிரவுகளில் விழித்திருக்கிறது குழம்பிக்கிடக்கிற மனம்...

எரிகின்ற மெழுகுதிரிக்கெங்கே தெரியும் வலிக்கின்ற மனதின் துயரம் அது பாட்டுக்கு உருகி வழிந்துகொண்டிருக்கிறது! எடுத்து வைத்த நாட்குறிப்பின் பக்கங்களில் வடிவங்களற்று கிறுக்கிக் கொண்டிருக்கிறது வலது கையில் இருக்கிற பேனை! எழுதப்படாத வார்த்தைகளை எரித்து சாம்பராக்ககும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கிறது இடது கையில் இருக்ககிற மல்பறோ லைட்ஸ்! (சிகரெட்)

நேரம் நிமடங்களாக தூக்கத்தை விழுங்கிக்கொண்டு நகர்கிறது....எப்பொழுதோ வாசித்த வரிகளின் சாயல் அல்லது அடி மனதில் இருக்கிற சொற்களின் திமிறல் கோர்வையற்று சிதறி கறுப்பு நிறத்தில் விழுகிறது வெள்ளை நிறத்தாள்களின் மையத்தில்...

அப்படி சிதறி விழுந்த வார்த்தைகளை கோர்வையாக்க தெரியவில்லை எனக்கு.யாரோடும் பேசப்பிடிக்காத அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத சூழலில் எழுதுவதைத்தவிர வேறு வழியும் தெரியவில்லை எனக்கு!

உருகிக்கொண்டிருக்கிறது மெழுகுதிரி...
சாம்பலாகிக்கொண்டிருக்கிறது சிகரெட்...
எழுதிக்கொண்டிருக்கிறது பேனை...
சொற்களால் நிரம்பிக்கொண்டிருக்கிறது தாள்கள்...
நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு...
விழுந்து கிடக்கிறது குப்பை வாளி...

காலையில் மறுபடியும் சீர் செய்து வைக்க வேண்டும் குப்பை வாளியை!